கம்பராமாயணம் (உரைநடை)/ஆரண்ய காண்டம்

விக்கிமூலம் இலிருந்து

ஆரணிய காண்டம்

அடவியை அடைந்த இராமன், அறிவும் ஆசாரமும் மிக்க தவசிகளின் விருந்தினாய்த் தங்கி வந்தான். அத்திரி முனிவர் என்பவர் அவனை இன்முகம் காட்டி, இனிதுரை வழங்கி, நல் விருந்து அளித்தார். அவர் பத்தினாயாகிய அனசூயை சீதையிடம் சொந்த மகள்போல் பந்தம் காட்டினாள்; அந்தம் இல்லாத அழகுடைய சீதைக்கு அணிகலன் சேர்த்து, ஆடையும் தந்து, தங்கப்பதுமை போல் அலங்கரித்தான்.

விண்டுரைக்க முடியாத பேரழகியாகிய சீதையைக் கண்டு விராதன் என்னும் கிராதன் அவளைத் தின்று விழுங்கக் கரம்பற்றி விண்வழியே இழுத்துச் சென்றான்.

வஞ்சனை மிக்க அவன் செயலை அஞ்சன வண்ணனாகிய இராமன் எதிர்த்து, அம்பு எய்து, அவளை விலக்கி அவனை எதிர்த்தான். படைகள் அவனைத் தொடவில்லை; படைக் கருவியால் அழிவு பெறாத வரங்களை பிரமணிடம் வாங்கி இருந்தான்.

மராமரம் ஒன்றை அவன் இராமன்மீது வீசினான். அது அவன் கைக்குச் சிக்கி வேரோடு பட்டது; கிளையோடு கெட்டது. இராமன் அம்புகளை ஒரு சேர விட்டான்; அவன் முள்ளம் பன்றிபோலக் காட்சி பெற்றான்; எனினும், விதிர் விதிர்த்து விடுதலை பெற்றான்; மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுச் சீறிய சிங்கம் எனப் பாய்ந்தான்.

வாள்கொண்டு அவன் தோள்களை வெட்டினான் இராமன்; வெட்டிய தோள்கள் மறுபடியும் ஒட்டிக் கொண்டன. அவன் தோள்கள்மீது ஏறி இருவரும் அமர்ந்தனர். அவன் அவர்களை உலகம் சுற்றும் வாலிபர்களாக்கினான். கருடன்மீது அமரும் திருமால் போல் இராமனும் இலக்குவனும் காட்சி அளித்தனர்.

வேறு வழியின்றி அவனை வெட்டிக் குழி தோண்டி மண்ணில் புதைத்தனர். விண்ணில் அவன் தேவ கந்தருவனாய்க் காட்சி அளித்தான்.

அவன் ஒரு கந்தருவன்; கலை ரசிகன், தும்புரு என்பது அவன் பெயர்; செல்வச் சிறப்புமிக்க அளகா புரியில் வாழ்ந்து வந்தவன்; அரம்பை ஒருத்தி ஆடல் நிகழ்த்த, அவளை அவன் நாடினான். கலைஞன் காமுகன் ஆனான். இதையறிந்து அளகை வேந்தனாகிய குபேரன், அவனை “அரக்கனாகுக” என்று சாபமிட்டான். தேவனாகப் பிறந்தவன் அரக்க குணம் கொண்டு அழிவுப் பாதையை அடைந்தான்.

இராமன் திருவடி தீண்டப்பட்டதால் அவனுக்குச் சாப விமோசனம் கிடைத்தது; காந்தருவனாய் மாறினான்; நன்றி நவின்றுவிட்டு விண்ணுலகில் மறைந்தான். கல்லாக இருந்தவள் காரிகையாக மாறி, விமோசனம் பெற்றதைப் போல் முரடனாக இருந்த அரக்கன், சாப விமோசனம் பெற்று காந்தருவனாக மாறினான். இதுவும் கருத்துள்ள கதையாகும். கலை உள்ளத்தோடு ரசிக்க வேண்டியவன் காமப் பார்வையோடு அவளைப் பார்த்துத் தன் நிலை கெட்டான். அது அவளை அரக்கனாக மாற்றியது. சீதை புனிதமானவள். அவளைத் தொட்டான் என்றாலும், கெட்டான் என்ற நிலை ஏற்படவில்லை. தெய்வம் அவனை மன்னித்துத் தேவனாக மாற்றியது. பள்ளத்தில் விழுந்து இருப்பவர், தெய்வ அருள் பெற்றால் ஒளி பெற்று உயர் பதவி பெறுவர் என்பதற்கு அவன் ஒர் எடுத்துக் காட்டாக அமைந்தான்.

சரவங்கன் பிறப்பு நீக்கம்

அவர்கள் சென்ற வழியில் சோலை ஒன்றில் சரவங்கன் என்னும் தவமுளிைவன் ஆசிரம் இருந்தது. அதில் அவர்கள் தங்கினர்; அங்கு ஒரு புதுமையைக் கண்டனர்.

தேவர் தலைவனாகிய இந்திரன், பிரமதேவன் ஏவற்படி அம் முனிவனை அழைத்துச் செல்ல அங்கு வந்து சேர்ந்தான். நீண்ட காலம் மாண்புமிக்க தவம் செய்த அம் முனிவருக்குப் பிரம தேவன் அழைப்பில் பிரமபதம் காத்துக் கிடந்தது.

பிறப்பை ஒழிக்க நினைத்த அம் முனிவன் அச்சிறப்புகளைப் புறக்கணித்தான்! பிறப்பு ஒழிந்து ‘பரமபதம்’ என்னும் பெருநிலையை அடையவே விரும்பினான். இந்திரன் வரம் தந்து உயர்த்த வந்த பணி நிறைவேறவில்லை. ‘வானாள வானவர்கோன் பதவி தந்தாலும் வேண்டேன்’ என்று கூறும் விறல் அம் முனிவனிடம் இருந்தது. இந்திரன் செய்த முயற்சி பயன் தரவில்லை. வந்த வழி பார்த்து அந்தரம் நோக்கி அவன் திரும்பிச் சென்றான்.

திரும்பிச் செல்வதற்குமுன் இந்திரன், இராமனது வருகையை அறிந்து, அவனை வழிபட்டு வணங்கி விடைபெற்றான். முனிபுங்கவன் தன் மனைவியோடு இராமனைச் சந்தித்து உபசரித்தான். அத்தகைய இராமன் வருகையை எதிர்நோக்கி இருந்தவனாய்க் காணப்பட்டான்.

‘தீக்குளித்தல்’ என்பது உலகத்தில் பிற பகுதி களில் நடைபெறாத நடப்பியல்; அது இந்நாட்டில் தொன்று தொட்டு நிலவி வருகிறது. தன்னை அழித்துக் கொள்தற்கு இக் காலத்தில் அரசியல் எதிர்ப்புச் சாதனமாய் உள்ளது; மாமியார் கொடுமைக்கு எதிராய் மருமகள் செய்யும் மானப் புரட்சியாய் இயங்குகிறது. ‘சதி’ என்ற பெயரால் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட சதியாக அது இயங்கியது. சீதையின் கற்பின் பொற்பினை அறிவிக்க அனல் அவளைத் தீண்டலாயிற்று. பரமபதம் அடைய இம்முற்றும் துறந்த முனிவன், கற்ற கலையாக இத் தீக்குளித்தல் நடைபெற்றது.

இராமன் முன்னிலையில் அம் முனிவனும் அவன் மனைவியும் தீக்குளிக்க விரும்பினர். மற்றவர் நம்பிக்கைகளை இராமன் தடுத்து நிறுத்த விரும்பவில்லை. மற்றைய முனிவரும் தவசியரும் இதை ஒரு பெரு விழாவாக மதித்துப் பாராட்ட அவர்கள் முத்தி நிலை அடைய முந்திக் கொண்டனர். இராமன் தீயோரைத் தீண்டி, அவர்களுக்கு விடுதலை அளித்தைப் போலவே நல்லோர் நயப்புகளையும் கேட்டு அருள் செய்தான். சரவங்கன் தெய்வத் திருமகன்முன் உயிர்விட்டதால், பிறப்பு ஒழிந்த இறப்பு, அவனுக்குக் கிட்டியது. அவன் மனைவியும் அப் பெருநிலையை விருப்புடன் ஏற்றுக் கொண்டாள்.

தமிழ் முனிவர் அகத்தியர் சந்திப்பு

சரவங்கன் இறுதி யாத்திரை இராம இலக்குவரைத் துயரத்தில் ஆழ்த்தியது. சரவங்கனது ஆசிரமத்தைவிட்டுச் சுமை நீங்கிய உணர்வோடு மெதுவாய் அவர்கள் நடந்தனர்; விண்ணை முட்டும் மலைகளையும், பசுமை நிறைந்த மரங்களையும், கடுமையான பாறைகளையும், ஒடும் நதிகளையும், சரியும் சாரல்களையும், நீர்த் தடாகங்களையும் கடந்தனர்; வழி நெடுக அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சந்தித்தவர் தாம் அடைந்து வரும் இன்னல்களை எடுத்துரைத்தனர். அரக்கர் இழைக்கும் அநீதிகளை எடுத்துக் கூறி, அவர்களை அழித்து அறம் தழைக்கச் செய்ய வேண்டும்” என்று வேண்டினர்.

“நாட்டை விட்டுக் காட்டை அடைந்ததும் ஒரு வகையில் நல்லதாயிற்று” என்று இராமன் கருதினான். வருந்தி வாடும் அருந் தவசியர் இடையில் அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களை மகிழ்வித்தான். எந்தவித இடையூறும் இன்றி, இனிமையாய்ப் பத்து ஆண்டுகள் அவர்களைக் கேளாமலே கழிந்து சென்றன. .

வேதம் கற்ற முனிவரிடைப் பழகிய இராமன், தமிழ் கற்ற அகத்தியரைக் காண விரும்பினான். அகத்தியர் இருக்கும் இடம்தேடி நடந்தான். கதீக்கணன் என்னும் முனிவனைச் சந்தித்து, அகத்தியர் வாழும் மலையை அறிய விரும்பினான்.

அகத்தியர் செய்த அரிய செயல்கள், கதைகளாகப் பேசப்பட்டன. அவற்றுள் இது ஒன்று. தேவர்களை எதிர்த்துத் தப்பி ஓடிய அவுணர் கடலில் புகுந்து ஒளிந்து கொண்டனர். அவர்களைத் தேடித் தரும்படி தேவர் வேண்டினர். கடலைக் குடித்து அகத்தியர் அவர்களைக் காட்டிக் கொடுத்தார் என்பது ஒரு கதை.

வாதாவி என்பவன், முனிவர்களில் வயிற்றில் ஆட்டிறைச்சியாகப் புகுந்து, அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வந்தான். அக் கொடியவனை விழுந்கி, வயிற்றின் உள்ளே உருத்தெரியாமல் சீரணித்து அழித்த கதை அடுத்த கதையாகும்.

பார்வதி திருமணத்தில் இம்ய மலையில் தேவர் குவிய வடக்கு உயர்ந்தது. தெற்கு தாழ்ந்தது. அதைச் சமன்படுத்த அகத்தியர் தென் திசை அனுப்பப்பட்டார். அது முதல் பொதிகை மலையில் அவர் தங்கினார் என்பது அடுத்த கதை.

