பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

பெருங்கதை

இதனை இயற்றியவர் கொங்கு வேளிராதலின் இதற்குக் கொங்குவேள் மாக்கதை என்ற பெயரும் உண்டு. பைசாச மொழியில் குணாட்டியர் எழுதிய பிருகத் கதா எனும் நூலின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை இவர் காவியமாகத் தந்துள்ளார். இது சமணச் சார்புடையது; காலம் கி. பி. 6 ஆம் நூற்றாண்டு. இதில் உஞ்சைக் காண்டம், இலாவண காண்டம். மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என ஐந்து காண்டங்கள் உள்ளன . இஃது ஆசிரியப்பாவால் இயன்றது.

வத்தவ நாட்டில் கௌசாம்பிய நகரத்து அரசன் உதயணன், இவனது யாழ் இசையில் மயங்கிய கடவுள் தன்மை வாய்ந்த யானை ஒன்று, இவன் அடிபணிகிறது. உச்சையினி நகரத்து அரசனால் சிறைபட்ட இவன் நண்பன் யூகியின் உதவியால் வெளியேறினான்; அந்நகரத்து மன்னன் மகள் வாசவதத்தையை மணந்தான். இறுதியில் துறவறம் ஏற்றான், இந் நூற்கண் சமணக் கோட்பாடுகள் மிகுதியாக விளக்கப்படுகின்றன.

“அன்புடைக் கணவர் அழிதகச் செயினும்
பெண்பிறந்தோர்க்குப் பொறையே பெருமை”

என்பது போன்ற அரிய கருத்துகள் இந்நூலில் உள்ளன.

முத்தொள்ளாயிரம்

இது சங்க காலத்தை அடுத்த இருண்ட காலத்துத் தோன்றிய நூலாகும். சேர, சோழ, பாண்டியர்களைச் சிறப்பித்துப் பாடிய பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு அரசருக்கும் 900 பாடல்கள் பாடப்பட்டன என்பர். நூல் முழுமையும் இப்போது கிடைக்கவில்லை. 108 செய்யுள்களே கிடைத்துள்ளன.