பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

தமிழ் இலக்கியக் கதைகள்

தேசியப் போராட்டத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக அப்போது ஆண்டு வந்த அந்நிய அரசாங்கம் அவரைக் கைது செய்து கடலூர் சிறையில் கொண்டு போய் வைத்தது. அதே சிறையில் நாட்டு விடுதலைப் போரில் குதித்த வேறு சில தேசத் தொண்டர்களும் அடைக்கப் பட்டிருந்தனர். அவர்களில் ‘கல்கி’ சதாசிவம் அவர்களும் ஒருவர்.

தமிழ்ப் பாவலரான அனுமந்தன்பட்டி ஐயங்காரவர்கள் சிறையில் இருந்தது எல்லாத் தேசபக்தர்களுக்கும் ஒரு வகையில் நல்ல பயனை அளித்தது. தமிழ் இலக்கியத்தைப் பற்றி அவர் சுவையான செய்திகள் பலவற்றைக் கூறி, எல்லோருடைய நேரத்தையும் பயனுள்ளதாக்குவார். அவரால் சிறையில் தமிழ் மணம் கமழ்ந்தது. இதனால் சிறையில் இருப்பதையே மறந்து ஒரு குடும்பமாக வாழ்வதுபோல் கடலூர் சிறையில் நாட்களைக் கழித்தார்கள் தேசபக்தர்கள்.

அந்தக் காலத்தில் கடலூர் சிறையில் இப்போதிருப்பது போன்ற வசதிகள் இல்லை. அதுவும் கைதிகள் தேசபக்தர்கள் என்று தெரிந்தால் கொடுமை அதிகம்.

ஒருநாள் காலையில் தேசபக்தர்களுக்கு உணவு கிடைக்க வேண்டிய வேளையில் கிடைக்கவில்லை. எல்லோரும் பட்டினி. ‘செவிக்கு உணவு இல்லாத சமயத்தில் வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்ற கருத்தின்படி ஐயங்கார் கம்பராமாயணம், திருக்குறள் என்று எதை எதையோ சுவையாகக் கூறி நண்பர்களின் பசியை மறக்கச் செய்வதற்கு முயன்றார். சிறிது நேரம்தான் அவருடைய முயற்சி வெற்றி பெற்றது. நேரம் ஆக ஆகப் பசி வயிற்றைக் கிள்ளியது. இலக்கியச் சுவை செவிகளில் ஏறவில்லை. பிறருக்கு இலக்கியச் சுவையூட்டிய ஐயங்காருக்கே பசி பொறுக்க முடியவில்லை. சிறைச்சாலை அதிகாரிகள் கவனிக்கிற பாடாயில்லை. தேசத் தொண்டர்களுக்குப் பசியும் கோபமும் அதிகரித்தன. சிறைக் காவலாளிகளை நோக்கிக் கூச்சலிட்டனர். போடுவதோ அறைகுறைச் சாப்பாடு. அதையும் நேரத்தோடு போடாமல் பசியை வளரவிட்டால் எப்படிப் பொறுக்க முடியும்? சிறையில்