“சிவபெருமான் வடமொழி இலக்கணத்தைப் பாணினிக்கும், தமிழ் இலக்கணத்தை அகத்தியருக்கும் அருள் செய்தார்” என்பது மற்றொரு கதை. ‘அகத்தியரே தமிழ் மொழிக்கு முதன்முதலில் இலக்கணம் வகுத்துக் கொடுத்தார்’ என்று பேசப்படுகிறது. இத்தகைய பெருமைமிக்க தமிழ் அறிஞரைச் சந்திப்பதில் இராமனுக்குப் பேரரர்வம் ஏற்பட்டது. இதனை ‘ஒரு பண்பாட்டுக் கலப்பு’ என்று கூறலாம். வடமொழி காவியத்தில் தமிழுக்குட் பெருமைதரும் செய்தியாய் இது அமைந்துள்ளது.

அகத்தியரும் இராமனது வருகையை, எதிர் நோக்கி இருந்தார்; அகம், குளிர இராமன் அகத்தியரைச் சந்தித்தான்; அவர் திருவடிகளில் விழுந்து வணங்கி அவரிடம் தான் கொண்ட மதிப்பை வெளிப் படுத்தினான்.

‘அரக்கர் செய்யும் இரக்கமற்ற செயல்களைத் தடுத்துத் தீமைகளைக் களைய வேண்டும்’ என்று அகத்தியரும் வேண்டினார். அதனோடு நில்லாமல் தான் வைத்திருந்த ஆயுதங்கள் சிலவற்றை இராமனுக்கு அளித்தார்; திருமால் வைத்திருந்த வில் ஒன்றனையும், ஒப்புயர்வற்ற வாள் ஒன்றையும், சிவபெருமான் திரிபுர மெரித்த காலத்தில் மேருவை வில்லாக வளைத்துப் பூட்டிய அம்பு ஒன்றனையும் தந்தார்.

இராமன் சீதையோடு தங்குதற்கு, உரிய இனிய சூழல் அமைந்த இடம் பஞ்சவடி என்றும், அதன் அருகில் மலைச்சாரல் ஒன்று உள்ளது என்றும், அந்தப் பஞ்சவடியில் கனிகளைத் தரும் வாழை மரங்களும் பசிய செந்நெற்கதிர்களும், தேன் சிந்தும் பொழில்களும் மிக்க கவின்மிகு நதிகளும் உள்ளன என்றும், நீர் வளமும் நில வளமும் மிக்க அந்தச் சோலை தங்கு வதற்கு ஏற்றது என்றும் அகத்தியர் கூறினார்.

மேகநிற வண்ணனாகிய இராமன் அறிவுக் கடலாய் விளங்கிய அகத்திய முனிவரிடமிருந்து பிரியா விடை பெற்றுப் பஞ்சவடி நோக்கி நடந்தான்; பாகு அனைய சொற்களைப் பேசிய பாவையாகிய சீதை யும், வீரம் காட்டிய தம்பியும் பின் தொடரப் பயணம் தொடர்ந்தது.

சடாயுவைச் சந்தித்தல்

காவதம் பல கடந்தனர்; நதிகள் மலைகள் சோலைகள் அவர்களுக்கு வழிப்பட்டன. புதிய புதிய இடங்களைக் கண்டு அவர்கள் இறும்பூது எய்தினர். எதிர்பாரமல் அங்கே கழுகின் வேந்தைக் கண்டு தொழுது வணங்கினர். அரசிளங்குமரர்களைத் தவசிகளின் கோலத்தில் காண அப்பறவை வேந்தனுக்கு வியப்பு விஞ்சியது.

“நீவிர் யாவிர்”? என்று வினவினான்.

“தசரதனின் மைந்தர்” என்று பதில் இறுத்தனர்.

தசரதன் கழுகின் வேந்தனாகிய சடாயுவின் நண்பன் ஆதலின் அவன் நலத்தைக் கேட்டு அறிய விரும்பி.

“வாய்மை மன்னன் வலியனோ” என்று கேட்டான்.

“அவன் காத்து வந்த வாய்மை அழியவில்லை; காவலன் மறைந்துவிட்டான்” என்று கூறினான் இராமன்.

நண்பனை இழந்தமை கழுகு வேந்தனுக்குத் தீராத் துயரைத் தந்தது; உணர்வு நீங்கி உயிரற்றவனாயக் காணப்பட்டான்; வெறும் சடலமாக விளங்கினான். இராமனும் இலக்குவனும் அவனைத் தடந்தோள் களால் தழுவிக் கொண்டு நழுவ விடாமல் நிறுத்தினர்.

இருவரும் தம் கண்ணிரால் அவனைக் குளி, வைத்தனர்; அவன் உயிர்ப்புப் பெற்று அயர்ப்ட நீங்கினான். தசரதன் வெற்றிச் சிறப்புகளை அடுக்கிக் கூறி அழுகையை அவன் ஒப்பாரி ஆக்கினான்.

தசரதனுக்காக ஒரு பறவை அரசன், அழுது அரற்றியது அதிசயமாக இருந்தது. அவனைப் பற்றி அறிய அவாவினர்.

“சூரியன் தேர் ஒட்டி ஆகிய அருணன் அருமைப் புதல்வன் யான்; சூரியன் சுற்றி வரும் உலகம் முற்றும் திரிந்து பறந்து வாழ்பவன்; தசரதன் என் இனிய நண்பன். தேவர்களோடு மற்றச் சாதிகளை வகைப்படுத்திய ஆதி காலத்திலேயே வந்து உதித்தவன் நான்; கழுகுகளுக்கு மன்னன்; என் உடன் பிறந்தவன் சம்பாதி; அவன் எனக்கு இளையவன்; சடாயு என்பது என் பெயர்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

பொன்னுலகு புகுந்த பெரியோனாகிய தசரதனே உயிரோடு திரும்பி வந்ததைப் போல, அவனைக் கண்டு இராமன் களிப்பு அடைந்தான். பாசத்தோடு தன் இரண்டு இறகுகளால் அவர்களைச் சடாயு அணைத்து அன்பு காட்டினான். “என் ஆருயிர் நண்பன் என்னை விட்டு அகன்ற பிறகு யான் உயிர் வாழ்தல் சரியன்று; சுமை மிக்க வாழ்வில் யான் சுவை காண இயலாது. யானும் தீயில் விழுந்து மாயாவிட்டால் என் துன்பத்திற்கு விடிவே இல்லை” என்று அரற்றி அலறினான். அவனைத் தேற்றி அன்பு மொழி கூறி, அவனிடம் உறவு கொண்டனர்.

“எங்களுக்கு உதவ வேண்டிய எம் தந்தை, உயிர் விட்டுப் புகழைத் தேடிக் கொண்டார்; மெய்யைக் காத்து வந்தவர் தம் மெய்யைவிட்டு நீங்கினார். துன்பம் நேர்கையில் இன்பம் சேர்க்கும் உறுதி மொழிகளை எடுத்துக்கூற, உம்மைத் தவிர இன்று யார் இருக்கிறார்கள்? நெருப்பு பொறுப்பு அற்றது; உம்மைச் சுட்டு எரித்தால் அதற்குப் பிறகு குளிர் நிழலை யாம் எங்கே காண முடியும்? நிற்கின்ற நெடுஞ் சுவரே இளைப்பாற நினைத்தால் சாய்வதற்கு நிழல் ஏது? எம் விருப்பேற்று நீர் உயிர் வாழ வேண்டுகிறோம்” என்றனர்.

“தந்தை மறைந்ததும் ஆட்சிப் பொறுப்பு ஏற்க வேண்டிய நீவிர் காட்சிப் பொருளாக இங்கு வந்து சுற்றிக் கொண்டிருப்பது ஏன்?'என்று வினவினான் சடாயு.

அதற்கு விடையாக இராமன் அவர்கள் அடைந்த ன்னல்களை அடுக்கிக் கூறினான். சீதையை நோக்கி, அக்கோதையை அறிமுகப்படுத்தும்படி சடாயு வேண்டினான். தாடகையை வீழ்த்தியது முதல் வில்லை வளைத்து அக் கோமகளை மணந்தது வரை ஒன்று விடாமல் உரைத்தான் இராமன்.

“நாட்டைத் துறந்து நீங்கள் பட்ட பாட்டைக் கேட்டு மிகவும் வருந்துகிறேன். நீர் மீண்டும் திரும்பும் வரை விரும்பியபடி பொழுதுபோக்கிக் கொண்டு சீதை இங்குத் தங்கலாம்; அவளுக்கு எந்தவிதப் பங்கமும் ஏற்படாதவாறு காவல் காப்பேன்” என்று கூறினான்.

“அகத்தியர் அறிமுகப்படுத்திய கோதாவரி என்னும் ஆற்றங்கரையில் நீர்த்துறை ஒன்று உள்ளது. பஞ்சிலும் மெல்லிய அடிகள் உடைய சீதை தங்குதற்கு அந்தப் பஞ்சவடி என்னும் இடம் ஏற்றம் உடையது” என்றான் சடாயு. அதற்கு வழி காட்டினால் போதும் என்று அடக்கமாகக் கூறினான் இராமன். “மிகவும் நன்றி! அப் பெருந்துறையில் நீர் வைகி மாதவம் செய்வீர்; அதுதான் தக்கது” என்று கூறி விண்ணில் முன்னோக்கிப் பறந்து அவர்களுக்கு வழிகாட்டினான் சடாயு.

பஞ்சவடியை அறிய வழிகாட்டிய தூய சிந்தை உடைய சடாயு சென்றபின் வில்லை ஏந்திய வீரர்களாகிய இராம இலக்குவர் பஞ்சவடியை அடைந்து அங்கு உறைந்தனர். தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் தாய்ப் பறவை போலச் சடாயு அவர்களைக் காக்கும் அரிய பணியை மேற்கொண்டான்.

பஞ்சவடியில் வஞ்ச மகள்

பஞ்சவடி என்னும் பசுமையான சோலை, கோதாவரி நதிக் கரையில் இருந்தது; அது சான்றோர் படைக்கும் கவிதை போலத் தெளிவும் நிறைவும் பெற்று விளங்கியது; கண்ணைப் பறிக்கும் மணிகளை யும், மின்னல் போல் ஒளிவிடும் பொன்னையும், பெண்ணின் பற்களைப் போல் வெண்மையான முத்துக்களையும் வாரிக் கொண்டு வந்து ஐவகை நிலங்களில் குவித்தது; நீரால் அந் நிலங்களை வளப்படுத்தியது. அதன் ஒட்டம் இவர்களின் நாட்டத்தைக் கவர்ந்தது. பத்தினிப் பெண்ணோடு இராமன் அங்கு இனிமையாய்க் காலம் கழித்தான். இயற்கை அவர்களுக்கு வியப்பைத் தந்தது.

பால் நிலவைக் கண்ட சீதையும், இராமனும் தேனிலவை கண்டது இல்லை. இங்கு ஏன் என்று கேட்பார் அற்று, வண்ணப் பறவைகளையும் வனத்து விலங்கு களையும் அவற்றின் நேய உறவுகளையும் கண்டு அவற்றோடு அவளை ஒப்பிட்டு இராமன் நலம் பாராட்டினான். தாமரை மலரில் இரண்டு சக்கரவாகப் பறவைகள் தங்கி இருந்தன. அவை சீதையின் அழகிய வடிவை அவனுக்கு நினைவுப்படுத்தின. மணற்குன்றுகள் இராமன் தோள்களாக விளங்கின. அன்னப் பறவைகள் சீதையின் நடையைக் கற்றன. களிறுகள் இராமன் பெருமிதத்தைக் கண்டு ஒதுங்கின. வஞ்சிக் கொடி இடைக்குத் தோற்றது. தாமரையின் நிறம், மங்கிக் காட்சி அளித்தது. அன்புக் காட்சிகள் அவர்களுக்கு மவுன ராகமாய் இசைத்தன. அழகுக்கும் இனிமைக்கும் பங்கமில்லாது அந்தச் சோலையில் இலக்குவன் வடித்துத் தந்த குடிசையில் தங்கி இருந்தனர்.

