நெஞ்சக்கனல்/7

விக்கிமூலம் இலிருந்து

7

எதிரே வந்து உட்கார்ந்து பேசுகிறவனின் அதிகப் பணிவும், குழைவும், தன்னை எந்த நஷ்டத்துக்கும் ஆளாக்கலாம் என்று முன்னதாகவே எடை போட்டு நிறுத்து நிர்ணயிப்பதில் ஒவ்வொரு வியாபாரியும் கெட்டிக்காரனாகத் தான் இருப்பான். கமலக்கண்ணனோ பிறவி வியாபாரி. கலைச்செழியன் தன்னோடு உடனழைத்து வந்திருந்த ‘பிரகாஷ் பப்ளிஸிட்டி’ பிரசாசத்தைப் ‘பளிச்பளிச்’ சென்று புகழ்ந்து அறிமுகப்படுத்தியபோதே, ‘என்ன காரியத்துக்கு அடிப்போடுகிறார்களோ?’ –- என்று மெல்லச் சந்தேகம் தட்டியது அவருக்கு.

“பிரகாஷ் பப்ளிஸிட்டியைப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேன்...ஆனா...வந்து...” -- என்று தயங்கினாற் போல இழுத்தார் கமலக்கண்ணன்.

“படத் தயாரிப்பாளர்களுக்கு நியாயமான வட்டியிலே ஃபைனான்ஷியர்ஸ் ஏற்பாடு பண்ணித்தர்ரதோட–- பப்ளிஸிட்டி இன்சார்ஜ் ஆகவும் இருக்கோம். உங்க கம்பெனி விளம்பரங்களை எல்லாம்கூட எங்க மூலமாகவே செய்யணும்னு ரொம்ப நாளா எங்களுக்கு ஒரு ஆசை இருந்தது ஏன் விளம்பரம் செய்யனும்கிறதைவிட– எதுக்காக விளம்பரம் செய்யணும்கிறதை– எதிர்பார்த்து அதுக்கேற்ற முறையிலே செயல்படற ஒரே ‘ அட்வர்டைவிங் மீடியா’ -- எங்களோடது தான். இதிலே உங்களுக்குத் தெரியாதது ஒண்ணுமில்லே. எங்களைப் பற்றி தாங்களே ரொம்பவும் சொல்லிக் கொள்ளக்கூடாது பாருங்க...” என்று ஓயாமல் அடுக்கியபின் கடைசியில் உபகார அடக்கமாகவும் போனால் போகிறதென்று ஒரு வார்த்தை சொல்வி முடித்தார் பிரகாசம்.


‘மாயா தேவின்னு ஒரு புது ஹீரோபின் வந்திருக்குப் பாருங்க...இப்பத்தான் எங்க பார்த்தாலும் அதைப் பத்தியே பேச்சாயிருக்குங்களே...? அதை இந்த லயன்‘லே கொண்டாந்து விட்டதே நம்ம பிரகாசம் சார்தான்...’ என்றான் கலைச்செழியன்.


“இந்த ‘லயன்’லேன்னா...எந்த லயன்லே...” என்று கமலக்கண்ணனும் குறும்புத்தனமாகச் சிரித்துவிட்டுக் கேட்டபோது அந்தச்சிரிப்பிலேயே அவரைக் குறிப்பறிந்து விட்டார் பிரகாசம், உடனே மெல்லத் தொற்றினார்.

“மாயாவுக்குக்கூட உங்களைப் போலொத்தவங்களை . அறிமுகப்படுத்திக்கிடணும்னு... ரொம்ப ஆசைதானுங்க.”

“ரியலி–ஷி இஸ் சார்மிங்–-ப்யூட்டிஃபுல்..” என்று கமலக்கண்ணனும் நெகிழ்ந்தார்.


“ ஷி இஸ் வெரி ஈகர் டு ஸூ யூ ஸார்...”

“பார்த்தாப் போச்சு...”

“வீட்டுக்கே அழச்சிட்டு வரட்டுமா......சார்......... இல்லே...?” –

“இங்கேயா...வாணாம்...நான் அப்புறம் சொல்றேனே?”–என்று சிரித்து மழுப்பினார் கமலக்கண்ணன்.

