பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

25

கையில் ஒரு பரிசுமில்லாமல் வீடு திரும்பினாலும் கேலிக்கும் கிண்டலுக்கும் குறைவில்லாத தாம்பத்தியம் அவர்களுடையது. ஒன்றுமில்லை என்பதை ‘யானை’ என்பதற்குரிய பொருள் தரும் பல சொற்களால் சொன்னான் பாணன். அதற்குப் பல பொருள்கள் இருப்பதாகக் கற்பிப்பதுபோல் மடக்கிப்பேசினாள் பாடினி. முடிவில் அவ்வளவும் வெற்றுப் பேச்சு என்பது தெரிந்தாலும் அதுவரை அனுபவித்த வேடிக்கை இன்பமாவது ஊதியமாகக் கிட்டியதே! இப்படி ஒவ்வொரு ஏமாற்ற நிலையிலும் வேடிக்கையால் அதை மறைத்துச் சிரித்து மகிழும் மனோபாவம் எல்லோருக்குமா வந்துவிடுகிறது?

8. பாக்குவெட்டி மறைந்த மாயம்

கூழுக்கும் துணிக்கும் பாடிய சில்லறைப் பாடல்களில் கவிதையென்ன, நயமென்ன வேண்டிக்கிடக்கிறது? என்று பலர் தனிப்பாடல்களைப் பற்றி மட்டமான எண்ணமுடையவர்களாக இருக்கின்றனர். நயமும் கவித்துவமும் சொந்த வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட காவிய சிருஷ்டிகளில்தான் இருக்க வேண்டுமென்று ஏதாவது நியதி உண்டா என்ன? வாழ்க்கையில் சொந்த அனுபவங்களை ஒட்டி வெளியிடப் பெற்ற எந்த ஒரு தனிப் பாடலும் அதனதன் நிலையில் நோக்கும்போது நயமும் கவித்துவமும் உடையவைதாம். இந்த உண்மையை மறந்து விடுகின்றனர் மேற்கூறிய எண்ணமுடையோர்.

வெற்றிலை போடும் பழக்கமுடையவர் அந்தக் கவிராயர். சதா வெற்றிலைச் செல்லமும் கையுமாக இருக்கும் அவருக்கு அது ஒரு பொழுதுபோக்குக் கலையைப் போல. உருண்டை உருண்டையாக இருக்கும் முழுக் கொட்டைப் பாக்குகளைப் பாக்கு வெட்டியால் வெட்டிச் ‘சீவல்’ செய்து போட்டுக் கொள்வதில் அவருக்கு ஒரு தனி இன்பம். ‘நறுக் நறுக்’ கென்று கொட்டைப் பாக்கின் மண்டையைச் சீவித்துள் செய்யும் அந்தக் கூரிய பாக்கு வெட்டியின் வெட்டுவாயைப் பார்த்துக்கொண்டே