எனது நாடக வாழ்க்கை/கலைஞர் ஏ. பி. காகராஜன்

விக்கிமூலம் இலிருந்து
கலைஞர் ஏ.பி. நாகராஜன்

காரைக்குடியில் சேலம் தேவாங்கா அச்சகத்தைச் சேர்ந்த நண்பர் சங்கரன் மூலம் ஒன்பது வயதுச் சிறுவன் ஒருவன் கம்பெனியில் சேர்க்கப் பெற்றான். பெண் வேடத்திற்குரிய நல்ல தோற்றமும் இனிமையான குரலும் அவனிடம் அமைந்திருந்தன. வந்த சில நாட்களில் காரைக்குடியிலேயே அவன் இராமாயணத்தில் பால சீதையாக அரங்கேறி விட்டான். அவனுடைய நடிப்பிலே நல்ல மெருகும் புதுமையும் இருந்தன. அச்சிறுவனை நான் பிரத்தியேகமாகக் கவனிக்கத் தொடங்கினேன். அப்போது நடந்து வந்த நாடகங்களில் முக்கிய பெண் பாத்திரங்களையெல்லாம் அச்சிறுவனுக்குக் கொடுக்கச் செய்தேன். பம்பாய் மெயில் நாடகத்தில் கதாநாயகன் சுந்தரத்தின் காதலி பார்வதியாக ஒரு நாள் திடீரென்று அவன் நடிக்க நேர்ந்தது. புதிதாய் நடிப்பதாகவே தோன்றவில்லை. நீண்ட காலம் அனுபவம்பெற்ற நடிகனைப் போல் பிரமாதமாக நடித்தான். நாடகத்தின் நடுவே ஒரு சுவை யான காதல் காட்சி. பம்பாய் மெயிலாகவும், சுந்தரமாகவும் நான் தான் நடித்தேன். என் காதலி பார்வதியோடு சல்லாபமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது இன்ஸ்பெக்டர் வந்துவிடுகிறார். நாணிக் கோணிக்கொண்டு உள்ளே போக முயல்கிறாள் பார்வதி . நான் அவளைப் போக விடாமல் குறும்பாக அவள் சடை நுனியைப் பிடித்து இழுத்து நிறுத்துகிறேன். இந்தக் காட்சி நடந்தது. பார்வதி போகும்போது நான் சிரித்துக் கொண்டே சடைப் பின்னலைப் பிடித்து இழுத்தேன். அவ்வளவுதான். சடை என் கையோடு வந்துவிட்டது. என் காதலி பார்வதி ஒரு சாண் நீளமுள்ள தலைமுடியுடன் உள்ளே ஓடிவிட்டாள். அந்த நாளில் பெண்வேடம் புனைபவர்கள் அனைவரும் கூந்தலை வளர்க்க வேண்டும், பார்வதியாக நடித்த அந்தச் சிறுவனுக்கு முடி கொஞ்சந்தான் வளர்ந்திருந்தது. ஒப்பனையாளர் இராஜமாணிக்கம் அந்த முடியிலேயே கொண்டை ஊசி, கரல் பின் ஆகியவற்றின் துணையோடு பின்னிவிடப்பட்ட ஒரு சடையைத் தொங்கவிட் டிருந்தார். நான் இழுத்ததும் சிறுவன் சட்டென்று நிற்காமல் போக முயன்றதால் சடை கையோடு வந்தது. சபையில் ஒரே கரகோஷம். சடையைக் காதலனிடம் பறி கொடுத்துவிட்டு ஓடிய அந்தச் சிறுவன்தான் கலைஞர் ஏ.பி.நாகராஜன்.

மனத்தாங்கலின் உச்ச கட்டம்

காரைக்குடியில் பட்டாபிஷேகத் தேதி முன் கூட்டி அறிவிக்கப் பட்டது. அந்தத் தேதிக்கு மறுநாள் நாங்கள் நடிக்கும் அதே கொட்டகையில் “திரைப்பட நடிகர் என்.எஸ். கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் நடிக்கப் போகிறார்” என்ற விளம்பரத்தைப் பார்த்தோம் எனக்குத் திகைப்பாய் இருந்த்து. உடனடியாக என்.எஸ்.கேக்குக் கடிதம் எழுதினேன். “வசூல் இல்லாமல் நாங்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தாங்கள் இவ்வாறு வந்து நடிப்பதும், அதை முன்கூட்டியே விளம்பரப் படுத்துவதும் போட்டி நாடகம் போல் கருதப்படுமல்லவா?” என்று குறிப்பிட்டிருந்தேன். என்.எஸ்கிருஷ்ணன் எனக்குப் பதில் எழுதியிருந்தார்.

