சோழர் வரலாறு/இராசேந்திரன் மக்கள்

விக்கிமூலம் இலிருந்து

7. இராசேந்திரன் மக்கள்
(கி.பி. 1044 - 1070)

முன்னுரை: பேரரசன் இராசேந்திர சோழர்க்குப் பின் அவன் மக்கள் மூவரும் அடுத்தடுத்து அரசராயினர். தங்கள் ஆட்சிக்காலத்தில் தந்தை விட்ட பேரரசை நிலை நிறுத்தி ஆண்டனர்; அதனை நிலைநிறுத்தப் பல போர்கள் செய்தனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை மேலைச் சாளுக்கியருடன் நடத்திய போர்களே ஆகும். கொடிய போர் ஒன்றின் இடையில் இராசாதிராசன் கொல்லப்பட்டான். உடனே சோழர் படை தளர்ந்தது. அவ்வமயம் பின் இருந்த இராசேந்திரசோழ தேவன் (இராசாதிராசன் தம்பி) அப்போர்க்களத்திற்றானே முடிசூடி வீராவேசத்துடன் போராடிப் போரை வென்றான். இங்ஙணம் நடைபெற்ற வடநாட்டுப் போர்கள் ஒரு பாலாகத் தெற்கே இலங்கை அரசன், பாண்டியன்,சேரன் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து தத்தம் சுயாட்சியை நிலைநிறுத்தக் கலகம் விளைத்தனர். இத்தகைய குழப்ப நிலைகளை இம்மக்கள் மூவரும் அவ்வப்போது அடக்கிப் பேரரசு நிலை தளராதவாறு பாதுகாத்தனர்; இறுதியில் கீழைச் சாளுக்கியர் உதவியையும் பேரரசின் பலத்துடன் கலந்து பின்னும் ஒரு நூற்றாண்டு சோழப் பேரரசு நிலைத்திருக்க வழிதேடினர்; அஃதாவது சாளுக்கிய சோழ இராசேந்திரன் எனப்பட்ட முதற் குலோத்துங்கன் சோழப் பேரரசைப் பெறச் செய்தனர்.

ஆட்சி முறை : இராசேந்திரன் முதலியோர் ஆண்ட ஆண்டுகளை வரையறை செய்து பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் இங்ஙனம் கூறியுள்ளனர்[1].

1. இராசகேசரி - இராசாதிராசன் கி.பி.1018-1054.

2. பரகேசரி - இராசேந்திர சோழ தேவன் கி.பி.1052-1064. (இவன் மகன் இராசகேசரி - இராசமகேந்திரன் தந்தை காலத்தில் (கி.பி. 1060-1073) இளவரசனாக இருந்து இறந்தான்).

3. இராசகேசரி - வீர இராசேந்திரன் கி.பி. 1063-1059. (இவனுக்கு வீரசோழன், கரிகால்சோழன், என்னும் பெயர்கள் உண்டு.

4. பரகேசரி - அதிராசேந்திரன் கி.பி. 1069-1070 (இவன் வீர இராசேந்திரன் மகன்).

இராசாதிராசன்
(கி.பி. 1018 - 1054)

இராசாதிராசன்தன்தந்தையுடன் 26ஆண்டுகள் சோழப் பேரரசை ஆட்சி புரிந்தான். தந்தை காலத்தில் நடைபெற்ற எல்லாப் போர்களிலும் கலந்து கொண்டான்; தந்தை இறந்தவுடன் தான் அரசனானான். உடனே தன் தம்பியான இராசேந்திரசோழ தேவனை இளவரசனாக முடிசூட்டினான்.

சாளுக்கியப் போர் : (1) இராசேந்திரன் இறக்குந் தறுவாயில் அல்லது இறந்தவுடன் கி.பி.1044-45-இல் சோழர்க்கும் சாளுக்கியர்க்கும் போர் நடந்தது. இராசாதிராசன், அப்போரில், சாளுக்கியர்க்கு உதவியாக வந்த சிற்றரசர் பலரையும் சாளுக்கியர் சேனையையும் முற்றிலும் முறியடித்தான்; காம்பிலி நகரத்தில் இருந்த சாளுக்கியர் அரண்மனையை அழித்தான்[2].

