பக்கம்:கல்வி எனும் கண்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடைநிலை–உயர்நிலைப் பள்ளிகள்

83


படிகளே சான்று பகரும் என்பர். அப்படியே 14.65 % வேற்று மொழியாளர் என்றாலும் இதில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, இந்தி, உருது ஆகிய மொழிகள் அனைத்தும் அடங்குமல்லவா. அப்படி இருந்தும் தமிழக அரசு இத்தனை மொழிக்கும் (10% மேல் இருக்கும்நிலையில்) சிறுபான்மையோர் நிலையில் வைத்து இடம் தருகின்றதல்லவா? மராத்தி நாட்டிலும் இந்த வகைபோற்றபட்டுத் தமிழுக்கு இடம் தந்துள்ளது. பல்கலைக் கழக நிலையில் பம்பாய் பல்கலைக் கழகத்தில் தமிழ் இன்றேனும் பூனா, நாகபுரி ஆகிய பல்கலைக் கழகங்களில் தமிழ் உள்ளது. ஆந்திரம், கர்நாடகம், ஒரிசா, வங்காளம், உத்தரபிரதேசம், பஞ்சாப் ஆகிய இடங்களில் உள்ள சில பல்கலைக் கழகங்களிலும் தமிழ் உள்ளமை போற்றக் கூடியது. அவற்றுக்கெனத் தமிழக அரசு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மானியம் தந்து வருகிறதென அறிகிறேன். தற்போதும் அந்த நிலை நீடிக்கும் என நம்புகிறேன்.

ஒரு சமயம் நாட்டு ஒருமை மாநாட்டிற்குத் தலைமை வகிக்க (1967-68 என எண்ணுகிறேன்) நான் நாகபுரிக்குச் சென்றிருந்தேன். அம்மாநாட்டைத் திறந்து வைக்க மராட் டிய நாட்டுக் கல்வி அமைச்சர் அவர்கள் வந்திருந்தார்கள். அவர்களோடு தனியாகப் பேசிக் கொண்டிருந்தபோது, ‘தங்கள் மாநிலத்தில் பூனா, நாகபுரி முதலிய இடங்களில் தமிழ் உள்ளது. ஆனால் பம்பாயில் இல்லையே. அதை வைக்க ஏற்பாடு செய்யலாகாதா’ எனக் கேட்டேன். அவர் உடனே உண்மைதான்; செய்கிறேன்; ஆனால் ஒன்று, எங்கள் மராட்டியர் உங்கள் தமிழ்நாட்டில் பல ஆண்டுகள் வாழ்ந்து, ஆண்டு, உங்கள் நலம் போற்றினார்கள். தஞ்சை நூல் நிலையத்தில் இன்றும் பல மராட்டிய ஏடுகள் உள்ளன. பல மராட்டியர் வாழ்கின்றனர். அப்படி இருந்தும் உங்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மராத்தி மொழி பாடமாக வைக்கப் பெறவில்லையே. அதற்கு நீங்கள் ஏற்பாடு செய்வீர்களாயின் நான் உடனே பம்பாய்ப் பல்கலைக்