“நம்முடைய கம்பெனி நாடகம் முதல் நாள் இருப்பது எனக்குத் தெரியாது. நான் நடிக்கும் நாடகம் ஒருவருக்கு உதவி யளிப்பதற்காக ஒப்புக் கொண்ட நாடகம். அதை இனி நிறுத்து வது சாத்தியமில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதில் எனக்குத் திருப்தி அளிக்க வில்லை. காரைக்குடி நகரில் பலமுறை என்.எஸ்.கே. எங்கள் குழுவில் பணி புரிந்திருக்கிறாராதலால் நகரத்தார் பலருக்கு எங்கள் தொடர்பு நன்றாகத் தெரியும். எனவே, அவர்களில் பலரும் என்.எஸ்.கே. இப்படிச் செய்வது தவறு என்று அபிப்பிராயப் பட்டார்கள்.

இந்த நிலையில் எங்கள் பட்டாபிஷேக நாடகம் முடிந்தது . மறுநாள் என்.எஸ்.கே. நடிக்கும் நாடகத்திற்காக நாடகாசிரியர் யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை குழுவினரில் சிலர் வந்திருந்தார்கள். அவர்களும் எங்களோடு சேர்ந்து வருத்தப்பட்டார்கள். மறு நாள் நாடகமாதலால் இரவு, நாடகம் முடிந்ததும் உடனடியாகச் சாமான்களையெல்லாம் அப்புறப்படுத்தி விடவேண்டுமென்று கொட்டகைக்காரர் உத்திரவு போட்டார். இது மிகவும் சிரமமான காரியம் என்பது கொட்டகைச் சொந்தக்காரருக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருந்தும் வேண்டுமென்றே இப்படிச் செய்தார். பெரியண்ணா எதற்கும் மனம் கலங்கவில்லை. நாடகம் முடிந்ததும் சாமான்கள் அத்தனையையும் அரங்கத்திலிருந்து அகற்றிவிடும்படி ஆணையிட்டார். காட்சியமைப்பாளரும் நடிகர்களுமாகச் சேர்ந்து சாமான்கள் முழுவதையும் இரவோடிரவாகக் கொட்டகைக்கு வெளியே வெட்ட வெளியில் கொண்டு வந்து போட்டார்கள்.

மறுநாள் நாடகத்தன்று மாலை சின்னண்ணா கொட்டகை வாயிலில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த என். எஸ். கிருஷ்ணனுக்கும் சின்னண்ணாவுக்கும் பலத்த வாக்குவாதம் நடை பெற்றதாக அறிந்தேன். வருந்தினேன். ஆனாலும் எங்களுக்கெல்லாம் அன்றைய நாடகத்தைப் பார்க்க வேண்டுமென்று ஒரே ஆசை. பெரியண்ணாவுக்குப் பயந்துகொண்டு ஒருவரும் போக வில்லை. நாடகம் முடிந்த மறுநாள் சீன் வேலையாட்களில் சிலர் வந்து, நாடகத்தில் கூச்சலும் குழப்பமும் இருந்ததாகவும், அமைதியாக நடைபெறவில்லையென்றும், வசூலும் எதிர் பார்த்தபடி இல்லையென்றும் சொன்னார்கள். நாடகத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு நாங்களே காரணமென்றும், முன் கூட்டியே திட்டமிட்டு வேலை செய்திருப்பதாகத் தோன்றுகிறதென்றும் கலைவாணர் கருதியதாக அறிந்தோம். எங்களிடையே இருந்து வந்த மனத்தாங்கல் இந்த நிகழ்ச்சியால் மேலும் வளர்ந்தது. பொன்னமராவதி போய்ச் சேர்ந்தோம்.

சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர்

பொன்னமராவதி எங்களுக்குக் கொஞ்சம் கைகொடுத்தது. அங்குப் பிரசித்திபெற்ற கதா காலட்சேப வித்வான் சூலமங்கலம் வைத்தியகாத பாகவதர் எங்களுக்கு அறிமுகமானார். நாங்கள் நடித்த இராமாயணம் அவரை மிகவும் கவர்ந்தது. அதைப் பாராட்டு வதற்காக ஒரு நாள் காலையில் கொட்டகைக்கு வந்தார். பாடல்களைச் சுத்தமாகவும் கர்னாட சங்கீதத்திலும் அமைந்திருப்பதாகவும், நன்றாகப் பாடியதற்காகவும் எங்களை மனமாரப் பாராட்டினார். அன்று முதல் அவரோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. புராண இதிகாசங்களில் புதுமை காண விழைந்தோம். திருமாலின் லீலைகளே தசாவதாரம், ஸ்ரீ கிருஷ்ணலீலா, இராமாயணம், மகாபாரதம் முதலிய கதைகளாக நாடக சினிமா உலகில் நடமாடி வந்தன. சிவபெருமானின் திருவிளையாடல்கள் எதுவும் மேடையிலோ, திரைப்படங்களிலோ வந்ததில்லை. எனவே அவற்றை மேடையில் தோற்றுவிக்க எண்ணினோம்.

சூலமங்கலம் பாகவதர் சிவபுராண ஆராய்ச்சியில் பெரும் புகழ் பெற்றவர். எனவே அவரிடம் எங்கள் எண்ணத்தை வெளியிட்டோம். திருவிளையாடல் புராணத்தை நாடகமாக்கித் தருவதாக அவர் ஒப்புக் கொண்டார். அந்நாடகத்திற்குச் சிவலீலா என்ற பெயர் பொருத்தமாயிருக்குமெனச் சின்னண்ணா கூறினார். சிவலீலா நாடக முயற்சி தொடங்கப் பெற்றது. பாகவதரும் சின்னண்ணாவும் தனியே கலந்து திருவிளையாடல் புராணத்தில் எந்தெந்தப் படலங்கள் நாடகத்திற்குச் சுவையளிக்கும் என்பதைப் பற்றி ஆராய்தார்கள்.

சிவலீலா

பொன்னமராவதியிலிருந்து திருச்சி வந்து சேர்ந்தோம். திருச்சியில் நாடகங்களுக்கு வசூல் இல்லை. பாகவதர் எழுதிய சிவலீலா வந்தது. புதிய நாடகத்தைத் தயாரிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டோம். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் எங்கள் குடும்பத் தோழர். பிரபல அமைச்சூர் நடிகர் எப்.ஜி. நடேசய்யர் எங்கள் உற்ற நண்பர். டாக்டர் ஒ.ஆர். பாலு எங்களுக்குப் பலவகையில் உதவியவர். இவர்களெல்லாம் சிவலீலா பெற்றிகரமாக உருவாக யோசனைகள் கூறினர். பொருள் வசதியில்லாத நிலையில் எந்த யோசனையைத்தான் செயல்படுத்த முடியம்? இருந்தாலும் சிவலீலாவைத் திருச்சியில் எப்படியும் அரங்கேற்ற முனைந்தோம். பாடம் கொடுத்தோம். முஸ்லீம் கவிசர் சையத் இமாம் புலவர் சிவலீலாவுக்குப் பாடல்களை புனைந்தார். ஏற்கனவே எப்.ஜி. நடேசய்யரின் ஞான சௌந்தரிக்குப் 351

பாடல்கள் எழுதியவர். எப். ஜி. என். தான் புலவரை அறிமுகப் படுத்திவைத்தார். கிறித்துவக் கதையாகிய ஞானசெளந்தரிக்கும் இந்து புராணக்கதையாகிய சிவலீலாவுக்கும் ஒரு முஸ்லீம் புலவர் பாடல் புனைந்தது குறிப்பிடத்தக்க செய்தியல்லவா? இதில் வியப்பென்னவென்றால் திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் இவற்றையெல்லாம் புலவர் சையத் இமாம் நன்கு அறிந்திருந்தார். அவரோடு நெருங்கிப் பழகியபோது எளக்கு எங்கள் நாஞ்சில் நாட்டுப் பெரும் புலவர் கோட்டாறு சதாவ தாளம் செய்குத்தம்பிப் பாவலர்தாம் நினைவுக்கு வந்தார்.

