திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/036.விண்பாங்கரசர் தென்பாங்கு

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



36. கும்மி[தொகு]

நூற்குறிப்பு :-

தமிழகத்தில் மகளிர் விளையாட்டுகளில் தலைசிறந்து விளங்குவது கும்மி. வட்டமாக நின்று குனிந்தும் நிமிர்ந்தும் கை தட்டிக்கொண்டு இனிமையாகப் பாடி ஆடி விளையாடுவது கும்மியென்னும் விளையாட்டு. பெரும்பாலும் தமிழகத்தில் எல்லா விழாக்களிலும் கும்மிப் பாட்டுப் பாடியாடுவது வழக்கமாக உள்ளது. ஆடவர் கையில் கைக்குட்டைத் துணியை வைத்துக் கொண்டு உட்கார்ந்தும் எழுந்தும் பாடி ஆடுவது ஒயில் கும்மி எனப்படும். சித்தர் பாடல்களில் வாலைக்கும்மி என்று பாடப் பெற்றுள்ள பகுதி அரிய பல ஞான ரகசியங்களைப் பொதிந்ததாக அமைந்துள்ளது. வடலூர் வள்ளல் பெருமானும் கும்மிப்பாடல் இயற்றி யருளியுள்ளார்கள். எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் தேவியார் ஸ்ரீமதி பனிமதிநாச்சியார் அவர்கள் சாலைப் பொன்னரங்க தேவாலய நிர்மாணச் செய்திகளையும் அரிய ஞான ரகசியங்களும் பொதிந்த பொன்னரங்கக்கொம்மி யருளியுள்ளார்கள். தை மாதம் மாட்டுப்பொங்கலன்று அப்பாடலைப் பாடி ஆண்பெண் இருபாலாரும் சிறுவர் சிறுமியர்களும் கொடிமரத்தைச் சுற்றி ஆடிக் கும்மியடிப்பது வழக்கமாக உள்ளது. எளியேன் எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் திருவருளார் அற்புதப் புனித வரலாற்றினைக் கும்மி மற்றும் ஒயில்கும்மி என நான்கு வகைச் சந்தங்களில் விண்பாங்கரசர் தென்பாங்கு என்ற பெயரில் இயற்றிச் சமர்ப்பித்துள்ளேன்.

விண்பாங்கரசர் தென்பாங்கு

காப்பு

மண்பாங்கர் அன்போங்கி மாதவ ரைப்போற்றி
வாழ்த்திப்ப ணிந்துமே கும்மி கொட்டி
விண்பாங் கரசர்மேல் தென்பாங்கு பாடிட
பண்போங்கு பாதம லர்க்காப்பாம்.

நூல்

சந்தக் குழிப்பு 1

தானானே தானானே தானானே - தான
தானானே தானானே தானானே
ஆதிதுணை நம தையர் திருவடி
          அன்பாகப் போற்றி வணங்கிடுவோம்
நீதி நடவுசெய் நித்தியர் மெய்வழி
                    .நாதர்புகழ் பாடிக் கும்மியடி (1)

பாதங்கள் போற்றினால் ஏதங்கள் தீர்ந்திடும்
             வேதங்கள் மெய்ம்மை துலங்குமம்மா
சேதங்கள் இல்லாத மாதங்கம் நம்மையர்
                  நீதங் கனிந்துமே கும்மியடி (2)

தேவாதி தேவர்தி ருச்சபை தன்னிலே
           சர்வேஸ்வ ரர்திரு முன்னிலையில்
தேவர் ரிஷிமார் முனிவரர் யாவரும்
            தெண்டனிட்டு மனுச் செய்தனராம் (3)

நால்வகை யோனி எழுவகைத் தோற்றத்தில்
              நாலொடு எண்பது நூறாயிரம்
கோலவகையுற்று வாழுமுயிர்க் குள்ளே
            கூறறியாச் சிறப் போன்மனுவாம் (4)

