கலித்தொகை/3.மருதக்கலி/91-100

விக்கிமூலம் இலிருந்து

பாடல் 91 (அரி நீர் அவிழ் நீலம்)[தொகு]

அரி நீர் அவிழ் நீலம், அல்லி, அனிச்சம்,
புரி நெகிழ் முல்லை, நறவோடு அமைந்த
தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார்
பொரு முரண் சீறச் சிதைந்து, நெருநையின்
இன்று நன்று, என்னை அணி;

அணை மென் தோளாய்! செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்கு எவன்,
ஐயத்தால்? என்னை கதியாதி; தீது இன்மை
தெய்வத்தான் - கண்டீ தெளிக்கு;

மற்று அது, அறிவல், யான் நின் சூள்; அனைத்து ஆக நல்லார்
செறி தொடி உற்ற வடுவும், குறி பொய்த்தார்
கூர் உகிர் சாடிய மார்பும், குழைந்த நின்
தாரும், ததர் பட்ட சாந்தமும், சேரி
அரி மதர் உண் கண்ணார், ஆராக் கவவின்
பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு, யானும்
செரு ஒழிந்தேன்; சென்றீ, இனி;

தெரி இழாய்! தேற்றாய் சிவந்தனை - காண்பாய், நீ - தீது இன்மை
ஆற்றின் நிறுப்பல் பணிந்து;

அன்னதேல், ஆற்றல் காண்;
வேறுபட்டாங்கே கலுழ்தி; அகப்படின்,
மாறுபட்டாங்கே மயங்குதி; யாது ஒன்றும்
கூறி உணர்த்தலும் வேண்டாது, மற்று நீ
மாணா செயினும், மறுத்து, ஆங்கே, நின் வயின்
காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின், என் உற்றாய்
பேணாய் நீ பெட்பச் செயல்?


பாடல் 92 (புன வளர் பூங்கொடி)[தொகு]

புன வளர் பூங் கொடி அன்னாய்! கழியக்
கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே!
முயங்கிய நல்லார் முலை இடை மூழ்கி,
மயங்கி, மற்று ஆண்டு ஆண்டுச் சேறலும் செல்லாது,
உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும்,
அரிதின் அறம் செய்யா, ஆன்றோர் உலகும்,
உரிதின் ஒருதலை எய்தலும் - வீழ்வார்ப்
பிரிதலும், ஆங்கே புணர்தலும், தம்மில்
தருதல் தகையாதால் மற்று;

நனவினால் போலும், நறு நுதால்! அல்கல்
கனவினால் சென்றேன் - கலி கெழு கூடல்
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையைக்
கரை அணி காவின் அகத்து;

உரை, இனி - தண்டாத் தீம் சாயல் நெடுந்தகாய்! அவ் வழிக்
கண்டது எவன் மற்று நீ?

கண்டது - உடன் அமர் ஆயமொடு, அவ் விசும்பு ஆயும்
மட நடை மா இனம், அந்தி அமையத்து,
இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால்,
இறைகொண்டு இருந்தன்ன - நல்லாரைக் கண்டேன்;

துறை கொண்டு உயர் மணல் மேல் ஒன்றி நிறைவதை
ஓர்த்தது இசைக்கும் பறை போல், நின் நெஞ்சத்து
வேட்டதே கண்டாய் கனா;

கேட்டை, விரையல் நீ; மற்று வெகுள்வாய்! - உரை - ஆண்டு
இது ஆகும், இன் நகை நல்லாய்! பொது ஆகத்,
தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர்
பூங் கொடி வாங்கி, இணர் கொய்ய, ஆங்கே
சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத
முனை அரண் போல உடைந்தன்று, அக் காவில்
துனை வரி வண்டின் இனம்;

மற்று ஆங்கே, நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அவ் வழிக்
காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச,
அவருள்,
ஒருத்தி, செயல் அமை கோதை நகை,
ஒருத்தி, இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப,
ஒருத்தி, தெரி முத்தம் சேர்ந்த திலகம்,
ஒருத்தி, அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க,
ஒருத்தி, வரி ஆர் அகல் அல்குல் காழகம்,
ஒருத்தி, அரி ஆர் ஞெகிழத்து அணி சுறாத் தட்ப,
ஒருத்தி, புலவியால் புல்லாது இருந்தாள், அலவுற்று
வண்டு இனம் ஆர்ப்ப, இடை விட்டுக் காதலன்
தண் தார் அகலம் புகும்;