இலங்கைக்கு அரசன் இராவணன் ஒரே தங்கை சூர்ப்பனகை அங்கு வந்து சேர்ந்தாள். அப் பருவ மங்கை இராமன் உருவில் மயங்கினாள். அரக்கியாகச் சென்றால் “கிறுக்குப் பெண் என்று நறுக்குவர் என அரம்பை வடிவில் அவன்முன் நின்றாள்; திருமகளைத் தியானிதித்து அவள் உருவைத் தான் பெற்றுக் காட்சி அளித்தாள்.

“பஞ்சுஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சம்நிகர் சீறடியளாகி
அஞ்சொல்இள மஞ்ஞைஎன அன்னமென மின்னும்
வஞ்சிஎன நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்”

செம்பஞ்சு பூசிய சிவந்த அடிகள், தாமரை மலரைப் போலக் காட்சி அளிக்க அன்ன நடையும், வஞ்சிக் கொடி போன்ற மின்னல் இடையும் கொண்டு நஞ்சு எனத் தகைய வஞ்ச்மகள் நடன சிங்காரியாக நளினமாக அவன் முன் வந்து நின்றாள். விண்ணவர் படைத்த அமுதம் போன்ற கண்கவர் கன்னியைக் கண்டு இராமன் வியந்தான். “காட்டு வாழ்க்கையில் மேட்டுக் குடிமகள் இவள் யார்?” என அறிய விழைந்தான்.

பதுமைபோல வந்த அப் புதியவளைப் பார்த்து, “ஆரணங்கே நீ யார்? வழி தெரியாமல் உன் விழிகள் இங்கு வந்து நோக்குகின்றனவா?” என்று பரிவுடன் வினவினான். வாய்ப்பை எதிர்பார்த்து அவள் வாய்மையை மறைத்துப் பொய்மையைப் புனைவுடன் கூறினாள்.

“நான் அளகை நகர்க் காவலன் குபேரனுக்கும் இலங்கை வேந்தன் இராவணனுக்கும் தங்கை; அழகு மிக்கவள் ஆகலின், என்னைக் ‘காமவல்லி’ என்று அழைப்பர்”.

“அரக்கர் குலத்தில் அரம்பை எப்படி அவதரிக்க முடியும்”? என்று கேட்டான் இராமன்.

“சேற்றில் முளைத்த செந்தாமரை நான்” என்றாள்.

“நிலத்தில் வந்தது ஏன்?”

“நிம்மதி இழந்ததால்; உன் சம்மதம் வேண்டி உன்னை மணக்க” என்றாள்.

“நீ மலைத்தேன்; நான் முடவன்” என்றான்.

“காதலித்தேன்; அதனால் என்னைக் குருடி என்பர்”.

“சாதி ஒரு தடை” என்றான்.

“நான் கலப்பு மகள்; இது என் பிறப்பு வரலாறு” என்றாள்.

“என் தாய் அரக்கி; தந்தை அந்தணன்” என்றாள்.

“அரக்கி நீ; மானுடன் நான்” என்றான்.

“இடைப்பட்ட நிலையில் தேவ மகளாக உன்னைச் சந்திக்கிறேன்” என்றாள்.

“நீ சீமாட்டி; நான் சீர் இழந்த நாடோடி” என்றான்.

“என்னை மணந்தால் நீ நாடாள்வாய்” என்றாள்.

“உன் பெற்றோர்” என்று தொடர்ந்தான்.

“தடை செய்ய மாட்டார்கள்; காந்தருவ மண்ம் என்று ஒன்று இருக்கிறது; அது காதலர்க்குத் தரப்பட்ட உரிமை” என்றாள்.

அளவோடு நகையாட விரும்பினான் இராமன்.

“என் தந்தையை நான் வாழ்த்துகிறேன்; அவர் என்னைக் காட்டுக்கு அனுப்பாவிட்டால் நீ எனக்கு எட்டாத கனியாக இருந்திருப்பாய்; அழகு மிக்க உன்னைச் சந்திக்கும் பேறு பெற்றேன்; நன்மை என்னை வந்து அடைந்திருக்கிறது” என்றான்.

அவன் பேசிய எள்ளல் உரையை உள்ளம் உவந்து சொன்ன ஏற்புரையாகக் கொண்டாள் அவள். “மீன் தூண்டிலில் விழுந்துவிட்டது” என்று நினைத்தாள். “விரித்த வலை வீண் போகவில்லை” என்று செருக்குக் கொண்டாள். சீதை என்னும் பெண் கொடி, அங்கு வேலியாக வந்து தடுப்பாள் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

பொன்னை நிகர்த்த சீதை, நீல நிறத்தவனான இராமனைத் தழுவிக் கொண்டு நின்றாள். மேகத்தில் மின்னல் தோன்றியது. சூர்ப்பனகையின் சொற்களில் இடி தோன்றியது. கண்களில் நீர் பொழிய மழையை யும் கொண்டு வந்து சேர்த்தாள்.

“சிவபூசையில் சிந்தனையின்றிப் புகுந்த கரடி இவள் யார்'? என்று கேட்டாள்;

“இளைஞர் இருவர் புனையும் காதல் கவிதையின் இடையில் புகுந்த போட்டிக் கவிதை யாது”? என்று வினவினாள்; இது இடைப்பிறவரல் என்று நினைத்தாள்.

“இவள் அரக்கி மகள், மானுடவடிவில் வந்து உன்னை மயக்குகிறாள்; இவளை அகற்று; அடித்துத் துரத்து” என்று ஆணையிட்டாள்.

அதிகமானால் அமுதம் நஞ்சாக மாறிவிடும் என்பதை அறிந்தான் இராமன்; விளையாட்டு வினையாக மாறுகிறது; என்பதை உணர்ந்தான்.

“இவள் என் மனைவி; வாழ்க்கைத் துணைவி” என்று சொல்லாமல் செய்கையால் அறிவுறுத்தினான்; சீதையை அழைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே பர்ணசாலையில் நுழைந்தான்.

“தம்பி நயவு காட்டமாட்டான்; என்னை நம்பி இங்கு இருக்க வேண்டா'” என்று கூறிவிட்டு அவளை விட்டு அகன்றான்.

“இன்று போய் நாளை வருகிறேன்” என்று கூறி விட்டு அவ் அரக்கி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

பொழுது சாய்ந்தது. உள்ளத்தில் வெறுமை நிறைந்தது. இரவு நீண்டதாக அவளுக்கு இருந்தது. பொழுது விடிவில் தன் விடிவைக் காணக் காத்துக் கிடந்தாள். எப்படியாவது அவனை அடைவது என்று உறுதி கொண்டாள். இருள் அவளுக்கு மருளினைத் தந்தது. விரகவேதனையால் நரகவேதனையை அடைந்தாள்.

உறக்கம் நீங்கிய இராமன் காலையில் தன் கடனை முடிக்கக் கோதாவரிக் கரையை அடைந்தான். நித்தியக் கடனை முடித்து இறைவனை வழிபட்டு நிறை உள்ளத்தோடு வீடு திரும்பினான். அவன் புத்தம் புதுப் பொலிவோடு விளங்குவது அவள் பெருவிருப்பைத் தூண்டியது. சீதை குறுக்கிட்டதால் அந்தப் பேதை தன்னைத் துறந்தான் என்று தவறாகக் கணக்குப் போட்டாள். அவள் வாழ்க்கை, ஒருதலை ராகமாக மாறியது; அவள் ஒரு தறுதலையாக மாறினாள்.

சீதை அவளுக்கு நந்தியாகக் காணப்பட்டாள். மந்தி போன்ற அவள் நந்தியாகிய சீதைமீது பாய்ந்து மறைத்து விடுவது என்று துணிந்தாள்.

காவல் செய்து காத்துக் கிடந்த காகுந்தன் தம்பியை அவள் கவனிக்கவில்லை; ‘தனித்து இருக்கிறாள்’ என்று துணிந்து அவளைப் பற்றி இழுக்க முயன்றாள். மெய்ப்படைக் காவலன்போல இருந்த இலக்குவன் அவள் செய்கை பொய்ப்படும்படி அவள் மயிர் முடியைக் கரத்தால் பற்றி அவளைக் ‘கரகர’ என்று இழுத்து வெளியேவிட்டான். ‘முதலுக்கு மோசம் வந்துவிட்டது' என்று கூறும்படி இலக்குவனையே அவள் கைப்பற்றி அந்தரத்தில் இழுத்துச் செல்லப் பார்த்தாள். அந்த்ச் சுந்தரத் தோளனுக்கு அவளை அழித்து ஒழிப்பதைத் தவிர வேறு வழி தோன்றவில்லை. “பெண் கொலை புரிந்தால் மண்ணுலகம் அவனைப் பழிக்கும்” என்பதால் தயக்கம் காட்டினான்; உயிரைப் பிரிக்க விரும்பவில்லை. அவளுக்குத் தக்க பாடம் கற்றுத்தர விரும்பினான்.

“அழகு காட்டி தன் அங்கங்களால் மயக்க முற்படுகின்றவளின் அழகைக் குலைப்பதே செய்யத் தக்கது” என்ற முடிவுக்கு வந்தான். மூக்கும் செவியும் முகத்துக்கு அழகு தருவன. வளம் மிக்க இளமையைக் காட்டும் நகில் அவளுக்கு ஆணவத்தை உண்டாக்கி இருக்கிறது. மூக்கையும் செவியையும் முன அறுத்தால் அது அவள் நாக்கை அடக்கும் என்று உறுதி கொண்டான். “வலிதிற் பற்றும் வாலிப மங்கையாகிய அவள் அங்க இலக்கணம் பங்கம் அடைதல் தக்கது” என்று மூக்கையும் செவியையும் மூளி ஆக்கினான்; குருதி கொட்டியது; அருவி வடியும் மலைபோலக் காட்சி அளித்தாள்; அரக்க வடிவம் அவளைக் காட்டிக் கொடுத்தது.

கருப்பு நிறக்காரிகை விருப்பு மிகச் சிவப்பு நிறம் பெற்றாள்; செக்கர் வானம் படிந்த செம்மலையானாள்; செம்மலை அடையச் சிவந்த அவ்வடிவம் பயன்படும் என்று கருதினாள்.

நதி நீராடி இறைவழிபாடு செய்து நிறை மனத்தோடு வீடு திரும்பிய இராமன் குறையுற்ற இந் நங்கையைக் கண்டான். அவளும் சூரியனைக் கண்ட தாமரை போல் உவகை கொண்டாள். அவள் அவன் கண்ணில் பட்டாள். நடந்ததை அவள் போக்கிலேயே அவன் தெரிந்து கொண்டான்; இது தம்பியின் சித்திர வேலைப்பாடு என்பதை அறிந்து கொண்டான்.

உறுப்பிழந்த நிலையிலும் அவள் உள்ளம் குலையவில்லை. “விருப்புற்றுக் கேட்கிறேன்; என்னை ஏற்றுக் கொள்” என்றாள்; “பொறுப்பற்ற உன் சொல் உன்னை அரைகுறை அழகி ஆக்கிவிட்டது. அறுவைச் சிகிச்சை நடந்தும் அறிவு பெறாத வளாய் இருக்கிறாய்; தீயவளே விலகு என்றான்.

அவள் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி மீண்டும் மீண்டும் வேண்டினாள்.

“இராவணன் பொல்லாதவன்; அவன் தங்கை நான்; அங்கம் அறுத்த உங்களை உயிரோடு தங்க வைக்க மாட்டான்; இது உறுதி”.

“நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டால் அரக்கர் அழிவிற்குத் துணையாய் நான் இருப்பேன்”.

“நீ ஏற்கனவே மணமானவன்; அதனால் என்னை ஏற்க மறுக்கலாம்; உன் தம்பிக்கு என்னை ஏற்றுக் கொள்ளச் சொல்”.

“எனது மூக்கை அறுத்துவிட்டீர்; என்னை நீர் ஏற்றுக் கொண்டால் மூக்கை மறுபடியும் உண்டாக்கிக் கொள்வேன்; முழு அழகையும் பெறுவேன்; அதிக மான நெடிய மூக்கும் மடந்தையர்க்கு மிகைதானே”.

“பெண்ணுக்கு மிகைப்பட அழகும் பகையாய் முடியும்; குடும்பப் பெண்ணுக்குக் கொண்டானை மகிழ்விக்கும் உரு இருந்தால் போதாதோ!”

“மூக்கு அழகு என்பதால் பிறர் என்னை நோக்கு வர்; அது விருப்பை ஊக்குவிக்குமல்லவா? என்மீது கொண்டுள்ள பிரியத்தால் மூக்கு அறுத்தீர் ஆதலின், உம்மிடம் என் அன்பு இருமடங்கு ஆகிறது”.

“அறுபட்ட மூக்கு உடையவளோடு எப்படி வாழ்வது? என்று உன் தம்பி திகைக்கலாம்; நீ விடுபட்ட இடையை உடைய மெல்லியலோடு சேர்ந்து வாழ வில்லையா? இராவணனை அழிப்பதில் உங்களுக்கு உற்ற துணையாவேன்; என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று தொடர்ந்து தொல்லைகள் தந்தாள். அதற்கு ஒர் எல்லை காண விரும்பினர். அதனால் வில்லை வளைத்து அம்பு தொடுக்க இளயவன் இராமன் ஆணையை எதிர் நோக்கி நின்றான். “இனி இங்கிருந்து பல்லைக் காட்ட முடியாது” என்று உணர்ந்த சூர்ப்பனகை பழி தீர்க்கும் படலத்துக்குச் சென்றான்.

கரன்வதை கதை

செக்கர் வானம் மேல்தழுவிய கரிய மேகம்போல் அவள் காட்சி அளித்தாள், வெம்மையான தீயில் புழுங்கும் பாம்பு எனப் புரண்டாள்; கரன் இராவணன் உடன் பிறந்த தம்பி, அவன் அந்த எல்லைக்குக் காவலனாக இருந்தான்; அவனிடத்தில் சென்று தன்துயரத்தை வெளியிட்டாள்; மூக்கு அறுத்தவரை வேர் அறுக்கும்படி வேண்டினாள்.

கரன் போருக்குப் புறப்பட்டான்; அவன் படை வீரர் பதினான்குபேர் அவனைத் தடுத்து நிறுத்தித் தாமே களம் நோக்கிச் சென்றனர்; அவர்கள் முதற்பலி ஆயினர்.

கரனின் அரக்கர்சேனை கடலெனத் திரண்டு இலக்குவனை எதிர்க்க வந்தது; இலக்குவன் போர் செய்யத் துடித்தான்; தன்னை அனுப்புமாறு வேண்டினான்.

“தவம் செய்யும் முனிவர் அரக்கர்களை அழிக்கும் பணியைத் தன்னிடம் ஒப்புவித்துள்ளனர். அதனைத் தானே செய்து முடிக்க வேண்டும்” என்று கூறி வில்லேந்திய வண்ணம் இராமன் பகைவர்களைச் சந்தித்தான்; சிங்கத்தைச் சூழ்ந்த யானைக் கூட்டம் போலக் கரன்படைகள் இராமனைச் சூழ்ந்தன. அவர்களுக்குத் திரிசிரா (முத்தலையன்) என்பவன் தலைமை தாங்கினான். அவனுடைய மூன்று தலைகளும் மூலைக்கு ஒன்றாகச் சென்று உருண்டன. படைவீரர் அச்சம்கொண்டு சிதறி ஒடினர். துடணன் என்பவன் அடுத்துத் தலைமை தாங்கினான். அவன் கரன் தம்பி; அவனும் போர்க்களத்தில் மடிந்தான்.

பிறகு கரனே களம்நோக்கித் தேரைச் செலுத்தினான்.

இராமனுக்கும் இராவணனுக்கும் நடக்க இருக்கும் போருக்கு முன்னிகழ்வாகக் கரனோடு நடந்த போர் அமைந்தது. இராமன் ஒன்பது அம்புகளை ஒருசேரக் கரன் மீது ஏவினான். அவற்றிற்கு எதிராக அம்புகளைச் செலுத்திக் கரன் அவற்றை அறுத்து அழித்தான்; அம்பு மழையினால் இராமனது உருவம் முழுவதையும் மறைத்து விட்டான். அதைக் கண்டு தேவர் நடுங்கினர். இராமன் வீராவேசம் கொண்டு வில்லை வேகமாக வளைத்தான்; அது முறிந்து விட்டது.

வில்லிழந்து இராமன், நிராயுத பாணியாக ஆகி விட்டான். அடுத்து என்னை நடக்குமோ? என்று அஞ்சும் சூழ்நிலை ஏற்பட்டது. பரசுராமனிடமிருந்து பெற்ற மாபெரும் வில்லை வருணனிடம் கொடுத்திருந்தான்; அதற்காகக் கைநீட்டினான்; வருணன் கொண்டுவந்து சேர்த்தான்; அந்த வில் அவனுக்குக் கைகொடுத்தது: அதனால் ஏவிய அம்பு, கரனின் உயிரைக் குடித்தது.

சூர்ப்பனகை செயலிழந்து வயிற்றிலும் வாயி லும் அடித்துக்கொண்டாள்; மூக்கோடு தான் முடிந் திருக்கலாம்; வாக்கினால் கரன் உயிர் குடித்தமைக்கு வருந்தினாள்; எனினும், அந்தத் துன்பம் நீடித்திருக்கவில்லை; இராமனை அடைய வேண்டுமென்ற ஆசை அவளை வெறி கொள்ளச் செய்தது; “இராவணனிடம் சென்று இராமனைப் பிடித்துத்தரும்படி கேட்கலாம்” என்று நினைத்த வண்ணம் இலங்கை நோக்கி விரைந்தாள்.

இராவணன் தன் அத்தாணி மண்டபத்தில் கொலு வீற்றிருந்தான், ஊர்வசி, திலோத்தமை முதலிய தெய்வ மகளிர் நடனமாடினர். அவன் செல்வக் களிப்பிலும் காமக் களிப்பினும் தன்னை மறந்து தருக்கோடு வீற்றிருந்தான். தன்னை வெல்வாரும் கொல்வாரும் இன்றித் தரணியை ஆண்ட காவலன் அவன்.

இலங்கை நகரின் வடக்கு வாயிலில் மூக்கிலும் செவியிலும் குருதி கொட்டச் சூர்ப்பனகை முறையிட்டுக் கொண்டே வந்தாள். அந்நகர் அரக்க மகளிர் இதைக் கண்டு வயிற்றில் அடித்துக் கொண்டு இரங்கி அழுதனர். இராவணன் தங்கை மூக்கு அற்றுத் துணையின்றிப் போக்கற்று வந்திருப்பதை அவர்கள் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இலங்கை அரசன் கால்களில் விழுந்து புரண்டாள்; வேந்தன் இதைக் கண்டு. அதிர்ச்சியும் ஆவேசமும் கொண்டான், இடியொலிபோல் பேரார வாரம் செய்து, “யாவர் செயல்?” என்று கேட்டான்.

“கானிடை அடைந்து காவல் புரிகின்ற வீரர் இருவர், மன்மதனைப் போன்ற அழகு உடையவர்; அவர்கள் மானிடர்தான் எனினும் மாஇடர் செய் துள்ளனர்; வாள் உருவித் தடிந்தனர்” என்றாள்.

“மானிடருக்கு இத் துணிவு வாராது; நீ ஏதோ பெரிய தவறு செய்திருக்கிறாய்; அதனால்தான் அவர்கள் பொறுக்க முடியவில்லை இந்த எல்லைக்குச் சென்று இருக்கிறார்கள்; நடந்ததை அச்சமின்றிச் சொல்” என்று கேட்டான்.

“உருவிலே மன்மதனை ஒப்பர்; தோள் வலிமை யில் மேருமலையை நிகர்ப்பர்; முனிவர் வாழ்வில் அவர்கள் அக்கறை கொண்டவர்; வில்லாற்றலும் வீரமும் உடைய அவர்கள் உன்னைத் துரசாக மதிக்கின்றனர்; அரக்கரை வேரோடு அழிக்க உறுதி பூண்டுள்ளனர்; அவர்கள் தசரதன் புதல்வர்; இராமன் இலக்குவன் என்பன அவர்கள் பெயர்கள்” என்றாள்.

“அங்கிருந்த நம் இனத்தவர் அவர்களை எப்படி விட்டு வைத்தனர்?” என்று கேட்டான்.

“கரனும் தூஷணனும் என் குறையைக் கேட்டனர். பின் அவர்களை எதிர்த்து மாண்டுவிட்டனர்” என்றாள்;

“நீ செய்த தவறு என்ன? மூக்கும் செவியும் அறுக்க நீ செய்த பிழை யாது?” என்று கேட்டான்.

“பெண்ணால் வந்த பெரும்பிழை” என்றாள்.

“யார் அவள்?”

“கொடி போன்ற மென்மை உடைய அப் பேரழகியின் பாதம் தீண்ட இந்தப் பார் பாக்கியம் செய்தது; அவள் பேர் சீதை” என்று கூறி அவள் வடிவினை எல்லாம் பாராட்டத் தொடங்கினாள்.

“அவள் சொற்கள் காமரம் என்னும் பண்ணிலே இசைக்கும் பாடலாகும்; திருமகளும் அவளுக்குப் பணிப் பெண் ஆகும் தகுதியைப் பெறமாட்டாள்; அவள் கூந்தல் மேகத்தைப் போன்றது; பாதங்கள் செம்பஞ்சு போன்றவை; விரல்கள் பவளத்தைப் போன்றவை; வதனம் தாமரை மலரைப் போன்றது; கண்கள் கடலைப் போன்றன; “ஈசனார் கண்ணால் அநங்கன் எரிந்து அழிந்தான்” என்பது பொய்யுரை, வாசம் நாறும் கூந்தலாளைக் கண்டு அவளை அடைய முடியாமல் அவன் வெந்து தேய்ந்தான் என்பதுதான் உண்மை”.

“வேலினையும் வாளினையும் வெற்றி கொண்ட கண்ணை உடைய அழகியை ஒவியத்திலும் எழுத முடியாது; இவளைப் போன்ற பேரழகியைத் தேவர் உலகத்திலும் காண முடியாது; நாகர் உலகத்திலும் காண முடியாது; இந்த மண்ணுலகத்திலும் பார்க்க முடியாது. இம்மூவுலகத்திலும் காண முடியாத பேரழகி அவள்”.

“அவள் தோள் அழகை எடுத்துச் சொல்லு வேனோ? அவள் முகத்தில் உலவுகின்ற கண் அழகைச் சொல்லுவேனோ! மற்றைய அங்கங்களில் அழகை வருணிப்பேனோ! அவள் அழகைத் தனித்தனியே சொல்லும் ஆற்றல் எனக்கு இல்லை; நாளையே நீ பார்க்கப் போகிறாய்; அதனால் யான் எடுத்துச் சொல்லத் தேவை இல்லை”.