சிவலீலா ஒரு புது விதமான நாடகமாக உருவாகியது. இறைவன் விறகு விற்ற படலத்தில் தமிழ் இசையின் சிறப்பு வலி யுறுத்தப் பெற்றது. தருமிக்குப் பொற் கிழி அளித்த படலத்தில் தமிழ் மொழியின் வளமையைச் சொல்ல வாய்ப்புக் கிட்டியது. கல்யானைக்குக் கரும்பருத்திய படலம் தந்திரக் காட்சிக்குரிய தாக இருந்தது. கால்மாறியாடிய படலம் சிவசக்தி கடனத்திற்கு ஏற்றதாக அமைத்தது. வலைவீசும் படலம் காதல்சுவை நிறைந்த பகுதியாக விளங்கியது. பெரிய புராணத்திலிருந்து திருக்குறிப்புத் தொண்ட நாயனரைச் சேர்த்துக்கொண்டோம். அஃது பக்தியின் பெருமையை எடுத்துக் காட்டுவதாகத் திகழ்ந்தது. ஆக நாடகம் பல்வேறு சுன்வகளைக் கொண்டதாகவும் பயனுடையதாகவும் அமைந்தது. நல்ல காட்சிகளும், உடைகளும் தயாரித்து நடத்தி னால் சிவiலா பொதுமக்களை ஈர்க்கும் நாடகமாக அமையு மென்பது நன்றாகப் புரிந்தது. நிலைமையைக் கருதி அவசியமான சிலவற்றை மட்டும் செய்து சிவலீலா நாடகத்தை 25-12-39 இல் அரங்கேற்றினோம். சிவசக்தி நடனத்திற்குப்பயிற்சி அளிக்கும் பொறுப்பை எப். ஜி. என். அவர்களின் மூத்தமகன் தியாகராஜன் ஏற்றுக்கொண்டார்.

நடனமாடும் சிவனுகவும், பார்வதியாகவும் கம்பெனியில் அப்போது முக்கிய பாத்திரங்களே ஏற்று நடித்து வந்த ஜெயராம னும், சோமசுந்தரமும் பயிற்சி பெற்றார்கள். இவ்விருவரும் மிகவும் திறமையாக ஆடினார்கள்.

சிவசக்தி நடனம், நாடகத்திற்குச் சிகரமாக அமைந்தது. எங்கள் வளர்ச்சியில் அக்கறை கொண்ட எப். ஜி. நடேசய்யர் டாக்டர் ஒ. ஆர். பாலு முதலியோர் நாடகத்தை வெகுவாகப் பாராட்டினார்கள்.

