ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்/வேத உபநிடதங்கள்: மெய்யும் பொய்யும்

விக்கிமூலம் இலிருந்து

2


வேத உபநிடதங்கள்: மெய்யும் பொய்யும்

புத்தர் அருளிய பேத வாக்கியங்களிலிருந்து பிராமணர்கள் எவ்வாறு வேதங்களையும் உபநிடதங்களையும் உருவாக்கிக் கொண்டார்களென்று அயோத்திதாசர் கூறும் கருத்து ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.

புத்த சங்கங்களில் தங்கியிருந்த சமண முனிவர்கள் புத்தபிரான் ஆதியில் போதித்த அருமொழிகளாம் செள பாபஸ்ஸ அகரணம், குஸ்லஸ் வுபசம்பதா, சசித்த பரியோதபனம் எனும் மூன்று சிறந்த மொழிகளும் முப்பேத மாயிருந்த படியால் திரிபேத வாக்கியங்களென்றும் ஒருவர் போதிக்கவும் மற்றவர் கேட்கவுமாயிருந்த படியால் திரி சுருதி வாக்கியங்களின் உபநிட்சை யார்த்தங்களை விளக்கும் தெளி பொருள் விளக்கம் முப்பத்திரண்டுக்கும் உபநிடதங்களென்றும் வழங்கி வந்தார்கள்.


இவற்றுள் . . . திரிபேத வாக்கியங்களென்பதைத் திரிவேத வாக்கியங்களென சிலகால் வழங்கி வீடு பேறாம் ஒரு மொழியையும் சேர்த்து நான்கு பேத வாக்கியங்கள் என்றும் நான்கு வேத வாக்கியங்ளென்றும் வழங்கி வந்தார்கள். இதன் பேரானந்த அந்தரார்த்தமும் ஞானரகசியார்த்தமும் இருக்கு, யசுர், சாமம், அதர்வண மென்னும் பாகைப் பொருளின் பகுப்பும் இவ்வேஷப் பிராமணர்கள் அறியாது தங்கள் தங்கள் மனம் போனவாறு அக்கினியைத் தெய்வமெனத் தொழும் புருசீகர்களின் சரிதைகளில் சிலதைக் கூட்டியும் குறைத்தும் பெளத்தர்களாம் இந்தியர்களின்

சரித்திரங்களில் சிலதைக் கூட்டியும் குறைத்தும் இருக்கு, யசுர், சாம, அதர்வண, சாகை பாகங்களாம் நான்கு பேத மொழிகளை நான்கு வாக்கியங்களென்று உணராமலும் அந்நான்கு வாக்கியங்கள் விளக்கமின்றி மறைபொருளாய் உள்ளது கண்டு ஒவ்வொரு மொழியின் உட்பொருளைத் தெள்ளற விளக்குமாறு வேத மொழிகளின் உபநிட்சயார்த்த மென்றும் உபநிடதமென வரைந்துள்ள அந்தரார்த்தத்தை அறியாமலும் வேதமென்னும் மொழியைப் பெரிய கட்டுப்புத்தக மென்றெண்ணி . . . பெருங்கட்டுகளாக வரைந்து விட்டார்கள்.


அவ்வேதத்துள் எழுதி வைத்துள்ள சங்கதி யாவும் அக்கினியையே தெய்வமாகத் தொழும் கூட்டத்தோர் சங்கதிகளும் புத்த தன்மத்தைச் சார்ந்த சங்கதிகளுமே மலிவுறக் காணலாமன்றி மற்றவை ஒன்றும் கிடையா. (அலாய்சியஸ் I 668-69)

இருக்கு வேதத்தையும் மனுநீதியையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள வெண்டி டோனிகர் (Wendy Doniger) எனும் சிகாகோ பல்கலைக்கழகத்துச் சமயத்துறைப் பேராசிரியர் வேதங்கள் பற்றிக் கூறுபவை இங்குக் கருதத்தக்கன. பிராமணர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும் சமயச் சடங்குகளில் மட்டுமல்லாமல் வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் தம் பங்கை உறுதிப்படுத்திக் கொள்ளவும் சற்றும் அடக்கவுணர்வோ, கூச்சமோ, தயக்கமோ, மனச்சாட்சியின் உறுத்தலோவில்லாமல் பேசுவதை வேதங்களில் காணலாம் என்பார் (டோனிகர் xxiii). பிறரைத் துன்புறுத்தலும் பிறரைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதலும் அவர்களுடைய நோக்கங்களாகும். எனவே வன்முறையும் அதிகார வெறியும் போற்றப்படுவதல்லாமல் அவையே உலக இயற்கையென்றும் உலக நெறியென்றும் காட்டப் பெறுகின்றன.

சில்வியன் லெவி (Sylvian Levi) என்பார் வேதங்களின் அடிப்படை இலட்சியம் மிருகத்தனமானது (brutal), பொருள்முதல் தன்மையது (‘materialistic’) என்று தமது La Doctrine du Sacrifice Dans Les Brahmanas நூலில் விளக்குவது சரியானதே என்றுரைக்கும் டேர்னிகர் வேதத்தில் தொடக்கத்திலிருந்து இறுதி வரை காணப்படும் ‘உணவு’, ‘உண்போர்’ பற்றிய செய்திகளே லேட்மோடிஃப் (Leitmotif) ஆக இருப்பது லெவி சுட்டும் கருத்திற்கு அரண் செய்யும் என்பார். சதபத பிராமணா (Satapata Brahmana) எனும் நூல் இதனைத் தெளிவாக “உண்பவனும் உணவும்தான் இங்கு உண்மையில் எல்லாம் ஆகும்” என்று வெளிப்படுத்தும். உணவுச் சங்கிலியைக் கொண்டே வேதம் கூறும் சமுதாயம் விளக்கப்படுகிறது. வேதவுலகத்தில் தேவர்கள் இவ்வுணவுச் சங்கிலியின் உச்சியில் உள்ளவர்கள். அவர்கள் மனிதர்கள் வேள்விகளில் அளிப்பவற்றை உண்கிறார்கள், மனிதர்கள் வேள்விகளில் பலியிடும் விலங்குகள் மூலமாகத் தங்கள் உடல்களை உணவாக அளிக்கிறார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே வேள்விகள் நிகழ்த்தப் பட்டன. இச்சங்கிலித் தொடரில் தேவர்களுக்கு அடுத்துள்ள மனிதர்கள் விலங்குகளைப் புசிக்கின்றார்கள். விலங்குகள் தமக்கு அடுத்துள்ள தாவரங்களை உட்கொள்கின்றன. அவை மழை அல்லது நீரை உட்கொள்ளும் நீரிலிருந்தே உணவு உண்டாக்கப் பெறுகிறது. வேதம் காட்டும் சமுதாயம் ஆள்வோர் - ஆளப்படுவோர், உண்போர் - உண்ணப் படுவோர், ஏமாற்றுவோர்-ஏமாற்றப்படுவோர்,வலியர்-எளியர் ஆகிய இரு பிரிவினரைக் கொண்டதாகும். வேதத்தின் கருத்தையே பின்னால் வந்த மனுநீதி “அசையாதவை அசைபவைக்கும், நஞ்சற்றவை நஞ்சுள்ளவைக்கும், கைகளில்லாதவை கைகளுள்ளவைக்கும், கோழைகள் அச்சமற்றவர்களுக்கும் உணவாகின்றனர்” (மனு 5:29) என்று குறிப்பிடுகிறது.