“வில்லைப் போன்றது நெற்றி என்றாலும், வேல் போன்றது விழிஎன்றாலும், முத்துப் போன்றது பல் என்றாலும் சொல்ல அழகாக இருக்குமேயன்றி உண்மையை உரைத்தது ஆகாது. புல்லைப் போன்றது நெல் என்று கூறினால் எப்படி இருக்குமோ அதனைப் போன்றதுதான் இவ் உவமைகள்.”

“இந்திரன், இந்திராணியைப் பெற்றான். ஈசன் உமையைப் பெற்றான். தாமரைச் செங்கணான் செந்திருவைப் பெற்றான்; சீதையை நீ பெறறால் நீ தான் அவர்களைவிட மேன்மை பெற்றவன் ஆவா

“பார்வதியை இடப் பாகத்தில் ஒருவன வைத்தான்; தாமரையில் வாழும் திருமகளை மார்பகத்தில் ஒருவன் வைத்தான்; பிரமன் நாவில் வைத்தான்; மின்னல் போன்ற இடையாளாகிய சீதையை வீரனே! நீ பெற்றால் எப்படி வைத்து வாழப் போகிறாய்?"

“மழலை மொழி மகிழப் பேசும் அழகியைப் பெற்ற பின் கொள்னை மாநிதிகளை அவளுக்கே கொடுப்பாய்; சீதையை நீ பெறுமாறு செய்வதால் நான் உனக்கு நல்லவள் ஆகின்றேன்; ஆனால், கிள்ளைபோல் மொழி பேசும் உன் விருப்ப மாதர்க்கு எல்லாம் கேடு சூழ்கின்றேன் அல்லவா?”

“அவள் தெய்வ மகளும் அல்லள்; தாய் வயிற்றில் பிறந்த மானுட மகளும் அல்லள், மண்மகள் தந்த மாமகள் ஆவாள்; சிற்றிடையாளாகிய சீதை என்னும் மானை நீ பெற்றுக் கொண்டு இராமன் என்னும் யானையை வளைத்துப் பிடித்து எனக்கு விளையாடத் தந்துவிடு.”

“அன்னவள் தன்னை உன்னிடம் சேர்க்கவே அவளை அணுகினேன்; அவ் இராமன் தம்பி என்னை இடையிலே புகுந்து மூக்கு அரிந்துவிட்டான் அப்பொழுதே என் வாழ்வினை முடித்துக் கொண்டு இருப்பேன்; உன்னிடம்; சொல்லிவிட்டு உயிரைவிடத் துணிந்தேன்” என்று சொல்லி முடித்தாள்.

அவள் பற்றவைத்த நெருப்பு அவனைச் சுட்டெரித்தது. சீதையின்பால் சிந்தை இழந்த அவன் அவள் நினைவாக மாறிவிட்டான், இராமனால் உயிரிழந்த தன் தம்பி கரனையும் மறந்தான்; தன் தங்கையின் மூக்கைத் தடிந்த இலக்குவன் மீது கொண்ட பகையையும் மறந்தான்; அதனால், தனக்கு நேர்ந்த பழியையும் மறந்தான்; தான் பெற்றிருந்த வரங்களை எல்லாம் மறந்தான்; சூர்ப்பனகை சொல்லிக் கேட்ட மங்கையை மட்டும் அவனால் மறக்க முடியவில்லை.

சீதையின் நினைவு ஒருபக்கம்; மானம் ஒரு பக்கம் இரண்டில் சீதையின் நினைவே வெற்றி கொண்டது. மயிலுடைச் சாயலாளை வஞ்சித்து எயிலுடைய இலங்கையில் சிறை வைப்பதற்குமுன் தன் இதய மாகிய சிறையில் வைத்தான்; வெயிலிடை வைத்த மெழுகுபோல் அவன் உள்ளம் மென்மை உற்றது; காமநோயால் பீடிக்கப்பட்டு விரக வேதனையால் வெந்து அழிந்தான்; சீதையை அடைந்தால் தவிரத் தன் துன்பம் தீராது என்ற முடிவுக்கு வந்தான்; அமைச்சர்களை அழைத்து அவர்களுடன் கலந்து பேசினான். பின்பு ஒரு முடிவுக்கு வந்தான், தனியனாக விமானம் ஏறி ஐம்புலன்களை அடக்கித் தவ நிலையில் இருந்த மாரீசன் இருந்த இடத்தை அடைந்தான்.

மாரீசன் வதை

இராவணன் வந்து அடைந்ததும் என்னவோ என்று அச்சம் கொண்டான் மாரீசன். கரியமலை போன்ற இராவணனை எதிர் கொண்டு வரவேற்று உபசாரங்கள் செய்து “இந்த வனத்துக்கு என் இருக்கை நோக்கி வந்த கருத்து யாது?” என்று கேட்டான்.

“என்னால் இயன்ற அளவு என் உயிரைத் தாங்கிக் கொள்ள முயன்றேன். இப்போது அதுவும் முடியாமல் மனத் தளர்ச்சி கொண்டேன், என் அழகும் பெருமையும் புகழும் ஒருசேர அழிகின்றன. இதற்குக் காரணம் யாது? சொன்னால் வெட்கக் கேடுதான்.”

“வன்மை மிக்கவர் மானிடர் ஆகிவிட்டனர். உன்மருகி நாசி இழக்கும் நிலையை உண்டாக்கினர்; இதைவிட நம் மரபுக்கு ஒர் இழிவு உண்டோ? கரனும் துஷணனும் உயிர் இழந்தனர் என்றால் இதைவிட அவமானம் வேறு என்ன இருக்கிறது? இருகை சுமந்தாய்!’ இனிதின் இருந்தாய்! கேட்டால் ‘தவம் செய்கிறேன்’ என்கிறாய்; ஒருவன் கட்டமைந்த வில்லால் இருவர் உயிரைப் பருகினான்; வெம்பிய மனத்தோடு வேகின்றேன், அவர்கள் எனக்கு ஒப்பிலார், என்பதால் போர் செய்யத் தயங்குகிறேன். பவழம் போன்ற செவ்வாய் வஞ்சியை வவ்வ உன் துணை நாடுகிறேன்; இப்பழியை நீதான் தீர்த்துத் தரவேண்டும்” என்றான்.

எரியும் நெருப்பிலே அரக்கை உருக்கிச் செவியில் கொட்டியதுபோல் இச் இச்சொற்கள் கடுமையாக இருந்தன; காதுகளைப் பொத்திக் கொண்டு அச்சம் நீங்கிச் சினத்தோடு சீரிய உரைகள் பேசினான் மாரீசன்.

“மன்னர், நீ நின் வாழ்வை முடித்தாய்; மதி அற்றாய், நீ தேடிக் கொண்ட அழிவு அன்று இது. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டுகிறது; செவிக்கு இன்னா எனினும், உனக்கு இதம் வேண்டி இவை சொல்கிறேன்.

“நீ தவம் செய்து பெற்ற செல்வ மெல்லாம் அவமே அழிக்கிறாய், இழந்தவை மீட்க முடியுமா? அறவழியில் ஈட்டிய செல்வத்தை அநீதிக்கு அழிக்கிறாய், பிறன் மனைவியைக் கவர்வது உன் பேராண்மைக்கு இழுக்காகும்; பாவமும் பழியும் சேரும், உன் கூட்டமே அழியும்;

“கரன் உன்னைவிட அதிகம் ஆற்றல் மிக்க சேனை கொண்டவன்; அவனை எதிர்க்க முடியாமல் தேரோடு மாண்டான்; விராதன் என்பவனைவிட வலிமை உடையவர் யார் இருக்கிறார்கள்? அவன்கதி என்ன ஆயிற்று? என் தம்பியான சுபாகுவும் என் தாயாகிய தாடகையும் இராமன் அம்புக்கு ஆற்ற முடியாமல் உயிர் விட்டனர். அவன் முன்நின்று போர் செய்ய முடியாமல் நான் உயிர் பிழைத்து ஓடிவந்து விட்டேன்; நினைத்தாலே நெஞ்சு நடுங்குகிறது; ஆற்றல்மிக்க அந்த இராமனோடு நீ மோதிக் கொள்கிறாய் என்று நினைக்கும்போது அச்சம் மிகுகிறது; அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு உன் ஆயுளை இழக்காதே!” என்று அறிவுரை கூறினான்.

“சீதையைக் கடத்திச் செல்வதில் யான் பின் வாங்க வில்லை; உன் குலத்தின் நலத்தைக் கருதித்தான் இவ்வளவும் சொல்கிறேன்; காமத்தால் கண்ணிழந்து நீ கருதியதை அடைய விரும்புகிறாய்; உன் ஆசைக்கு நான் குறுக்கே நிற்கவில்லை; உன் அழிவுக்குத் தடை போடுகிறேன்” என்றான்.

“நீ அறிவுரை கூற அமைச்சன் அல்லை; நான் இடும் கட்டளையை ஏற்று நீ நடந்து கொள்ள வேண்டும்; நீ ஒரு வீரன், தலைமையிடும் கட்டளையைத் தலைமேல் தாங்க வேண்டுமே தவிர, மற்றைய நிலைமைகளை எல்லாம் நீ பேசக்கூடாது; உயிருக்கு அஞ்சி நீ ஏதேதோ உளறுகிறாய்”.

“என் அழிவுக்காக யான் சிறிதும் கவலைப்படவில்லை; மூத்தவன் என்பதால் மூதுரை வழங்குகிறேன்; கட்டளையிடு; ஏற்கிறேன்” என்றான்.

“மன்மதன் என்னைத் துளைக்கிறான்; அந்த அம்புக்கு ஆற்றாமல் உயிர் விடுவதைவிட இராமனை எதிர்த்து உயிர் விடுவது புகழைத் தரும்; சீதைதான் என் துயருக்கு மருந்து; என் வாழ்வுக்கு விருந்து; அவளை என்னிடம் சேர்ப்பிக்க வேண்டும்” என்றான்.

“ஏற்கனவே இராமன் தாடகையைக் கொன்றதற்குப் பழிதீர்க்க, மான் வடிவத்தில் தண்டக வனத்தில் இரண்டு அரக்கர்களோடு சென்றிருக்கிறேன். அந்த இருவரும் அவன் அம்புக்கு இரையானார்கள். நான் தப்பித்து வந்து விட்டேன்” என்றான்.

“வஞ்சனையால்தான் அவனை வெல்ல வேண்டும்; மாயமான் வடிவத்தில் சென்று, அப்பெண் மானை மயக்கு; பெண்ணாகிய அவளுக்குப் பொன்னிறம் மிகவும் பிடிக்கும்; நீ பொன்மானாய் உருவெடு; அவள்முன் பாய்ந்து ஒடு; அவள் இம்மானைப் பிடித்துத் தருக என்பாள்; அதை இராமனால் மீற முடியாது; அவனுக்கு ஒட்டம் காட்டு; அவன் உன்மீது அம்புவிட்டால், ‘இலக்குமணா’ ‘சீதா’ என்று அவன் குரலில் ஒலமிடு; இலக்குவன் காவல் நீங்கும்; என் ஆவல் ஒங்கும்” என்றான்.

மாரீசன் தன்னைப் பற்றிக் கவலைப்பட்டான்; மறுத்தால் இராவணன் கொன்று விடுவான்; இராமனை எதிர்த்தால் அவன் அம்புக்கு இரையாக வேண்டுவது தான்; மரணம் என்பது அவனைக் கூவி அழைப்பதை உணர்ந்தான். நச்சுப் பொய்கையில் அகப்பட்ட மீன் தப்ப முடியாது; அந்தக் குளத்தில் இருந்தாலும் சாவு, கரையில் குதித்தாலும் சாவு; இருதலைக் கொள்ளி எறும்பு ஆனான்.