டி. வி. நாராரணசாமி

எட்டையபுரம் ராஜாவின் பரிந்துரையோடு எங்கள் குழுவில் சேர்ந்த டி. வி. நாராயணசாமி சிவலீலாவில் சிவபெருமானாக நடித்தார். சிவபெருமான் பக்தர்களுக்காக மேற்கொள்ளும் மாறு வேடங்களை எல்லாம் நான் நடித்தேன். ஏ. பி. நாகராஜன் பார்வதியாகவும், பின்னல் வலை வீசும் படலத்தில் கயற்கண்ணியாகவும் நடித்தார். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமி வடநாட்டு இசைப்புலவர் ஹேமநாதனாகவும், எட்டையபுரம் அரசர் கம்பெனி யிலிருந்த நன்றாகப் பாடும் திறமைப் பெற்ற சங்கரநாராயணன் பாணபத்திரராகவும், பிரண்டு இராமசாமி தருமியாகவும் நடித்தார்கள். நகைச் சுவைச் செல்வன் டி. என். சிவதாணு தொடக்க முதல் இறுதிவரைப் பல வேடங்களில் தோன்றிச் சபையோரைப் பரவசப்படுத்தினார். டி. வி. நாராயணசாமிக்குச் சிவபெருமான் வேடப்பொருத்தம் சிறப்பாக அமைந்தது. கம்பெனியில் சேர்ந்த தொடக்க நாளில் நாராயணசாமி துச்சாதனகை நடித்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. வீர அபிமன்யு நாடகத்தில் துச்சாதனனுக்கு வசனம் எதுவும் இல்லை. பேருக்கு ஒருவர் வேடம் புனைந்து நிற்க வேண்டியதுதான். அப்படி எண்ணித்தான் இவரை போட்டோம். ஆனால் துரியோதனாதியர் அனைவரையும் கட்டி நிறுத்தி இலக்கண குமாரனுக்கு ஐந்து குடுமிவைத்து, அரசாணிக் காலிலே கட்டும்நாடகத்தின் இறுதிக்கட்டத்தில் டி. வி.நாராயண சாமி எங்களேயெல்லாம் திணறவைத்துவிட்டார். அவர் காட்டிய வீரமும் ஆவேசமும் அடேயப்பா!... துச்சாதனனை அடக்குவது எங்களுக்குப் பெரிய தொல்லையாகப் போய்விட்டது. அதற்கு முன்பெல்லாம் இவ்வேடம் புனைந்த துச்சாதனார்கள் இடித்த புளி போல் நின்றுகொண்டிருப்பார்கள். அவர்கள் முகத்தில் எவ்வித உணர்ச்சியும்இராது. வார்த்தைகள் எதுவுமில்லாத அந்தவேடத்திலேயே டி. வி. நாராயணசாமியின் நடிப்பாற்றல் என்னைக் கவர்ந்தது. அதன் பிறகு அவருடைய திறமைக்கேற்றவாறு விரைவில் முன்னேறினார். இராமாயணத்தில் அவர் இலட்சு மணனாக நடித்தது இன்னும் என் மனக்கண் முன் நிற்கின்றது. மந்திரி சுமந்திரர், தந்தைக்குச் சொல்ல வேண்டிய செய்தி ஏதேனும் உண்டா?’ என்று கேட்கும் நேரத்தில், அது யாரவன் எனக்குத் தந்தை?’ என்று கண்களில் கோபக் கனல் தெறிக்கக் கூறி, கம்பன் பாடியுள்ள மூன்று பாடல்களை ஆவேசத்தோடு முழக்கும் அவரது ஆற்றல் மிக்க நடிப்பு, அவையோரை மட்டு மல்ல; மேடையில் அவரோடு இராமராக நடிக்கும் என்னையும் மெய்சிலிர்க்க வைக்கும். சிவலீலாவில் சிவபெருமாகை நின்று பார்வதி, முருகன், நந்திதேவர் முதலியோருக்கு அவர் சாபம் கொடுக்கும் கட்டம், பார்த்து மகிழ வேண்டிய அருமையான காட்சி. அக் காட்சி நடைபெறும்போது நான் பக்கத்தட்டியில் மறைவில் நின்று பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன்.

சீனிவாச ஐயங்கார்

திருச்சியில் சிவலீலா நாடகம் நான்கு நாட்கள் நடந்தன. இவ்வளவு சிரமப்பட்டுத் தயாரித்த சிவiலாவுக்கும் வசூல் இல்லை. வழக்கம்போல் கே.டி. ருக்மணியை வரவழைத்து மனே கரா நாடகம் போட்டோம். சுமாராக வசூலாயிற்று. திண்டுக்கல் போக முடிவு செய்தோம். பணநெருக்கடி அதிகமாக இருந்தது. எதிர் பார்த்த நண்பர்களின் உதவி உரிய சமயத்தில் கிடைக்க வில்லை. இந்த நிலையிலும் மணவை ரெ. திருமலைசாமியின் நகரதுாத னுக்கும், எதிரொலி என்னும் இதழை நடத்தி வந்த நண்பர் கணபதிக்கும் திருச்சியில் உதவி நாடகங்கள் நடத்தி கொடுத் தோம். அவற்றிற்கு டிக்கட் தனியாக விற்பனை செய்ததால் ஒரளவு வசூல் ஆயிற்று. கணபதியின் எதிரொலிக்காக 9-12-39 இல் நடந்த தேசபக்தி நாடகத்திற்கு முன்னுள் காங்கிரஸ் மகா சபைத்தலைவர் எஸ். சீனிவாசஐயங்கார் தலைமை வகித்தார். அவர் ஆங்கிலந்தில்தான் பேசினார். என்றாலும், தமிழில் பேச இயலாத தம் நிலையை எடுத்துச்சொல்லி மிகவும் வருத்தப்பட்டார். “இந்த நடிகமணிகள் தேசபக்தி நாடகத்தில் பேசிய தமிழைப்போல் என்னுல் பேச முடிந்திருந்தால் சாதாரணத் தமிழ் மக்களிடையே யும் நான் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருப்பேன், நான் படித் துள்ள ஆங்கிலக் கல்வி, படித்த கூட்டத்தாரிடம் மட்டுமே என்னைத் தொடர்பு கொள்ள வைத்து விட்டது. அதற்காக மிகவும் வருந்துகிறேன்’ என்று கூறினார். 

