பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 புலவர் கா. கோவிந்தன்



இலக்கியம் முற்பட்டது; இலக்கணம் பிற்பட்டது. நாய் என்ற பொருளைக் கண்ட ஒருவனே, நாய் என்பது யாது என்பதை அறிந்து கூற முடியும். அதை அறியாத ஒருவன் அப்பொருள் பற்றிக் கூறுதல் பொருந்தாது; பொருந்தாது என்பது மட்டுமன்று: அஃது அவனால் இயலவும் இயலாது. மேலும் நாய் என்ற பொருளே இல்லாதவிடத்து, அப்பொருள் பற்றிப் பேசுபவரோ, அதற்கு இலக்கணம் கூறுபவரோ இரார். ஆகவே, இலக்கணம் என்பதொன்று உளது என்றவுடனே அவ்விலக்கணத்தை உடைய ஒரு பொருள், அஃதாவது அவ்விலக்கணம் தோன்றுவதற்குக் காரணமாய ஒரு பொருள் உளது என்பது தானே பெறப்படும். தமிழ் மொழி, தலை சிறந்த இலக்கணமாகத் தொல் காப்பியத்தைப் பெற்றுளது. ஆகவே, அப்பேரிலக்கணப் பெருநூல் தோன்றுவதற்குக் காரணமாய் இலக்கியங்கள் பலவற்றையும் அம்மொழி பண்டே பெற்றிருத்தல் வேண்டும் என்பது தெளிவு.

ஒரு பொருளுக்கு இலக்கணம் கூறுவது, எளிதில் எண்ணியவுடனே இயலுவதன்று. மாடு என்ற பொருளுக்கு இலக்கணம் கூற முன் வந்த ஒருவன், முதலில் நான்கு கால்கள் உடையது மாடு என்றான். நான்கு கால்கள் குதிரைக்கும் உளவே என்ற தடை எழுந்தவுடனே, நான்கு கால்களையும் இரண்டு கொம்புகளையும் உடையது மாடு என்றான். அந்நிலையில், அவ்வியல்பு ஆட்டிற்கும் உண்டே என்று ஒருவன் கூற, நான்கு கால்களையும், இரண்டு