டாக்டர். மா. இராசமாணிக்கனார்
317
இவருள் குலோத்துங்கனது முற்பகுதி ஆட்சியில் இருந்தவன் செங்கேணி அம்மையப்பன் - பாண்டி நாடு கொண்டான் - கண்டன் சூரியன் இராசராசச் சம்பு வராயன் என்பவன் ஆவன். இவன், இக்குலோத்துங்கன் அல்லது இராசாதிராசன் நடத்திய பாண்டிய நாட்டுப் போர்கள் ஒன்றில் படைத்தலைவனாகச் சென்று வெற்றி பெற்றவன் என்பது இவனது சிறப்புப் பெயரால் தெரிகிறதன்றோ? இவன் தென் ஆர்க்காடு கோட்டத்துப் பிரம்ம தேசத்தில் உள்ள கோவில் காரியங்களை ஒழுங்கு செய்தவன் எண்ணாயிரம் என்னும் ஊரில் ஒரு மண்டபம் கட்டியவன்; அச்சிறுபாக்கம் கோவிலுக்கு இரண்டு பட்டயங்களை வழங்கியவன்[1]. இவன் காலத்திலும் இவற்குப் பின்னரும் குலோத்துங்கன் காலத்தில் - ‘செங்கேணிமிண்டன் அத்திமல்லன் சாம்புவராயன்’ என்பவனும் செங்கேணி அம்மையப்பன் கண்ணுடைப் பெருமான் ஆன விக்கிரம சோழன் என்பவனும், ‘வீரசோழன் அத்திமல்லன்’ என்பவனும் ‘குலோத்துங்க சோழச் சாம்புவராயன்’ என்பவனும் ‘ஆளப் பிறந்தான்; எதிரிலி சோழச் சாம்புவராயன்’ என்பவனும் குறிப்பிடத்தக்கவர் ஆவர்[2]. இவருள் குலோத்துங்க சோழன் சீய மங்கலம் தூணாண்டார் கோவிலில் மாளிகை ஒன்று கட்டினான்; அக்கோவிற்கு 12 வேலி நிலம் தேவதானமாக விட்டான்[3]. அத்தி மல்லன் என்பவன் திருவோத்தூர், திருவல்லம், அச்சிறுபாக்கம் ஆகிய இடங்களில் உள்ள சிவன் கோவில்கட்குப் பல நிபந்தங்கள் செய்துள்ளான்[4].
காடவராயர் : இவர்கள் செங்கோணிக் குடியினரைப் போலவே பல்லவ மரபினர் ஆவர். இவர்கள் தங்களைப் பண்டைப் பல்லவர் மரபினர் என்றே கூறிவந்தனர். இவர்கள் திருமுனைப்பாடிநாட்டுக் கூடலூரிலும் சேந்த