உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/செல்வம்

விக்கிமூலம் இலிருந்து

39. செல்வம்

செல்வம் என்பது நம்மை வறுமை என்னும் ஒரே ஒரு தீமையினின்று தான் காப்பாற்ற இயலும்.

-ஜாண்ஸன்
பணமே வாழ்வின் லட்சியமானால் அது தீய வழியிலேயே தேடவும் செலவிடவும் படும். இருவிதத்திலும் வாழ்வு பாழே.
-ரஸ்கின்

கடவுள் செல்வத்தை உயர்ந்த பொருளாக மதித்திருந்தால் அதை அயோக்கியர்க்கு அளித்திருக்க மாட்டார்.

-ஸ்பிப்ட்

செல்வம் இன்பம் தராது; சீதேவி அருள அருளச் சிந்தை அதிகமாக ஆசைப் பட்டுக்கொண்டே இருக்கும்.

-யங்

பணத்தை வீணாக அழிப்பதைவிட பணத்தில் பேராசை வைப்பதே மனிதனை நாசமாகச் செய்யும்.

-கோல்டன்

பணத்தை மட்டும் தரும் தொழில்களைச் செய்தால், உண்மையில் சோம்பலாயிருத்தல் அல்லது அதற்குங்கீழாயிருத்தலேயாகும்.

-தோரோ

தாழ்ந்த விஷயங்களுக்குச சிந்தனையைப் பறிகொடுக்காமலிருப்பதன் மூலம், பணமில்லாமலே பணக்காரனாயிருப்பேன்.

-காலிங்வுட்
செல்வனுக்கு வாரிசாகப் பிறப்பது உயிருடன் பிறப்பதன்று, இறந்து பிறப்பதே யாகும்.
-தோரோ

நான் கண்டு களிப்பவைகள் எல்லாவற்றிற்கும் நானே அதிபன். என் உரிமையை மறுக்க யாராலும் இயலாது.

-தோரோ

கவிஞன் ஒரு சோலையின் சிறந்த பயன்களை எல்லாம் நுகர்ந்து விடுகிறான். சோலையின் சொந்தக் காரனோ பழங்களையும் மட்டைகளையுமே வீட்டுக்குக் கொண்டு போகிறான்.

-தோரோ

பெருமைப்படுத்திக் கொள்வதற்குச் செல்வத்தில் பிரமாதமாக ஒன்றுமில்லை.

-ஆவ்பரி

செல்வமுள்ளவனா அல்லனா என்று தீர்மானிப்பது எது? தேடுவது எது என்பதன்று, செலவு செய்வது எது என்பதேயாகும்.

-ஒரு ஞானி

செல்வம் சன்மார்க்கத்தில் அடையப்படவில்லை என்று அடிக்கடி கேள்விப் படுகிறோம். ஆனால் உண்மையாதெனில் வறுமையும் சன்மார்க்கத்தில் அடையப்படுவது அபூர்வம் என்பதே.

-ஆவ்பரி
நான் சேர்த்ததை இழந்தேன், செலவு செய்ததைப் பெற்றேன், கொடுத்ததை உடையேன்.
-டெவன்ஷேர்

பணம் தேடுவது ஒரு பெரிய காரியந்தான். ஆனால், அதைவிடப் பெரிய காரியம் ஒன்று உளது. அது யாதெனில் தேடிய பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதே.

-டிஸ்ரேலி

செல்வத்தை இகழ்பவனுக்குப் போல வேறெவர்க்கும் செல்வம் அவ்வளவு அதிகமாகத் தேவையாயிருப்பதில்லை.

-ரிக்டர்

நான் லட்சுமி தேவியிடம் பிரார்த்திப்பதெல்லாம் நான் செலவு செய்யவேண்டியதை விடச் சிறிது அதிகமாக அளித்தருள வேண்டும் என்பதே.

- ஹோம்ஸ்
கற்றோரும், அறிஞரும், வீரரும் பணத்தை வாழ்வின் லட்சியமாகக் கொள்ளுதல் என்பது ஒருநாளும் முடியாத காரியம்.
-ரஸ்கின்

பணத்தைத் தீயவழியில் இழப்பது குற்றம். ஆனால் தீயவழியில் தேடுவது அதைவிடப் பெரிய குற்றம். தீயவழியில் செலவிடுவதோ எல்லாவற்றிலும் பெரிய குற்றம்.