கொல்லுவதும் உண்பதும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இங்குக் கருதப்படுகிறது. உண்பதைப் பகைவனை அடக்கித் தோற்கடிக்கும் தொடர் நாடகமாக வேதம் காட்சிப்படுத்துகிறது. ஓர் உயிர் உலகில் வாழ வேண்டி மற்றோர் உயிர் இரங்கத்தக்க நிலையில் தன்னைப் பலி கொடுக்கும் தவிர்க்க முடியாத செயற்பாடாக உண்ணுதல் இங்குப் பார்க்கப்படவில்லை. மாறாக, ஓருயிர் தான் வெறுக்கின்ற, அல்லது தன்னை வெறுக்கின்ற, உயிர்களை வெற்றியோடு அடக்குவதே உண்ணுதலாகப் பார்க்கப்படுகின்றது. சதபத பிராமணா, இதனைத் தேவர்கள் தாங்கள் வெறுப்பவர்களையும் தங்களை வெறுப்பவர்களையும் உணவாக்கி அக்கினியில் போட்டார்கள்; அக்கினியை அவர்கள் அவ்வாறு மகிழ்வித்தார்கள்: அக்கினிக்கு அது உணவானது; தேவர்களின் பாவத்தை எரித்தது. இது போலவே, இப்பொழுது வேள்வி செய்வோன் அவன் விரும்பாதவர்களையும் அவனை விரும்பாதவர்களையும் உணவாக்கி அக்கினிக்கு அளிக்கிறான். அவன் அக்கினியை அவ்வாறு மகிழ்விக்கிறான்; அதனால் அக்கினி வேள்வி செய்வோனின் பாவத்தை எரித்துவிடுகிறான் (சதபத பிராமணா 6.6.311) என்று கூறும்.

சமுதாய வாழ்வு நான்கு வருணங்களாக இவ்வடிப்படையிலேயே பார்க்கப்படுகிறது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய நான்கு வருணத்தாரும் உண்போராகவும் உணவாகவும் படிநிலை அமைப்புப் பெறுகின்றனர். உயிர்களின் தலைவரான பிரஜாபதி இவ்வுலகின் பல வாய்களைக் கொண்ட ஒரு பேருருவமாகக் காட்டப் பெறுகிறார். “சமய குரு (புரோகிதர்) உன்னுடைய வாய்களில் ஒன்று; அவ்வாயினால் நீ அரசர்களை உண்கிறாய். அந்த வாயால் என்னை ஓர் உணவு உண்போனாக ஆக்கு. அரசன் உன்னுடைய வாய்களில் ஒன்று. அந்த வாயால் நீ வைசியர்களை உண்கிறாய். அவ்வாயால் என்னை ஓர் உணவு உண்போனாக ஆக்கு” (கத உபநிஷதம் 2.9). ‘நீ யாரை உண்கின்றாயோ அவனைவிட நீ பெரியவன், உன்னை யார் உண்கின்றானோ அவனிலும் நீ சிறியவன்’ என்கின்ற நம்பிக்கை இங்கு முன்வைக்கப்படுகிறது. வேதம் காட்டும் வாழ்க்கையில் ஒருவன் இன்னொருவனுடைய அழிவிலேயே செல்வனாகிறான்; இன்னொருவனுடைய இறப்பே அவனுக்கு வாழ்வு தருகிறது. அவன் உண்ண வேண்டுமானால் இன்னொருவன் உணவாக வேண்டும். இந்த அடிப்படையில் நோக்கினால் உடலாற்றல் உடையவனே சமுதாயத்தின் மேல் தட்டில் இருக்க வேண்டும். ஆனால் பிராமணர்களோ தாங்களே மேல் தட்டில் இருப்பவர்களென்றும் தாங்களே யாவரையும் உண்ணும் உரிமை பெற்றவர்களென்றும் தாங்கள் வேள்வி செய்வதால் இந்நிலைக்குத் தகுதி உடையவர்களென்றும் எழுதி வைத்துக் கொண்டார்கள். வேள்வியில் அவர்களுக்கு அளிக்கப் பெறும் பொருள்களுக்கேற்ப மற்றவர்களுக்கு இவ்வுலகில் செல்வமும் விண்ணுலகில் இடமும் கிடைக்குமென்று ஆசை காட்டினார்கள். அரசர்கள் எவ்வளவு உடலாற்றல், படைவலி கொண்டிருந்தாரேனும் அவர்கள் பிராமணர்களைக் கொண்டு நடத்தும் வேள்விகளினாலேயே அவர்களது வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுமென்றும் மிரட்டினார்கள். ஐதரேய பிராமணத்தில் பிராமணர்கள் யாகம் செய்யும் அரசர்களின் ஆற்றலைக் குறைக்க எப்படி ஏமாற்ற வேண்டும், மந்திரங்களை மாற்றிச் சொல்ல வேண்டும், தேவைப்பட்டபோது பொதுமக்களை எவ்வாறு அவர்களுக்கு எதிராகப் புரட்சி செய்யத் தூண்ட வேண்டுமென்றும் கூறும் பகுதிகளையும் காணலாம்.

வன்முறை, அதிகாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சமுதாயம் பற்றி வேதங்கள் பேச இவற்றிற்கு நேர் எதிரான கருத்துக்கள் பின்னால் வலியுறுத்தப்பட்டன. தேவதைகளை மகிழ்விக்க யாகங்கள் செய்ய வேண்டியதில்லையென்றும் யாகங்கள் அவர்களுக்கு உணவாகவேண்டியதில்லையென்றும் பிருகதாரண்யக உபநிடதம் (1410) கூறும். புலால் உணவே தலைசிறந்த உணவு என்று வேதம் கூறியிருக்கப் பின்னால் பிராமணர்கள் புலால் உண்ணாமை பற்றியும் வன்முறைக்கு எதிராக அகிம்சை பற்றியும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசத் தொடங்கினார்கள். இவ்விரண்டு முரண்பட்ட கருத்துகளும் மனுநூலில் இடம்பெற்றிருக்கக் காணலாம்.

When one further considers the intrusion into mainstream Hindu thought, as witnessed in texts like the Bhagavad Gita, of bhakti or devotionalism - with its emphasis on service, grace, humility and love-at about the same time as the composition of Manu, the full extent of the reversal of Vedic ideas is striking (Doniger - xxxiii).

சாம வேத ஆங்கில மொழிபெயர்ப்பின் முன்னுரையில் ஆர். கணபதி கூறும் கருத்துக்கள் சில நாம் அறிய வேண்டியவை.

நான்கு வேதங்களும் ஒரே எண்ணிக்கையுள்ள மந்திரங்களைக் கொண்டவை அல்ல. அவை வெவ்வேறு அளவிலானவை:

சாம வேதம் - 1,875 மந்திரங்கள்
யசுர் வேதம் - 1,976 மந்திரங்கள்
இருக்கு வேதம் - 10,552 மந்திரங்கள்
அதர்வ வேதம் - 5,038 மந்திரங்கள்

இருக்கு வேதத்தில் 10,552 மந்திரங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் அதன் மந்திரங்கள் 8,629 மட்டுமே. எஞ்சியவற்றுள் 1,442 மந்திரங்கள் சாமவேதத்திலிருந்தும், 481 மந்திரங்கள் யசுர்வேதத்திலிருந்தும் எடுக்கப்பட்டவை. ஆனால் இவற்றை இருக்கு வேதத்திலிருந்து பிற இரண்டு வேதங்கள் பெற்றனவென்ற கருத்தைப் பெரும்பாலானவர்கள் சொல்லி வருகின்றனர். இது தவறென்பது எம்முடைய முடிவாகும். ஏனெனில் சாம, யசுர் வேதங்கள் ஏனைய வேதத்தினும் மிகப் பழமையானவை (கணபதி xix).