ஒருத்தி, அடி தாழ் கலிங்கம் தழீஇ, ஒரு கை
முடி தாழ் இரும் கூந்தல் பற்றிப், பூ வேய்ந்த
கடி கயம் பாயும், அலந்து;

ஒருத்தி, கணம் கொண்டு அவை மூசக், கை ஆற்றாள், பூண்ட
மணம் கமழ் கோதை பரிபு கொண்டு, ஓச்சி
வணங்கு காழ் வங்கம் புகும்;

ஒருத்தி, இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள்,
பறந்தவை மூசக் கடிவாள், கடியும்
இடம் தேற்றாள் சோர்ந்தனள், கை;

ஆங்க, கடி காவில் கால் ஒற்ற, ஒல்கி ஒசியாக்
கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல்,
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார் வண்டிற்கு
வண்டலவர்; கண்டேன், யான்;

நின்னை நின் பெண்டிர் புலந்தனவும், நீ அவர்
முன் அடி ஒல்கி உணர்த்தினவும், பல் மாண்
கனவின் தலையிட்டு உரையல்; சினைஇ யான்
செய்வது இல் என்பதோ? கூறு;

பொய் கூறேன் - அன்ன வகையால் யான் கண்ட கனவு தான்
நல் வாயாக் காண்டை - நறு நுதால்! பல் மாணும்
கூடிப் புணர்ந்தீர்! பிரியன்மின்; நீடிப்
பிரிந்தீர்! புணர் தம்மின், என்பன போல
அரும்பு அவிழ் பூஞ் சினை தோறும் இரும் குயில்
ஆனாது அகவும் பொழுதினான், மேவர,
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்
தேன் இமிர் காவில் புணர்ந்து இருந்து ஆடுமார்,
ஆனா விருப்போடு அணி அயர்ப, காமற்கு
வேனில் விருந்து எதிர்கொண்டு.

பாடல் 93 (வண்டு ஊது சாந்தம்)[தொகு]

வண்டு ஊது சாந்தம் வடுக் கொள நீவிய,
தண்டாத் தீம் சாயல் பரத்தை, வியல் மார்ப!
பண்டு, இன்னை அல்லைமன்; ஈங்கு எல்லி வந்தீயக்,
கண்டது எவன்? மற்று உரை;

நன்றும், தடைஇய மென் தோளாய்! கேட்டீவாய் ஆயின் -
உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும்
கடவுளர் கண் தங்கினேன்;

சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர், நீ
கடவுண்மை கொண்டு ஒழுகுவார்;
அவருள், எக் கடவுள்? மற்று அக் கடவுளைச் செப்பீமன்;
முத்து ஏர் முறுவலாய் நாம் மணம் புக்கக் கால்
இப் போழ்து போழ்து என்று அது வாய்ப்பக் கூறிய
அக் கடவுள், மற்று அக் கடவுள்; - அது ஒக்கும்
நாவுள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும்
மாயமோ; கைப்படுக்கப்பட்டாய், நீ; கண்டாரை
வாய் ஆக யாம் கூற வேட்டீவாய்! கேள் இனி;

பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்பப்,
பறி முறை நேர்ந்த நகார் ஆகக், கண்டார்க்கு
இறு முறை செய்யும் உருவொடு, நும் இல்,
செறி முறை வந்த கடவுளைக் கண்டாயோ?

நறும் தண் தகரமும் நானமும் நாறும்
நெறிந்த குரல் கூந்தல் நாள் அணிக்கு ஒப்ப,
நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு, மேல் நாள், நீ
பூப் பலி விட்ட கடவுளைக் கண்டாயோ?

ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச்
சூர் கொன்ற செவ்வேலான் பாடிப், பல நாளும்,
ஆராக் கனை காமம் குன்றத்து நின்னொடு
மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ?

கண்ட கடவுளர் தம் உள்ளும், நின்னை
வெறி கொள் வியல் மார்பு வேறு ஆகச் செய்து,
குறி கொளச் செய்தார் யார்? செப்பு; மற்று, யாரும்
சிறு வரைத் தங்கின் வெகுள்வர்; செறு தக்காய்!
தேறினேன்; சென்றீ; நீ செல்லா விடுவாயேல்,
நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய
நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும்
முட்டுப்பாடு ஆகலும் உண்டு.

