பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

நெஞ்சக்கனல்


இவரிட்ட நான் தெரிஞ்சுக்கிட்ட ஒரே நல்லகுணம் அன்புக்காக உசிரைக் கொடுப்பாரு...” என்ற பிரகாஷ் பப்ளி ஸிட்டியின் தாளத்தை இடைவெட்டி ,

“உசிர் இருந்தாத்தானே அன்பு செய்யலாம்? கொடுத்துப்பிட்டா என்ன பிரயோசனம்?” என்பதாகக் கமலக்கண்ணன் ஒரு போடு போட்டார்.

”நல்லாச் சொன்னிங்க...போங்க...!” என்று அதற்கும் ஒரு பதில் கொடுத்து அடி வாங்கியதைச் சமாளித்துக் கொண்டார் பப்ளிஸிட்டி.

புகைப்படம் எடுக்கும் சந்தர்ப்பம் வந்தது. பலகோணங்களில் கமலக்கண்ணன், கமலக்கண்ணனின் குடும்பம், கமலக்கண்ணன் தன் வயசான தாய்க்கு உபசாரம் செய்வது போல், முன் ஹாலில் புதிதாகப் பெரிதாக மாட்டியிருந்த காந்தி படத்துக்கு அருகே நிற்பதுபோல்– எல்லாம் படங்கள், எடுத்தபின் கீழே ஜமுக்காளத்தை விரித்து அவர் வீணை வாசிப்பதுபோல் படம் எடுக்க ஏற்பாடு தொடங்கியது. வீட்டிலிருந்த பழையவீணையைத் தூசிதட்டித்துடைத்துக் கொண்டுவந்து கொடுத்தாள் மிஸஸ் கமலக்கண்ணன். அந்தப் படப்பிடிப்புக் காட்சியை வேடிக்கை பார்க்கக் கமலக்கண்ணனின் குடும்பமே ஹாலில் திரண்டுவிட்டது.

தம்புராவைப் பிடிப்பதுபோல் வீணையை நெட்டுக் குத்தாகப் பிடித்துக்கொண்டு அவர் படத்துக்கு உட்கார்த்ததும் மிஸஸ் கமலக்கண்ணன் சிரிப்பை அடக்கமுடியாமல் கொல்லென்று சிரித்தே விட்டாள்.

“இந்தாங்க! உங்களைத்தானே? இது தம்புரா இல்லே – வீணை வைச்சுக்கிட்டு வாசியுங்க...” என்று அந்த அம்மாள் ‘டைரக்ட்’ செய்த பின்னே படப்பிடிப்புக் காட்சியில் நேர இருந்த அபத்தம் தவிர்க்கப்பட்டது.

“சாருக்குத் தெரியாதுங்கிறதில்லே அம்மா! சார் அதிலேயும் ஒரு புதுமை செய்ய விரும்பினார். நீங்க கெடுத்துட்டிங்க...” என்று அந்த அபத்தத்தையும் ஒரு சமத்கார மாக்கி உளறினான் கலைச்செழியன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/80&oldid=1047789" இலிருந்து மீள்விக்கப்பட்டது