“உங்களைப் போல கலை ரசிகர்களிட்ட ரொம்ப தொடர்பு வச்சிக்கணும்னு மாயாவுக்கு ஆசை உண்டுங்க...” என்று வேறு விதமாகச் சொல்ல முடியாத விஷயத்தை ரசிகத் தன்மை என்ற தோரணையில் அழகாக விவரித்தார் அட்வர்டைஸிங் அண்ட் வேல்ஸ் ப்ரமோஷன்ஸ் பிரகாசம். அது அவருக்கும் புரியும். கமலக்கண்ணனுக்கும் புரியும் அப்புறம் என்ன?

“நீங்க தொடங்கப் போற புது டெய்லிக்கு– ‘விளம்பர பட்ஜெட்’ எவ்வளவு போட்டிருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா...சார்!”

“இன்னும் ‘பட்ஜெட்’ எதுவும் போடலே நீங்களே ஒரு ‘ஸ்கீம்’ கொடுங்களேன். முதல்லே பத்திரிகைக்குப் பேர் செலக்ட் பண்ணனும். அப்புறம் வால்போஸ்டர், மற்ற நியூஸ் பேப்பரிலே விளம்பரம், தியேட்டர்களிலே சிலைடு, எல்லாமே கொடுத்துடலாம்னு நினைச்சிருக்கேன்...”

“ஓ! பேஷா செய்யலாங்க...”

“தினமுழக்கம்’னு வைச்சிடுங்களேன்...” -- என்றான் கலைச்செழியன்.

“சே! சே! அது நல்லாயில்லே...ரொம்ப ‘சீப்பா’ இருக்கு! ‘தினக்குரல்’னு வைக்கலாம்..” என்று திருத்தினார் பிரகாசம்.

“பேப்பர்லே போட்ட விளம்பரத்தைப் பார்த்து நெறையப் பேர் எழுதியனுப்பிச்சிருக்காங்க. அதையும் பார்த்துத்தான் முடிவு பண்ணுவமே...?” என்றார் கமலக்கண்ணன்.

சிறிது நேரத்திற்குப் பின் பத்திரிகையைப் பற்றிய பேச்சைவிட்டு மறுபடியும் மாயாதேவியைப் பற்றிய பேச்சுக்குக் கமலக்கண்ணனே வந்தார்.

“இப்ப எல்லாருமே அந்தப் பெண்ணைத்தான் ஹீரோயினாப் போடறாங்க இல்லே...? வந்த கொஞ்ச நாளிலேயே ஃபீல்டைப் பிடிச்சுக்கிட்டா. கெட்டிக்காரியாகத்தான் இருக்கணும்.”

“பின்னே சும்மாவா சொல்றேன் நான்...பழகினா நீங்களே கூட அதுங்குணத்தைப் புரிஞ்சுக்குவீங்க... அப்புறம் நான் சொல்ல வேணாம்...” என்று மறுபடி ஒத்துப் பாடினார் பிரகாசம். உலகில் மாயா உட்பட சகல விஷயங்களையும் விளம்பரம் செய்வதும் விற்பனையை வளர்ப்பதும் தான் அவருடைய இலட்சியங்களாயிற்றே.

பப்ளிஸிட்டி சம்பந்தமாக க்ளையண்ட்களை--- வாடிக்கைக்காரர்களை– இப்படி ‘மாயா’ விநோதங்கள் மூலமாக வலை விரித்துப் பிடிப்பது தான் பெரும்பாலும் அவர் வழக்கம். இந்த வலைகளுக்குத் தப்பியவர்கள் பெரும்பாலும் எந்த வலையிலுமே சிக்க முடியாதவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதும் அவருடைய திட சித்தாந்தமாக இருந்தது.

சிறிது நேரம் கமலக்கண்ணனிடம் புது நடிகை மாயா வைப்பற்றிப் பேசி அவருக்குச் சரியானபடி மயக்கமூட்டி விட்டபின் பிரகாசமும், கலைச்செழியனும் விடைபெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் உடை மாற்றிக்கொண்டு கமலக்கண்ணனும் கிளப்புக்குப் புறப்பட்டுவிட்டார். புறப்படு முன் மறக்காமல் அலுவலகத்திற்குப் போன் செய்து பத்திரிகைக்குப் பெயர் வைப்பது சம்பந்தமாக யோசனை கூறி வந்திருந்த கடிதங்களைக் கிளப்பிற்கு எடுத்து வருமாறு தன் காரியதரிசிக்குத் தெரிவித்திருந்தார் அவர். கிளப்பில் எட்டரை மணிவரை சீட்டாடிய பின் நண்பர்களில் முக்கியமானவர்களோடு பத்திரிகைப் பெயர் சம்பந்தமான ஆலோசனை தொடங்கப்பட்டது. கடிதங்களில் வந்திருந்த பெயர்கள் யாருக்குமே பிடிக்கவில்லை.

