திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/029.வான் கடைநிலை

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



✫29.கடைநிலை[தொகு]

இலக்கணம்:-

பரிசில் பெறும் விழைவுடன் நீள்நெறி நடந்து வந்த இரவலன் ஒருவன், புரவலனின் வாயிற்கண் சென்று, ஆங்குள்ள காவலரிடம் தன் வரவை மன்னவனுக்கு அறிவிக்குமாறு கூறும் பொருளமைத்துப் பாடப்பெறும் இலக்கியவகை கடைநிலை என்பர்.

கடைநிலை என்பது காணும் காலை
பரிசில் உழப்பும் குரிசிலை முனிந்தோர்
கடையகத் தியம்பும் காட்சித்தென்ப
- பன்னிரு பாட்டியல் 229
பெரியோர் சேணிடை வருதலாற் பிறந்த
வருத்தம்தீர வாயில் காக்கின்றோர்க்
கென்வர வினையிறைக் கியம்புதி நீயெனக்
கடைக்கணின் றுரைப்பது கடைநிலையாகும்
- முத்து வீரியம் 1099
பரிசில் நீட்டித்தல் அஞ்சி வெறுத்தோர்
கடைநின் றுரைப்பது கடைநிலை ஆகும்
- பன்னிரு பாட்டியல் 158
தவமுனிவர் சேணிடை வருதலாற் பிறர்வருத்
தந்தீர வாயில் காப்போய்
தலைவற்கென வரவிசை யெனக் கடைக்கண்ணின்று
சாற்றெனச் சொல் கடைநிலை
- பிரபந்த தீபிகை 25

பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் திவ்வியத் திருப்பதி நண்ணும் அன்பர் ஆலய முன்னின்று ஆங்கு காவல் காத்திருக்கும் துவாரபாலகரை வேண்டுவதாக அமைந்தது இப்பனுவல்.

வான் கடைநிலை

காப்பு

நேரிசை வெண்பா

விடையேறும் மெய்த்தெய்வ மென்றாள் பணிந்து
கடைநிலை பாடக் கனிந்தேன் - தடையேதும்
வாராமற் காத்தினிய வாக்கருள்க வானரசே!
சீராரும் செம்மலர்த்தாள் காப்பு.

