பக்கம்:இராவண காவியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெரிவது. பிற்காலத்தில் பிரிக்கக்கூடாதவாறு. ‘சர்வ ஜாக்கிரதையாக,’ மிகத் திறமையுடன் அந்நாளிலே, ஆரியத்தைத் திராவிடத்தில் குழைத்திருக்றார்கள், என்ற உண்மையும் தெற்றென விளங்குகிறது. கண்டு பிடிக்கவே முடியாத களவு! வெளிக்குத் தெரியாமல் நடைபெறும் விபசாரம்! ஓசைப்படாமல் கடிக்கும் நாகம்!-இவைபோல் இஃது பிரிக்கவே முடியாதபடி கலந்து போயிருக்கக் கூடும்! இஃதோ புதை பொருள் தோண்டப்படும் காலம்! மகஞ்சதாரோக்கள் காணப்படும் காலம்! மனித அறிவுக்கு எட்டாதது என்று எண்ணப்பட்ட எண்ணற்ற விஷயங்களை எளிதில் அறியக்கூடிய வழிவகை கண்ட காலம். எனவே தான், எது ஆரியம், எது திராவிடம் என்று பிரித்துக் காட்டக்கூட முடியாத அளவு கலந்துபோய்விட்டது என்று கூறப்படும், தன்மையை, மாற்றிட முடிகிறது. மாற்றாரின் கோபத்துக்குக் காரணம் அதுவே. எவ்வளவு முன்னேற்பாடாக, திராவிடக் கலையினைச் சிதைத்தும் குறைத்தும், ஆரியத்தை அத்துடன் இணைத்தும், இழைத்ததும் ஒட்டியும் கட்டியும், பூசியும் தூவியும் பலவகையாலும் பலகாலமாகப் பாடுபட்டுக் கலந்தும், இன்று இந்தப் "பாவிகள்" எப்படியோ துப்புக் கண்டுபிடித்து, துருவித் துருவி பார்த்துச் சலித்தும் புடைத்தும் புடம்போட்டும் பார்த்து, இதோ ஆரியம், இதோ திராவிடம், இன்னது இன்ன அளவு உள்ளது என்று பிரித்துக் காட்டுகின்றனரே, அந்த நாள் தொட்டு நாம் செய்த முயற்சிக்கு இந்நாள் வந்ததே விபத்து என்றெண்ணிக் கவலைப்படுகின்றனர்; அவர்கள் கவலைப்படுகிறார்களே என்பதற்காகக் காலவேகம், வேலை நிறுத்தம் செய்யுமா! தடையும் எதிர்ப்புப் படையும், அந்த வேகத்தை அதிகப்படுத்துகிறது.

இராவண காவியத்தை இந்த மன நிலையின் கனியெனக் கொள்ளவேண்டும். இதுவும், அந்நாள் இராமாயணம் போல, கலைப்போர் முரசுதான்! இரண்டும் கற்பனைகளே! முன்னது இராமனைத் தேவனாக்க! இஃது, இராவணனைத் தேவனாக்கவுமல்ல. தமிழனாக்க! அதாவது வீரனாக்க ! முன்னதற்குக் கவி, வானையும் வானிலுறைவோரையும் துணை கொள்ள நேரிட்டது. இந்நூலுக்கு அஃது தேவையில்லை, முன்னூலில் புதைந்துள்ளவைகளைக் கொண்டே, இராவணனின் உருவம் இத்தன்மையது என்று எடுத்துக் காட்டுகிறார் நூலாசிரியர். சம்பராசுரயுத்தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/16&oldid=1536873" இலிருந்து மீள்விக்கப்பட்டது