பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

41

உச்சிப் பிள்ளையாரைக் காணவந்த வைபோகத்தில் சோற்றுக் கடைக்குக் கொடுக்க வைத்திருந்த காசை முடிச்சவிழ்க்கக் கொடுத்துவிட்டுக் கையில் எஞ்சிய தேங்காய் மூடி பழங்களுடன் இறங்கினார் கவிராயர். முடிச்சைப் பறி கொடுத்ததோ எமாற்றம் அடைந்ததுவோ பெரிதில்லை. அதைப் பிள்ளையாரோடு தொடர்பு படுத்தி வேறு சில பரம்பரைச் செய்திகளையும் ஒட்டவைத்துக் கோத்திரத்துக்கு உள்ள குணம் என்று சமத்காரமாகச் சொன்னாரே பாட்டாக, அதுதான் பெரிய சாமர்த்தியம். தனிப்பாடல் திரட்டிலுள்ள பாட்டுக்களிலே மிகப் பல இம்மாதிரிச் சந்தர்ப்பத்தை ஒட்டி இயற்றப்பட்டவை தாம். சந்தர்ப்ப அனுபவமும் சாதுரியமும் அவ்வாறு பாடும்போது ஒன்று சேருவதனால் அசாதாரணத் திறமையாக வெளிப்பட்டு நம்மை வியக்கச் செய்கிறது.

16. சீரகம் வேண்டும்!

ரகத்து முருகன் கோவிலில் தூணோடு தூணாகச் சாய்ந்து கொண்டிருந்த காளமேகம் காலையில் தமக்குச் சீரகம் தர மறுத்து விட்ட வயிரவநாதன் செட்டியார் (மளிகைக்கடை முதலாளி) கோவிலுக்குள் நுழைவதைக் கண்டார். காலையில் மண்டையை பிடித்து உலுக்கும் தலைக்குத்துத் தீர அரைத்துப் பூசிக் கொள்ளலாம் என்று நாலு சீரகம் கேட்டார் அந்தச் செட்டியாரிடம். வாய் கூசாமல் இல்லையென்று சொல்லி விட்டார் அந்தச் செட்டியார். அதோடு போகாமல் காள மேகத்தின் பேரில் தற்செயலாக நடந்த ஒரு தவற்றுக்காக ஒரு பெரிய திருட்டுப் பழியையும் சுமத்தப் பார்த்தார். ஈரித்துக் கசிந்து போயிருந்த பெருங்காயக் கட்டி ஒன்று காளமேகத்தின் மேல் போர்வை நுனியில் ஒட்டிக் கொண்டு விட்டது. சீரகம் கிடையாத ஏமாற்றத்துடன் திரும்பிய காளமேகத்தை, “என்ன கவிராயரே, பெருங்காயத்தைத் திருடிக்கொண்டு போகலாம் என்று பார்த்தீர்களோ?” என்று திரும்பி அழைத்தவாறே