பக்கம்:புறநானூற்றுச் சிறுகதைகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

129


“அதோ தொலைவில் நிலா ஒளியின் கீழ் என்ன தெரிகிறது பார்த்தாயா?” *

“ஆம் அக்கா பறம்பு மலை அழகு மிகுந்து தோன்றுகிறது:” “சங்கவை! இன்று இந்த நிலாவையும் அதன் கீழ் ஒரு காலத்தில் நமக்குச் சொந்தமாயிருந்த அந்த அழகிய மலையையும் பார்க்கும்போது உன் உள்ளம் உருகவில்லையாடி?”

“ஒரு காலம் என்ன அக்கா? போன பெளர்ணமியின் போதுகூட உரிமையோடு அந்த மலையில் வாழ்ந்தோம். நம்முடைய தந்தை உயிரோடு இருந்தார்” சங்கவைக்கு அழுகை வந்துவிட்டது. கண்கள் மளமளவென்று நீரைச் சொரிந்தன. அவள் துயரம் தாங்க முடியாமல் அழுது விட்டாள் அப்போது.

மூத்தவளுக்கு மட்டும் மனம் கல்லா என்ன? அவள் வாய்விட்டு அழவில்லை. தலை குனிந்து கண்ணிர் சிந்தினாள்.

“சங்கவை! அழாதே அம்மா! மனித எண்ணங்களின்படி விதியின் எண்ணங்கள் இருப்பதில்லை” அங்கவையின் குரல் தழுதழுத்தது.

“அந்த விதியும் அதன் எண்ணங்களும் பாழாய்ப் போக! போன பெளர்ணமியன்று அதோ தொலைவில் அற்புதமான அழகுடன் தெரியும் பறம்புமலை நம்முடையதாக இருந்தது. நம்முடைய அன்புத் தந்தையும் உயிரோடு இருந்தார். இதோ இன்று இந்தப் பெளர்ணமிக்குள் விதி நம்முடைய வாழ்வை எவ்வளவு பயங்கரமாக மாற்றிவிட்டது அக்கா. மூவேந்தர்கள் வஞ்சனையால் நம்முடைய பறம்பு மலையைக் கைப்பற்றிக் கொண்டார்கள். நம்முடைய தந்தையையும் கொன்று விட்டார்கள். ஒரு திங்களுக்குள் எவ்வளவு குரூரமான மாறுபாடுகள்? இந்த விதிக்குக் கண் என்பதே இல்லையோ அக்கா?”

“இருக்கிறதோ, இல்லையோ?” கண் பெற்றவர்களை எல்லாம் குருடர்களாக்கி விட்டுத் தன் ஆணையை நிலைநாட்டுவதற்குத் தெரிகிறது விதிக்கு அது போதாதா?