“சாயங்காலம் வீட்டுக்கு -- பிரகாஷ் பப்ளிஸிட்டி பிரகாசம்னு ஒரு ஆளு வந்திருந்தார். ‘தினக்குரல்’னு பேர் வைக்கலாமின்னு அந்த ஆள் சொன்னாரு” என்று கமலக்கண்ணன் தற்செயலாகக் கூறியபோது அந்தப் பெயரை எல்லா நண்பர்களுமே சொல்லி வைத்தாற்போல் ஏகமனதாக ஆதரித்தார்கள். அந்தப் பெயரையே வைப்பதென்று, கமலக்கண்ணனும் முடிவு செய்தார்.

“பத்திரிகையிலேயே விளம்பரம் செய்தபடி ஐநூறு ரூபாய் பரிசு கொடுக்கனுமே! இல்லாட்டி ஏமாத்திப் பிட்டதாகப் பேசுவாங்களே?” என்றார் ஒருவர்.

“அதுக்கென்ன? பிரகாஷ் பப்ளிஸிட்டி பிரகாசமும் போட்டியில் கலந்துகொண்டு ‘தினக்குரல்’ங்கிற பேரை எழுதி அனுப்பினதாகவே சொல்லி அவருக்கு ஐந்நூறு ரூபாய் பரிசையும் கொடுத்தாப் போச்சு...’ என்று அந்தப் பிரச்சினைக்குச் சுலபமாக முடிவு சொல்லிவிட்டார் கமலக்கண்ணன். உடனே– அப்போதே– கலைச்செழியனைப் போனில் பிடித்து அந்தச் செய்தியையும் தெரிவித்து விட்டார். மறுநாள் காலையிலேயே பிரகாஷ் பப்ளிஸிட்டி பிரகாசத்தை அழைத்துக்கொண்டு மறுபடி கமலக்கண்ணனைத் தேடி வந்துவிட்டான் கலைச்செழியன். இன்று பிரகாசம் வெறுங்கையோடு வராமல் கமலக்கண்ணனுக்குப் போடுவதற்கு ஒரு மாலையோடு வேறு வந்திருந்தார்.

“இதெல்லாம் எதுக்குங்க...? இந்த ‘பார்மாலிடீஸெ’எனக்குப் பிடிக்கிறதில்லே?” என்று கமலக்கண்ணன் அந்த மாலை மரியாதைக்கு நாணி ஒதுங்குவதுபோல் நடித்தாலும் பிரகாசம் அப்படிச் செய்ததை அவர் மனம் கொண்டாடி வரவேற்கவே செய்தது. சொல்லப் போனால் இப்படி மாலைகளுக்கும் மரியாதைகளுக்கும் தான் அவர் மனம் ஏங்கிக் கிடந்தது. பிரகாசம் அதை நன்றாகப் புரிந்து கொண்டிருந்தார்.

பிரகாசம் மாலையைத் தன் கழுத்தில் போட்டு எலுமிச்சம்பழத்தைக் கொடுத்த பத்தாவது நிமிடமே அந்தப் பரிசுத் தொகை ஐநூறு ரூபாயை ஒரு கவரில் போட்டுக் கொடுத்துவிட்டார் கமலக்கண்ணன். மாலையைக் கழுத்தில் போட்டதும் எலுமிச்சம் பழத்தையும் கையில் கொடுக்கிற வழக்கம் எதற்காக ஏற்பட்டதோ– ஆனால் பொருத்தம் மிக நன்றாக அமைகிறது. எப்பேர்ப்புட்ட மனிதனுக்கும் மாலை கழுத்தில் விழுந்ததும் ஒரு கிறுகிறுப்பு -- தலை சுற்றல்– வருகிறதே -- அதைக்கருதித்தான் எலுமிச்சம்பழத்தையும் உடன் கொடுக்கிறார்கள் போலிருக்கிறது.