பாடல் 94 (என் நோற்றனை கொல்லோ?)[தொகு]

என் நோற்றனை கொல்லோ? -
நீர் உள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல்
ஈங்கு உருச் சுருங்கி
இயலுவாய்! நின்னோடு உசாவுவேன்; நின்றீத்தை;

அன்னையோ! காண் தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான்
ஆண்டலைக்கு ஈன்ற பறழ் மகனே! நீ எம்மை
'வேண்டுவல்' என்று விலக்கினை; நின் போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று?

மாண்ட, எறித்த படை போல் முடங்கி மடங்கி,
நெறித்துவிட்டன்ன நிறை ஏரால், என்னைப்
பொறுக்கல்லா நோய் செய்தாய்; பொறீஇ நிறுக்கல்லேன்;
நீ நல்கின் உண்டு, என் உயிர்;

குறிப்புக் காண் - வல்லுப்பலகை எடுத்து நிறுத்தன்ன
கல்லாக் குறள! கடும் பகல் வந்து எம்மை,
'இல்லத்து வா' என, மெய் கொளீஇ, எல்லா! நின்
பெண்டிர் உளர் மன்னோ? கூறு;

நல்லாய் கேள்! உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய
கொக்கு உரித்தன்ன கொடு மடாய்! நின்னை யான்
புக்கு அகலம் புல்லின், நெஞ்சு ஊன்றும்; புறம் புல்லின்
அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன்; அருளீமோ.
பக்கத்துப் புல்லச் சிறிது;

போ, சீத்தை! மக்கள் முரியே! நீ மாறு, இனித், தொக்க
மரக் கோட்டம் சேர்ந்து எழுந்த பூங் கொடி போல,
நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர், எம்மைப்,
புரப்பேம் என்பாரும் பலரால்; பரத்தை, என்
பக்கத்துப் புல்லீயாய் என்னுமால்; தொக்க
உழுந்தினும் துவ்வாக், குறு வட்டா! நின்னின்
இழிந்ததோ, கூனின் பிறப்பு? - கழிந்து ஆங்கே,
'யாம் வீழ்தும்' என்று தன் பின் செலவும், உற்றீயாக்
கூனி குழையும் குழைவு காண்;

யாமை எடுத்து நிறுத்தற்றால், தோள் இரண்டும் வீசி,
யாம் வேண்டேம் என்று விலக்கவும், எம் வீழும்
காமர் நடக்கும் நடை காண் - கவர் கணைச்
சாமனார் தம் முன் செலவு காண்;

ஓஒ! காண், நம்முள் நகுதல் தொடீஇயர், நம்முள் நாம்
உசாவுவம்; கோன் அடி தொட்டேன்;

ஆங்கு ஆக! சாயல் இன் மார்ப! அடங்கினேன்; ஏஎ!
பேயும் பேயும் துள்ளல் உறும் எனக்
கோயில் உள் கண்டார் நகாமை வேண்டுவல்;
தண்டாத் தகடு உருவ! வேறு ஆகக் காவின் கீழ்ப்
போதர்; அகடு ஆரப் புல்லி முயங்குவேம் -
துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை
முகடு காப்பு யாத்துவிட்டாங்கு.

பாடல் 95 (நில் ஆங்கு)[தொகு]

நில், ஆங்கு; நில், ஆங்கு; இவர்தரல் - எல்லா! நீ
நாறு இரும் கூந்தலார் இல் செல்வாய், இவ் வழி
ஆறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே
மாறு; இனி நின் ஆங்கே நின், சே அடி சிவப்பச்,
செறிந்து ஒளிர் வெண் பல்லாய்! யாம் வேறு இயைந்த
குறும்பூழ் போர் கண்டேம்; அனைத்தல்லது, யாதும்
அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது;

குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன், நீ என்றும்;
புதுவன ஈகை வளம் பாடிக், காலின்
பிரியாக் கவி கை புலையன் தன் யாழின்
இகுத்த செவி சாய்த்து, இனி இனிப் பட்டன
ஈகைப் போர் கண்டாயும் போறி; மெய் எண்ணின்,
தபுத்த புலர்வு இல புண்;