“வீரமரணம் அடைய முடியாமல் போயிற்றே” என்று வருந்தினான். ‘இராமன் அம்புக்கு இரையாவது தனக்கு உயர்வு தரும்’ என்று அமைதி கொண்டான்; வேறு வழி இல்லை; பொன்மான் உருக் கொண்டான்; அந்த நன் மானாகிய சீதைமுன் சென்றான்.

மானைக் கண்ட சீதை அதனைப் பிடித்து விளையாட விரும்பினாள்; பொன்னாலான மேனியும்; மரகத்தால் ஆகிய கால்களும் செவிகளும் புதுமையாய் இருந்தன. இலக்குவன் அதன் பொய்மையைக் கூறி விலக்கினான்; சீதை அந்த மானைப் பிடித்துத் தரும்படி இராமனிடம் வேண்டினாள்.

இராமன் மனைவியின் வேண்டுகோளை மதித்தான்; “இப்படியும் ஜீவன்கள் இருக்கலாம்; இவை அபூர்வப் பிறவிகள்” என்று விவாதித்தான்; “மானைக் காட்டுக” என்று சீதையிடம் இராமன் கூறினான்; இலக்குவனும் பின் சென்றான்; ஆசைபெற அந்த மான் விழித்தது.

இராமன் அதன் அழகைக் கண்டு வியந்தான்; “அதனால் நமக்கு என்ன ஆக வேண்டியுள்ளது” என்று இலக்குவன் கூறி மறுத்தான்; “இந்த மாய மானின் பின்னே அரக்கர் ஒளிந்து இருப்பர்” என்றும் சொல்லிப் பார்த்தான்.

இயற்கை மானாக இருந்தால் இதனைப் பிடிப்பதும், மாயமானாக இருந்தால் இதனை மடிப்பதும் என் செயல் என்று இராமன் கூறினான். இராமன் தானே சென்று பிடித்துத் தருவதாயும் பர்ணசாலையில் சீதைக்குக் காவலாய் இலக்குவனை இருக்குமாறு கூறி வில்லும் அம்பும் ஏந்தி, அதன்பின் சென்றான்; அது ஒட்டம்காட்டியது; கிட்டுவது போலக் காட்டி, எட்டி எட்டிச் சென்றது.

அது மாயமான் என்பதை இராமன் உணரத் தொடங்கினான்; இலக்குவன் முன்கூட்டி உரைத்தது குறித்து வியந்தான்; அவனைப் பாராட்டினான்.

மாரீசனும் இராமனை நெடுந்துரம் விலக்கி விட்ட தால், தன் கடமை முடிந்துவிட்டது என்று உணர்ந்தான்; ‘இனி அவன் அம்புக்குத் தப்பமுடியாது’ என்பதால் தப்பித்துக் கொள்ள நினைத்தான்; அதனால் வானை நோக்கிப் பாய்ந்தான்; அவனுக்கு முடிவு கட்டத் தன்கூரிய அம்பினை இராமன் செலுத்தினான்.

மாயமான் மாய்ந்தது; மாரீசன் அதினின்று வெளிப்பட்டு விழுந்தான்; இராவணன் சொல்லிக் கொடுத்தபடி இராமன் குரலில் “ஆ! சீதா இலக்குமணா” என்று அபயக் குரல் கொடுத்து அழைத்துப் பின் உயிர் விட்டான்.

இராமனுக்கு அவன் சூழ்ச்சி விளங்கியது; “கூப்பிட்ட குரலில் ஏதோ சூழ்ச்சி இருக்க வேண்டும்” என்பதை உணர்ந்தான்; விரைவில் பர்ணசாலை நோக்கி விரைந்தான்; இலக்குவன் விழிப்போடு காவல் புரிவான் என்ற நம்பிக்கையோடு இருந்தான்; எனினும் சூழ்ச்சி உருவெடுப்பதற்குமுன் திரும்புவதில் வேகம் காட்டினான்.

சடாயு உயிர் நீத்தல்

மாரீசன் கூவல் சீதையின் செவியில் பட்டது; ‘இராமனுக்கு ஏதோ கேடு நிகழ்ந்து விட்டது, என்று தவறாய் நினைத்தாள்.

‘மானைப் பிடித்துக்கொடு, என்று சொன்னது எவ்வளவு அறிவீனமான செயல்’ என்பதை எண்ணி நொந்து கொண்டாள்; வெளியில் நின்று கொண்டிருந்த இளயவனை நோக்கி ‘அண்ணன் அலறல் கேட்டு நீ இங்கே நின்று கொண்டிருக்கிறாயே! தகுமா?” என்று கண்டித்தாள்.

‘இராமனை எதிர்த்து வெல்வார் எவரும் இல்லை என்பது எனக்குத் தெரியும்; அவனுக்கு ஒன்றும் ஆகாது’ என்று உறுதியாகச் சொன்னான்.

“ஒருநாள் பழகினும் உயிர்விடும் பெரியோர் உளர்; பலநாள் பழகிய நீ, உடன் பிறப்பு என்ற உரிமையுடைய நீ சிறிதும் பதறாமல் அஞ்சாமல் நிற்கிறாயே! இங்கே நீ செயலற்று இருந்தால் நெருப்பில் விழுந்து, என் உயிரை யான் விடுவது உறுதி” என்றாள்.

அதற்குமேல் அவனால் அங்கு நிற்க முடியவில்லை; இருந்தாலும் இழிவு; நீங்கினாலும் இழவு என்ன செய்வது? என்று தெரியாமல் திகைத்தான்; “கழுகின் வேந்தன் காவல் இருக்கிறது” என்ற நம்பிக்கையில் குரல்வந்த திசை நோக்கி ஓடினான்.

இராவணன் வருகை

இலக்குவன் இடம் பெயர்தலை எதிர்நோக்கி இருந்த இராவணன், தவ வேடம் தாங்கிச் சாம வேதத்தை வீணையில் இசைத்துப் பாடினான்; முதிய வேடம் அவனுக்கு முகமூடியைத் தந்தது; அருந்ததி போன்ற கற்புடைய சீதை இருந்த பர்ணசாலையை அடைந்தான்.

“இந்தப் பர்ணசாலை உள் இருப்பது யார்?” என்று கேட்டான், பவளக்கொம்பு போன்ற சீதை, “உள்ளே வாருங்கள்” என்று வரவேற்றாள்; அவனும் அவள் தந்த இருக்கையில் அமர்ந்தான்.

“இந்த சாலை யாருடையது? இங்கு உறையும் அருந்தவன் யாவன்? நீவிர் யாவிர்?” என்று கேட்டான்.

“புதியவர்போல இருக்கிறது”” என்று அவனிடம் பரிவு காட்டிப் பேசினாள்.

“இராமனும் யானும் அவன் தம்பியோடு இங்குத் தங்கி இருக்கிறோம்; அன்னை சொற்கேட்டு இங்கு வந்திருக்கிறோம். அவர் பெயரினை நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர் என்று நினைகிறேன்” என்றாள்.

“உம்முடைய பெற்றோர் யார்?” என்று கேட்டான்.

“சனகன் மகள்; என் பெயர் சானகி என்றாள்.

“முதியவரே நீர் எங்கிருந்து வருகிறீர்?”

“இராவணன் திருநகரில் இருந்து வந்திருக்கிறேன்; அவனுக்கு எந்தக் குறையும் இல்லை; எனினும், அவன் ஒரு மங்கையைத் தேடிக் கொண்டிருக்கிறான்” என்றான்.

“அரக்கர் நகரில் அருந்தவ முனிவராகிய நீர் எப்படித் தங்கி இருந்தீர்” என்று கேட்டாள்.

“நீ கருதுவதுபோல அரக்கர் தீயவர் அல்லர்” என்றான்.

“தீயவர்களோடு சேர்கிறவர்கள் நல்லவர்களாய் இருக்க முடியாதே”

“வல்லமை உடையவர் அரக்கர்; அவர்களை அனுசரித்து வாழ்வதுதான் அறிவுடைமை” என்றான்.

“அரக்கரை அடியோடு ஒழிக்க இராமன் காத்திருக்கிறான்; அவர்கள் அழிந்தபின்னரே உலகம் சீர்படும்” என்றாள்.

“மனிதர் வலியவரான அரக்கரை அழிப்பார் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது; யானைக் கூட்டத்தை ஒருசிறு முயல் வெல்லாது; ஆண் சிங்கத்தை ஒரு மான் குட்டி எப்படி வெல்லும்?” என்று கேட்டான்.

“இராமன் விராதனையும் சூர்ப்பனகையையும், கரன் முதலானவரையும் கொன்றது உமக்குத் தெரியாது போலும்! ஆண் சிங்கம் என்பது இராமன்தான்; அரக்கர்தாம் மான் கூட்டம்” என்றாள்.

“இராவணன் ஆற்றல் மிக்கவன்; அது தெரியாமல் நீ பேசுகிறாய்” என்றான்.

“பரசுராமனை வென்றவன் இராமன்; அவன் ஆற்றலை நீ அறியாமல் பேசுவது வியப்பாக இருக்கிறது” என்றாள்.

அவன் பெருஞ்சினம் கொண்டான்; அதனால், அவன் மாயவேடமும் மறைந்தது; தன் முன்னால் இருப்பவன் இராவணன் என்பதைச் சீதை அறிந்தாள்; அவனிடமிருந்து தப்பிச் செல்ல வழியறியாமல் தவித்தாள்.

“தேவர் எனக்கு ஏவல் செய்கிறார்கள்; புழுக்களைப் போல வாழும் மானிடர் அரக்கனாகிய என்னிலும் வலியவர்” என்று பேசுகிறாய்; உன்னைப் பிசைந்து தின்று விடுவேன்; அதன்பின் நீ இல்லாமல் நான் வாழ முடியாது என்பதால்தான் தயங்குகிறேன்” என்றான்.

“நீ கவலைப்படாதே; என் செல்வச் சிறப்பில் நீ மகிழ்ச்சியோடு இருக்கலாம்” என்று தொடர்ந்தான்.

“நான் இராமன் மனைவி; நீ நாயினும் கேடானவன்; இராமனது கொடிய அம்பு பாய்வதன்முன் தப்பி ஒடிவிடு!” என்று கூறினாள்.

“அந்த அம்பு என்னை ஒன்றும் செய்யாது. அது மலராக எனக்குப்படும், நீ என் விருப்பத்தை நிறைவேற்றி எனக்கு உயிர்ப் பிச்சை கொடு” என்று இரந்து அவள் கால்களில் விழுந்து வனங்கினான். அவள் இராமனையும் இலக்குவனையும் ‘இறைவா இளையாங்னே’ என்று கூவிஅழைத்தாள். அவனுக்கு பிரம்மனால் ஏற்பட்டிருந்த சாபத்தால் அவளைத் தொட அஞ்சினான். அவளைத் தொடாமல் தரையோடு பர்ண சாலையைப்பெயர்த்து எடுத்து விமானத்தில் வைத்து விண்ணில் பறந்தான். மேகத்திலிருந்து நிலத்தில் விழும் மின்னலைப்போல அவள் மயங்கி விழுந்தாள். மயக்கம் நீங்கி ‘ஒ’ என்று கதறினாள்.

“நீ ஒரு கோழை; அதனால்தான் இந்த வஞ்சகச் செயலை மேற்கொண்டாய்” என்று விளம்பினாள்.

“மனிதரிடம் போர் செய்தால் அது என் வீரத்துக்கு இழுக்கு; வஞ்சனைதான் வெற்றி தரும்” என்றான்.