யாவர்க்குமேல் மனு வைப் படைத்துமவர்க்(கு)|r}}
            இன்பங்கள் கோடியும் வைத்தவரை
தேவராயாகி வருநெறி கோட்டிய
              சிந்தையரே பெரு விந்தையரே (5)

வையக மாந்தர்கள் வாழ்நெறி விட்டுமே
         வஞ்சகம் பொய்புலை வீணெறியில்
வெய்ய கொடுஞ்செய லாதிய வற்றாலே
       வீழுகின்றார் நர காழுகின்றார் (6)

வேதங்கள் நீதங்கள் யாவும் வழங்கியும்
          மெய்ந்நெறி காட்ட எமையனுப்பி
போதங்கள் செய்தும் புரிந்து கொண்டாரில்லை
           பின்னும் இடர்பல பண்ணினரே (7)

மட்டில்லாத் துன்பம் விளைத்தனர் என்செய்வோம்
          மாதவரே ஞான ஆதவரே
அட்டாங்க யோகத் தரசரே நீவிரே
          அவதரிப்பீர் இப் புவிபுரப்பீர் (8)

முன்னை முழுமுதல் மோன சபாபதி
         வையகம் வந்தருள் தந்திடுவீர்
பின்னைப் புதுமைசெய் பெற்றியர் தாங்களே
           போதருவீர் அருள் நாதருவீர் (9)

உய்வழி காட்டிடு மெய்வழி நாட்டியே
           ஓங்கும் அனந்தர்குலம் படைத்து
செய்வழி சீர்பெற சாயுச்ய மேஉறச்
                செய்திடுவீர் அருள் பெய்திடுவீர் (10)

என்றவர் வேண்டிப் பணிந்திருக்க நம
              தின்ப வடிவினர் ஏதுரைக்கும்
நன்றுநன்று நீவிர் நானில மேகுமின்
           நானவ தாரம்செய் தங்குறுவேன் (11)

வையக முற்றும் அழித்துப் புதுப்புவி
       ஆக்கிடுவேன் அருள் தேக்கிடுவேன்
மெய்யக மாந்தரை அந்நாட்டு வித்தாக
            மாற்றிடுவேன் தவத் தேற்றிடுவேன் (12)

சந்தக் குழிப்பு 2

தானானே தானானே தானானே -- தானே
தானானே தானானே தானானே
                தனதத்தன தனதத்தன
               தனதத்தன தனதத்தன
தானானே தானானே தானானே -- தானே
தானானே தானானே தானானே
சாதிமனுக்குலம் ஒன்றென நாட்டிச்
சமய சமரசம் ஆக்கிடவே
                 சகலர்க்குள பகையற்றிட
               அகிலத்தினில் நிகரற்றதோர்
ஆதிமனுமகன் வந்திடுவேன் - அங்கு
நீதியாம் மெய்வழி தந்திடுவேன் (13)

மேதினியில் அந்த ஆதிசைவம் வளர்
கோதில் தமிழக மண்ணினிலே
                கொடுமைகெட மிடிமைதவிர்
               நெடுமெய்வழி குடிமைநிலை
சீதனம் தந்து சகம்புரப்பேன் - தமிழ்
மாதுளம் பொங்கும் மறை யருள்வேன் (14)

சாவாவ ரங்களும் தந்திடுவேன் மனு
சாயுச்ய மேறவே செய்திடுவேன்
                சகமேல்புது யுகமானது
               சுகமோங்குற மிகவேவர
ஓவாத் தவத்தின் பலன் அருள்வேன் - சாலை
உத்யோவனத்தே வலம் வருவேன் (15)

என்று முழுமுதல் இன்னருள் தந்திட
நன்றெனத் தேவருள் ஒப்பிடவே
               நலமிக்குயர் குலம்யாவினும்
            பலதேவரும் உலகோரென
அன்று பிறக்கவே செல்லுமென்றார் - அங்கு
அன்புப் பிடியினில் நில்லுமென்றார் (16)

