பக்கம்:கபாடபுரம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

கபாடபுரம்


"அவசியமென்று கருதினால் அதையும் செய்ய முடிந்தவன்தான் நான்" என்று கூறிவிட்டுப், "போகலாம்! புறப்படுங்கள்" என்று சிகண்டியாரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டார் பெரியவர். புறப்படுகிறபோது முறைக்காக ஒருவார்த்தைகூட அவளிடமோ அவள் தந்தையிடமோ சொல்லிக்கொள்ளவில்லை. சிகண்டியார் மட்டும் சொல்லி விடைபெற்றுக்கொண்டார். இருவரும் அரண்மனையை நோக்கித் திரும்பினர்.


29. இசைநுணுக்க இலக்கணம்

கண்ணுக்கினியாள் மேல் இளையபாண்டியன் சாரகுமாரனுக்கு அன்பு இருப்பதையும், அப்படி ஓர் அன்பையோ தொடர்பையோ இணைப்பையோ விரும்பாதவராகப் பெரியபாண்டியர் மனம் குமுறுவதையும் சிகண்டியாசிரியர் தெளிவாகப் புரிந்துகொண்டார். போகிற போக்கைப் பார்த்தால் பெரியபாண்டியர் சினவெறியில் அந்தப் பாண்மகளையும் அவள் குடும்பத்தினரையும் நாடுகடத்தினால்கூட வியப்பதற்கில்லை என்ற தோன்றியது. அதற்குள் தம் கலை இலட்சியமாகிய இசைநுணுக்க இலக்கண நூலை இயற்றி அரங்கேற்றி முடித்துவிடுவதில் கவனம் செலுத்தவேண்டியவராக இருந்தார் அவர். இளைய பாண்டியனும், கண்ணுக்கினியாளும் தத்தம் குரலினிமையின்மூலம் விளைவித்துக்காட்டிய புதுமைகளையும், நுணுக்கங்களையும், நயங்களையும் கண்டபின் அவற்றை இலட்சியங்களாகக் கொண்டே இசைநுணுக்கத்தை இயற்றத் தொடங்கியிருந்தார் அவர் கலைத்துறையைப் பொறுத்தவரையில் ஒர் சுவையின் மேலான எல்லையைத் தொடுகிறவர்கள்தான் அதுவரை அந்தத் துறைக்கு என்று அமைக்கப்பட்டிருந்த இலக்கணங்களையும் மரபுகளையுமே வளர்த்துப் புதியதாக்கி விடுகிறார்கள்.

இப்படிப் புதிய இலட்சியங்கள் பிறந்துவிட்டபின்பே அவற்றை எடுத்துக்காட்டாகக்கொண்டு புதிய இலக்கணங்களும், மரபுகளும் பிறக்கின்றன. இலட்சியங்களைப் படைக்கிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/178&oldid=490109" இலிருந்து மீள்விக்கப்பட்டது