ஊரவர் கவ்வை உளைந்து ஈயாய், அல்கல் நின்
தாரின் வாய்க் கொண்டு முயங்கிப், பிடி மாண்டு,
போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டு, ஆடும்
பார்வைப் போர் கண்டாயும் போறி; நின் தோள் மேலாம்
ஈரம் ஆய் விட்டன புண்;

கொடிற்றுப் புண் செய்யாது, மெய்ம் முழுதும் கையின்
துடைத்து, நீ வேண்டினும் வெல்லாது கொண்டு, ஆடும்
ஒட்டிய போர் கண்டாயும் போறி; முகம் தானே
கொட்டிக் கொடுக்கும் குறிப்பு;

ஆயின், ஆய் இழாய்! அன்னவை யான் ஆங்கு அறியாமை
போற்றிய, நின் மெய் தொடுகு;

அன்னையோ! மெய்யைp பொய் என்று மயங்கிய, கை ஒன்று,
அறிகல்லாய் போறி காண், நீ; 95-26

நல்லாய்! பொய் எல்லாம் ஏற்றிt, தவறு தலைப்பெய்து,
கையொடு கண்டாய்; பிழைத்தேன்; அருள் இனி;

அருளுகம் யாம்; யாரேம்; எல்லா! தெருள?
அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம் - இன்னும்
விளித்து, நின் பாணனோடு ஆடி, அளித்தி -
விடலை நீ நீத்தலின், நோய் பெரிது ஏய்க்கும்;
நடலைப்பட்டு, எல்லாம் நின் பூழ்.

பாடல் 96 (ஏந்து எழில் மார்ப)[தொகு]

ஏந்து எழில் மார்ப! எதிர் அல்ல, நின் வாய் சொல்;
பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்து ஆனா மைந்தினை;
சாந்து அழி வேரை; சுவல் தாழ்ந்த கண்ணியை;
யாங்குச் சென்று, ஈங்கு வந்தீத்தந்தாய்? கேள், இனி;

ஏந்தி, எதிர் இதழ் நீலம் பிணைந்தன்ன கண்ணாய்!
குதிரை வழங்கி வருவல்;

அறிந்தேன், குதிரை தான்!
பால் பிரியா ஐங்கூந்தல் பல் மயிர்க் கொய் சுவல்,
மேல் விரித்து யாத்த சிகழிகைச் செவ் உளை,
நீல மணிக் கடிகை வல்லிகை, யாப்பின் கீழ்
ஞால் இயல் மெல் காதின் புல்லிகைச் சாமரை,
மத்திகைக் கண்ணுறை ஆகக் கவின் பெற்ற
உத்தி ஒரு காழ், நூல் உத்தரியத் திண் பிடி,
நேர் மணி நேர் முக் காழ்ப் பல் பல கண்டிகைத்,
தார் மணி பூண்ட தமனிய மேகலை,
நூபுரப் புட்டில், அடியொடு அமைத்து யாத்த
வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி, நீ,
காதலித்து ஊர்ந்த நின் காமக் குதிரையை,
ஆய் சுதை மாடத்து, அணி நிலா முற்றத்துள்,
ஆதி கொளீஇய, அசையினை ஆகுவை,
வாதுவன்; வாழிய நீ;

சேகா! கதிர் விரி வைகலில், கை வாரூஉக் கொண்ட
மதுரைப் பெரு முற்றம் போல, நின் மெய்க் கண்
குதிரையோ, வீறியது?

கூர் உகிர் மாண்ட குளம்பின் அது; நன்றே
கோரமே - வாழி! - குதிரை;

வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்தக்
குதிரை உடல் அணி போல, நின் மெய்க் கண்
குதிரையோ, கவ்வியது?

சீத்தை! பயம் இன்றி ஈங்குக் கடித்தது; நன்றே
வியமமே வாழி! - குதிரை;

மிக நன்று; இனி அறிந்தேன், இன்று நீ ஊர்ந்த குதிரை;
பெரு மணம் பண்ணி, அறத்தினில் கொண்ட
பருமக் குதிரையோ அன்று; பெரும! நின்
ஏதில் பெரும் பாணன் தூது ஆட, ஆங்கே ஓர்
வாதத்தான் வந்த வளிக் குதிரை; ஆதி
உரு அழிக்கும் அக் குதிரை ஊரல்; நீ ஊரின், பரத்தை
பரியாக, வாதுவனாய், என்றும் மற்று அச்சார்த்
திரி, குதிரை ஏறிய செல்.