வேதங்களின் தோற்றம் பற்றியும் விரிவாகப் பேசும் கணபதி அவை மனிதரால் ஆக்கப்பட்டு வாய்வழி மரபாக வந்தவையே என்பார்.

வேதங்கள் அநாதியானவையென்றும் கடவுளால் நேரடியாக முனிவர்களுக்குச் சொல்லப்பட்டவையென்றும் பலராலும், புகழ்பெற்ற சில அறிஞர்களாலும் கூட நம்பப்படுகின்றன. இது உண்மையாகாது. நாம் இப்பொழுது வேதங்களின் காலத்தை நிர்ணயிக்க இயலும். அவை கடவுளின் கூற்றுகள் என்ற எண்ணம் வேதம் என்ற சொல்லால் விளைந்த தவறாகும்.

‘வேதம்’ என்பது பொதுவாக அறிவு எனும் பொருள் தரும். எல்லா அறிவும் கடவுளிடமிருந்து பெறப்படுவதேயாயினும் அச்சொல் நூலைக் குறிக்கும்போது இப்பொருளை மனத்தில் கொண்டு கடவுளால் ஆக்கப்பட்டதென்று சொல்லுவது அறியாமை ஆகும்.

“வெளிப்பாடு” (Revelation) என்ற சொல்லும் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மனிதனுடைய மூளையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த அறிவு, மொழி வடிவத்தில் வெளிப்படுத்தப்பெற்றதையே இது குறிக்கும். இத்தகைய வெளிப்பாடுகளின்மூலம் மாந்தனேயன்றி, நேரடியாகக் கடவுளே இவற்றை வெளிப்படுத்தினார் என்பதும் சரியன்று (கணபதி 19-20).

சாம, யசுர் வேதங்களில் அவற்றின் ஆசிரியர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லையென்றும் அவற்றில் சொல்லப்படுபவை யெல்லாம் மரபு வழி வந்தவையென்றும் தெரிவிக்கும் கணபதி வேதங்களே அவை கடவுளால் இயற்றப்பட்டவையென்று எங்கும் சொல்லிக் கொள்ளவில்லை யென்றும் எடுத்துரைப்பார்.

வேதங்கள் தோன்றிய இடம் ஆர்க்டிக் வட்டம் (Arctic Circle) என்பது கணபதியின் முடிவு. தேவர்கள், அசுரர்கள் எனும் இரு மனித இனத்தவர் அங்கு வாழ்ந்தனர் என்றும் இவர்களைத் தெய்வங்கள் என்று கூறுவது தவறென்றும் அன்னார் ஆர்க்டிக் வட்டம் பனியால் தாக்கப்பட்டபோது அங்கிருந்து கிளம்பி மத்திய ஆசியாவில் குடியேறினர் என்றும் அவர்களுள் அசுரர் என்பார் இன்றைய ஈரானுக்குச் சென்று அங்கிருந்த பார்சியருக்கு(Parsees)த் தமது பண்பாட்டைக் கற்பித்தனர் என்றும், தேவர் என்பார் இன்றைய ஆப்கனிஸ்தானத்திலும் அதற்கும் கிழக்கிலிருந்த நாடுகளிலும் பரவி மலைப்பகுதிகளில் வாழ்ந்து சமவெளிகளில் வாழ்ந்த இன்றைய இந்தியர்களின் முன்னோர்களுக்குத் தமது பண்பாட்டைத் தந்தனர் என்றும் நம்முடைய மூதாதையர் தேவர்கள், அசுரர்கள் ஆகியோரினின்றும் வேறுபட்ட இனத்தவர் என்றும் தேவரும் அசுரரும் தமக்குள் எப்போதும் போரிட்டுக் கொண்டிருந்தாலும், தாம் குடியேறிய பகுதிகளில் வாழ்ந்த மக்களோடு ஒற்றுமையாகவே இருந்தார்களென்றும் சமஸ்கிருதமானது தேவ,அசுரர்களின் தாய் மொழியேயென்றும் சாம, யசுர் வேதங்களும் அவர்களுடையவையே யென்றும் இந்திரன், அக்கினி, மித்ரன், வருணன், வாயு, யமன், பிரமன் போன்றவர்கள் தேவ இனத்தின் தலைவர்களே யென்றும் அவர்களுடைய பண்பாடும் மொழியும் கலையும் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டனவென்றும் கருத்தறிவிப்பார்.

திலகர் வேதங்களின் பிறப்பிடம் ஆர்க்டிக் வட்டம் என்று செய்திருக்கும் ஆய்வு முடிவு ஒரு திருத்தத்திற்குரியது என்பது கணபதியின் வாதம். திலகர் தமக்கு ஆதாரமாக இருக்கு வேதத்திலிருந்து பாடல்களை எடுத்துக் காட்டியிருப்பினும் அவர் சொல்லுவது போல் இருக்க வேதம் ஆர்க்டிக் வட்டத்தில் தோன்றியதன்று என்றும் சாம, யசுர் வேதங்களே அங்குப் பிறந்தனவென்றும் இருக்கு வேதம் பின்னால் இந்திய மண்ணில் தோற்றம் பெற்றதென்றும் கணபதி வாதிடுவார்.

சாமவேதத்தின் பாடுபொருள் என்னவென்பதிலும் கணபதியின் நம்பிக்கை மற்றவர்களின் எண்ணத்திலிருந்து மாறுபட்டது. இந்த வேதம் முற்றுமாகப் பரிணாம வளர்ச்சி (Evolution) பற்றியே பேசுகின்றது. மூளையும் பொறிகளும் உடலும் எவ்வாறு செயல்படுகின்றனவென்றும் அவற்றைச் செயல்படுத்தும் தேவர்கள் யார் யார் என்பதும் இவ்வேதம் சொல்லும் பாடங்களாகும். இத்தேவரிடம் மனிதன் தன் நல்வாழ்க்கையை வேண்டும் கடவுள் வாழ்த்துகளும் இவ்வேதத்தில் இடம்பெறுகின்றன. சாமவேதமும் யசுர் வேதமும் மண்ணுலகில் நிகழ்ந்த கூர்தலறம் பற்றியே பேசுகின்றன என்ற முடிவை முன்வைக்கும் கணபதி அதற்கேற்றாற்போல் அவ்வேதத்தில் சொல்லப்படும் பாத்திரங்கள், நிகழ்ச்சிகளையெல்லாம் குறியீட்டுப் பொருள்களாகக் கொள்வர்.

