விக்கிமூலம்:நாள் ஒரு இலக்கியம்/2019-10-10

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

"சீர்மிகு சிவகங்கைச் சீமை" எஸ். எம். கமால் அவர்கள் எழுதியது. இந்நூலைப்பற்றி பின்வருமாறு ஆசிரியர் கூறுகிறார்.

நாடு விடுதலையடைந்து பல ஆண்டுகளாகி விட்டன. பழமை ஒளியும் புதுமை உயிர்ப்பும் ஊடாடிய புதிய சிந்தனை, புதிய பார்வையுடன் படைப்புகள் பல வெளி வந்து இருக்க வேண்டும். அவைகளில் சிறப்பாக தாயகத்தின் உண்மை வரலாறும் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் மன நிறைவு தரும் வரலாற்று நூல்கள் மிகக்குறைவான எண்ணிக்கையில் வரையப்பட்டுள்ளன. பதினைந்தாவது நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான தமிழக வரலாறு இன்னும் சரியாகத் தொகுக்கப்படவில்லை.

விஜயநகரப் பேரரசின் பிடிப்பு, திருநெல்வேலி தென்காசிப் பாண்டியர்கள், மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக்கர் அரசுகள், தஞ்சை மராத்திய அரசு, மறவர் சீமை சேதுபதிகள், சிவகங்கை மன்னர்கள், திருநெல்வேலிச் சீமைப் பாளையக்காரர்கள், முதுகுளத்தூர், சிவகங்கை மறவர்கள் கிளர்ச்சி, வேலூர் சிப்பாய்களின் புரட்சி என்பன போன்ற வரலாற்றுப் பிரிவுகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஆய்வு நூல்கள் வரையப்படாதது வேதனைக்குரியது. இந்த நிகழ்வுகளின் அடிநாதமாக அமைந்துள்ள நாட்டுப்பற்று, அன்னிய எதிர்ப்பு உணர்வு, சமூக நல்லிணக்கம், மனிதநேயம் ஆகிய மனிதக் கூறுகளைப் புரிந்து கொள்ளாத நிலையில், புலர்ந்து வரும் இருபத்து ஒன்றாவது நூற்றாண்டின் புதிய இலக்குகளை திட்டமிடுவது இயலாத ஒன்று.

இந்தக் குறைபாட்டினை நன்கு உணர்ந்த சிவகங்கை ராணி மேதகு இராஜ லெட்சுமி நாச்சியார் அவர்கள் தனது முன்னோர்களான சிவகங்கைச் சீமை மன்னர்களின் வரலாற்றுப் பகுதியினையாவது விரிவாக வரைவது என்ற அவர்களது பெருவிருப்பினை அண்மையில் என்னிடம் தெரிவித்தார்கள். தமிழக வரலாற்றிற்கு தகைமை சேர்க்கும் இந்த சீரிய முயற்சியினைப் பாராட்டி அவர்களது விழைவினை நிறைவு செய்யும் வகையில் இந்த நூலினைத் தொகுத்துள்ளேன்.

1. சிவகங்கைச் சீமை
அறிமுகம்


டவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்பது தமிழகத்தின் வடக்கு, தெற்கு எல்லைகளைச் சுட்டும் பழம்பாடல் ஆகும். கடந்த ஈராயிரம் ஆண்டு வரலாற்றில் பெரும்பகுதி, இந்த பரந்த நிலப்பரப்பை ஆண்டு வந்த முடியுடை மன்னர்கள் சேரன் அல்லது பொறையன், சோழன் அல்லது வளவன், செழியன் அல்லது பாண்டியன் என்று குறிக்கப்பட்டுள்ளனர். இந்த முத்தமிழ் மன்னர்களில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியனது நாடு, தமிழகத்தின் தெற்குப் பகுதியில் அமைந்து இருந்தது. சோழ நாட்டின் தென் எல்லையை வட வரம்பாகவும், சேர நாட்டின் கிழக்கு எல்லையான மேற்குத் தொடர் மலையை மேற்கு எல்லையாகவும், வங்கக் கடலின் விரிந்த கரையை கிழக்கு எல்லையாகவும் கொண்டிருந்தது.

காலச் சுழற்சியில், பாண்டியரது வாளின் வலிமையைப் பொறுத்து இந்த எல்லைகளில் பெருக்கமும், சுருக்கமும் ஏற்பட்டதை வரலாற்றால் அறிகின்றோம். மாறவர்மன் சுந்தர பாண்டியன் தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்தி சிதம்பரத்தில் வீராபிஷேகம் செய்து கொண்டான். இன்னொரு பாண்டியன் வடக்கே, நெல்லூர் வரை சென்று வாளால் வழி திறந்தான், எனப்புகழப்பட்டான்.


(மேலும் படிக்க...)