“என்னங்க இந்த வாரத்திலே ஒருநாள் மாயா வீட்டிலே தலையைக் காட்டிட்டு வரச் செளகரியப்படுமா?.” என்று சமயமறிந்து அடுத்த வலையையும் விரித்தார் பிரகாசம்.

“யோசிச்சுச் சொல்றேன். இந்த வாரம் ‘சாமிகள்’ நம்ம வீட்டுக்கு வாராரு பாத பூஜை எல்லாம் இருக்கு, ஏதோ என் சம்சாரத்துக்கு இதிலே கொஞ்சம் கிறுக்கு...” என்று மனைவியின் தலையில் பக்திப் பழியைப் போட்டார் கமலக்கண்ணன்.

“ஆமாங்க! இந்த ‘சாமி’யைப் பத்தி எல்லாருமே நல்லபடியாச் சொல்றாங்க...இவர் சொன்னது அப்படியே பலிக்குதாம்...” என்று உடன் ஒத்துப் பாடினார் பிரகாசம். பெரிய மனிதர்களிடம் பழகி வெல்வதற்கு அது சரித்துப் பேசுவதும் ஒரு சாதனம் என்று கருதியவராகத் தோன்றினார் அவர்.”

“டெய்லி நடத்தப் போறதைச் சாமிகிட்டேயே சொல்லி ஆசீர்வாதம் வாங்கிடலாம்”– என்று கலைச்செழியனும் இழைந்து பேசிச் சமாளித்தான்.

“இந்தச் சாமி எதை வாழ்த்தினாலும் அது பொன்னாக் கொழிக்குதுங்கிறாங்க...” என்றார் பிரகாசம்.

“சாமி வரன்னிக்கு எல்லாப் போட்டோவும் நீங்க தான் எடுக்கணும்...” என்று கலைச்செழியனிடம் கூறினார் கமலக்கண்ணன்,

“ஆகா! நீங்க சொல்லணுங்களா? உங்க ஆஸ்தான போட்டோகிராபர உத்தரவே வாங்கிக்கிட்டப்புறம்?”... என்று கலைச்செழியன் வாயெல்லாம் பல்லாகத் தெரிய இளித்து அதை அங்கீகரித்தான்.

உடனே ஒரு இருபது முப்பது நண்பர்களுக்கும், பிரமுகர்களுக்கும் போன்செய்து மடாதிபதி வரப்போகிற செய்தியைத் தெரிவித்தார் கமலக்கண்ணன் ஒருவார்த்தை கூட வித்தியாசமில்லாமல் ஒரே செய்தியை இருபது பேருக்கு கிராமபோன் பிளேட்மாதிரி கூறியதில் அவருக்கு அலுப்போ, சலிப்போ சிறிதும் ஏற்பட்டதாகவே தெரிய வில்லை. பத்துப் பேருக்கு, ‘நான் பக்தி செய்கிறேன்’– என்று விளம்பரப் படுத்திவிட்டுப் பக்தி செய்தால்தான் இந்தக் காலத்தில் மதிப்பு என்பதைப் புரிந்து கொண்டவர் கமலக்கண்ணன்.

மடாதிபதி விஜயம் அவருடைய பங்களாவில் திருவிழாவாக வந்து போயிற்று. போட்டோக்கள், பந்தி பந்தியாய் அன்னதானம், வாசலில் பந்தல் என்று தடபுடல் பட்டது. சுவாமிகள் கமலக்கண்ணனின் பங்களா காம்பவுண்டில் மண், பொன், பெண் ஆகியவற்றின் நிலையாமைகளைப் பற்றிப் பிரசங்கங்கள் செய்தார். தினம் ஐநூறுபேர் கூடிக் கேட்டார்கள். மூன்றுநாள் இப்படி நடந்தது. நாலாவது நாள் வேறொரு பெரியமனிதர் வீட்டுக்குப் போய்விட்டார் சுவாமிகள். கமலக்கண்ணனுடைய பங்களா முகப்பில் பந்தல், வாழைமர அலங்காரங்களைப் பிரிக்க வேண்டியதாயிற்று.

ஆதினத்துச் சாமிகள் விஜயம் செய்து முடித்தபின் பிரகாசமும், கலைச்செழியனும் மறுபடி வந்து மாயா தேவியைப்பற்றி நினைவூட்டினர்.