மணவை திருமலைசாமி

மணவை ரெ. திருமாலைசாமி அவர்களின் நகர தூதன் ஏட்டுக்காக 29.12.39.ல் நடந்த நாடகத்திற்குப் பெரியார் ஈ. வெ. ரா. அவர்கள் தலைமை வகித்தார்கள். அன்பர் திருமலைசாமி ஒரு சிறந்த எழுத்தாளர். நகர தூதனில் ‘பேணு நர்த்தனம்’ என்னும் தலைப்பில், அவர் எழுதிவந்த அரசியல் கட்டுரைகள் அந்த நாளில் மிகவும் கவர்ந்தன. பிரபல எழுத்தாளராகிய கல்கி, ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மணவை திருமலைசாமி அவர்களின் எழுத்தாற்றலைப் பற்றி அடியில் வருமாறு பாராட்டியுள்ளார்.

“திருச்சி நகர தூதன் பத்திரிகையின் முதல் பக்கத்தில் ‘பேனாநர்த்தனம்’ என்னும் தலைப்பில் ஒருவர் எழுதுகிறாரே, அவர் மிகவும் பொல்லாத எழுத்தாளர். அவருடைய பேனாநர்த்தனத்தில் பரத நாட்டியத்திலேயுள்ள சகல ஜதி வகைகளையும் காணலாம். அப்படித் துள்ளிக் குதிக்கும் வேகமுள்ள தமிழ் நடையில் எதிர்க்கட்சிகாரர்களையும், எதிர்க் கட்சிக் கொள்கைகளையும் அவர் தாக்குவார். நானும் பார்த்து வருகிறேன்; சென்ற இருபது ஆண்டுக்கு மேலாக அவருடைய கொள்கையும் ஒரே மாதிரியாக இருந்து வருகிறது. அவருடைய தமிழ் நடையும் ஒரேவித நோக்கமுள்ளதாய் இருந்து வருகிறது. இவரால் தாக்கப்படுகின்ற மனிதர் நல்ல ரசிகராக மட்டும் இருந்தால் ‘'தாக்கப்பட்டாலும் இப்படிப் பட்ட பேனாவினாலல்லவா தாக்கப்பட வேண்டும்’ என்று அவருக்கு எண்ணத் தோன்றும்.”

1947இல் இவ்வாறு ரா. கிருஷ்ண மூர்த்தி பாராட்டினாரென்றால் அவருடைய அபாரமான எழுத்தாற்றலுக்கு வேறன்ன நற்சான்று வேண்டும்? அன்று நாடகத்திற்குத் தலைமை தாங்கிய பெரியார் ஈ. வே. ரா. அவர்கள் கூறிய மொழிகள், எனக்கு நன்முக நினைவிலுள்ளன. “நான் டி. கே. எஸ். சகோதரர்களை எவ்வளவோ பாராட்டியிருக்கிறேன். விருந்துகள் நடத்தியிருக்கிறேன். என் பத்திரிக்கைக்கு அவர்கள் இப்படி நாடகம் நடத்திக் கொடுத்ததில்லை. மணவை திருமலைசாமி நிரம்பவும் கெட்டிக்காரர். எனக்குக்கிடைக்காத அந்தநிதி-உதவி அவருடையப்பத்திரிகைக்குக் கிடைத்துவிட்டதே!” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

திருச்சி நாடகம் முடிந்து திண்டுக்கல் வந்து சேர்ந்தோம்.