நானோர் கருக்குகை மேவிடுங்கால் எனை
வானோர் எனச்சொல்ல ஓர்குருவாய்
                      ஒருவானவர் முனரேகுமின்
                     திருவோங்கிட வரவேற்கென
கோனெங்கள் பாட்டையர் தாமுன்வந்தார் - ஐயர்
ஞானம் அருளும் வரங்கள் தந்தார் (17)

எங்கள் குலத்தினில் தங்க மகதியாய்
இங்கு வருகென வேண்டி நின்றார்
                   சுகமோங்கிட அகமேதரும்
                  மகம்மூதரும் மிகவார்ந்திட
எங்கள் அருண்மணி ஏன்று கொண்டார் - ஞானம்
பொங்கும் குருமணி மெய்ம்மைவிண்டார் (18)

தீர்க்க தரிசனம் ஆயிர மாயிரம்
ஆர்க்க அருளாளர் செப்பிவைத்தார்
               திருவாருரை நிறைவேறிட
            இறைமாதவர் வருகைதர
கார்க்கும்தீ கையர் திருவுள் கொண்டார் - இந்தப்
பார்க்குள் அவதாரம் செய்யநின்றார் (19)

மார்க்கப் பதிவாழும் மாண்பார் ஜமால்உசேன்
பேர்கொள் பெரியதாய் தம்கருவில்
                    நிறைவான்மொழி இறைசூல்பெருந்
                   துறைமாதவர் உறைவானவர்
சீர்கொள் அவதாரம் செய்யநின்றார் - கலி
தீர்க்கஅருள் நாதர் சிந்தைகொண்டார் (20)

ஆர்கலி ஞாலத்தில் மார்கழியாம் திங்கள்
பேருயர் ஞான தனமதியில்
                    இருபான்நவ திருநாளினில்
                  அருள்வாரண குரல்கூவையில்
சீராரும் தேவர்கள் வாழ்த்திசைக்க - எங்கள்
பேரான பெம்மான் அவதரித்தார் (21)

மன்னுயிர் உய்ந்தோம் எனக்களிக்க - கலி
தன்பலம் நைந்து கண்ணீர் துளிர்க்க
           புவிமாதுதன் சுமைதீரவும்
             சிவமாதவர் களிகூரவும்
பொன்னார் மதலை வளர்ந்தனரே - மெய்யர்
நன்னாள் விடிந்து மகிழ்ந்தனரே (22)

நாழியோர் மேனி கடிகையோர் வண்ணமாய்
நங்கள் மணிச்செல்வர் தம்வளர்வே
               நலமார்பல கலைதேறியும்
               வலமேறிடு நிலைமேவியும்
ஆழியையர்அன்பறம் சிறந்தார் - இறை
ஆவலில் வேட்கைத் திறம்நிறைந்தார் (23)


மெய்வழி தாமே என அறியாமலே
மெய்சொல் குருவினைத் தேடினரே
                    மறைமாமணி இறைசூழ்அணி
                     நிறைநீர்மையர் அறவாழியும்
பொய்க்குரு ஈராறு பேர்புன்மையால் - அன்று
எய்தினர் வெய்துயர் நம்பெருமான் (24)

சந்தக்குழிப்பு - 3

தான தான தான தான தான தான தான தான
தான தான தான தான தான நன்னானே - தான
தான தான தான தான தான நன்னானே
மேலையுரை மெய்ப்படியை சீலர் தனிகைப்பெருமான்
ஞாலமிசை நன்மனுவின் கோலங்கொண்டாரே - மூவர்
பாலருக்கு மெய்ந்நெறியின் மூலம் விண்டாரே (25)

ஆமனு எம் நாயகரும் பூமிமிசை எழுந்தருளி
நேமநெறி யோடுறையும் சீர்பதி தேடி - தனிகை
மாமணியும் விரைந்து வந்தார் அன்பொடு நாடி (26)

சொல்மணியின் வாணிபத்தைச் செய்யுமுன்னே நாயகரும்
நெல்மணிகள் வாணிபமும் செய்து வந்தாரே - நாங்கள்
பல்மணிகள் பாதம் சேரப் பாக்யம் தந்தாரே (27)

