பக்கம்:ஓ ஓ தமிழர்களே.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

ஓ ! ஓ ! தமிழர்களே !

தேயிலைத் தோட்டத் துள்ளே
தேட்டங்கள் செய்வ தெல்லாம்
நோயினில், கொடுமை தன்னில்
நொந்துடல் மெலிவ தெல்லாம்
நாயினும் இழிவாய் வாழும்
நந்தமிழ்க் கூட்ட மே, ஆம்!
வாயிலாப் புழுவாய் அங்கே
வதைப்பட்டுச் சாகின் றார்கள்! 5


கொய்வது குளம்பிக் கொட்டை
குடிப்பது பச்சைத் தண்ணிர்!
நொய்விப்பால் எடுப்ப தெல்லாம்
நொடிகின்ற தமிழர் கூட்டம்
உய்வதும் நாட்டை யாளும்
உரிமையும் சிங்க ளர்க்கே!
செய்வதங் கின்ன தென்று
தெரியாமல் திகைக்கின் றார்கள்! 6


இமிழ்கடல் வரைப்பில் தோன்றி
இவ்வுல கெல்லாம் ஆண்ட
தமிழ்மொழி அடிமை மக்கள்
தாய்மொழி யாகும், அங்கே!
தமிழ்மொழிக் கல்விக் கங்குத்
தனியிடம் அளிப்ப தில்லை?
உமிழ்தரு சிங்க ளத்தில்
உரையாற்றல் சட்டம், அங்கே! 7


பாண்டியன் மரபில் தோன்றி
உலகெலாம் பரந்து வாழும்
மாண்டிறல் தமிழ ரைத்தாம்
மரமேறும் கூலி என்பார் !
வேண்டிய தெல்லாம். நன்கு
விளைவித்துக் கொடுத்த கூட்டம்
கூண்டிலே அடைக்கப் பெற்ற
அரிமாப்போல் குறுகிற் றங்கே! 8



1. குளம்பிக்கொட்டை- காப்பிக்கொட்டை

2. நொய்வப்பால்-இரப்பர் மரப்பால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓ_ஓ_தமிழர்களே.pdf/86&oldid=1163650" இலிருந்து மீள்விக்கப்பட்டது