பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

திருவிளையாடற்புராணம


அதை ஏற்றுக் கோயில் மூலவரின் ஈசானிய மூலையில் அவள் காத்து இருந்தாள். வன்னிமரமும் கிணறும் சிவலிங்கமும் அங்கு நிறுத்தப்பட்டன. எல்லாம் வல்ல இறைவன் திருவருள் கண்டு அவள் உள்ளம் உவந்தாள். ஓடிச் சென்று மூத்தவளை அழைத்து வந்து “வருக! இங்கே வந்து பார்; வன்னி மரமும், கிணறும், சிவலிங்கமும் சான்றாக மணம் முடித்தோம்; அவை வந்து நிற்கின்றன” என்றாள். இந்த அதிசயத்தைக் கண்டு அவள் அதிர்ந்து போனாள்.

இதற்குமுன் இம்மூன்றும் அங்கு இருந்தது இல்லை. இந்தப் புதுமையைக் கண்டு பதுமை போல அசையாமல் நின்றாள். சிவன் அருள் இளையவளுக்குச் சித்தித்து இருப்பது கண்டு அவள் வந்தித்து வணங்கித் தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். ஒறுத்து வருத்திய அந்த மூத்தவளைக் கணவன் வெறுத்து ஒதுக்கி வைத்தான்.

வீடு சேர்ந்த இளையவள் தன் சகக்களத்தியை வெறுக்கவில்லை அவளைத் தன் மூத்த சகோதரியாக மதித்து அவளை ஏற்றுக் கொள்ளும்படி கணவனிடம் வேண்டினாள். மூத்தவளைத் தன் தாயெனப் போற்றி அன்பும் மரியாதையும் காட்டினாள்.

இளையவளின் சேர்க்கையில் அக்குடும்பம் நன்மைகனை அடைந்து அவர்கள் வணிகத்தில் உயர்ந்து தன்னிகரற்ற செல்வராய்த் திகழ்ந்தனர்.

முற்றும்