காசுக்காரன் பாளையத்தே தேசுற்றோங்கும் வேம்படியில்
மாசற்றார்எம் தெய்வமணி சாலை ஏறினார் - ஞான
பாசத்தோடு தஸ்லிம் செய்து அன்பைக் கூறினார் (28)

தேனொடு பால் மாவருத்தி சீர் மனையிலேயிருத்தி
தான்புரியும் ராஜயோகச் சீர்விரித்தாரே - பாட்டார்
வீண் செயலென்றே நிறுவித் தாம் சிரித்தாரே (29)

சீதனம் ஏழாம் கடனை ஓதெனத் தாதை வினவ
நாதருரை யாமல்மிக வேமலைத்தாரே - மெய்ம்மைப்
போதம் விளை வள்ளல்உளத் தேநிலைத்தாரே (30)

பங்குனி நற் பவுரணையில் திங்களூர் நற்றேரடியில்
எங்களையர் பிரம்ம உப தேசம் பெற்றாரே - இன்பம்
பொங்கி தங்கள் தந்தை அன்பு நேசம் உற்றாரே (31)

பெண்டுபிள்ளை செல்வம்சுற்றம் பெற்றோரை விட்டுமெய்யை
விண்டகுரு நாதரொடு துறவு பூண்டாரே - குரு
கொண்டலாக அன்றே எமது உயிரை ஆண்டாரே (32)

காடுகரை பேர் வனங்கள் நாடுநகர் ஊர் அனைத்தும்
சீடர்குரு நாதருடன் அகிலவலமாய் - நம்மைத்
தேடி ஆள அருள்மெய் கொண்டார் தேவர்குலமாய் (33)

காமம்பசி தாகம் பயம் கடுங்குளிரும் வெய்யில் இடர்
ஏமன் அமல் யாவும் வென்றார் எங்கள் நாயகர் - குரு
நாமம் ஒன்றே சேமம் என்றார் அனந்தர் தாயகர் (34)

குருவுரை நன் மொழிப்படியே மறிகளைமேய்த் தொரு வருடம்
திருமகனார் பணிபுரிந்தார் அருளில் நனைந்தார் - பின்னர்
திருப்பரமாம் கிரிமிசையே தவத்தில் முனைந்தார் (35)

சங்குடனே சக்கரம் கிள் நாமமும் வில் வேல் சூலம்
நங்கள் நாதர் சன்னதங்கள் நற்றவத்துற்றார் - மெய்யாம்
எங்கள் அனந்தர் குலத்திற் காகவேபெற்றார் (36)

சந்தக்குழிப்பு - 4

தானன தானன தானன தான
தானன தானன தானன தான
தானன தானன தன்ன தான - தன்னான தான
தானன தானன தான தானானோ
முத்திரைச் சன்னதம் பெற்ற கரத்தோடு
அத்தனை எங்களின் ஆருயிர் நாயகர்
மெத்த வணங்கினர் தாதை பூரித்தார் - தேவாதிதேவர்
சித்தமகிழ்ந்திட முத்துரை வித்திட்டார் (37)

சித்தர் வணங்கிடும் நித்திய மாதவர்
இத்தரை மீதுனை ஒத்தவர் யாருமில்
சுத்தசைதன்யசு கோதயர் நீரலவோ - கைதான்குவியேல்
முத்திகொடுத்திடு சித்தி நிலைப்பிடமே (38)

ஆதியில் வானக மீதினில் ஓதிய
நீதியின் மூதுரை யேநிறை வேறின
மேதினி மேவிய நாதனும் நீதானே - மெய்ஞ்ஞானத்தங்கம்
வாய்திற வாயென வேதன் விழைந்தாரே (39)

தாதையின் சீர்கரம் மூதுரை ஓதிட
வேதனின் பேர்திரு நாவினின் மீதுற
நீதிமெய் வாளிது சாதிச் சிக்கறுக்கும் - பேரானஉன்நா
பேத மொழித்துயர் போதமுரைத்திடுமே (40)