-ரஸ்கின்
தவறான வழியில் லாபம் பெறாதே தவறான வழியில் பெறும் லாபம் நஷ்டமேயாகும்.
-ஹீலியாட்

உண்மையான செல்வம் பணமன்று, குணமேயாகும்.

- ஆவ்பரி

ஒருவனுக்குத் தன்னைத் தவிர வேறு எது சொந்தம்? அவன் வேறு எதை அனுபவித்து ஆனந்தம் காண முடியும்?

-ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்

செல்வனாயிருக்க முதலாவதாக வேண்டியது நிறைந்த உள்ளம்; இரண்டாவதாகவே பொருள்.

-ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்
எதை உடையவன் என்பதன்று, எத்தகையவன் என்பதே வாழ்வின் பிரதான பிரச்னை.
-ஆர்.எல்.ஸ்டீவன்ஸன்

நம்பவும் மகிழவும் உள்ள குணமே உண்மையான செல்வம். அஞ்சவும் வருந்தவும் உள்ள குணமே உண்மையான வறுமை.

-ஹயூம்
வேண்டாதிருக்கக் கற்று கொள்வதே உடையவனாயிருப்பதாகும்.
-ரெக்கார்ட்

இழிஞன் ஏராளமாய்ப் பணம் படைத்திருப்பது இறைவன் ஒழுங்குமுறைக்கு இழுக்கன்றோ? இம்மியும் இழுக்கன்று. இழிஞன் அந்த லட்சியத்துக்காகவே தன்னை இழிஞன் ஆக்கிக்கொண்டான். அவன் அதற்காகவே ஆரோக்கியம், மனச்சான்று, சுதந்திரம் எல்லாம் இழந்துளான். அவற்றைக் கொடுத்துப் பணம் ல்ாங்கிக் கொண்டதற்காக நாம் பொறாமைப்படலாமோ?

-பார்பால்ட்

பிரபுவர்க்கம் எது? உண்டாக்காமல் உண்பவர், உழையாமல் வாழ்பவர், உத்யோகங்களை வகிக்கத் திறமையின்றி வகிப்பவர், கெளரவங்களைத் தகுதியின்றி அபகரித்துக் கொள்பவர்- இவரே பிரபுக்கள்.

- ஜெனலல் பாய்

செல்வத்தை உண்டாக்காமல் நுகர உரிமை கிடையாது. அது போலவே இன்பத்தையும் உண்டாக்காமல் நுகர உரிமை கிடையாது.

-பெர்னார்ட்ஷா

செல்வத்தோடு பிறப்பதில் பெருமை பேசிக் கொள்வதற்கு யாதொன்றும் இல்லாததுபோலவே, சாமர்த்தியத்தோடு பிறப்பதிலும் பெருமை பேசிக் கொள்வதற்கு யாதொன்றும் கிடையாது. செல்வமும் சரி சாமர்த்தியமும் சரி, நன்றாய் உபயோகித்தால் மட்டுமே பெருமை தரும்.

-ஆவ்பரி

அறிவிலார் செல்வம் பெற அரும்பாடுபடுவர்; அறிஞர்க்கோ அது மாயவலையாக இல்லாவிடினும் பெரும் பாரமாகவே இருக்கும்.

-மில்ட்டன்
செல்வம் வேண்டுமா? செல்வத்திலுள்ள ஆசையை விட்டு விடு. அதுதான் செல்வத்தைப் பெருக்கும் வழி.
-அகஸ்ட்டைன்
மண்ணுலகில் மனிதருக்கு வேண்டுவது வெகு சொற்பம். அதுவும் சின்னாட்களுக்கே.
- கோல்ட்ஸ்மித்

செல்வம் என்பது ஆன்மா எரிந்து மிகுந்த சாம்பலே யாகும்.

-பால் ரிச்சர்ட் துர்
அதிர்ஷ்டத்தைத் தாங்குவதைவிட அதிர்ஷ்டத்தைத் தாங்குவதே அதிகக் கஷ்டமான காரியம். பால் ரிச்சர்ட் செல்வம் என்பது சாத்தான் மனிதனை அடிமையாக்கும் சாதனம்.
-பால் ரிச்சர்ட்

அசத்தியத்தை மறைக்கச் சத்தியத்தை நாடுவதுபோல், அசெளக்கியத்துக்கு வசதி செய்யவே செளக்யத்தைத் தேடுகிறோம்.

