பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

129


“தலைபோற காரியம் சார்! இப்பவே கவனிக்காமே விட்டோம்னா ஊர் சிரிச்சிப்பிடும்” என்று கையிலிருந்த பத்திரிகையைக் காண்பித்து ஏதோ கூறினான் அவன். அவரோ கோபமாக இரைந்தார்.

“அப்பிடி என்ன தலைபோற காரியம்! சொல்லித் தொலையேன்...”

“உள்ளே வாங்க சார்! இங்கே வச்சு–இப்படி, இரைஞ்சு பேசற காரியமில்லே–” என்று வரவேற்பு அறையை ஒட்டி அடுத்தாற்போலிருந்த உட்பகுதியைக் காண்பித்து அவரைக் கூப்பிட்டான் அவன். அவருக்கு அவன்மேல் கோபம் அதிகமாகியது.

“சும்மா தொந்தரவு பண்ணாதே! உனக்கு இப்ப என் நெலைமை தெரியும். முன்னே மாதிரி நேரமில்லே. பதவி, பொறுப்பு எல்லாம் இருக்கு! ஏதாவது செலவுக்கு வேணும்னா வாங்கிட்டுப் போ...நேரமில்லே”–

இப்போது அவனும் தன் பேச்சில் முறுக்கை ஏற்றினான். ஆத்திரமாகவே அவருக்குப் பதில் வந்தது.

“சார்! உங்க நன்மைக்காகத்தான் இதை இப்பவே நினைவு படுத்த வந்தேன் வேனுமானால் கவனிச்சி ஏதாவது செய்வோம். இல்லேன்னா அவன் பாடு உங்க பாடு...பேர் நாற வேணாம்னு பார்க்கிறேன் அப்புறம் உங்க இஷ்டம்.”

“அவன் பாடுன்னா...எவன் பாடு...?”

“அதுதான் முழுக்க வந்து கேட்க மாட்டேன்கிறீங்களே?”

வேண்டா வெறுப்பாக அவனோடு உள்ளே எழுந்து சென்றார் அவர். ‘உண்மை ஊழியன்’ என்ற அந்தப் பத்திரிகையின் முதல் பக்கத்திலே கட்டம் கட்டிய ஒர் அறிவிப்பைப் பிரித்து அவரிடம் காட்டினான் கலைச்செழியன். எடுத்த எடுப்பிலேயே அது ஒரு மஞ்சள் பத்திரிகை என்பதும் ‘பிளாக்–மெயில்’ செய்வதையே தொழிலாகக் கொண்டது என்பதும் கமலக்கண்ணனுக்குப் புரிந்துவிட்டது. அப்படிப் புரிந்ததனால் விளைந்த கோபத்தோடும் அருவருப்போடும் அந்தக் கட்டத்திற்குள் இருந்த அறி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/131&oldid=1048878" இலிருந்து மீள்விக்கப்பட்டது