பாடல் 97 (அன்னை கடுஞ் சொல் அறியாதாய்)[தொகு]

அன்னை; கடுஞ் சொல் அறியாதாய் போல, நீ
என்னைப் புலப்பது, ஒறுக்குவென் மன் யான் -
சிறுகாலை இற்கடை வந்து, குறி செய்த
அவ் வழி என்றும் யான் காணேன் திரிதர,
எவ் வழிப் பட்டாய் சமன் ஆக, இவ் எள்ளல்;

முத்து ஏர் முறுவலாய்! நம் வலைப் பட்டது ஓர்
புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன்;

ஒக்கும்;
அவ் யானை, வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன்;
அவ் யானை தான் சுண்ண நீறு ஆடி, நறு நறா நீர் உண்டு -
ஒள் நுதல் யாத்த திலக அவிர் ஓடைத்,
தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டுத்,
தொய்யகம் தோட்டிக், குழை தாழ் வடி மணி,
உத்தி பொறித்த புனை பூண் பருமத்து -
முத்து ஏய்க்கும் வெண் பல் நகை திறந்து,
நல் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து,
தன் நலம் காட்டித், தகையினால், கால் தட்டி வீழ்க்கும்,
தொடர் தொடர் ஆக வலந்து, படர் செய்யும்
மென் தோள் தடக் கையின் வாங்கித், தன் கண்டார்
நலம் கவளம் கொள்ளும் நகை முக வேழத்தை,
இன்று கண்டாய் போல், எவன் எம்மைப் பொய்ப்பது, நீ?

எல்லா! கெழீஇத், தொடி செறித்த தோள் இணை, தத்திக்
தழீஇ கொண்டு ஊர்ந்தாயும் நீ;

குழீஇ, அவாவினால் தேம்புவார் இல் கடை ஆறா,
உவா அணி ஊர்ந்தாயும் நீ;

மிகாஅது, சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண் கண்
நீர்க்கு விட்டு, ஊர்ந்தாயும் நீ;

சார்ச் சார் நெறி தாழ் இரும் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் 97-28
சிறு பாகர் ஆக சிரற்றாது, மெல்ல,
விடாஅது நீ எம் இல் வந்தாய்; அவ் யானை
கடாஅம் படும் இடத்து ஓம்பு.

பாடல் 98 (யாரை நீ எம் இல்)[தொகு]

யாரை நீ எம் இல் புகுதர்வாய்? ஓரும்
புதுவ மலர் தேரும் வண்டே போல் - யாழ
வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய் -
மாட்டு மாட்டு ஓடி, மகளிர் தரத் தரப்,
பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம்
பாட்டு ஆதல் சான்ற நின் மாயப் பரத்தைமை -
காட்டிய வந்தமை கைப்படுத்தேன் - பண்டு எலாம்
கேட்டும் அறிவேன்மன், யான்;

தெரி கோதை அம் நல்லாய்! தேறீயல் வேண்டும் -
பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை
வரு புனல் ஆடத் தவிர்ந்தேன்; பெரிது என்னைச்
செய்யா மொழிவது எவன்?

ஓஒ! புனல் ஆடினாய் எனவும் கேட்டேன்; புனல் ஆங்கே
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக,
மாண் எழில் உண் கண், பிறழும் கயல் ஆகக்,
கார் மலர் வேய்ந்த கமழ் பூம் பரப்பு ஆக
நாணுச் சிறை அழித்து நன்பகல் வந்த அவ்
யாணர் புதுப் புனல் ஆடினாய், முன் மாலைப்
பாணன் புணை ஆகப் புக்கு;

ஆனாது, அளித்து அமர் காதலோடு அப் புனல் ஆடி,
வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சிக்,
குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன்; குளித்தாங்கே,
போர்த்த சினத்தான் புருவத் திரை இடா,
ஆர்க்கும் ஞெகிழத்தான் நன் நீர் நடை தட்பச்
சீர்த் தக வந்த புதுப் புனல் நின்னைக் கொண்டு
ஈர்த்து உய்ப்பக் கண்டார் உளர்;