தலை: விண்ணுலகம், மலை, பாறை, கூட்டம், கடல்
உடல்: பசு, பிணம், எருமை, உலகம், நிலம், சிறை
மூளை: இதயம், குழம்பு, கஞ்சி, ஆகாயம்
மூளையின் செல்கள்: விண்மீன்கள், விசுதேவர்கள், துளிகள், தானியம்
நரம்புகள்: புல், முடி, நூல், பாம்பு, நாணல், சிலந்திக்கூடு
முதுகுத் தண்டுவடம்: பாம்பு, தூண், உத்தரம், மரம்
மண்டையோடு: பிப்ரு
பிராணா: அசுவம் (குதிரை), செயல்
யக்ஞா, யஜா, சோம யக்ஞா: வாழ்க்கை நடவடிக்கை

சாம வேதத்தை விளக்கியவர்களும் மொழிபெயர்த்தவர்களும் மலை, பசு, புல், பாம்பு, குதிரை போன்றவற்றைக் குறியீடுகளாகக் கொள்ளாததால் அதன் உண்மைப் பொருளறியாது திண்டாடியிருக்கிறார்களென்பது சாயனரின் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கிரிஃபித்(R.T.H. Griffith)தின் மொழிபெயர்ப்பும், ஆர்ய சமாஜத்தைச் சேர்ந்த தயானந்த சரஸ்வதியின் இந்தி மொழிபெயர்ப்பும், அதனை அடிப்படையாகக் கொண்ட தேவிசந்தின் ஆங்கில மொழிபெயர்ப்பும் சாமவேதத்தின் பொருளைப் பிழைபடவுணர்ந்து பெரும்பாலும் முட்டாள்தனமான விளக்கங்களையே தருகின்றன வென்பதும் கணபதியின் கருத்து (கணபதி xiv). நான்கு வேதங்களில் தலைசிறந்ததாகிய சாமவேதத்தை இவர்களிடமிருந்தெல்லாம் காப்பாற்றவே தாம் ஒரு மொழிபெயர்ப்பைத் தருவதாகவும் அவர் அறிவிப்பார்.

மனிதனின் தலைவிதி பற்றிச் சாமவேதம் கூறும் கருத்து உபநிடதங்களும் பின்னால் வந்த சாத்திரங்களும் கூறும் கருத்தினின்றும் முற்றும் மாறுபட்டதென்பது கணபதியின் அறிவிப்பும் அறைகூவலும் ஆகும். மனிதன் பல பிறவிகள், பலவித அனுபவங்களுக்குப் பிறகு ஞானம் பெற்று அவனைப் படைத்தவனோடு இரண்டறக் கலந்து விடுகிறானென்னும் இந்துக்களின் இன்றைய நம்பிக்கையே சாமவேதத்திற்குப் பின்னால் வந்த நூல்கள் கூறுவதாகும். இது தவறானதென்று சுட்டும் கணபதி, இஃதே மனிதனின் தலைவிதியானால் இறைவன் எதற்காக மனிதனை உருவாக்க அரும்பாடுபட்டிருக்க வேண்டும் என்று கேட்பார். இந்து சாஸ்திரங்களெல்லாம் மனிதனுக்கு ஞானம் ஏற்பட்டவுடன் மனிதனின் ஆன்மா இறைவனின் ஆன்மாவோடு என்றென்றும் ஒன்றித்து இருப்பது என்று உணர்கின்றான் என்று கூறும். அப்படியானால் தனி ஆத்மா என்று ஒன்றில்லாதபோது எது பரமாத்மாவோடு ஐக்கியமடைய வேண்டும் என்றும் கணபதிவினவுவார் (கணபதிxvi).

இச்சாஸ்திரங்களினின்றும் பெரிதும் வேறுபட்ட இரண்டு கருத்துக்களைச் சாமவேதம் முன்வைக்கிறது என்பது அவர் தரும் விளக்கம் (1). இன்று வாழ்வதும் இனி வரப்போவதும் ஆகிய யாவும் புருஷனென்றும் சவிதா வென்றும் விஷ்ணு வென்றும் அழைக்கப்படுவதினின்றும் வேறானவை அல்ல. எல்லா நடவடிக்கைகளும் அவனுடையவை; அவனே எல்லா வுயிர்களாகவும் உலகங்களாகவும் தன்னை வெளிப்படுத்துகிறான். அவன் மனிதனைத் தன்னுடைய பிம்பத்தில் படைக்கிறான்; ஆனால் மனிதன் ஒவ்வொரு உணர்வாக ஏழு உணர்வுகளையும் இழந்து அசையாப் பொருள் நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறான். தேவர்கள் அவனை மீண்டும் படிப்படியாக மேலே கொணர்ந்து இறுதியில் மனித நிலைக்கு ஏற்றுகின்றனர். இந்நிலையில் அவன் பல இன்னல்களுக்கு ஆளாகும்போது தன்னுடைய பிறப்பிடமாகிய விண்ணுலகத்தை மீண்டும் அடைய அவாவுகின்றான். இறைவனிடம் இடையறாது வேண்டுதல் மூலம் விண்ணுலகம் சேர்ந்தவுடன் மீண்டும் மண்ணுலகில் பிறக்கும் ஆசையேற்பட்டு மண்ணுலகம் வந்து மண்ணுலக அனுபவங்களைப் பெறுகின்றான். அவன் என்றும் அவனைப் படைத்தவனோடு ஒன்றித்துப் போவதில்லை. இந்துக்கள் போற்றும் உபநிடதங்களும் சாத்திரங்களும் மனித வாழ்வு பற்றிக் கூறுவதற்கு மாறான கருத்தைச் சாமவேதம் கூறுவதாக கணபதி வாதிடுவது வியப்புக்குரியது.

சாமவேதப் பாடல்களுக்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வேறுபட்ட பொருள்கள் கூறப்பட்டிருக்கின்றனவென்பதற்குக் கணபதி தமது மொழிபெயர்ப்பு நூலில் எடுத்துக்காட்டும் சான்றுகளையே தரலாம்.

மந்திரம் 755:
(i) கிரிஃபித்தின் மொழிபெயர்ப்பு:
அவனுடைய தொன்மையான பெருமைக்குப் பின், அவர்கள், அச்சமற்றவர்கள், ஆயிரம் பரிசுகளை வென்ற அந்த முனிவனிடமிருந்து ஒளியுடைய பாலைப் பெற்றிருக்கிறார்கள்.
(ii) தயானந்த சரஸ்வதி, தேவிசந்த் மொழிபெயர்ப்பு:
வணக்கத்திற்குரிய அம்முனிவர்கள், இறைவனின் வேதச் சிறப்பை அடியொற்றி, அறிவைப் பெறுகிறார்கள். அவ்வறிவு ஆயிரம் பயன்களைக் கொடுப்பதாகும்; புலன்களுக்கெட்டாத பொருள்களுக்கெல்லாம் விளக்கம் தருவதாகும்.
(iii) கணபதியின் மொழிபெயர்ப்பு:
முன்மாதிரியே, விண்ணுலகத்தின் விருப்பப்படி, உணர்வு பார்வைகளை (பால்) நேரடியாகக் கொடுக்கிறது. முனிவர்களால் ஆயிரக்கணக்கில் ஈயப்பெறும் அவைகளை நாம் குடிக்கிறோம்.