(2) கிருஷ்ணையாற்றின் இடக்கரையில் ‘பூண்டுர்’ என்னும் இடத்தில் கடும்போர் நடந்தது. அப்போரில் சோமேசுவரனுடைய சிற்றரசர் பலரும் பெண்டுகளும் சிறைப்பட்டனர். பூண்டுர் அழிக்கப்பட்டது; கழுதைகளைக் கொண்டு உழப்பட்டது; ‘மண்ணந்திப்பை’ என்ற இடத்திருந்த அரண்மனைக்குத் தீ வைக்கப்பட்டது; புலிக்கொடி பொறித்த வெற்றித் தூண் நடப்பட்டது[3].

கொப்பத்துப் போர் (கி.பி.1054): இராசாதிராசனுக்கும் ஆகவமல்லனான சோமேசுவரனுக்கும் கிருஷ்ணை யாற்றின் வலக்கரையில் ‘கொப்பம்’ என்னும் இடத்தில் கொடிய போர் நடந்தது. ‘கொப்பம்’ இப்பொழுதுள்ள ‘சித்ராபூர்’ என்பர். இருதிறத்தாரும் வன்மையுடன் போர் புரிந்தனர். பகைவர் அவனையே குறிபார்த்து அம்புகளை ஏவினர். அதிகம் அறைவதேன்? அவன் ஏறியிருந்த பட்டத்து யானை இறந்தது; பெருவீரனான இராசாதிராசன் பகைவர் அம்புகட்கு இலக்காகி இறந்தான். உடனே பகைவர் வெற்றி முழக்கத்துடன் முன் பாய்ந்தனர். நிலை கலங்கிய சோழவீரர் பின் பாய்ந்தனர். அந்த அலங்கோல நிலை மையைக் கண்டு பின் நின்ற இராசேந்திர சோழ தேவன் “அஞ்சேல், அஞ்சேல்” என்று கூவிக்கொண்டு முன் பாய்ந்தான்; சோழ வீரர் ஒன்று பட்டனர்; வீராவேசம் கொண்டனர்; பழிக்குப் பழி வாங்கும் எண்ணத்துடன் போர் புரிந்தனர். முன் போலவே சாளுக்கியர் இராசேந்திர சோழ தேவனை வீழ்த்தப் பல அம்புகளை எய்தனர். எனினும் பயனில்லை. சோழவேந்தன், சாளுக்கிய அரசன் உடன் பிறந்தானான ஜயசிம்மனையும், புலிகேசி, தசபன்மன், நன்னி நுளம்பன் முதலியோரையும் கொன்றான். பகைவனைச் சேர்ந்த சிற்றரசர் வன்னிரேவன், பெரும்படையுடைய துத்தன், குண்டமையன், இளவரசர் சிலர், சாளுக்கிய ஆகவமல்லன் முதலியோர் போர்க்களம் விட்டு ஓடினர். பகைவருடைய யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் பன்றிக்கொடி, விலைமதிப்பற்ற சத்திய விவை, சாங்கப்பை முதலிய அரச மாதேவியர், உயர்குலப் பெண்மணிகள்[4], பிற பொருள்கள் எல்லாம் இராசேந்திர சோழன் கைக் கொண்டான். உடனே இராசேந்திரன் அதுகாறும் எவரும் செய்யாத ஒன்றைச் செய்தான். அஃதாவது, பகைவர் அம்புகளால் உண்டான புண்கள் உடம்பில் இருந்த அப்பொழுதே போர்க்களத்தில் சோழப் பேரரசனாக முடிசூடிக் கொண்டான்[5]. பின்னர் இராசேந்திரன் கோல்ஹாப்பூர் சென்று, அங்கே வெற்றித்துாண் ஒன்றை நாட்டிக் கங்கை கொண்ட சோழபுரம் மீண்டான்.[6]

இராசாதிராசன் யானைமேல் இருந்தபோது இறந்ததால், ‘யானைமேல் துஞ்சிய தேவர்’ எனப் பெயர் பெற்றான்; இங்ஙனமே தன் பின்னோர் கல்வெட்டுகளிற் குறிப்பிடப்பட்டான்.