ஈர்த்தது, உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்கப்,
புரை தீர் புதுப் புனல் வெள்ளத்தின் இன்னும்
கரை கண்டதூ உம் இலை;

நிரை தொடீஇ! பொய்யா வாள் தானைப், புனை கழல் கால் தென்னவன்
வையைப் புதுப் புனல் ஆடத் தவிர்ந்ததைத்
தெய்வத்தின் தேற்றித் தெளிப்பேன்; பெரிது என்னைச்
செய்யா மொழிவது எவன்;

மெய்யதை, மல்கு மலர் வேய்ந்த மாயப் புதுப் புனல்
பல் காலும் ஆடிய செல்வுழி, ஒல்கிக்
களைஞரும் இல் வழிக் கால் ஆழ்ந்து தேரோடு
இள மணலுள் படல் ஓம்பு - முளை நேர்
முறுவலார்க்கு ஓர் நகை செய்து.

பாடல் 99 (நறவினை வரைந்தார்க்கும்)[தொகு]

நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும், அவை எடுத்து
அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது,
குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல், உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்
பிழையாது வருதல் நின் செம்மையின் தர, வாய்ந்த
இழை அணி கொடித் திண் தேர் இன மணி யானையாய்!

அறன் நிழல் எனக் கொண்டாய், ஆய் குடை; அக் குடை
புற நிழல் கீழ்ப் பட்டாளோ, இவள்? இவள் காண்டிகா-
பிறை நுதல் பசப்பு ஊரப் பெரு விதுப்பு உற்றாளை!

பொய்யாமை நுவலும் நின் செங்கோல்; அச் செங்கோலின்
செய் தொழில் கீழ்ப் பட்டாளோ, இவள்? இவள் காண்டிகா-
காம நோய் கடைக் கூட்ட வாழும் நாள் முனிந்தாளை!

ஏமம் என்று இரங்கும், நின் எறி முரசம்; அம் முரசின்
ஏமத்து இகந்தாளோ, இவள்? இவள் காண்டிகா-
வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை!
ஆங்கு;
நெடிது சேண் இகந்தவை காணினும் தான் உற்ற
வடுக் காட்டக், கண் காணாதற்று ஆக, என் தோழி
தொடி கொட்ப நீத்த கொடுமையைக்
கடிது என உணராமை கடிந்ததோ, நினக்கே?

பாடல் 100 (ஈண்டு நீர் மிசை)[தொகு]

ஈண்டு நீர் மிசைத் தோன்றி இருள் சீக்கும் சுடரே போல்,
வேண்டாதார் நெஞ்சு உட்க, வெரு வந்த கொடுமையும்,
நீண்டு தோன்று உயர் குடை நிழல் என சேர்ந்தார்க்குக்
காண்தகு மதி என்னக் கதிர் விடு தண்மையும்,
மாண்ட நின் ஒழுக்கத்தால் மறு இன்றி, வியன் ஞாலத்து
யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய்!

'ஐயம் தீர்ந்து யார் கண்ணும் அரும் தவ முதல்வன் போல்
பொய் கூறாய்' என நின்னைப் புகழ்வது கெடாதோ தான்-
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள்
பல் இதழ் மலர் உண் கண் பனி மல்கக் காணும் கால்!

'சுரந்த வான் பொழிந்தற்றாச் சூழ நின்று யாவர்க்கும்
இரந்தது நசை வாட்டாய்' என்பது கெடாதோ தான்-
கலங்கு அஞர் உற்று, நின் கமழ் மார்பு நசைஇயாள்
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊரக் காணும் கால்!

'உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல்,
முறை செய்தி' என நின்னை மொழிவது கெடாதோ தான்-
அழி படர் வருத்த நின் அளி வேண்டிக் கலங்கியாள்
பழி தபு வாள் முகம் பசப்பு ஊரக் காணும் கால்!
ஆங்கு;
தொல் நலம் இழந்தோள், நீ துணை எனப் புணர்ந்தவள்;
இன் உறல் வியன் மார்ப! 'இனையையால் கொடிது' என
நின்னை யான் கழறுதல் வேண்டுமோ,
என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே!

"https://ta.wikisource.org/w/index.php?title=கலித்தொகை/3.மருதக்கலி/91-100&oldid=1053886" இலிருந்து மீள்விக்கப்பட்டது