மந்திரம்: 1246
(i) கிரிஃபித்தின் மொழிபெயர்ப்பு:
இந்திரனே, சோமனே, பருந்து கொண்டு வந்த ரசத்தை, உனக்கு உற்சாகமூட்டக் குடிப்பாயாக. ஏனெனில் நீயே அரசன், மனிதர்களின் குடும்பங்கள் யாவற்றிற்கும் தலைவன்.
(ii) தயானந்த சரஸ்வதி, தேவிசந்த் மொழிபெயர்ப்பு:
எல்லா ஆற்றல்களும் உடைய இறைவனே, உன்னோடு இணக்கமாகவுள்ள மனிதர்களைக் காப்பாற்று; அவர்கள் சொல்வதைக் கேள்; மிகச் சிறிய உயிரையும் வாழ வை.
(iii) கணபதியின் மொழிபெயர்ப்பு:
அக்கினியே, மூளையின் செல்களில் விருப்பமுள்ளவனாதலால் மனிதர்களுக்கு ஆர்வத்தோடு நீ உதவுகிறாய்; வியப்புண்டாக்குமாறு, நீ மலையின் மேல் உயிர்களை நசுக்குகிறாய், புதியவுயிர்களை உண்டாக்குவதற்காக, குழந்தைகளை நீயே பாதுகாக்கின்றாய்.

மந்திரம் 1313:
(i) கிரிஃபித்தின் மொழிபெயர்ப்பு:
ஆதலால் சோமனை, புனிதமான பரிசுகளில் தலையாயதை, நீர் ஊற்றுகளில் ஓடியிருக்கின்ற, மனிதர்களுக்கு நண்பனை, தெளிப்பாயாக. அவன் கற்களால் சோமனை வெளிப்படுத்தியிருக்கின்றான்.
(ii) தயானந்த சரஸ்வதி - தேவிசந்த் மொழிபெயர்ப்பு:
விந்து தான் மிகச் சிறந்த உயிர் ஊட்டும் ஆதரவு, மனிதனின் நண்பன், ஆற்றல் தருவது, உணர்வுப் பொறிகளுக்கு ஊக்கமூட்டுவது; பிரமச்சரிய முறைகளால் அது படைக்கப் பெறுகிறது. கற்றறிந்தவர்களே! கீழிருந்து அது மேலே தலைக்குப் பாயுமாறு செய்யுங்கள்.
(iii) கணபதியின் மொழிபெயர்ப்பு:
அவைகள் (கருத்துகள்) சோமனிடமிருந்து மிகச் சிறந்த வழிபாட்டுப் பொருள்களாக அறிவுக்குச் செல்லுகின்றன. அவை மனிதர்களுக்குப் (பார்வைகளாகிற) செல்வம் தருகின்றன. நடவடிக்கையே அவைகளுக்கு விடுதலை அளித்துச் சோமனுக்கு உற்சாகமூட்டி அவைகளை மலைக்கு(மூளைக்கு)த் தருகிறது.

மேலை நாட்டினரான கிரிஃபித்தின் மொழிபெயர்ப்பு சமஸ்கிருத மூலத்தை உள்ளவாறு தருகிறது. தயானந்தரும் கணபதியும் தங்களுடைய கற்பனைப் பொருள்களைப் பாடல்களுக்கு ஏற்றி அவற்றைத் தொடர் உருவகங்களாகவும் குறியீட்டுப் பொருள் உடையனவாகவும் காட்ட முயல்கின்றனர் என்பது இச்சான்றுகளால் தெளிவாகும். சாமவேதப் பாடல்கள் மேலெழுந்தவாரியாகக் கூறுவனவே அவற்றின் உண்மையான பொருள் என்பதிலும் அவற்றிற்கு உட்பொருள் ஏதுமில்லையென்பதிலும் ஐயமிருக்க வழியில்லை.

உபநிடதங்கள் வேத வெளிப்பாட்டின் இறுதிக் கட்டத்தைச் சார்ந்தவையென்றும் மந்திரங்கள் முதல் கட்டமாகவும் பிராமணங்கள் இரண்டாம் கட்டமாகவும் ஆரண்யகங்கள் மூன்றாம் கட்டமாகவும் உபநிடதங்கள் நான்காம் கட்டமாகவும் எண்ணப்பட வேண்டியவையென்றும் கடைசியாக வந்த உபநிடதங்களின் உபதேசங்கள் வேதாந்தம் என்று அழைக்கப்படுகின்றனவென்றும் இவைகளுக்குள் முரண்பாடு ஏதும் இல்லையென்றும் மந்திரங்கள் கூறும் சடங்குகளை பிராமணங்களும் மெய்யுணர்வுக் கூறு(Mystical Elements)களை ஆரண்யகங்களும் உபநிடதங்களும் வலியுறுத்தினும் உபநிடதங்கள் வேதங்களினின்றும் வேறுபடுகின்றனவென்று கூற முடியாதென்றும் அவை வேதங்களின் விளக்கங்களாகவும் விரிவாக்கங்களாகவும் கருதப்பட வேண்டியவையென்றும் உபநிடதங்களைப் பற்றி எழுதியுள்ள ராதாகிருஷ்ணன், டி.எஸ். சர்மா (D.S.Sharma)போன்றோர் கருத்தறிவிப்பர்.

உபநிடதங்களின் பாடுபொருள்கள் என்று சர்மா அடையாளம் காட்டுபவை நான்கு: (1) அவை பிரமன், ஈஸ்வரன் ஆகிய இரண்டு பற்றியும் பேசுகின்றன. இவ்வுலகத்தோடு தொடர்புபடுத்தி மனிதர்களின் கண்ணாடி கொண்டு பார்க்கப்படும் கடவுள் ஈஸ்வரன் ஆவார். இவ்வுலகத்தோடு தொடர்புபடுத்தப்படாமல் கடவுளாகவே பார்க்கப்படுபவர் பிரமன் ஆவார். பின்னால் வந்த சாத்திரங்களில் இவர்கள் சகுண பிரமனென்றும் நிர்குணபிரமனென்றும் அறியப்பட்டனர். (2) அவை எல்லாப் படைப்புகளிலும் மறைந்துள்ள ஆன்மீக வளர்ச்சியையும் வாழ்க்கையின் எல்லாக் கூறுகளுக்கும் அது பொருந்துமாற்றையும் கண்டு எடுத்துரைத்தன. (3) அவை மனிதனின் அகநிலை (Inner being) பற்றிய உள்ளொளிகளைத் தருகின்றன.(4) மனிதன் வாழ்வு, இறப்பு மூலமாக இவ்வுலகில் பெறும் வளர்ச்சி பற்றியும் பேசுதற்கரிய பிரமத்தில் அவன் விதி இறுதி அடைவதைப் பற்றியும் அவை விரிவாக விளக்குகின்றன.

உபநிடதங்கள் பற்றி இத்தகைய பாராட்டுகள் குவிக்கப் பட்டிருந்தாலும் அவற்றை ஆழ்ந்து நோக்குவார் வேறு முடிவுகள் எடுக்க நேரும். வேதங்களினின்றும் அவை மாறுபடவில்லையென்று கூறும் சர்மாவே “உபநிடதங்கள் ஒரு கீழ்த்தரமான வேள்விச் சமயத்தை (A rather low type of sacrificial religion) எக்காலத்திற்கும் பொதுவான ஓர் அரிய மெய்யுணர்வுச் சமயமாக (A great mystical religion) மாற்றும் பெரிய பணியில் ஈடுபட்டன” என்று கூறுவார் (சர்மா, 2). ஆனால் வேள்விச் சமயத்தையும் வேள்வியையும் புகழ்ந்து பாடும் இடங்கள் உபநிடதங்களிலும் உண்டு. சுவேதாஸ்வதர உபநிஷதம்,

எல்லாக் கடவுளரும் வாழும் மிகவுயர்வான, மாறுபாடு அடையாத விண்ணுலகில் இருக்கு வேதமும் உள்ளது. அவனை அறியாதவன் இருக்கு வேதத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வான்? இதைத் தெரிந்தவர்களே அமரத்துவம் அடைவார்கள்.

