பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

47

ஒளவையார் அவனைக் கையமர்த்திச் சைகை செய்து சற்று அமைதியாக இருக்குமாறு வேண்டிக்கொண்டு தோளிலிருந்த முடிப்பை அவிழ்த்து ஒலை நறுக்கையும் எழுத்தாணியையும் எடுத்தார். சில நொடி நேரத்தில் ஒலை நறுக்கில் ஏதோ எழுதிக் காவலன் கையிலிருக்கும் நூற்சேலையின் மேல் வைத்து “இதை இந்தச் சேலையோடு உங்கள் மன்னரிடம் காட்டு நான் அதுவரை இங்கிருக்கிறேன். எனக்காக நீ இதைச்செய்ய வேண்டும்” என்று அவனை வேண்டிக் கொண்டார். அவன் ஒலை நறுக்கையும் சேலையையும் கொண்டு உள்ளே சென்றான்.

அரை நாழிகை சென்றது. காவலனும் அமைச்சர்களும் பின்தொடரப் பதறியடித்துக்கொண்டு வாசலுக்கு ஓடி வந்தான் குலோத்துங்கன். வாசலில் அவனுடைய கண்கள் தேடிய உருவம் காணப்படவில்லை. வாசல் சூன்யமாக விளங்கிற்று. தொலைவில் நான்காம் கோட்டையின் பிரம்மாண்டமான வாயிலுக்குஅடியில் ஒரு வயதான கிழவி கோலூன்றித் திரும்பி நடந்து கொண்டிருந்தாள். கிழப்பருவத்திலும் புலமைக்குரிய தேஜஸ், எடுப்பான நடை எல்லாமிருந்தன அவளிடம். இங்கே குலோத்துங்கன் கையில் இருந்த ஒலை நறுக்கு அவனைப் பார்த்து நகைத்தது.

நூற்றுப் பத்தாயிரம் பொன் பெறினும் நூற் சீலை
நாற்றிங்கள் தன்னிற் கிழிந்துபோம்-மாற்றவரைப்
பொன்றப் புறங்கண்ட போர்வேல் அகளங்கா
என்றும் கிழியாது என்பாட்டு”

திங்கள் = மாதம், பொன்ற = சாகும்படியாக, அகளங்கன் = குலோத்துங்கன்.

என்ற பாடல் அந்த ஓலை நறுக்கில் காட்சியளித்தது.