பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.பார்த்தசாரதி

139

'அரசன் தம் முகத்தைப் பார்ப்பது அமங்கலமென்றெண்ணித் திரையிட்டுக் கொண்டு திரைக்குப் பின்னாலிருந்து பேசித் தம்மை அவமதிக்கிறான்’ என்று அவரால் அறிந்துகொள்ள முடியாது. அரசனும் அவரை வரவேற்றுப் போற்றி விட்டோம் என்று மன நிறைவு அடைந்துவிடலாம். அதே சமயத்தில் மங்கலக் குறைவும் ஏற்படாது. இந்த முடிவு பரராசசிங்கனுக்கு விருப்பமில்லைதான். ஆனாலும் அமைச்சர் சொல்லைத் தட்ட முடியாமல் எற்றுக் கொண்டான். அமைச்சர்கள் ஏற்பாட்டின்படியே வரவேற்பு நடந்தது. மெல்லிய பட்டுத்திரை இடையே தொங்கியதால் கண்விழித்துப் பார்த்தாலொழியப் பக்கத்தில் அமர்ந்து பேசிப் பாராட்டுவது போலவே குரல் கேட்கும். புலவருடன் வந்த மாணவர்களுக்கு ‘இந்தப் பட்டுத்திரை தொங்குவதும் அத்திரைக்குப் பின் இருந்து அரசன் புலவரைப் பார்க்காமல் வரவேற்பதும்’ என்ன என்றே புரியவில்லை. ஆனால் தங்கள் ஆசிரியரை அவமதிக்கும். ஏதோ ஒர் அம்சம் இதில் கலந்திருப்பதாகப் பொதுவாக அவர்கள் அறிந்தனர். கலைகள், தமிழ்க் கவிதைகள் இவைபற்றி அரசனும் வீரராகவரும் பேசிக்கொண்டே இருந்தனர்.திரை தொங்குவதை எப்படியாவது குறிப்பாக ஆசிரியருக்குப் புலப்படுத்தி விடவேண்டும் என்று கருதினர் மாணவர். உடன் வந்திருந்த மாணவருள் ஒருவருக்குப் பழைய நிகழ்ச்சி ஒன்று நினைவிற்கு வந்தது. ஆசிரியருடன் சிதம்பரம் போயிருந்தபோது சிதம்பரத்துக் கோவிலில் ‘சிதம்பர ரகசியம்’ என்ற பகுதிக்குத் திரையிட்டு மறைத்திருந்ததையும், ஆசிரியரிடம் அதைக் கேட்டபோது ‘இதுதான் தில்லைத் திருச்சிற்றம்பலம்’ என்று வேடிக்கையாகப் பதில் கூறியதும், அதன்பின் ‘மறைவு’ என்று கூறவேண்டிய போதெல்லாம் விளையாட்டாக அவர் அவ்வாறு கூறிவருவதும் அந்த மாணவரின் நினைவில் அப்போது தோன்றின. உடனே ஆசிரியருக்குப் பக்கமாகச் சென்று தற்செயலாகக் கூறிக் கொள்வது போல அவர் காதில் விழும்படியாக ‘தில்லைத் திருச்சிற்றம்பலம்’ என்று அழுத்தி இரண்டு தரம் சொன்னார் அந்த மாணவர். மாணவர் ஒதிய மந்திரம் விரைவில் வேலை