நத்திய பத்தியர் நித்திய மிக்குற
சித்திய ளித்திடு சத்திய வாளிது
முத்தி நிலைப்பிட முத்துறை மெய்ம்மதினா - கூரோங்கும்உன்நா
வித்தக மெய்ம்மறை மெத்த தெளிந்திடுநா (41)

மோனசபாபதி ஞான வரோதய
நானில மீதுனைக் காணுறுஆர்வலர் வானவர் காத்துளர்
நீயவணேகிடுவாய் - மெய்ஞ்ஞானச்செங்கோல்
நீநிலையாட்சிசெய் காலமுமிஃ தென்றார் (42)

மஞ்சினின் மெல்லிய நெஞ்சினர் தந்தையைக்
கெஞ்சினர் அஞ்சிபி ரிந்திடே லென்றனர்
பிஞ்ஞகர் மைந்தரை மென்மொழி யால்தடவி - அஞ்சாதே தங்கம்
விஞ்சையர் ஆதியர் ஊழிவி தியென்றார் (43)
தந்தையின் சொல்கட வாதமெய்ச் சிந்தையர்
முந்தையர் தந்திடு மந்திரத் தின்படி
எந்தைம யங்கித் தவித்தவண் ஏகினரே - தள்ளாடிநெஞ்சம்
நைந்துது டித்து கலங்கி வருந்தினரே (44)

தாதையு ரைப்படி சீர்மது ரைப்பதி
நாதரு முற்றனர் போதனை யைக்கொளும்
நீதரைத் தேடிடும் காதலும் மிக்குற்றார் - பன்னாளலைந்தும்
சீதன மேற்றிடப் பூதலர் வந்தில்லார் (45)


அந்தியெ னும்கடைப் பொட்டலிலே உறை
தந்தமைத் தாம்துற வோரெனப் பொய்புகல்
அந்தக ரைஎம தையர் சந்தித்தார் - பொல்லாத கள்ளர்
தந்ததோர் கஞ்சாத் தீங்கை நிந்தித்தார் (46)

காவி புனைந்தவர் பாவமியற்றிய
தீவினை கண்டமெய் ஓவியநாயகர்
காவியுடைதனை அன்றுகளைந்திட்டார் - சம்சாரிபோல
ஜீவரை உய்த்திட சிந்தை விளைத்திட்டார் (47)

மாநகர் வாழ்பவர் தானென கந்தையர்
தீனர்கள் ஊரகம் வாழ்பவ ருக்கருள்
ஆனகம் ஏற்றிட ஐயர்நி னைந்திட்டார் - அந்நாள் தொடங்கி
தேனுகர் வண்டுகள் தேடிம லர்சென்றார் (48)

சந்தக்குழிப்பு - 1

சம்சாரி கட்கேமெய் சாற்றிடு வோமென்று
எம்மான் மேலூர் கீழுர் திருப்புத்தூர்
மெய்ம்மாரி பெய்கொண்டல் மேவிப்பொழிந்தது
செம்மையோர் சிற்சிலர் சீர்மெய்பெற்றார் (49)

முத்தனேந்தல் கீழச் சேவல்பட்டி சேகூர்
மாராஜ கெம்பீரம் பற்பல ஊர்
சித்தர் தலைவர்தாம் சென்று பிரச்சாரம்
செய்தனரே அருள் பெய்தனரே (50)

ராஜகெம்பீரத்தில் ஆஸ்ரமம் ஓர்குடில்
ராஜாதி ராஜர் தவமாளிகை
தேஜஸ் மிகுந்து திகழ்ந்ததை எண்ணியே
சிற்சில வீணர் வயிறெரிந்தார் (51)

பற்பல தீங்கிடர் செய்தும் பயனின்றி
பொற்பகர் தம்மை அழித்திடவே
நற்றவர் உள்ளுற நாதாங்கி போட்டுமே
நாசகர் தீவைத்து நாசமுற்றார் (52)

எங்கள் துரைக்குரு செங்கர வாள்கொடு
எக்கிடு அக்கினி தன்னை வென்று
பொங்கிவெளியேறிக் காரைக்கால் நோக்கியே
பொன்னரங் கண்ணலும் போகலுற்றார் (53)