அனுபவிக்கிறான். இரண்டு எழுத்துக்களைத் தியானிப்பவன் யஜூ(Yajus)க்களால் இடைப்பட்ட உலகத்திற்கு, சோமனின் சந்திர - உலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். சோமனின் உலகத்தில் ஆன்மாவின் தனிப்பெருஞ் சிறப்பை அனுபவித்துவிட்டுத் திரும்புகிறான். மூன்று எழுத்துகளின் மூலமாக யாவர்க்கும் மேலான புருஷனைத் தியானிப்பவன் ஒளியில், கதிரவனில் முழுமை பெறுகிறான். பாம்பு தன் தோலை நீக்குவது போல், அவன் பாவத்திலிருந்தும் தீமையிலிருந்தும் விடுதலை பெறுகிறான்; சாமன்(Samans)களால் பிரமனுடைய உலகிற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். வாழும் ஆன்மாக்களுள்ள இவ்விடத்திலிருந்து இந்த மாளிகையிலிருக்கும் யாவர்க்கும் மேலான புருஷனைப் பார்க்கிறான். மூன்று எழுத்துகளும் மரணத்தால் தாக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்பொழுது அவை பிரிக்கப்படாமல் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. ஆன்மாவின் உள், வெளி, இடைப்பட்ட செயல்கள் முழுமையாக்கப்படுகின்றன. ஆன்மா அறிகிறது; அது நடுக்கமுறுவதில்லை. இருக்குளால் அந்த உலகமும், யஜுக்களால் இடைப்பட்ட உலகமும், சாமன்களால் பிரமனின் உலகமும் நமக்கு அறிவிக்கப்படுகின்றன. ‘ஓம்’ மூலமாக அறிவுடையவன் அவனையும், அவனுடைய வீட்டையும் அமைதியானதும் வயதற்றதும் அச்சமில்லாததும் அழிவில்லாததுமான உயரிய ஆன்மாவையும்கூட அடைகிறான் (அரவிந்தர் 9).

இப்பகுதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுக்கும் அரவிந்தர் இதிலுள்ள குறியீடுகள் நமது அறிவிற்குப் புலப்படவில்லையாயினும் அவை ஆன்ம வளர்ச்சியின் வெவ்வேறு படிநிலைகளின் உளவியல் அனுபவத்தை விளக்குகின்றன என்பதில் ஐயமில்லை என்பார். பாமர மக்களின் மூடநம்பிக்கையையெடுத்துச் சொல்லும் இவ்வடமொழி மூலம் பிழைகள் நிறைந்ததாக இருப்பதால் அதன் நேரான பொருள் புரியாமல் போனதே தவிர, பயன்படுத்தப்பட்டவையெல்லாம் நுட்பமான குறியீடுகள் என்பதால் அல்ல என்னும் உண்மையை அரவிந்தர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். வாய்மொழியாக வந்த பின்னர் தலைமுறை தலைமுறையாக வெவ்வேறு பிரதிகளாக எழுதப்பட்டமையால் வேதங்களிலும் உபநிடதங்களிலும் பல பிழைகள் மூலத்தை அறிய முடியாத நிலையில் மலிந்து கிடக்கின்றன என்பதை அவற்றைப் படித்துப் பார்ப்பார் அறிய முடியும்.

உபநிடதங்களில் சில வடமொழிச் சொற்கள் எப்பொருளில் பயன்படுத்தப்பெற்றன என்று தெரியாததாலும் அவை பலவாறு பொருள் உரைக்கப் பெறுகின்றன. தத்தம் கருத்துக்களையும் கொள்கைகளையும் ஏற்றிப் பல எளிய பொருளுடைய கூற்றுகளை தத்துவ நூல்களாகக் காட்ட வேண்டும் என்ற நோக்கில் அவற்றில் சொல்லப்பட்டுள்ள யாவற்றிற்கும் குறியீட்டுப் பொருள் தர முனைவார்க்கு வேதங்களில் மட்டுமல்லாமல் உபநிடதங்களிலும் பல இடர்ப்பாடுகள் விளைவது கண்கூடு. உபநிடதங்களை எட்டா உயரத்திற்கு ஏற்ற முயலும் அரவிந்தர் பெரிய தத்துவ விற்பன்னராயிருந்தும் பல இடங்களில் தடுமாறக் காணலாம். தம்முடைய முன்னுரையில்,

This Vedic and Vedantic imagery is foreign to our present mentality which does not believe in the living truth of the symbol, because the revealing imagination intimidated by the intellect has no longer the courage to accept, identify itself with and boldly embody a psychic and spiritual vision; but it is certainly very far from being a childish or a primitive and barbarous mysticism; this vivid, living, luminously poetic intuitive language is rather the natural expression of a highly evolved spiritual culture (அரவிந்தர், 8).

என்று வேத, உபநிடதங்களுக்குக் குறியீட்டு முறையில் தாம் அளிக்கப் போகும் விளக்கங்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொள்கிறார். நாகரிக முதிர்ச்சியற்ற ஓரினம் தன்னுடைய இன்பங்களையும் துன்பங்களையும் அச்சங்களையும் நம்பிக்கைகளையும் உள்ளவாறு கூறியிருக்க, அக்கூற்றுகள் அவ்வினத்தின் பண்பாட்டு உயர்வைக் காட்டவில்லையென்பதால் அவற்றிற்குக் குறியீட்டு விளக்கங்கள் கொடுத்து உயர்ந்த தத்துவங்களை அவைகள் சொல்லியிருப்பதாகக் காட்டுவது நேர்மையாகுமா, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது ஆகாதா என்ற கேள்விக்கு அரவிந்தர் விடை தரவில்லை; அக்கேள்வியை அவர் எழுப்பவும் இல்லை.

உயர்ந்த குறியீட்டுப் பொருளுக்கு இடந்தராத பகுதிகள் வரும் போதெல்லாம் இப்பொழுது இவற்றின் உட்பொருள் நமக்குப் புரியவில்லை என்று அரவிந்தர் தட்டிக் கழிப்பதையும் காணலாம். பிரஸ்ன உபநிஷதம் ‘ஓம்’ என்ற மந்திரத்தின் ஆற்றலைக் கீழ்க் கண்டவாறு விளக்குகிறது.

