பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

27

ஒடவில்லை. காலையிலிருந்து அவருக்குச் சாப்பாடுகூட வேண்டியிருக்கவில்லை. ‘பாக்குவெட்டி!பாக்குவெட்டி!’ என்று பறந்தார். சுவடி முடிச்சிலிருந்து சுண்டைக் காய்ப் பானைவரை வீட்டில் தேடியாகிவிட்டது. அங்கெல்லாம் இருந்தால்தானே அது கிடைக்கும்? இதையெல்லாம் விடப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அன்று முழுவதும் அதுவரை அவர் வெற்றிலையே போடவில்லை. பாக்கு இல்லாத குறை என்று சொல்வதற்கு இல்லை. ஏற்கனவே சீவி வைத்திருந்த சீவல் போதுமான அளவு இருந்தது. இருந்தும் பாக்குவெட்டிபோன வருத்தத்தில் அவருக்கு ஒன்றுமே ஓடவில்லை. இன்பத்திலும் துன்பத்திலும் பாடிப் பழகிய நாவல்லவா? பாக்குவெட்டிபோன துயரம் ஒரு பாட்டாக உருப்பெற்று அது தாபங் கொள்ளத் தக்க நிலைக்கு வந்து சேர்ந்தது.

'விறகுதறிக்க கறிநறுக்க
     வெண்சோற்று உப்புக்கு அடகு வைக்கப்
பிறகு பிளவு கிடைத்த
   தென்றால் நாலாறாகப் பிளந்து கொள்ளப்
பறகு பறகென்றே சொறியப்
    பதமாயிருந்த பாக்குவெட்டி
இறகு முளைத்துப் போவதுண்டோ?
    எடுத்தீராயிற் கொடுப்பீரே.'

புலவர் பாட்டை முடிக்கவும் பாக்குவெட்டியுடன் அம்பலவாணன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. “சோதனையில் உமக்குத்தான் கவிரயாரே வெற்றி. ஆனால், எங்களுக்கும் தோல்வி கிடையாது” என்று கூறி, வந்த அம்பலவாணன் தங்கள் சூழ்ச்சியை விவரித்தான். ‘எப்படியோ உங்களிடமிருந்து பாக்கு வெட்டியைப் பற்றி ஒரு பாடல் சம்பாதித்துவிட்டோமல்லவா? அதுதான் எங்கள் வெற்றி.’ கூறிக்கொண்டே பாக்குவெட்டியை முன்வைத்துவிட்டு நகர்ந்தான், இந்த அரிய திட்டத்தை நடத்தி முடித்த விடலைப் பயல் அம்பலவாணன்.