“சித்திரப்பாவை நிகர்த்த சீதை அவன் கூறுவதை எள்ளி நகையாடினாள். கற்புடைய பெண்களை வஞ்சிப்பது குற்றமில்லையா?” என்று கேட்டாள்.

சீதையின் குரல் கேட்டுக் கழுகின் வேந்தன் சடாயு என்பான் வந்து இடை மறித்தான்.

“அடே! எங்கே போகிறாய்? நில், நில்”” என்று கூவிக்கொண்டு சடாயு வழி மறித்தான்.

“நீ அழிவைப் பெறப்போகிறாய். உன் சுற்றத்தாரையும் அழிக்கிறாய். இராமன் முன் உன் ஆற்றல் நிற்காது. ஏன் வீணே அழிவைத் தேடிக் கொள்கிறாய்; சீதையை விட்டுவிடு” என்றான்.

“பழுக்கக் காய்ச்சிய இரும்பில் தூவிய நீர் மீண்டும் வராது. அதே போலத்தான் சீதையின் நிலையும். அவளை உன்னால் மீட்க முடியாது” என்றான்.

சடாயுவும் இராவணனும் மோதிக் கொண்டனர். இராவணனைச் சடாயு தேரோடு கீழே சாய்த்தான். இனி இராவணன் பிழைக்க மாட்டான் என்ற நிலைமை உருவாகியது. அவனிடம் வேறு ஆயுதங்கள் இல்லை. தன் உறையில் “சந்திரகாசம்” என்னும் வாள் இருந்தது. அது அவனுக்குச் சிவபெருமான் அளித்தது. அதைக் கொண்டு சடாயுவின் சிறகுகளைக் கொய்தான். அவனும் சிறகு அறுபட்டுக் கீழே சாய்ந்தான்.

சீதை சடாயுவை நினைத்துப் புலம்பினாள். அவளை அந்தப் பர்னசாலையோடு தன் தோளில் வைத்துக் கொண்டு இராவணன் ஆகாய வழியாக இலங்கையை அடைந்தான். அங்கே சீதையை அசோக வனத்தில் அசோக மரத்தின் நிழிலில் சிறை வைத்தான். அரக்கியர் அவளைக் காவல் செய்தனர்.

இலக்குவன் சீதையைத் தனியே விட்டு வந்தோமே என்ற வருத்தம், இராமனைக் காண வில்லையே என்ற கவலை இரண்டிலும் அகப்பட்டுத் துடித்தான்.

இராமனைக் கண்டான்; அளவிலா மகிழ்ச்சி கொண்டான். இராமன் தன் தம்பியை அன்பால் தழுவிக் கொண்டான்.

“நீ ஏன் இங்கு வந்தாய்?” என்று கேட்டான்.

இலக்குவன் நடந்ததைச் சொன்னான்; தான் அங்கு வரவில்லை என்றால் சீதை நெருப்பில் விழுந்து இறந்திருப்பாள் என்பதை விளக்கினான்.

இலக்குவன் தடுத்தும் தான் மான்பின் சென்றது தவறு என்பதை இராமன் ஒப்புக் கொண்டு அதற்காக வருந்தினான். விரைவில் பர்ணசாலை திரும்புதல் வேண்டும் என்று கூறி இருவரும் வேகமாக நடந்தனர். பர்ணசாலையை அடைந்தனர்.

பஞ்சவடியில் சீதையைக் காணவில்லை. தேடி வைத்த செல்வம் வைத்த இடத்தில் இல்லாவிட்டால் எத்தகைய துன்பம் அடைவார்களோ அத்தகைய துன்பத்தை இராமன் அடைந்தான். அவன் மனம் சுழன்றது. உலகமே சுழன்று திரிவதைப்போல அவனுக்குக் காணப்பட்டது. அவன் கோபத்தால் கண்கள் சிவந்தன. தருமத்தின் மீதும், சீதையைக் காக்காத தேவர்களின் மீதும் அவன் கோபம் பாய்ந்தது. தேரினுடைய சக்கரங்கள் பூமியில் பதிந்து இருப்பதைப் பார்த்தார்கள். சீதையைத் தொடுவதற்கு அஞ்சி அவள் இருந்த நிலத்தை அடியோடு பெயர்த்துக் கொண்டு போனதையும் அறிந்தார்கள். “சீதையைக் கவர்ந்தவன். வெகுதூரம் செல்வதற்கு முன்பு அவனைத் தொடர்ந்து செல்வோம்” என்று இராமன் கூறினான். தேர்ச்சுவடுகள் வழிச் சென்றனர். ஓர் இடத்தில் அச்சுவடுகள் நின்றுவிட்டன. அவன் ஆகாய வழியே சென்னறிருக்க வேண்டும் என்பதை அறிந்தனர்.

அம்பு தாக்க முடியாத தூரத்திற்குச் செ ைறிருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இரண்டு யோசனை தூரம் நடந்து சென்றனர். வீணையின் சித்திரம் வரையப் பெற்ற துகில் கொடி ஒன்று நிலத்தின் மீது கிடப்பதைக் கண்டனர். அந்தக் கொடி சடாயுவின் மூக்கால்தான் அறுபட்டு இருக்க வேண்டும் என்று உணர்ந்தனர். மேலும் தொடர்ந்து சென்றனர். வலிமையான ஒரு வில்லைக் கண்டனர். இதுவும் சடாயுவால் கடிக்கப்பட்டிருக்கிறது என்று முடிவு செய்தனர். பெரிய சூலம் ஒன்றையும் அம்பறாத் துணிகள் இரண்டையும் கண்டனர். இராவணன் மார்பிலிருந்து சடாயு பறித்த கவசம் சிதைந்து கிடந்ததைக் கண்டனர். குதிரைகள் விழுந்து கிடந்ததையும் தேர்ப் பாகன் மடிந்து கிடந்ததையும் கண்டனர். தோளில் அணியும் ஆபரணங்களையும் கவச குண்டலங்களையும் மணிகள் பதித்த மகுடங்களையும் கண்டனர். சடாயுவுடன் போரிட்டவன் சிங்கம் போன்ற ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும் என்று கணித்தனர்.

கடலில் மத்தாக வைக்கப்பட்ட மந்தர மலையைப் போல இரத்த வெள்ளத்தில் இராமன் சடாயுவைப் பார்த்தான்; அவன் மீது இராமன் விழுந்து கதறி அழுதான்.

“தந்தையை நாட்டில் இழந்தேன்; மற்றொரு தந்தையைக் காட்டில் இழந்தேன். என்னைப் போல அபாக்கியவான் வேறு யாரும் இருக்க முடியாது”.

“'சீதைக்கும் உனக்கும் நேர்ந்த தீமைகளைத் தடுக்க முடியாத நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்? தவசிகளின் வேண்டுகோளை ஏற்று அரக்கரை அழிப்பதாக வாக்குறுதி அளித்தேன், அதனால்தான் வாழ்கிறேன். உன்னைக் கொன்ற பகைவன் உயிரோடு இருக்கிறான் என்று தெரிந்தும் போர் மேற்கொள்ளா மல் இங்கே மரம்போல் நிற்கிறேன்” என்று கூறிக் கதறினான்.

சடாயு இறக்கவில்லை; ஒரளவு உணர்ச்சி இருந்ததை அறிந்தான். சீதையை இராவணன் வலிதிற் கடத்திச் சென்றான் என்று சடாயு கூறினான்.

“மலரணிந்த வார் கூந்தலாளை இராவணன் மண்ணினோடும் எடுத்தான். ஏகுவானை எதிர்த்து நின்று ஆற்றல் கொண்டு தடுத்தனன்; என்ன செய்வது? சங்கரன் தந்த வாளால் என் சிறகுகளை வெட்டினான். இங்கு விழுந்து கிடக்கிறேன்; இது இங்கு நடந்தது” என்றான்.

இராமன் சினமும் சீற்றமும் கொண்டான். “சீதையைக் கடத்திய கொடுமையன் எங்கே சென்றான்?” என்று கேட்டான். அதற்கு அவனால் விடை கூற முடியவில்லை; அவன் மூச்சு அடங்கியது.

“தம்பி! நம் தந்தைக்கு நாம் செய்ய வேண்டிய இறுதிக் கடன்களைச் செய்வோம்” என்றான்.

விறகுகள் கொண்டு வந்து தீ மூட்டி சடாயுவைக் கிடத்தி இராமன் எரியூட்டினான். மற்றும் ஈமச் சடங்குகள் அனைத்தும் செய்து முடித்தனர்.

அந்திப்பொழுது வந்து அணுகியது; இராமனும் இலக்குவனும் சடாயு உயிர் நீத்த இடத்தைவிட்டு நீங்கிச் செக்கர் வானம் நிறைந்த மேகம் தவழும் ஒரு மலையில் தங்கினர். இருள் மிகுந்தது; பிரிவு என்னும் துயர் இராமனை வாட்டியது. மனைவியை மாற்றான் கொண்டு சென்றதால் ஏற்பட்ட மானமும், இராவணன் மீது கொண்ட சினமும், தந்தை போன்றவனாகிய சடாயுவின் மரணத்தால் ஏற்பட்ட துயரமும் இவர்களை வாட்டின; இவற்றை மெல்ல மறந்து வாழ வேண்டும் என்ற ஞானமும், தாங்க முடியாத துயரும் மனப் போராட்டமாக உருக்கொண்டன; இரவுப் பொழுதெல்லாம் தூங்காது பலவாறாக எண்ணித் துயருற்றனர்.

இளைய வீரனான இலக்குவன் இராமனிடம் அடக்கமாக “பொன் போன்ற சீதையைத் தேடாமல் ஈண்டு இருத்தல் தகுதியோ” என்று கேட்டான். புகழ்மிக்க இராமனும், அரக்கன் இருக்கும் இடம் துருவி அறிவோம் என்று கூறி மலைத் தொடரில் வெய்யில் மிகுந்த காட்டுக்குள் தேடிச் சென்றான். குன்றுகளையும் ஆறு களையும் கடந்து பதினெட்டு யோசனை தூரம் நடந்து சென்றனர். பறவைகள் தங்குகின்ற குளர்ச்சிமிக்க சோலை ஒன்றில் புகுந்தனர். மாலைப்பொழுது மறைந்து இருட்பொழுது வந்து சேர்ந்தது. அங்கு ஒரு பளிக்கறை மண்டபத்தில் இருவரும் தங்கினர். “வீரனே! குடிப்பதற்கு நீர் வேண்டும் கொண்டு வருக” என்றான். இராமனை விட்டு இலக்குவன் தனியே சென்றான்.

மற்றுமொரு சூர்ப்பனகை

எங்குத் தேடினும் நீர் கிடைக்கவில்லை. சிங்கம்போல் காட்டில் அவன் திரிந்து கொண்டிருந்தான். அங்கு அவ்வனத்தில் இரும்பு போன்ற முகத்தை உடைய அயோமுகி என்னும் அரக்கி இவனைக் கண்டாள்; கண்டதும் இவன் மீது விருப்பம் கொண்டாள். இவன் “மன்மதனாக இருக்கிறான்” என்று நினைத்தாள்; தன் செருக்கையும் கொடுமையையும் தணித்துக் கொண்டாள்.

“இவனை அணைத்துக் கொள்வேன்; மறுத்தால் அடித்துக் கொல்வேன்” என்று முடிவுக்கு வந்தாள்.

அவன் தன்னை ஏற்க மறுத்தால் அவனைத் துக்கிச் செல்வது என்ற முடிவுக்கு வந்தாள். இலக்குவனைச் சந்தித்தாள், நெருங்கி அணைந்தாள்.

