பக்கம்:கபாடபுரம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

25


நிரம்பியிருந்த கருணையினாலோ அங்கு மயங்கிக் கிடந்தவளின் உடலில் அசைவுகள் புலப்படலாயின.

அல்லி மலர்வதுபோல் அவள் விழிகளில் மலர்ச்சியும் தெரிந்தது. அவள் பருகுவதற்கு வசதியாக இலைப் பேழையிலிருந்த நீரை வாயிதழ்களினருகே சாய்த்த இளையபாண்டியனை நோக்கி அவள் கண்களில் நன்றி சுரந்தது. உடலிலே சிறிது தெம்பு வந்ததும் கூடியிருந்த கூட்டத்தினரையும், அருகே அமர்ந்து நீரையும், குளிர்ந்த பார்வையையும் சேர்த்தே பொழியும் சுந்தர இளைஞனையும் கண்டு அவள் நாணியபடியே எழுந்து நிற்க முயன்றாள். மின்னல் பாய்வதுபோல் விரைந்து தெரிந்த அந்த நாணம் அவளுக்கு மிகமிக அழகைக் கொடுத்தது.

"உண்ணாமல் வயிற்றுப் பசியோடும் களைப் போடும் நெடுந்துரம் நடந்து வந்தாள் போலிருக்கிறது. சோர்வுக்கும் மயக்கத்துக்கும் அதுதான் காரணம்." - என்று சுற்றியிருந்தவர்களிடம் கூறினார் இளையபாண்டியர்.

"ஆர்வத்தின் காரணமாக இவளே உண்டாக்கிக் கொண்ட சோர்வுதான் ஐயா இது! வயது முதிர்ந்த பெற்றோர்கள் பின்னால் வருகிற கூட்டத்தோடு வந்து கொண்டிருக்கிறார்கள். மணிபுரத்திலிருந்து இன்றிரவு இளைய பாண்டியர் கோநகருக்கு வருகிறாராம். நகரின் முதற் கோட்டை வாயிலிலேயே அவரைப் பார்த்து விட வேண்டுமென்று இவளுக்கு ஆசை. அதனால் முதுமையின் காரணமாக விரைந்து நடக்க முடியாத பெற்றோர்களை அவர்கள் ஏற்கனவே வந்து கொண்டிருந்த கூட்டத்தினரோடு விட்டு விட்டு இவள் முன்னாள் விரைகிறாள். கபாடபுரத்தை அடைந்த இளைய பாண்டியரின் சுந்தரத் தோற்றத்தைக் கண்டு மயங்க வேண்டியவள்; பாவம் இங்கேயே அவசரப்பட்டு மயங்கி விழுந்துவிட்டாள்" என்று கூட்டத்திலிருந்த முதியவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/27&oldid=489926" இலிருந்து மீள்விக்கப்பட்டது