நூல்

நிலைமண்டில ஆசிரியப்பா

மெய்வழிச் சாலை ஆண்டவர் திருவருள்
உய்வழி வழங்கும் ஒருபெரும் திருப்பதி
தெய்வ ஆலயத் துவாரபா லகரே!
தெய்வ ஆலயத் துவாரபா லகரே!
வந்தனம் ஐயா! வந்தனம் ஐயா!
சிந்தை கனிமின்! செப்புவ(து) ஏலுமின்
தென்னா டுடைய சிவபிரான் என்றும்
எந்நாட்டவர்க்கும் இறைவரே என்றும்
ஆர்க்கும் பாற்கடல் அனந்த சயனர்
கார்க்கும் ஸ்ரீமன் நாரா யணரெனும் (10)
பரமன் டலத்தின் பிதாவெனக் கூறும்
அரனெனும் அளவிலா அருளாள் இறைவர்
நிகரில் அன்புடை நீதியர் அல்லா
புகழும் கயிலைக் குலபதி என்றும்
ஒருநா மம்ஓர் உருவம் இல்லார்
திருவார் ஆயிரம் ஆயிரம் நாமம்
உடையவர் எங்கோன் உத்தமர் ஏறு
நடையுடை நாயகர் நாதநா தாந்தர்
உலகுயிர் உய்யும் பொருட்டாய் இரங்கி
நலமுயர் மெய்வழி நல்கிடப் புவியில் (20)
அவதா ரம்செய் தருளினர் மாபெரும்
தவத்திரு மாட்சியர் சாலைஆண்டவர்கள்
பல்கலை பூத்த பாரத பூமியில்
நல்லுயர் ஞான நற்றமிழ் நாட்டில்
புதுமெய்க் கோட்டைப் பொன்னகர் சார்ந்த
இதமிகு ஊறல் மலைக்கா டகத்தே
அருளர சாட்சித் திருமுடி தரித்துமெய்ப்
பொருளர சாட்சிப் புரிந்தருள் தெய்வம்
முழுமுதற் கடவுள் எழுந்தருள் புரிந்தனர்
எழில்பொழில் கானகத்(து) ஏரார் ஆலயம் (30)
பொன்னரங் கம்எனும் விண்ணவர் ஆலயம்
தென்னா டுடைய சிவபிரான் கோவில்
சாவா வரந்தரும் சாயுச்யர் கோவில்
மூவா முதல்வர் முனிவரர் தலைவர்
தேவதே வேசர் திருவுயர் வானவர்
தூவெண் மதிபிறை சூடிய சிவகுரு
ஊணும் உறக்கமும் அற்றமெய் நற்றவர்
மாணெழில் பொலியும் மணிமொழிக் கனியர்
வரந்தரு திருவினர் வாழ்பதி சாலையர்
தரமுயர் தங்கமார் மேரெனும் சீரினர் (40)
தன்னகம் துறந்தசர் வேசர்மெய் வேந்தர்
பன்னிரு சன்னதம் பொற்கரம் தரித்தவர்
ஒருதிரு தரிசனை இருவினை போக்கிடும்
திருவடி பணிபவர் துயரறு நெறியினர்
நித்திய வாழ்வின் நிமலராய் வாழ்பவர்
சத்தியர் சற்சனர் சாவா வரந்தரும்
செப்பரும் தவத்துறு செம்மலோர் நாதர்
ஒப்பிலி யப்பர் ஒருதனி முதல்வர்
வேதமெ லாம்திரள் மெய்த்திரு உருவினர்
சீதள பத்ம பாதத் திருவினர் (50)
நாசி வெளிமூச் சோடாத் தவத்தவர்
வாசிப் பரியுலா வரும்திரு மாதவர்
அரிதவர் நாமம் உரைப்பவர் உய்வர்
பரிசினைப் பெறுபவர் பரமரைப் பணிபவர்
எண்ணுவோர் நெஞ்சில் இனித்துக் கிடப்பவர்
மண்ணகம் போந்த விண்மதித் திருமுகம்
சர்வஆ கமங்களோர் எழிலுரு வாயினர்
பர்வத மேரு கற்பகத் தாரு
நம்பிய பேர்க்கு நாலாம் பதம்தரும்
வெம்பிய பேர்தம் வெந்துயர் தீர்த்திடும் (60)
தீர்க்கத் தரிசனம் செப்பிய செம்மல்
ஆர்க்கும் வசந்த ரிஷிஉயர் புசுண்டர்
அன்னவர் முதலாய் வடலூர் மேவு
தென்னவர் ஜோதி வள்ளலி றாக
சான்றோர் உரைத்த சத்திய மொழிவ(ண்)ணம்
ஈன்றதாய் தனின்மிகு இணையிலா அன்பினர்
ஆன்றமெய் தந்தருள் ஆண்டவர் தெய்வம்
தோன்றலர் திருப்புகழ் செவிமடுத் தன்பும்
ஆரா வேட்கையும் கொண்டனன் எளியேன்
சீரார் மெய்வழிச் சாலைவந் தண்மினேன் (70)
பொன்னின் அரங்கர் பொற்பதி முகப்பினில்
மன்னுசீர் ஓங்க விளங்கிடும் மாட்சியீர்!
அண்ணல் தரிசனை அடியேன் பெற்று(ய்)ய
விண்ணவர் தாங்கள் வழிசெயல் வேண்டும்
அனுமதி தந்தெனை ஆதரித் தருளும்
இனியமெய் தெய்வ ஈடில் சன்னிதி
சென்று பணிந்து திருநோக் கினுக்கு
நன்றுஆட் பட்டு நல்லருட் தயவால்
பிள்ளையாய் ஏற்றிடப் பெருந்துணை நல்குமின்!
உள்ளம் உருகி உவந்துவந் துற்றேன் (80)
மிடிமை தவிர்ந்து மெய்வரம் பெற்று(ய்)ய
அடிமையை ஏற்றிட ஆர்துணை புரிமின்!
ஒருதிரு நோக்கம் இருவினை தீர்க்கும்
திருத்தவத் தரசரின் தரிசனை செயவே
ஆவல்கொண் டேன்காண் அற்புத ஆலயம்
காவல் புரிந்திடும் கண்ணியப் பெரியீர்!
பழியா வருமெமன் படர்கடந் துய்ந்திட
அழியா நிதிபெறும் ஆர்வமார் சிந்தையேன்
தயைகூர்ந் திறைவர் திருமுன் பணிந்திட
இயைந்தேற் றனுமதி ஈந்தருள் புரிக (90)
உத்தமர் சந்நதி உயர்திரு வோங்கிட
சத்திய தேவ அனந்தா தியரொடு
யானும் ஒருவனாய் ஆகுபே ராசை
தேனகர் தெய்வத் திருவருள் பெற்று
வானகப் பரிசுகள் வழங்கிடப் பெறவே
தீனனேன் சிந்தை விழைகிறேன் அண்ணலே!
தடையிலா துட்செலத் தயைபுரிந் தருளுக!
விடைதரல் வேண்டும் விமலர்முன் சேர
பிறவிப் பெருங்கடல் நீந்திடும் புணையருள்
அறந்திகழ் ஆண்டவர் அருட்கடை நோக்குக்(கு) (100)
ஆட்படும் விழைவினேன் அன்புகூர்ந் தருளுமின்
நாட்கடத் திடேலிறை நற்பணித் தொண்டரீர்!
தனித்தலை மைப்பதித் தலைவரை யின்றி
இனிக்கதி யில்லைகாண் என்றுமெங் கெவர்க்கும்
ஆதலால் அறமிளிர் அன்பகத் துடையீர்!
காதலால் சிந்தை கனிந்திங் குற்றேன்
போதுபோ வதன்முன் பெருந்துணை புரிகுமின்!
வேதனை தீர வழித்துணை யருளுக
சீதனம் பெறவே துறையிது ஐய!
மாதன லாபம் பெறஉத விடுக (110)
வளர்கயி லாய வாயில்காப் போரே!
தளர்வறி யாத தவத்திருச் செல்வரீர்!
ஊழி முதல்வரின் ஒருதனித் தயவால்
வாழிய நீவிர்! வாழிய நீவிர்!

வான் கடைநிலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!