சத்யகாமா, “ஓம்” எனும் சொல் மிகச் சிறந்த பிரமன்; அது கீழான பிரமன். எனவே அறிவுடையவன் ஒன்றிற்கோ அல்லது மற்றதற்கோ பிரமனின் இந்த வீட்டு வழியாகத்தான் போக வேண்டும். ஓர் எழுத்தை மட்டும் தியானிப்பவன், அதன் மூலம் அறிவைப் பெறுகிறான்; விரைவில் இவ்வுலகத்தை அடைகிறான். அவனை இருக்குகள் (Riks) மனிதர்களுடைய உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு அவன் தவத்திலும், பிரமச்சரியத்திலும், நம்பிக்கையிலும் முழுமை பெற்று ஆன்மாவின் பெருமையை

அனுபவிக்கிறான். இரண்டு எழுத்துக்களைத் தியானிப்பவன் யஜூ(Yajus)க்களால் இடைப்பட்ட உலகத்திற்கு, சோமனின் சந்திர - உலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். சோமனின் உலகத்தில் ஆன்மாவின் தனிப்பெருஞ் சிறப்பை அனுபவித்துவிட்டுத் திரும்புகிறான். மூன்று எழுத்துகளின் மூலமாக யாவர்க்கும் மேலான புருஷனைத் தியானிப்பவன் ஒளியில், கதிரவனில் முழுமை பெறுகிறான். பாம்பு தன் தோலை நீக்குவது போல், அவன் பாவத்திலிருந்தும் தீமையிலிருந்தும் விடுதலை பெறுகிறான்; சாமன்(Samans)களால் பிரமனுடைய உலகிற்கு அழைத்துச் செல்லப்படுகிறான். வாழும் ஆன்மாக்களுள்ள இவ்விடத்திலிருந்து இந்த மாளிகையிலிருக்கும் யாவர்க்கும் மேலான புருஷனைப் பார்க்கிறான். மூன்று எழுத்துகளும் மரணத்தால் தாக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்பொழுது அவை பிரிக்கப்படாமல் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. ஆன்மாவின் உள், வெளி, இடைப்பட்ட செயல்கள் முழுமையாக்கப்படுகின்றன. ஆன்மா அறிகிறது; அது நடுக்கமுறுவதில்லை. இருக்குளால் அந்த உலகமும், யஜுக்களால் இடைப்பட்ட உலகமும் சாமன்களால் பிரமனின் உலகமும் நமக்கு அறிவிக்கப்படுகின்றன. ‘ஓம்’ மூலமாக அறிவுடையவன் அவனையும், அவனுடைய வீட்டையும் அமைதியானதும் வயதற்றதும் அச்சமில்லாததும் அழிவில்லாததுமான உயரிய ஆன்மாவையும்கூட அடைகிறான் (அரவிந்தர் 9).

இப்பகுதியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுக்கும் அரவிந்தர் இதிலுள்ள குறியீடுகள் நமது அறிவிற்குப் புலப்படவில்லையாயினும் அவை ஆன்ம வளர்ச்சியின் வெவ்வேறு படிநிலைகளின் உளவியல் அனுபவத்தை விளக்குகின்றன என்பதில் ஐயமில்லை என்பார். பாமர மக்களின் மூடநம்பிக்கையையெடுத்துச் சொல்லும் இவ்வடமொழி மூலம் பிழைகள் நிறைந்ததாக இருப்பதால் அதன் நேரான பொருள் புரியாமல் போனதே தவிர, பயன்படுத்தப் பட்டவையெல்லாம் நுட்பமான குறியீடுகள் என்பதால் அல்ல என்னும் உண்மையை அரவிந்தர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். வாய்மொழியாக வந்த பின்னர் தலைமுறை தலைமுறையாக வெவ்வேறு பிரதிகளாக எழுதப்பட்டமையால் வேதங்களிலும் உபநிடதங்களிலும் பல பிழைகள் மூலத்தை அறிய முடியாத நிலையில் மலிந்து கிடக்கின்றன என்பதை அவற்றைப் படித்துப் பார்ப்பார் அறிய முடியும்.

உபநிடதங்களில் சில வடமொழிச் சொற்கள் எப்பொருளில் பயன்படுத்தப்பெற்றன என்று தெரியாததாலும் அவை பலவாறு பொருள் உரைக்கப் பெறுகின்றன. தத்தம் கருத்துக்களையும் கொள்கைகளையும் ஏற்றிப் பல எளிய பொருளுடைய கூற்றுகளை நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த மறைமொழிகளாகக் காட்டும் முயற்சிகளில் காலங்காலமாக வடமொழி அறிஞர்கள் ஈடுபட்டிருந்திருக்கின்றனர். ஈச உபநிஷதத்தின் முதல் மந்திரம் சர்மாவால்,

All this, whatsoever, moves in this moving world, is pervaded by God. Though such renunciation you may enjoy. Do not covet; for whose, indeed, is wealth? (சர்மா, 31).

என்று மொழி பெயர்க்கப்படுகின்றது. இதனை அரவிந்தர்,

All this is for habitation by the Lord, whatsoever is individual universe of movement in the universal motion. By that renounced thou should enjoy; lust not after any man's possession (அரவிந்தர், 19).

என்று மொழி பெயர்த்துவிட்டு அறிவிக்கும் கருத்து ஆழ்ந்து எண்ணத் தக்கது.

‘வாஸ்யம்’ என்ற சொல்லுக்கு மூன்று பொருள்கள் சொல்ல முடியும். “to be clothed”, “to be worn as a garment”, “to be inhabited". முதலாவது பொருள் பலரால் ஏற்றுக் கொள்ளப்படுவது. சங்கரர் இப்பொருளிலேயே அதனை எடுத்துக் கொண்டு, “தூய்மையான பிரமனின் காட்சியில் இந்த உண்மையற்ற புறவயமான உலகத்தின் உணர்வை நாம் இழக்க வேண்டும்” என்று விளக்குவார். முதல் வரி இவ்வாறு விளக்கப்பட்டால் அது உபநிஷத்தின் முழுக் கருத்திற்கும் முற்றும் முரண்பாடானதாகும். உபநிஷதமானது கடவுள் - உலகம், துறத்தல் - துய்த்தல், செயல் - அகவிடுதலை, ஒன்று - பல, இருப்பு - அதன் மாறுபாடுகள், செயலற்ற, தெய்வீக அருவம் - செயலூக்கமுடைய தெய்விக உருவம், அறிவு - அறியாமை, மாறுபடல் - மாறுபடாதிருத்தல், இவ்வுலக வாழ்க்கை - உன்னதமான அமரத்துவம் போன்ற எதிர் மாறானவற்றிலுள்ள அடிப்படை ஒற்றுமையைக் காட்டி அவற்றை இணக்குவிக்கும் வழியைக் கற்றுத் தருகிறது. உலகம் இறைவனுக்கு ஒர் ஆடையாகவோ, வாழும் இடமாகவோ இருக்கிறது என்பதுதான் கூற்றிலுள்ள காட்சியுரு தெரிவிப்பது. வாழும் இடம் என்று எடுத்துக் கொள்வதே உபநிஷதக் கருத்துக்கு ஏற்றது.

சங்கரர் ஈச உபநிஷதத்தின் முதல்வரிக்குக் கூறும்பொருள் உபநிஷதத்தின் அடிப்படைக் கருத்துக்கு முற்றும் மாறானது என்று அரவிந்தர் சொல்வது வியப்புக்குரியது.அரவிந்தர் கூறும் உரை அவர் உபநிஷதத்தில் காண விரும்பும் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. உபநிஷதம் உண்மையில் என்ன கூறுகிறது என்பதை அறிய முடியாமல் அறிஞர்களின் விளக்கங்கள் அமைகின்றன. அவர்கள் உண்மைப் பொருளைக் கண்டு கொள்ளவில்லையா, அல்லது தவறான பொருளைச் சொல்லி ஏமாற்ற முயன்றார்களா என்பது தெரிய வேண்டும்.

