பக்கம்:கல்வி எனும் கண்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

கல்வி எனும் கண்


களோடு மற்றைய 90 சதவிகிதம் பிள்ளைகள் எவ்வாறு போட்டியிட முடியும்? அப்படியே முதற் வகுப்பில் சேர்ந்தாலும் இடையில் 2, 3, 4, 5 இல் வருகின்ற பிள்ளைகள் எத்துணையர்? கிராமங்கள்தோறும் - நகரில் குடிசைப் பகுதிகள் தோறும் இந்த அவலநிலையில் உள்ள குழந்தைகளைக் காணமுடிகின்றதே! அதற்கு ஒரு வழிவகை காண வேண்டாமா! 14 வயதுக்கு உட்பட்ட எல்லாக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி தரவேண்டும் என்ற அரசியல் சாசன 45வது பகுதிப்படி இந்த இளங்குழந்தைகள் அனைத்தும் ஒரே வகையான கல்வியினைக் கற்க வழிகாண வேண்டாமா? இராமமூர்த்திக் குழு இதை ஆராய்ந்த வகையில் இதற்கு விமோசனம் கண்டதாகத் தாம் காணவில்லை என்றும் மகளிர், குழந்தை வளர்ச்சித் துறைக்கும் கல்வித் துறைக்கும் ஓர் இணைப்பு இருக்கவேண்டுமென்றும் அதன் வழியே இளம் குழந்தைகள் உள்ளம் கற்பன கற்று, தாய்மொழிப் பற்றும் பெற வழி உண்டு என்றும் சுட்டிக் காட்டி, ஆனால் அது செயல்முறையில் இல்லை என்பதையும் குறிக்கிறது (பக். 115). அதன் பரிந்துரையில் (116) மகளிர், பிள்ளைகள் வளர்ச்சித்துறை, இளங்குழந்தைகள் கல்வியில் பங்குகொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளது. கல்வித்துறையும், அரசியல் சாசன 45வது விதிப்படி, இக்குழந்தைகள் கல்வியைக் கண்ணெனக் காக்க வேண்டிய கடமையினையும் சுட்டிக்காட்டி உள்ளது. மத்திய அரசும் மாநில அரசுகளும் இந்த வகையில் ஒத்துழைத்துச் செயல்பட் வேண்டும் எனவும் சுட்டியுள்ளது, இளம் குழந்தைகள் தாயன்புக்கு ஏங்கும் அளவிற்கு வரக்கூடாது என்பதையும் எண்ணி, தாயினையே அறியாத நிலையில் எப்படி அதன் வாழ்வு அமையும் என்பதையும் கருதிப் பார்க்கவேண்டியுள்ளது. மழலையர் பாதுகாப்பு இல்லங்களில் விடப்பெறும் குழந்தைகள் யார் கையிலோ இருந்து, எப்படியோ உண்டு, உறங்கிப் பொழுதைக் கழிக்க, மாலையில் அன்னையர் வரினும் அவர்கள் வேலைகளுக்கு இடையில் அவர்தம் பாசத்தையும் பரிவினையும் பெறாமல் வருகின்றன. பின்,