பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தமிழ் இலக்கியக் கதைகள்

"தாயே தாங்கள் கூறியபடி ‘பெண்பாற் புலவர் ஒருவர் காண வந்திருக்கிறார், உள்ளே வர அனுமதி நோக்கிக் காத்திருக்கின்றார், திருவுள்ளம் எப்படியோ?’ என்று மன்னர் பிரானிடம் சென்று உரைத்தேன். அவர் இப்போது இன்றியமையாத வேலையாக அமைச்சர்களுடன் கலந்து சிந்தித்துக் கொண்டிருப்பதால், இந்தப் புதிய நூல் புடவையைத் தங்களுக்குப் பரிசிலாகக் கொடுத்து அனுப்புமாறு எளியேனுக்கு ஆணையிட்டார்” என்று கூறிக் கொண்டே அந்த நூற்சேலையுடன் ஒளவையாரை நெருங்கினான் காவலன்.

ஒளவையாரின் புலமை நெஞ்சம் புண்பட்டது. ‘பிச்சை கொடுப்பது போல முகங் காணாமல் காவலனிடம் புடைவையைக் கொடுத்து விட்டா கவிஞரை மனமகிழச் செய்ய முடியும்? சோழன் மனத்திலா இந்த நினைவு? நம்ப முடியாத சிறுமை!’

“உன்னைப் பார்க்க வந்தேன்; பாட வந்தேன். பார்க்கவும் பாடவும் விலை கேட்கவா வந்தேன்? விலையாகக் கருதி நீ பரிசில் கொடுத்தாலும் இந்தக் கிழிந்துபோகும் நூற்சேலையா என் அழியாத பாட்டிற்கு ஈடு? அழியாக் கலைக்கு அழியும் விலை கொடுக்கும் பேதைமை நிறைந்த பித்தன்தானோ இந்தக் குலோத்துங்கன்” வரவழைத்துப் பாடல் கேட்க விருப்பமில்லை என்றாலும் உடுக்கத்துணி தேடி உலவும் யாரோ ஒரு பேதைப் பெண் பாடி வயிறு வளர்ப்பவள் என்ற நினைவில்தான் இவன் இவ்வாறு செய்திருக்கிறான்.

ஒளவையார் அமைதியாக நின்றுகொண்டே இருந்தார். அவர் மனத்தில் இந்த எண்ணங்கள் ஒடிக்கொண்டிருந்தன.

எதிரே கையில் நூற்சேலையுடன் நின்றிருந்த காவலன் பொறுமையிழந்து “என்ன பாட்டி? இப்படியே நின்று கொண்டிருந்தால்? உங்களுக்கு இந்தச் சேலை வேண்டாமா?” என்று கேட்டான்.