ஈச உபநிடதத்தின் இரண்டாவது மந்திரத்தை அறிஞர் சர்மா,

Always performing works here, one should wish to live a hundred years. If you live thus as a man, works will not cling to you-there is no other way (சர்மா, 32).

என்றும் அரவிந்தர்,

Doing verily works in this world one should wish to live a hundred years. Thus it is in thee and not otherwise than this; action cleaves not to a man.

என்றும் மொழிபெயர்ப்பார்கள். இம்மந்திரத்திற்கும் சங்கரர் கூறும் பொருள் சரியன்று என்பார் அரவிந்தர்.

சங்கரர் “thus in thee - it is not otherwise than thus - action cleaves not to a man” என்று மொழிபெயர்த்துக் கொண்டு முதல் வரியிலுள்ள ‘கர்மாணி’ எனும் சொல் ‘வேத வேள்விகள்’ என்றும் இரண்டாவது ‘கர்ம’ அதற்கு நேரெதிராக ‘தீய செயல்’ என்றும் பொருள்படும் என்று கூறி அறியாமையால் பீடிக்கப்பட்டவர்கள் வேள்விகளைச் செய்வதன்மூலம் தீய செயல்களிலிருந்தும் அவற்றின் விளைவுகளிலிருந்தும் தப்பித்துத் துறக்கவுலகம் அடையலாம் என்றும் அறிவுடையோர் இவ்வுலகையும் செயல்களையும் புறக்கணித்துக் காட்டிற்குச் செல்வார்களென்றும் இப்பாடல் எடுத்துரைப்பதாக விளக்கம் தருவார். ஆனால் சங்கரரின் மொழிபெயர்ப்பு வலிந்து திணிக்கப்படுவதாகும்; செயற்கையானதாகும். என்னுடைய மொழிபெயர்ப்பே எளியதும் நேரானதும் ஆகும் (அரவிந்தர், 19).

வேதங்களில் போற்றப்பட்டிருக்கும் வேள்விகளை முட்டாள்களுக்கு மோட்சம் அடைய அளிக்கப்பட்டுள்ள வழியென்றும் இவ்வுலக வாழ்க்கை நிராகரிக்கப்பட வேண்டியதென்றும் சங்கரர் கூறுவதால் அதனை மறுக்கும் அரவிந்தர் நூறு ஆண்டுகள் வாழ முயல வேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமான ஆசை பற்றி ஏதும் சொல்லவில்லை.

சந்தோக்ய உபநிஷதத்தில் கூறப்படும் சத்யகாமனின் கதையை எடுத்துக்காட்டாகக் கூறி அறிவுத் தேட்டத்திற்கும் ஆன்மீக உயர்வுக்கும் சாதி ஒரு தடையென்று வேதங்களும் உபநிஷதங்களும் விதிக்கவில்லையென்றும் இது பின்னால் நிகழ்ந்த கண்டுபிடிப்பென்றும் அரவிந்தர் கூறுவார் (அரவிந்தர், 365). இக்கதை சந்தோக்ய உபநிஷதத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது:

முன்னொரு காலத்தே சத்யகாமன், ஜபலாவின் மைந்தன், தன் தாயைக் கூப்பிட்டு, “அம்மா, நான் ஒரு பிரமச்சாரியின் வாழ்க்கையை மேற்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய கோத்திரம் என்னவென்று சொல்” என்று கேட்டான். அதற்கு அவள் “என்னுடைய குழந்தையே, அது எனக்குத் தெரியாது. நான் இளமையில் வேலைக்காரியாகப் பலவிடங்களுக்குச் சென்றபோது உன்னைப் பெற்றேன். எனவே உன்னுடைய கோத்திரம் என்னவென்று எனக்குத் தெரியாது. என்னுடைய பெயர் ஜபலா உன் பெயர் சத்யகாமா. உன்னை நீ சத்யகாம ஜபலா என்று சொல்லிக் கொள்ளலாம்” என்று விடையிறுத்தாள். அவன் கெளதம ஹாரித்ரு மதரிடம் சென்று. “ஐயா, நான் உம்மிடம் பிரமச்சாரியாக இருந்து கற்க விரும்புகிறேன். ஏற்றுக் கொள்வீரா?” என்று கேட்டான். அதற்கு அவர், “மைந்தனே, உன்னுடைய கோத்திரம் என்ன?” என்று கேட்டார். அவன் “எனக்கு அது தெரியாது; என்னுடைய தாயைக்கேட்டபோது அவள், “நான் இளமையில் வேலைக்காரியாகப் பலவிடங்களுக்குச் சென்றபோது உன்னைப் பெறேன்; உன் கோத்திரம் எனக்குத் தெரியாது. என் பெயர் ஜபலா, உன் பெயர் சத்ய காமா; எனவே நீ உன்னை சத்யகாம ஜபலா என்று சொல்லிக் கொள்ளலாம்” என்றாள். எனவே நான் சத்யகாம ஜபலா ஆவேன்” என்று சொன்னான். அதற்கு அவர்,

“உண்மையான பிராமணனைத் தவிர வேறு யாரும் இவ்வாறு உண்மையைப் பேச மாட்டார்கள். விறகைக் கொண்டு வா; நான் உன்னை ஏற்றுக் கொள்கிறேன். உண்மையிலிருந்து நீ வழுவவில்லை” என்று தெரிவித்தார்.

இக்கதை சாதிப் பாகுபாட்டைக் காட்டவில்லையென்பது முறையாகாது. மாறாக, சாதிப் பாகுபாட்டை வற்புறுத்துகிறது என்றே சொல்ல வேண்டும். பிராமணனுக்கு மட்டுமே கல்வி தர வேண்டுமென்பதால் குரு அவனைக் கோத்திரம் என்னவென்ற கேள்வியை முதலில் கேட்கிறார். அவன் உண்மையைச் சொன்னவுடன் பிராமணனே உண்மையைச் சொல்வான். எனவே அவன் பிராமணனாகத்தான் பிறந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்து ஏற்றுக் கொள்கிறார். அவன் உண்மை சொன்னதால் பிராமணனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று சொல்லியிருந்தாரானால் அவர் பெருமையுடையவராகக் கருதப்படலாம்; சாதியுணர்வு இல்லாதவரென்று போற்றப்படலாம். இக்கதையை வைத்துக் கொண்டு சாதிக் கட்டுப்பாடுகள் அப்பொழுது இல்லையென்று அரவிந்தரோ, பிறரோ வாதிடுவது உண்மைக்குப் புறம்பானதாகும். இக்கதையைச் சொல்லும் சந்தோக்ய உபநிஷதமே இன்னொரு பகுதியில்,

இவ்வுலகில் நல்ல முறையில் நடந்து கொள்பவன் அடுத்த பிறவியில் உயர்ந்த பிறப்பைப் பெறுவான்; பிராமணனாகவோ, சத்திரியனாகவோ, வைசியனாகவோ பிறவி அடைவான். தீய வழியில் சென்றவன் இழி பிறப்பைப் பெறுவான்; நாயாகவோ, பன்றியாகவோ, சாதியற்றவனாகவோ பிறவி அடைவான (சர்மா, 23).

என்று கூறுவதை அரவிந்தர் கண்டு கொள்ளவில்லை.