“இப்பவே மாயாவைப் பார்த்துவச்சால் அப்புறம் ஒரு செளகரியம் இருக்குங்க, நம்ம ‘தினக்குரல்’ தொடக்க விழாவில் முதல்நாள் பேப்பர் முதல் பிரதியை வெளியிட ஒரு விழா ஏற்பாடு செய்து மாயாவையே முதல் பிரதியை வாங்கச் சொல்லலாம். அப்படிச் செய்தால் நல்ல ‘பப்ளிஸிடி’ ஆகும். முதல் பிரதியை மாயா வாங்கின செய்தி ஊரெல்லாம் பரபரப்பாகப்பரவும். அது பத்திரிகை விற்பனைக்குத் துணை செய்யக்கூடியது” -- என்று பிரகாசம் யோசனை கூறியபோது, “நல்ல ஐடியாங்க -- இவரு சொல்றது”– எனக் கலைச்செழியனும் சேர்ந்துகொண்டான்.

“டெய்லி பேப்பருக்கு இப்படி ஒரு விழா எல்லாம் அவசியமில்லேன்னு நினைக்கிறேன்”–

“அப்படிச் சொல்லாதீங்க டெய்லிக்குத்தான் இது ரொம்ப அவசியம்...”– என்று கமலக்கண்ணனிடம் மேலும் வற்புறுத்தினார் பிரகாசம்.

மறுநாள் அவரை எப்படியோ சம்மதிக்கச் செய்து மாயாதேவியின் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள் பிரகாசமும் கலைச்செழியனும், மாயாதேவிக்கு ஒரு வைர நெக்லஸ் பரிசளித்தார் கமலக்கண்ணன். கமலக்கண்ணனிடம் சிரித்துச் சிரித்துப் பேசினாள் மாயா; அவளுடைய சிரிப்பின் ஒய்யாரத்திலும், பழகிய தளுக்கிலும் கமலக்கண்ணன் சொக்கிப்போனார். இருவரும் அருகருகே உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது– கமலக்கண்ணன் எவ்வளவு மறுத்துச் சொல்லியும் கேட்காமல் கலைச்செழியன் ஒரு படம் பிடித்துக்கொண்டான்.

“உங்களைப்போலக் கலைகளை ஆதரிக்கிற ரசிகர் என் வீடுதேடி வந்தது நான் செய்த பாக்கியம்” என்றாள் மாயா. அந்தப் பேச்சிலிருந்த மழலைத்தன்மை போன்ற ஒரு போதை கமலக்கண்ணனைக் கிறங்கச் செய்தது.

“உங்களைப்பத்திப் பேசாத ரசிகனே இன்னிக்கித் தமிழ்நாட்டிலே கிடையாது. நான் என்ன? சாதாரண வியாபாரி...” என்று கீழே இறங்கினாற்போல் பணிந்து பேசினார் அவர்.

“எனக்கென்னமோ உங்களை ரொம்பப்பிடிச்சிருக்கு” என்று முகம் மலர்ந்தாள் மாயா.

அதுதான் சமயமென்று தினசரியின் வெளியீட்டு விழாவில் முதல் நாள் பேப்பர் முதல் பிரதியை விலைக்கு வாங்க ‘மாயா’ தான் வரவேண்டுமென்று கமலக்கண்ணன் ஆசைப்படுவதாகக் கலைச்செழியன் பேச்சைத் தொடங்கி வைத்தான்.

“நான் எதுக்குங்க...சினிமாப் பத்திரிகையா இருந்தாலும் பொருத்தமா இருக்கும். இதுவோ...டெய்லி நியூஸ் பேப்பர்...இதுக்குப் போயி என்னை விழாவுக்குக் கூப்பிடறீங்களே...’ என்று மாயாவும் மறுப்பதுபோல் விநயமாகக் குழைந்தாள்.

“அதென்னம்மா அப்படிச் சொல்லிட்டே? சினிமாப் பத்திரிகையின்னாத்தான் நீவரணுமா? எதுன்னாலும் இன்னிக்கி அதிலே சினிமா உண்டு, சினிமா இல்லாம எதுவும் இல்லே. எந்தப் பத்திரிகையின்னாலும் அது இன்னிக்கு நிலைமையிலே ஏதாவது ஒரு நாள் சினிமாப் பத்திரிகையாகத்தான் ஆகனும் சினிமா இல்லாட்டி டெய்லிதான். ஏது...?” என்றார் பிரகாசம்.