நந்தமக் கோரூரும் நன்மனச் செல்வரும்
நாட்டுவ மென்று நனிநினைந்தார்
சிந்தை தெளிந்தெந்தை சீர்திருப்புத்தூரில்
சேர்ந்து சிறிதுநாள் தங்கினரே (54)

முகம்மது மீராரா வுத்தரும் நன்மனை
மெய்யுணர் உம்முசல்மா அம்மையும்
மகதியாம் எங்களின் மாமணிச் செல்வரை
மட்டில்லா அன்புடன் பேணலுற்றார் (55)

அந்தப் பொழுதினில் அண்ணல் பிரான்மலைக்(கு)|r}}
ஆங்கு சென்று தவம் ஆற்றிடுவார்
சிந்தை கனிந்தொரு சாமியாரம்மை யெம்
தெய்வத்தைக் கண்டு மெய்ச் சீடரானார் (56)

மீண்டுமெம தண்ணல் ராஜகம்பீரத்தில்
மெய்ப்பொருள் வாணிகம் செய்கையிலே
காண்டு வயிறெரி கர்த்தபங்கள் சில
கத்தினார் எம்துரை எத்திவென்றார் (57)

கோன்திருப் புத்தூரில் வாழுமந்தாளினில்
வான்தனி கைவள்ளல் வாக்கின்படி
தேன்மொழி சீர்பனி மாமதிக் கன்னியைத்
தேங்கமழ் தாரர் மணம்புரிந்தார் (58)

வெண்டுகிலை மணப் பெண்தரிக்க அந்த
மெய்யர் திருமணம் தான் நடக்க
கண்டு உற்றார் சுற்றார் தாம்கலங்க எங்கள்
காதலர் செய்தார் அருள் மணமே (59)


எத்தனையோ இடர் வந்துற்ற போதினும்
ஏறுபோல் வீரத்தாய் உம்முசல்மா
அத்தன் திருவடிக் கம்மையைக் காணிக்கை
ஆக்கினரே அருள் தேக்கினரே (60)

ஏழை மலையாள ஐயருக் கிப்பெண்ணை
ஈந்தனர் உம்முல் ஏமாந்தனளே
வாழைக் குருத்தென வஞ்சிக் கொடிதன்னை
விற்றனளே பழி பெற்றனளே (61)

என்றலர் தூற்றவும் எங்களின் பாட்டியார்
இம்மியளவும் கலங்கிலராம்
வென்றி கொளவொரு வாய்ப்பது வந்தது
வெற்றிமகள் உலகெற்றினளே (62)

அன்றெங்கள் ஐயர் பிரிந்த திருமகள்
ஆயிசு அம்மை அரங்க நற்றாய்
நன்றிங்கு சேர்ந்திட நீசரும் நாணிட
நங்களின் பாட்டி பொங்கியுரைக்கும் (63)

வீரக் குரைசித் திருக்குலம் மெய்ப்பிக்க
வந்ததோர் சாட்சியைப் பாருமென்றார்
சூரத்தனத்தீரே வாலைச் சுருட்டியே
செல்லுமென்றார் ஒத்தி நில்லுமென்றார் (64)

சந்தக் குழிப்பு 2

வெள்ளைக் கலையுடுத்தே மணம் கொண்டதாய்
மேனிப் பருமைத் திருவுள்ளெண்ணி
உப்பில்லதோர் பத்யம்உற
ஒப்பில்லதோர் நித்யம்பெற
தெள்ளமுதாலன்னை சீர்மையுற்றார் - எங்கள்
வள்ளலும் ரங்கூனுக் கேகலுற்றார் (65)

ரங்கூனினின்று திரும்பிய நாயகர்
எங்களம்மைக் கெழில் ஹஜ் உடைகள்
இனிதாய்தர கனிதேன்மொழி
பனிமாமதி அணிவாரதை
தங்கமகா மேரு தாயுடனே - ஹஜ்ஜூ
பொங்கெழில் மக்கம் மதினா சென்றார் (66)

