நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/உதவி செய்ய பெண்கள் வருகை

விக்கிமூலம் இலிருந்து

142. உதவி செய்யப் பெண்கள் வருகை

இந்தச் சண்டையில் கலந்து கொள்ள, முஸ்லிம் பெண்கள் தாங்களாகவே வந்திருந்தார்கள்.

பெருமானார் அவர்கள் அதை அறிந்ததும், அவர்களிடம் “நீங்கள் யாருடன், எவருடைய உத்தரவின் பேரில் வந்தீர்கள்?” எனக் கோபக் குரலில் கேட்டார்கள்.

அந்தப் பெண்கள் எல்லோரும், “ஆண்டவனுடைய தூதர் அவர்களே! நூல் நூற்று ஏதாவது சம்பாதித்து, இந்தச் சண்டையில் உதவி புரியலாம் என்றுதான் நாங்கள் வந்தோம். காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருந்துகள் எங்களிடம் உள்ளன. அதைத் தவிர, சண்டையில் அம்புகள் எடுத்துக் கொடுப்போம்” என்று சொன்னார்கள்.

முன்பு நிகழ்ந்த சண்டைகளில் காயம் பட்டவர்களுக்குப் பெண்கள் சிகிச்சை செய்வதும், தாகம் மேலிட்டவர்களுக்குத் தண்ணீர் வழங்குவதுமே வழக்கமாயிருந்தது. ஆனால், சண்டை செய்கிறவர்களுக்கு அம்பு எடுத்துக் கொடுப்பது என்பது இந்தச் சண்டையில் மட்டும் வழக்கமாயிற்று.