“அதுக்கில்லே...வந்து நான் என்ன அவ்வளவு பெருமைக்குத் தகுதியா?” என்று கிளுகிளுத்தாள் மாயா.

“இப்படிச் சொல்றதே உங்களுக்குத் தகுதிதான்” என்றார் கமலக்கண்ணன்.

கமலக்கண்ணன் வைர நெக்லஸ்ஸைக் கொடுத்த போது மாயா மறுப்பதுபோல் பாசாங்கு செய்தாள்.

“சும்மா வாங்கிக்கம்மா! சார் பிரியப்பட்டுக் குடுக்கிறப்ப நீ மறுக்கிறது கொஞ்சங்கூட நல்லா இல்லை” என்று பிரகாசம் கூறிய பின்பே அவள் அதை வாங்கிக் கொண்டாள். கமலக்கண்ணனுக்கும், கலைச்செழியன், பிரகாசம் ஆகியோருக்கும் ஆப்பிள் ஜூஸ் --ஐஸ் போட்டுக் கொடுத்தாள் மாயா.

“உங்க கையாலே கொடுத்ததிலே ஆப்பிள் ஜூஸ் வழக்கத்தைவிடப் பிரமாதமாயிருக்கு...” என்று கமலக்கண்ணனும் கடைசி கடைசியாகப் பேச்சில் அசடு வழியத் தொடங்கினார். அழகிய பெண்ணிடம் அசடு வழியாத சராசரி ஆண்மகனே இருக்கலாகாது என்பது கடவுளின் சூழ்ச்சியோ என்னவோ?

---அங்கிருந்து திரும்பி வெளியேறும்போது காரில், “நான் இங்கே வந்து போனதைப் பற்றி எங்க வீட்டிலே வச்சுப் பிரஸ்தாபிக்க வேண்டாம்...தெரியுதா?” என்று கலைச்செழியனிடமும், பிரகாசத்திடமும் வேண்டிக் கொண்டார் கமலக்கண்ணன்.

“அடேடே! என்னங்க நீங்க? இதுகூடத் தெரியாதுங்களா எங்களுக்கு...? விடிஞ்சி எந்திரிச்சா எத்தினி பெரிய ஆளுங்க கூடப் பழகறோம்?” என்று ஏககாலத்தில் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு இருவரும் ஒரே வார்த்தைகளில் அவருக்குப் பதில் சொன்னார்கள். கமலக்கண்ணனும் உடனே அவர்களை நோக்கிப் புன்முறுவல் பூத்தார்

“மிஸ்டர் கலை! மாயா வீட்டிலே எடுத்தீங்களே படம்! அதைப் பத்திரிகையிலே கித்திரிகையிலே போட்டுத் தொலைச்சிராதியும்...!”

“நீங்க ஒண்ணு! அவங்க பக்கத்திலே நீங்க கம்பீரமா உக்காந்திருந்த போஸ் ரொம்ப ‘மேட்ச்’ ஆறமாதிரி இருந்திச்சு! அதான் ஒண்னு தட்டி வச்சேன். இதைப் போயிப் பத்திரிகையிலே போடுவாங்களா என்ன? அவ்வளவுக்கு விவரம் தெரியாதவனில்லிங்க... நான் ”

“உங்களுக்குத் தெரியும் இருந்தாலும் ஒரு ஜாக்கிரதைக்காகச் சொல்லி வைக்கிறேன். ஞாபகமிருக்கட்டும்.’’

