பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

நெஞ்சக்கனல்

தும் வாழவேண்டுமென்ற தவிப்பைச் சமீபத்தில் உடையவராகியிருந்தார் கமலக்கண்ணன். அதனால் அவரைக் கெடுப்பதற்குப் பல போலி நண்பர்களும் சுற்றிச்சுற்றி வரலானார்கள்.

சோதிடர் சர்மா, டெய்லிடெலிகிராம் நிரூபர் கலைச் செழியன், புலவர் வெண்ணெய்க்கண்ணனார், போன்றவர்கள் அவரிடம் பணம் கறப்பதற்காக ஏதோ செய்தார்கள், அவரும் அவற்றிலெல்லாம் நன்றாக மயங்கினார். வசப்பட்டார் யார்யார் எதை எதைச் சொன்னாலும் அவை அனைத்தும் தம்மைப்பிரமுகராகவும் மந்திரியாகவும் கொண்டு வருவதற்கான உண்மை யோசனைகளாகவே கமலக்கண்ணனுக்குத் தோன்றின. தினசரிப் பத்திரிகைக்கு அச்சகம் அலுவலகம் எல்லாம் வைப்பதற்காக மவுண்ட்ரோடில் இடம் தேடுவதற்கு நாலு புரோக்கர்களிடம்கூடச் சொல்லியாயிற்று. இந்த ஏற்பாடும் தகவலும் எப்படியோ அதற்குள் காட்டுத் தீ போலப் பரவிவிட்டது உதவியாசிரியர்கள், புரூப்ரீடர்கள், கார்ட்டுனிஸ்ட், நியூஸ் எடிட்டர் என்று பத்திரிகை சம்பந்தமான ஒவ்வொரு வேலைக்கும் தக்கவர்களின் சிபாரிசுக் கடிதங்களோடு கமலக்கண்ணனை ஆட்கள் தேடி வரலானார்கள் படையெடுக்கலானார்கள்.

நாளுக்குநாள் அவர் ஒரு தினசரிப் பத்திரிகை நடத்தியே தீரவேண்டும் என்ற நிலை உறுதிப்பட்டுக் கொண்டு வந்தது. சொந்தமாகச் செய்துவந்த தொழில்களையும் கம்பெனி நிர்வாகங்களையும், எஸ்டேட் பொறுப்புக்களையும்விட இப்போது ஒரு தினசரிப் பத்திரிகை நடத்துகிற விஷயமே அவர்கவனத்தில் அதிகமாக இலயிக்கத் தொடங்கியிருந்தது. பிரமுகராக உயரவும், மந்திரியாகவும், அதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நம்பிக்கையை அவருக்குப் பலர் பல விதத்தில் உண்டாக்கிவிட்டார்கள்.

பத்திரிகைகளில் செய்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு வண்டிவண்டியாகப் பெயர்கள் வந்து குவிந்தன. அந்தப் பெயர்க்குவியலில் எந்தப்பெயரைத் தேர்ந்தெடுப்பதென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/70&oldid=1047548" இலிருந்து மீள்விக்கப்பட்டது