-செஸ்ட்டர்டன்

தனவந்தன் ஆரோக்கியமாயிருக்க வேண்டுமானால் தரித்திரனைப் போல் வாழவேண்டும்.

-டெம்பிள்

ஒருவன் பணத்தைத் தன் தேவைக்கு அதிகமாகத் தேடவும் தனவந்தன் என்ற பெயரோடு சாகவும் விரும்பினால், அது அவனுக்கும் அவன் சந்ததியார்க்கும் சாபமாகவே முடியும்.

- ரஸ்கின்

செல்வம் போதுமான அளவாயிருந்தால் உன்னை அது துக்கிச் செல்லும், அதிகமான அளவாய் விட்டால் நீ தான் அதைத் துக்கிச் செல்லவேண்டும்.

-ஸாதி
பணம் தேடுவது முட்டாளுக்கு முடியும். ஆனால், அதைச் செலவு செய்வது அறிஞருக்குத்தான் தெரியும். அநேகர் கையிலுள்ள பணம் தீரப்போகும் பொழுதுதான் அதைச் சிக்கனமாகச் செலவு செய்ய ஆரம்பிப்பர். அது போல் தான்

அநேகர் நேரத்தைச் செலவு செய்வதிலும்.

-கதே
பணத்தை விட உயர்ந்தவை பலவுள. ஆனால் அவற்றைப் பெறப் பணமே தேவை.
-பழமொழி


தனவந்தனாகச் சாவதைவிடச் சான்றோனாக வாழ்வதே சிறப்பு.

-ஜாண்ஸன்

உள்ளத்தில் லாப ஆசை இருக்கும் வரை கடவுள் ராஜ்யத்தைப் பற்றிய உண்மையான அறிவு உண்டாக முடியாது.

-ரஸ்கின்

சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தையே.

-கோல்ட்டன்

பட்டுப்பூச்சி ஆடி ஓடிக் களிப்பதாகத் தோன்றும். ஆனால், அதே சமயத்தில் அது தன் உதரத்திலிருந்து நூல் நூற்றுத் தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கும். அது போலவே தான் செல்வர்கள் சந்தோஷமாய் வாழ்வதாகத் தோன்றுவதும்.

-ஐஸக் வால்டன்

ஊசித்துவாரத்தில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம். பணக்காரன் மட்டும் ஒருநாளும் கடவுள் ராஜ்யத்துக்குள் நுழைய முடியாது.

-விவிலியம்

அளவுக்கு மிஞ்சியதே அடிமைத்தளையாகும்.

-பால் ரிச்சர்ட்
எந்த மனிதனும் யோக்கியமான முறையில் வாழ்வதற்கு வேண்டிய பணத்தைத் தேடமுடியுமே யன்றி ஏராளமான பணத்தைக் குவித்து விட முடியாது.
-ரஸ்கின்

கடலில் நீர் பெருகும் சமயத்தில் சென்றால் நினைத்தயிடம் போய்ச் சேரலாம். அதுபோல வாழ்விலும் தக்க சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டால் லட்சுமியின் அருளைப் பெறலாம்.

-ஷேக்ஸ்பியர்

அதிர்ஷ்ட தேவதையை நழுவ விட்டுவிட்டால் அவளை மறுபடியும் ஒருநாளும் காண முடியாமற் போய்விடும்.

-கெளலி

அதிர்ஷ்டதேவதை அநேகர்க்கு அளவுக்கு அதிகமாக அருள்வதாகக் கூறுவர். ஆனால் அவளோ யார்க்கும் போதுமான அளவுகூட ஒருபொழுதும் அளிப்பதில்லை.

-பழமொழி

பணம் வாழ்வின் லட்சியமாக ஆகிவிட்டால் அது தவறான வழியிலேதான் தேடப்படும்; தவறான வழியிலே தான் செலவழிக்கப்படும். அது தேடும்பொழுதும் செலவு செய்யும்பொழுதும் தீமையே பயக்கும்.

- ரஸ்கின்

தேவைக்குப் போதுமான பணமிருந்தும் செல்வன் என்ற பெயருடன் சாக விரும்பிப் பணத்தைத் தேடுபவன் பணத்தையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டவன் ஆவான்.

-ரஸ்கின்

அதிர்ஷ்டதேவதை அதிகமாக அருள் செய்யப்போகும் பொழுது பார்த்தால் அதிக பயங்கரமாகத் தோன்றுவாள்.

-ஷேக்ஸ்பியர்