பத்துப்பதினைந்துநாட்களில் முதலமைச்சர் தலைமையில் முதல் பிரதியை கவர்ச்சி நடிகை மாயாதேவி வாங்க ‘தினக்குரல் நாளிதழ்வெளியீட்டுவிழா அமோகமாக் நடை பெற்றது. அதைப்பற்றிய செய்திகளும், படங்களும் வேறு தினசரிகளிலும் தாராளமாக வந்திருந்தன. தினப் பத்திரிகைக்கு உதவியாசிரியர்கள். ஒரு நியூஸ் எடிட்டர், நிருபர்கள் மட்டும் போட்டு விட்டுத் தம் பெயரையே ஆசிரியர் என்ற பதவிக்கு நேரே போட்டுக்கொண்டிருந்தார் கமலக்கண்ணன். கீழே அச்சகமும் மாடியில் அலுவலகமுமாக அவருடைய கம்பெனி காரியாலயத்திற்கு அருகிலேயே ஒரு கட்டிடம் பத்திரிகைக்குக் கிடைத்திருந்தது. டெய்லியில் வியாழக்கிழமை சோதிடப் பகுதியைக் கமலக்கண்ணனுக்கு ஏற்கெனவே அறிமுகமான சர்மாவும், ஞாயிறு சினிமா மலரை வேறொரு புனைப்பெயரில் கலைச்செழியனும், கவனித்துக் கொண்டார்கள். நியூயார்க்கிலும், லண்டனிலும், ஜர்னலிசம் படித்த நாதனைப்போன்றவர்களை அருகில் வரவும் விடவில்லை. பணமும் பத்திரிகைப் பிரசாரமும் அவர் எதிர் பார்த்ததை அவருக்கு மெல்ல மெல்லத் தரலாயின. அப்போது பதவியிலிருந்த—அரசியல் கட்சியில்—அவரும் ஒரு தீவிர உறுப்பினராக வாய்ப்பு வந்தது. அந்தக் கட்சியின் தேசியத் தன்மைகளுக்கும். காந்தீய நெறிகளுக்கும், எதிரான வழிகளில் ஒருகாலத்தில் சென்ற குடும்பமே அவருடையது. என்றாலும் அவரிடமிருந்த பணம்−பத்திரிகை இரண்டிலுமே.. அதை அவர் இன்று அடைய முடிந்தது. கட்சியில் புதிதாக நுழைந் திருந்தாலும் வசதியுள்ளவர் என்ற காரணத்தால் அவர் சொல்லியதை எல்லோரும் கேட்டார்கள். அதே சமயம் கட்சிக்காக உயிரை விட்டுச் சிறை சென்று, தனி நபர் சத்தியாக்கிரகங்கள் செய்து, அந்நியத் துணி பகிஷ்கரிப்புச் செய்து பாடுபட்ட ஏழைத் தியாகிகள். பலரைக் கட்சி இலட்சியமே செய்யவில்லை. கமலக்கண்ணன் ஒரு நோக்கத்தோடு கட்சியில் தீவிர உறுப்பினரானார். அந்த நோக்கம் நிறைவேறுகிற காலமும் வந்தது. கட்சியின் தீவிர உறுப்பினருக்கான தகுதியாக சட்டத்தில் இருந்தது—‘மதுவிலக்கை ஒப்புக்கொண்டாக வேண்டும்’ என்ற பிரிவு. அந்தப் பிரிவை ஒப்புக்கொண்டு அதன்கீழ்க் கையெழுத்திட்டு உறுப்பினராகியும் கமலக்கண்ணனால் குடிப்பதை நிறுத்த முடியவில்லை.

“கட்சி இலட்சியங்களில் நம்பிக்கை இன்றி ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று அவரை எதிர்த்துக் கேட்கவும் அந்தப் புராதனமான தேசிய இயக்கத்தில் யாரும் துணியவு மில்லை. அந்த நிலை கமலக்கண்ணனுக்கு வசதியை அளித்தது. மெல்ல மெல்லக் கட்சியின் நீண்ட நாள் உறுப்பினர்களும், உண்மை ஊழியர்களுமான தியாகிகள் பலர் அவருக்குச் சலாம் போடும் நிலைக்கு ஒடுக்கப்பட்டனர். கட்சி அலைச்சல்களுக்கு கார், கட்சி நிதிக்குப் பணம், கட்சிப் பத்திரிகைகளுக்கு ஆதரவு எல்லாம் அவர் தந்தார். கட்சி தன் இலட்சியங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கே விற்று விட்டது. இந்த நிலையைத்தான் அவர் எதிர்பார்த்தார். ஆனால் திடீரென்று ஒரு சிறு சலசலப்பும் கட்சியில் அவருக்கெதிராக முளைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=நெஞ்சக்கனல்/7&oldid=976860" இலிருந்து மீள்விக்கப்பட்டது