பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

தமிழ் இலக்கியக் கதைகள்

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே மூலையில் எங்கேயாவது ஒரு கழுநீர்ப்பானை நிறையக் கழுநீர் பாய்ந்து வர உருண்டு விடும். உருண்டு விட்ட கழுநீர்ப் பானையிலிருந்து வெள்ளம்போலப் பாய்ந்து வரும் நாற்றத்தோடு கூடிய பல நாள் புளித்து நுரை படர்ந்து தோன்றும் அழுக்கு நீர் நேரே சாப்பிடுபவர்கள் இலையை நோக்கிப் படை எடுக்கும். அது வரும் வேகத்தைப் பார்த்த எவரும் அதற்கு மேலும் பொறுமையாக இலையில் உட்கார்ந்து கொண்டிருப்பது நியாயமில்லை என்று எண்ணிக் கையலம்பாமலே ஆற்றங்கரைப் பக்கம் ஓடி விட வேண்டியதுதான். அப்படிச் செய்வதுதான் நியாயம். இல்லையென்றால் அங்கிருந்து தப்பிப் பிழைப்பது துர்லபம்.

அங்குள்ள சட்டி பானைகளிலும் பதார்த்தங்களிலும் ஏன் நம்முடைய இலையிலும் உடம்பிலும் கூட ஈக்கள்-வரிசை வரிசையாக அணி வகுத்து அமர்ந்து மொய்க்கும் காட்சி நேர்த்தியானது! தனிப்பட்ட ‘அழகு’ வாய்ந்தது! ‘மொலுமொலு’ என்ற ஈக்களின் அந்தச் சப்தத்தைத்தான் சொல்லுங்களேன்? என்ன குறை சொல்லமுடியும் அதன் இனிமையை? குடிக்கவோ கைகால் களைக் கழுவவோ தூய தண்ணிரை எதிர்பார்த்தால், அது நிச்சயமாக அப்படி எதிர்பார்ப்பவர்களுடைய தப்புதான். நாகதேவன் சோற்றுக் கடையில் அதெல்லாம் நடக்காது. வேனுமானால் ‘அந்தக் கழுநீரை'ப் போல அவ்வளவு மோசமாக இராது, கொஞ்சம் சுமாரான தண்ணீர் கிடைக்கும். அங்கே யாருக்கும் தனிப்பட்ட சலுகைகள் என்று கிடையாது. எல்லோருக்கும் இதே நிலைதான். அந்த விஷயங்களில் எல்லாம் நாகதேவன் நிரம்பக் கண்டிப்பாக இருப்பான்.” இதுதான் நாகதேவன் சோற்றுக் கடை. இதன் தூய்மையைப் பற்றி இதற்கு மேல் இன்னும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் தனிப்பாடல் திரட்டில், அவன் கடைக்கும் விஜயம் செய்து ‘அனுபவித்த’ புலவர் ஒருவர் இவ்வளவு செய்திகளைத்தான் அதிகார பூர்வமாகக் கூறியிருக்கிறார். அதற்கு மேல் நான் கூறினால் நாகதேவனை அது பாதிக்குமல்லவா?