“இருட்டில் முரட்டுத் தனமாக மருட்டும் நீ யார்?” என்று கேட்டான்.

“நான் உன்னைத் தழுவ விருப்பம் கொண்டேன்; உன்னை அடையாவிட்டால் நான் உயிர்விடுவது உறுதி” என்றாள்.

இவளும் ஒரு சூர்ப்பனகை என்பதை அறிந்தான். “நின்றால் உன் மூக்கும் செவியும் அறுபடும்” என்று அதட்டிப் பேசினான்.

அவள் அஞ்சவில்லை; கோபமும் கொள்ள வில்லை. இலக்குவனை வாரி எடுத்துக் கொண்டு வான்வழியே சென்றாள். தன் குகையில் அவனை வைத்து அவன் சினம் தணிந்ததும் அவனைத் தழுவி இன்பம் அடையலாள் என்று நினைத்தாள். இலக்குவன் சீற்றம் மிகக் கொண்டான். அவளிடமிருந்து விடுபடுவது எப்படி என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

இலக்குவனைப் பிரிந்த இராமனின் துயர் இரு மடங்காயிற்று. சீதையைப் பிரிந்த துயர் ஒருபுறம், இக்குவனை இப்பொழுது பிரிந்த துயர் மற்றொரு புறம். நீரைக் கொண்டு வரச் சென்றவனை யாரோ ஆபத்தில் சிக்க வைத்து இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.

“சீதையைக் கவர்ந்து சென்ற இராவணன் இவனையும் கடத்திச் சென்று விட்டானோ, அன்றிக் கொன்று தீர்ந்தானோ, சீதையைக் காவல் செய்வதில் நெகிழ்ச்சி பெற்றமைக்கு வருந்தித் தானே உயிர் துறந்தானோ” என்று பலவாறு நினைத்தான்.

கண்ணை இழந்தவன்போல் கதறி அழுதான் “உயிர் போன்று இருந்தாய். என்னைத் தவிக்கவிட்டுச் சென்றது பொருத்தமா?” என்று பிரலாபித்தான். “அரசு துறந்த போதும் தனி ஒருவனாக நீ என்னைப் பின் தொடர்ந்தாய்; என் துக்கத்தில் பங்கு கொண்டு என்னோடு வந்தாய். அத்தகைய நீ என்னை விட்டுப்பிரிந்து போதல் தகுமா?” என்று கூறி வருந்தினான்.

“அறத்தின் செயல் இதுவாக இருக்குமானால் அடுத்த பிறவியில் உனக்கு நான் தம்பியாகப் பிறப்பது என் கடமை ஆயிற்று” என்று கூறித் தன் உயிரைப் போக்கிக் கொள்ள முடிவு செய்தான்.

அரக்கி அயோமுகியின் மாயையில் அகப் பட்டிருந்த இலக்குவன் அம்மாயையின்று விடுபட்டுத் தெளிவு பெற்றான். அவள் மூக்கை அறுத்து அங்கக் குறைவினை ஏற்படுத்தினான். அவள் இட்ட கூக்குரல் அக்காடு முழுவதும் எதிரொலித்தது. அது இராமன் செவிக்கும் எட்டியது. இது ஒர் அரக்கியின் குரலாகத்தான் இருக்க முடியும்” என்று இராமன் ஓரளவு அநுமானித்தான்.

அங்கையில் அக்கினி அத்திரம் எடுத்துக் கொண்டு ஒலி வரும் திக்கு நோக்கிப் புறப்பட்டான்.

புயற் காற்றைவிட வேகமாய் இலக்குவன் இருக்குமிடத்தை அடைந்தான். இலக்குவன் இராமனைப் பார்த்து “வள்ளலே! வருந்தற்க” என்று கூறினான். இழந்த கண்ணொளியை மீண்டும் பெற்றது போல் இராமன் மகிழ்ச்சி அடைந்தான். பிரிந்த கன்றை அடைந்த பசுவாய் விளங்கினான்.

“சென்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சிகள் யாவை?” என்று கேட்டான் இராமன்.

“அயோமுகி என்னும் அரக்கியின் மூக்கையும், செவியையும், உதடுகளையும் அறுத்து முடித்தேன்; அவள் கூக்குரல் இட்டாள்; தப்ப விட்டேன்” என்றான்.

“உயிரைப் போக்காமல் விட்டது உத்தமம், அதுதான் அறநெறி” என்று அறிவித்தான்.

துன்பம் நீங்கி அமைதி பெற்று வருணனை நினைத்து மந்திரம் கூறினான் இராமன். அவன் மழை நீரைத் தர அதனைக் குடித்து இருவரும் நீர் வேட்கை தணித்தனர். அந்த மலையில் மணல் பரப்பில் இலக்குவன் அமைத்துக் கொடுத்த மரப் படுக்கையில் இராமன் படுத்துக் கொண்டான்; உணவும், உறக்கமும் இன்றி வேதனைப் பட்டான், சீதையின் நினைவு அவனை வாட்டித் துயில் இழக்கச் செய்தது.

கவந்தன் வதை

சீதையைத் தேடி இருவரும் விடியற்காலையில் விரைவாய்ச் சென்றனர். கவந்தன் ஒரு தனிப்பிறவி யாய் இருந்தான். இருந்த இடத்தில் இருந்தே எவ் உயிரையும் எட்டி வளைத்துப் பிடிக்கும் கரங்களை உடையவன் அவன், எறும்பு முதல் யானை ஈறாக எல்லா உயிர்களும் அவன் கையில் அகப்பட்டன. காட்டில் வாழும் உயிர்ப் பிராணிகள் அனைத்தும் அஞ்சி நடுங்கின. திக்குகள் அனைத்தையும் தன் கையில் அகப்படுத்திய நீண்ட கரங்களுக்கு இடையே இராமனும் இலக்குவனும் அகப்பட்டுக் கொண்டனர்.

இது அவர்களுக்குப் புதுமையாய் இருந்தது. “இது அரக்கர் செயலாய்த்தான் இருக்க வேண்டும். அதனால், சீதை மிக அண்மையில்தான் இருக்க வேண்டும்” என்று இராமன் கூறினான்.

“அரக்கர் செயலாய் இருந்தால் அவர்கள் முரசும் சங்கும் முழங்க வேண்டுமே என்று கூறி மறுத்தான் இலக்குவன்.

“நம்மைப் பிணித் திருப்பவை மந்தர மலையைச் சுற்றிய வாசுகி என்ற பாம்பாகத்தான் இருக்க வேண்டும்” என்று இலக்குவன் கூறினான். இருவருமே இரண்டு யோசனை தூரம் நெருங்கிச் சென்று அவ்வரக்கனை நேருக்குநேர் சந்தித்தனர். “இவனிடமிருந்து உயிர் தப்ப முடியாது” என்று இராமன் முடிவு செய்தான்; அதற்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டான்; இலக்குவனை மட்டும் தப்பித்துச் செல்லும்படி வேண்டினான்.

“சீதையைப் பிரிந்தேன்; சடாயுவை இழந்தேன்; கொடும்பழிக்கு உள்ளாகிவிட்டேன்; இனியும் உயிர் வாழ்வது தக்கதன்று; இந்தப் பூதத்துக்கு உணவு ஆவதுதான் உத்தமம்; எந்த முகத்தை வைத்துக் கொண்டு சனகன் முகத்தைப் பார்க்கமுடியும்? அயோத்திக்குத் திரும்பச் சென்றால் ஆட்சியைப் பிடித்து அரசாள ஆசையுடையவன் என்று பேசுவர்”.

“மனைவியைக் காக்கத் திறனில்லாத இவன், வாழ்ந்து என்ன பயன்? மானங்கெட்டவன்; என்று பேசுதற்கு முன் உயிர்விட்டால் என் பழி தீரும்” என்று கூறினான்; இலக்குவன் அதை மறுத்து ஆறுதல் கூறினான்.

“துயரத்தில் உன்னைத் துவளவிட்டு நான் மட்டும் எப்படித் திரும்புவேன்? என் அன்னை சுமத்திரை, ‘முன்னம் முடி; இறப்பை ஏற்றுக்கொள்’ என்று சொல்லி என்னை அனுப்பினாள்; அவள் முகத்தில் நான் எப்படி விழிக்க முடியும்?”

“போருக்கு அஞ்சி உயிர் விட்டாய், என்ற பெரும்பழி உன்னைச் சாராதா? இந்த பூதம் என்ன? இதைவிட அஞ்சத்தக்க விலங்கு வந்தாலும் நம் வாள் முன் எம்மாத்திரம்? துணிந்து எதிர்த்தால் இது செத்து மடிவது உறுதி என்று கூறிய வண்ணம் இலக்குவன் முன்னேறினான். இராமனுக்குப் புதிய உற்சாகம் தோன்றியது; விண்ணை முட்டும் அதன் தோள்களை வாள் கொண்டு வெட்டினர், அருவி பொழியும் மலைபோல் குருதி கொட்ட நின்றது.

அவ்வரக்கவடிவு ஆற்றல் இழந்து, செயல் இழந்து இராமன் பெருமையை உணர்ந்து பலவாறு துதித்தது. அடக்கமாய் இராமனை வழிபட்டது. சீதையைக் காணும் சீரிய முயற்சிக்கு உதவ எண்ணியது.

அது அரக்க உருவம் நீங்கிக் கந்தருவனாக மாறிற்று.

“நீ யார்?” என்று இலக்குவன் கேட்டான்.

“தனு என்னும் நாமம் உடையவன் நான்; ஒரு முனிவன் சாபத்தால் இக் கடைப்பட்ட அரக்கப் பிறவியை எடுத்தேன்; உங்கள் மலர்க்கை தீண்டப் பழைய வடிவம் பெற்றேன்”.

“புணை இல்லாமல் வெள்ளத்தைக் கடக்க இலயாது; அது போலத் துணையில்லாமல் நீர் உம் பகையை அடக்க முடியாது. சிவனும் போற்றத் தக்க ஆற்றல் மிக்க பூதகணங்களை இராவணன் பெற்றுள்ளான்; அதுபோல நீங்களும் துணைபெற்று எடுத்த பணியை முடிக்க வேண்டும். அதற்குத் தக்கவன் சுக்கிரீவனும் அவன் வானர சேனைகளுமே ஆவர்” என்றான்; அவ்வாறே செய்வதாகக் கூறி மதங்க முனிவனது மலையைச் சேர்ந்தனர்.

மதங்க முனிவனது தவப்பள்ளி, கற்பக மரம் என்று சொல்லத் தக்க வளங்களைப் பெற்று விளங்கியது. அந்த ஆசிரமத்தில் நீண்டகாலமாய்த் தவம் செய்து கொண்டிருந்த முதியவள் சவரியைச் சந்தித்து அவள் நலம் விசாரித்தனர். அவள் இவர்களை இன்முகம் காட்டி இனிய கூறி வரவேற்றாள்; சுவைமிக்க காய்கனிகளைத் தந்து விருந்து படைத்தாள்.

“என் தந்தை போன்ற தலைவ! உன் வருகைக்காகத் தான் காத்திருந்தேன். என் தவம் பலித்தது” என்று கூறினாள்.

“தாயே! வழி நடை வருத்தம் தீர, வகை வகையான உணவு தந்து உபசரித்தீர். நீர் வாழ்க!” என்றான் இராமன்

சுக்கீரிவன் தங்கி இருக்கும் ருசிய முக பருவதத்துக்குச் செல்லும் வழிகளை நினைவு கூர்ந்து, அவற்றை அவனிடம் கூறினாள்; பின்னர் அவள் முத்தி அடைந்தாள்.