பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. அங்கும் துன்பமே

புலமை வாழ்க்கை, கற்றறிந்தவர்கள் கைகொடுத்து உதவி புகழும் பெருமையும் செய்யும் இன்பம் நிறைந்ததுதான். ஆனால் அத்தகைய கற்றவர்களோ, அறிந்தவர்களோ, கவிதையை உணர்ந்து பாராட்டுபவர்களோ இல்லாதபோது அது பாலை வனத்தில் மல்லிகைப் பதியனாய்ப் பாழ்பட்டுப் போவது ஒரு தலை. தன் படைப்புக்களையும் சொல் நயத்தையும் அதியற்புத மனோபாவப் பிணிப்புக்களையும் தானே சுவைப்பது, படைத்த சில விநாடிகள் மட்டும்தான் கவிஞனுக்கு இயலும். அந்தச் சில விநாடிகளுக்கு அப்பால் அவற்றைப் போற்றிப் புகழ்ந்து பேண இரசிகன் என்ற பெயரில் இரண்டாவது மனிதன் ஒருவன் தேவை. அப்படிப் போற்றிப் பேணி ஆதரிக்கும் இரசிகன் ஒருவன் கிடையாதபோதுதான் இராமச்சந்திர கவிராயருக்கு எல்லாம் ஒரே சூனியமாகத் தோன்றியது. மனிதர்களின் கலை உணர்ச்சியைப் பற்றியே சந்தேகமாகிவிட்டது அவருக்கு. மனத்தளர்ச்சி சாதாரண மனிதனைக் காட்டிலும் நுண்ணுணர்வு மிக்க கவிஞர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் அவர்களைப் பூரணமாகத் தன்னில் ஆழ்த்திக் கொண்டு விடுகிறது. இந்த நியதி வரம்பிற்கு இராமச்சந்திர கவிராயர் மட்டும் விதி விலக்கா என்ன?

நாள் முழுவதும் தாம் பாடிய அரிய பாடல்களுடன் பல வள்ளல்களிடம் அலைந்து அலைந்து கால்கடுத்து விட்டது. தங்கள் உள்ளத்தைப் போலவே வீட்டுத் தலைவாயிலின் நிலைப் படியையும் குறுகலாகவே வைத்திருந்த இரண்டோர் வீடுகளில் வாசல் நிலையில் முட்டிக் கொள்ளவும் நேர்ந்தது. ‘ரஸனைக்குக் கூட வஞ்சகமா? என் பாட்டு நன்றாக இருக்கிறது என்று உணருகிறார்கள். பாராட்ட வேண்டுமென்று ஆசைப்படு கிறார்கள். ஆனால் துணிவில்லை! மனச்சாட்சிக்கு வஞ்சனை புரியும் இவர்களை வஞ்சகர்கள் என்றால் தவறென்ன?’ .

சிந்தனை வேகத்துடன் போட்டியிடுவதுபோல நடந்து கொண்டிருந்தார் கவிராயர். எதிரே பிரம்மாண்டமான