பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 71



மக்கள், ஒருவரோடொருவர் கூடி வாழும் இயல்புடையவர். பழக்கத்தின் விளைவால், ஒருவர் பால் காணலாம் ஒழுக்கத்தினைத் தாமும் மேற்கொள்ளும் இயல்புடையவர். மக்கள் அனைவரும் ஒத்த பண்புடையவர் அல்லர், நற்பண்பு நிறைந்த நல்லோரை ஒரு சிலராகவும், தீயொழுக்கம் மிக்க தீயோரை மிகப் பலராகவும் கொண்டு இயங்குவதே உலகின் இயற்கை நல்லோரும், தீயோரும் கலந்துறையும் உலகில், தனித்து வாழ இயலாது, கூடி வாழ வேண்டியவராய மக்கள், மிகவும் விழிப்புடையராதல் வேண்டும். நல்லோர் கூட்டுறவால் தீயோர் நல்லவராதல் அரிது; ஆனால் தீயோர் கூட்டுறவால் நல்லோர் தீயராதல் எளிது. ஆகவே, ஒருவரை நண்பராக மேற்கொள்வதன் முன், அவர் தம் உண்மை இயல்புகளை உள்ளவாறு அறிந்து கொள்ளுதல் வேண்டும். நண்பன் ஒருவனை நாடிச் செல்லும் ஒருவனுக்கு, நண்பனாகத் தேர்ந்தெடுக்கத் தக்கவன் யாவன் தகாதவன் யாவன்? என்பது குறித்து நல்லுருத்திரன் கூறும் நல்லுரை அரிய பெரிய அறவுரையாகும்.

“உழவர்கள், நிலத்தை உழுது பயிர் செய்ய, நெல் விளைந்து முற்றிக் கதிர் வளைந்து நிற்கும் காலத்தை எதிர்நோக்கியிருந்தும், அவ்வுழவர் அறியாவண்ணம், தன் வளையினின்றும் இராக்காலத்தே வெளிப் போந்து, அக்கதிர்களைச் சிறுகச் சிறுகக் கடித்துக்கொண்டுபோய் வளையினுள்ளே சேர்த்துவைக்கும் இயல்புடையது எலி.