பக்கம்:தனித் தமிழ்க் கிளர்ச்சி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தனித்தமிழ்க் கிளர்ச்சி



நன்மக்களைப் பெற்று நாட்டிற்கு நலனளிக்கும்
பெண்மக்கள் தமிழுணர்ச்சி பெறவேண்டும் அம்மானை
பெண்மக்கள் தமிழுணர்ச்சி பெறவேண்டும் எனினின்று
புன்மக்கள் சிலர்தடைதான் புரிகின்றார் அம்மானை
புரிபவர்கள் கொலைதமிழ்க்குப் புரியவாராம் அம்மானை (60)

பெண்களே நாட்டிற்குப் பெருவிளக்காம் ஆதலின்நம்
பெண்களைத் தாழ்த்துவது பேதமையாம் அம்மானை
பெண்களைத் தாழ்த்துவது பேதமையாம் என்றக்கால்
பெண்புத்தி பின்புத்தி என்றதேன் அம்மானை
எனல்தவறு முன்னேற்றம் ஈயவேண்டும் அம்மானை (61)

சீரிய பண்புடைய செந்தமிழ்ப் பெண்மக்கள்
கூரியநல் மதிநுட்பம் கொண்டவர்காண் அம்மானை
கூரியநல் மதிநுட்பம் கொண்டவர்கள் என்பதைநீ
நேரிய சான்றொன்றால் நிறுவிடுவாய் அம்மானை
சங்ககால ஒளவைமுதல் சான்றுபலர் அம்மானை (62)

காய்கனிகள் வளமிக்க கவின்தமிழ்நாடு ஓங்கநம்
தாய்கட்கு வீரம் தழைக்கவேண்டும் அம்மானை
தாய்கட்கு வீரம் தழைக்கின் அவர்பெற்ற
சேய்கட்கும் வீரம் செழிக்குமன்றோ அம்மானை
புறநானூற் றாலதனைப் புரிந்திடலாம் அம்மானை (63)


60 - பெண்களின் தமிழுணர்ச்சிக்குத் தடைசெய்கின்றனர் சிலர். அது, தமிழையே கொலை செய்வதாகும்.
61 - பெண்புத்தி பின்புத்தி என்று பிதற்றும் பேதமையை மறந்து, இனியேனும் பெண்களை முன்னேற்றவேண்டும்.
62 - சங்ககாலத்தில் வாழ்ந்த ஒளவையார், பொன் மொழியார் முதலிய சிறந்த பெண்புலவர்களே, பெண்களின் மதிநுட்பத்திற்குச் சான்றாவார்கள்.
63. ஒரு மறத்தாய் வயதிற் சிறிய ஒரே மகனைச் சண்டைக்கனுப்பி, அவன் மார்பில் புண்பட்டு இறந்ததைக் கண்டு மகிழ்ந்த வரலாறு புறநானூறு எனும் தமிழ் நூலில் காணக்கிடக்கின்றது. ஆதலின் தாய்க்கு வீரம் இருப்பின் சேய்க்கும் (பிள்ளைக்கும்) வீரம் இருக்கும்.