குடும்பம் : இராசாதிராசன் பூர்வ பல்குனியிற் பிறந்தவன்[7]. இவன் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து அரசாண்டான். இவன் மனைவியருள் பிராட்டியார் எனப்பட்ட திரைலோக்கியமுடையார் ஒருவர். மற்றவர் பெயர்கள் தெரியவில்லை. இவன் தன் சிற்றப்பன், தம்பியர், மக்கள் இவர்களை அரசியல் அலுவலாளராக வைத்திருந்தான் என்று இவனது மெய்ப்புகழ் கூறுகிறது. இஃது உண்மையாயின், இவனுக்கு மக்கள் இருந்தனர் என்பது தெரிகிறது[8]. அவர்கள் யாவர் - என்ன ஆயினர் என்பன விளங்கவில்லை.

விருதுப் பெயர்கள் : இராசாதிராசன் - விசயராசேந்திரன் (கலியாண புரத்திற்கொண்ட பெயர்) வீரராசேந்திர வர்மன், ஆகவமல்ல குலாந்தகன், கலியாணபுரம் கொண்ட சோழன் முதலிய பெயர்களைப் பெற்றிருந்தான்[9]

சிற்றரசரும் அரசியலாரும் : இராசாதிராசன் காலத்தில் சிற்றரசராகவும் பேரரசின் உயர் அலுவலாளராகவும் பலர் இருந்தனர். ‘தண்டநாயகன் சோழன் குமரன் பராந்தகமாராயன்’ எனப்பட்ட ‘இராசாதிராச நீலகங்க ராயர்’ என்பவன் ஒருவன்[10], ‘பஞ்சவன் மாதேவியார்’ என்பவள் கணவனான பிள்ளையார் சோழ வல்லப தேவன், ஒருவன். கடப்பைக்கோட்டத்தில் மகாராசப் பாடி ஏழாயிரம், ஆண்ட தண்ட நாயகன் அப்பிமையன் என்பவன் ஒருவன்[11]. ‘பிள்ளையார் வாசுவர்த்தன தேவர், எனப்பட்ட சாளுக்கிய இராசராசன் ஒருவன்[12]. அவன் மனைவியே இராசேந்திரன் மகளும் இராசாதிராசன் தங்கையுமான அம்மங்காதேவி என்பவள். அவள் கி.பி. 1050-இல் திருவையாற்றுக் கோவிற்கு வேங்கி நாட்டுப் பொற்காசுகளான இராசராச மாடைகள் 300 தானம் செய்தாள். சேனாபதி இராசேந்திர சோழ மாவலி வாணராயர் என்பவன் ஒருவன். ‘உலகளந்த சோழப் பிரம்மமாராயன்’ ஒருவன். இவன் ‘அதிகாரிகள் பாராச்ரயன் வாசு தேவ நாராயணன்’ எனவும் பெயர் பெற்றவன். இவன் இராசாதிராசன் ‘குருதேவன்’ எனப்பட்டான்[13]. ‘உலகளந்தான்’ என்பதால், இராசாதி ராசன் காலத்திலும் நிலம் அளக்கப்பட்டிருக்கலாம் என்பது பெறப்படுகிறது. திருக்கழுக்குன்றம் இராசாதி ராசன் 26-ஆம் ஆட்சி ஆண்டில் ‘உலகளந்த சோழபுரம்’ எனப்பட்டது[14].

