பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

புறநானூற்றுச் சிறு கதைகள்


பெண்மான், கலை = ஆண்மான், மானதள் = மான்தோல், உணங்குதினை = இடித்த தினை, வல்சி = இரை, கானக்கோழி = காட்டுக் கோழி, இதல் = ஒருவகைப் பறவை.


26. வீரனின் இருப்பிடம்

அது ஒரு சிறிய வீடு. தாழ்ந்த கூரையையும் அதனைத் தாங்கும் நல்ல மரத்துரண்களையும் உடையது. வீட்டின் வெளியே இருந்து கண்டால் அடர்த்தியான மலைப் பகுதியிலுள்ள ஒரு குகையைப் போலத் தென்பட்டது. மறக்குடியினராகிய வீரப் பெருமக்கள் வசிக்கின்ற வீதி அது.

அந்த வீட்டில் ஓர் இளைஞனும் அவனுடைய தாயும் வசித்து வந்தனர். தாய் வயதான கிழவி. கணவனை இழந்தவள். மகன் போர்வீரன். கண்டவர்கள் இமையால் நோக்கி மகிழத்தக்க கட்டழகன். இளமைக் கொழிப்பும் அழகான தோற்றமும் வீரப் பண்பும் ‘நாங்கள் இந்த இளைஞனை விட்டு நீங்கமாட்டோம்’ என்று சொல்லிக் கொண்டிருப்பனபோல அவன் உடலில் ஒன்றுபட்டுக் கலந்திருந்தன.

இந்த ஆணழகனும் இவன் தாயும், வசித்த அதே வீதியில் இவர்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் வேறொரு மறவர் குடும்பம் வசித்து வந்தது.அந்தக் குடும்பத்தில் வாலைப்பருவத்துக் கன்னிப் பெண் ஒருத்தி இருந்தாள். ஆழகையும் ஆண்மையையும் தேடிக் கண்கள் துறுதுறுப்புக் கொண்டு திரியும் பருவம் அவளுக்கு. கிழவியின் மகன் வீட்டிலிருந்து வெளியே போகும்போதும், வெளியிலிருந்து வீட்டிற்கு வரும்போதும் தன் வீட்டுப் பலகணி வழியே அவன் அழகைப் பருகும் வாய்ப்பை அவள் தவறவிடுவதே இல்லை. பலகணியின் வழியாக வெளியே தெரியும் அந்த ஆண்மையின் எடுப்பான அழகைத் தன்னுடைய நீள் விழிகளுக்குள் அடக்க முயலும் முயற்சியில் அவளுக்கு வார்த்தை களால் விளக்க முடியாத ஒரு தனி விருப்பம் இருந்தது.