குணச்சிறப்பு : இராசாதிராசன் தனது வாழ்க்கையைப் போர்களிலேயே கழித்தான் என்னல் மிகையாகாது; தந்தையோடு கழித்த ஆண்டுகள் 26; தனியே அரசனாகக் கழித்த ஆண்டுகள் 10 ஆக 36 ஆண்டுகள் போர்களிலே கழிந்தன. இவன் பிறவியிலேயே போர் வீரனாகத் தோன்றியவன் போலும்! இப்பெரு வீரனது போர்த் திறனாற்றான் சோழப் பேரரசு நிலைத்து நின்றதென்னல் மிகையாகாது. இவனது பேராற்றலை இளமையில் உணர்ந்தே இராசேந்திரசோழன், மூத்தவனை விட்டு இவனைத் தன் இளவரசாகக் கொண்டான். இவன் தன் தந்தையின் காலத்திலேயே நிகரற்ற பெருவீரனாக விளங்கினான். இவனுடைய கல்வெட்டுகள் ‘திங்களேர் பெறவளர்’ ‘திங்களேர் தரு’ என்ற தொடக்கம் உடையவை.

இராசேந்திர சோழ தேவன்
(கி.பி. 1052-1064)

இளவரசன் : இராசேந்திர சோழ தேவன் கி.பி. 1044லேயே இளவரசன் ஆனான்; அன்று முதல் தன் தமையனான இராசாதிராசனுடன் அரசியலைக் கவனித்து வந்தான். இவன் ‘பரகேசரி’ என்னும் பட்டமுடையவன்.

முடி அரசன் : கி.பி.1054-ல் நடந்த கொப்பத்துப்போரில் இராசாதிராசன் இறந்தான். உடனே இராசேந்திரன் அங்கு வீராவேசத்துடன் போர் செய்து, பகைவர் சேனையை அழித்து ஆட்களையும் பொருள்களையும் கவர்ந்து, அவ்விடத்திற்றானே முடி சூடிக் கொண்டான் என்பது முன்னரே கூறப்பட்டதன்றோ?

ஈழப்போர் : கி.பி. 1055-ல் வெளியான இராசேந்திரன் கல்வெட்டுகள்[15] ‘இராசேந்திரன் ஈழத்திற்குப் பெரும் படை ஒன்றை அனுப்பினான். அப்படை வீரசலாமேகனை வென்று, ஈழத் தரசனான மானாபரணனுடைய புதல்வர் இருவரைச் சிறைப்படுத்தியது’ என்று கூறுகின்றன. ஈழ நாடு இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்பதற்குச் ‘சங்கிலி கனதராவ’ என்னும் இடத்திற்கிடைத்த இராசேந்திரன் கல்வெட்டே சான்று பகரும்[16]. இலங்கையிற் கிடைத்த சோழர் காசுகளில் இராசாதிராசன், இராசேந்திர தேவன் இவர் தம் காசுகள் கிடைத்துள்ளன[17]. இவற்றால் ஈழநாட்டின் பெரும்பகுதி சோழப் பேரரசிற்கு உட்பட்டிருந்ததென்பது வெள்ளிடைமலை. ரோஹனம் என்னும் தென்கோடி மாகாணமே தனித்திருந்தது.

‘கித்தி’ என்பவன் கி.பி.1058-இல் ‘விசயபாகு என்னும் பெயருடன் ரோஹண மாகாணத்தரசனாகிச் சோழருடன் போரைத் தொடங்கினான். இராசேந்திர தேவன் காலத்தில் அவன் முயற்சி பயன்பெறாது போயிற்று[18].


  1. Vide ‘his’ Cholas’, Vol.I.p.293.
  2. S.I.I. Vol. 3, No.28.
  3. 6 of 1890, 221 of 1894, 81 of 1895.
  4. போர்க்களத்திற்கு அரசமாதேவியரும் உயர்குலப் பெண்டிரும் போதல் மரபு என்பது இதனால் தெரிகிறதன்றோ?
  5. 87 of 1895
  6. S.I.I. Vol.3, No.55; Vol.2, p. 304; 87 of 1895.
  7. 258 of 1910.
  8. S.I.I. Vol. 3, No.28.
  9. 78 of 1920, 188 of 1919, 258 of 1910, 102 of 1912.
  10. 85 of 1920.
  11. 279 of 1895.
  12. 221 of 1894.
  13. 413 of 1902.
  14. 17 of 1894.
  15. S.I.I. Vol. 3, No. 29.
  16. 612 of 1912.
  17. Codrington’s ‘Ceylon coins’, pp.84 85.
  18. Maha Vamsa, chapter 57, S. 65-70.