மக்கா நகர் மதினாவும் நாடி உயிர்
சொக்கும் குருமணி மாலை பாடி - நிக
ரில்லாதவர் எல்லாம்வலர்
அல்லாரசூல் இல்லாளொடு
தக்கார் மகிழ்ந்து பாராட்டிடவே - அண்ணல்
மிக்க மகிழ்திருப் புத்தூர் வந்தார் (67)

செந்தமி ழார்திருப் புத்தூருற்றுச் சீடர்கள்
சிந்தை களிக்க அருள்தந்திட்டார் - அன்னை
தனுர்மாகலை நனிகற்றிட
வனமேகிடு நினைவோங்கிட
விந்தைமிகுநைமி சாரண்யமே - சென்று
எந்தை தவமிகச் செய்தாரம்மா (68)

கானகம் சென்று திரும்பி வந்து இங்கண்
வானக மாட்சி வரம் வழங்கி
திருஞானமெய் அரசோச்சியே
குருநாதரும் உறைநாளினில்
ஈனர்கள் பொய்ப்பிரச் சாரம் செய்தார் - அறி
வீனர் இடர்செய்யத் தாமுனைந்தார் (69)

வீதிசுவர்கள் மரங்களிலும் கொடும்
பாதகர் நீதியரையிகழ்ந்து
கொடுமைமொழி பதிவார்மிகு
கொடியோர்செயல் அறிசீடர்கள்
நீதிமன்றில் வழக்குத் தொடுத்தார் - எங்ஙள்
ஆதியையர் அதற் கொப்பமிட்டார் (70)

மன்னர் அரண்மனை யில்சிவ கங்கையில்
தென்னன் வழக்கு கலெக்டர் முன்னே
குறைபேசிய முறைகேடனும்
சிறையேகிட அறைநீதியர்
இன்னும் அபராதம் மேலே என்றார் - தீயன்
பின்மேல் முறையிட்டும் தோற்றழிந்தான் (71)

அந்த வழக்கினில் ஆண்டவர் பல்பேருண்
டிந்தப் பெரியோரை சொல்லே னென்றான்
இதுநாமமும் பலபேர்க்குள
இதுகாலையில் அதுநாமென
எந்தை திருவுரை செப்பலுற்றார் - ஜட்ஜூம்
அந்தப் பேரில் ஒப்பம் செய்மின் என்றார் (72)

இப்படி ஆண்டவர் நாமம் வந்தேறிய(து)|r}}
அப்பனும் மக்களும் தாமகிழ்ந்தும்
இடரால்களைப் புறலால்இறை
இடமாற்றிடு நினைவால்ஒரு
ஒப்புடை மன்னரைச் சார்ந்திருந்தால் இங்ஙன்
இப்பெரும் தீங்குறா தென்றெண்ணுவார் (73)

ஐயர்மை சூர்செல்ல ஏறும் புகைவண்டி
மெய்யர் கலங்கிக் கதறியழ
அருளாளரின் திருவாருளம்
பெரிதேயிரங் கியதால்தமிழ்
வையம் செழிக்கும் வகையுற்றதே - ஏழை
உய்யும் பரிவும் எமக்குற்றதே (74)

அண்ணல் திருப்புத்தூர் ஆசிரமம் கட்டி
பண்ணலங் காரர்பல் பேரையுய்த்து
குருதேவரின் பெருகார்புகழ்
திருகேளுற வருசீடர்கள்
எண்ணிலா மாந்தர் வந்தாசி கொண்டார் - இடம்
தன்னின் நெருக்கடி தேவர் கண்டார் (75)

ஆசிரமம்பெரி தாக அமைவிடம்
தேசிகர் ஆய்ந்து தெளிந்தனர்காண்
மதுரைநகர் அதுசார்ந்துள
இதமோங்கிடு புதுமேட்டினை
மாசில்லா மாமணி தாம்குறிக்கும் - அருள்
தேசுறச்சீடர் குழாம் பூரிக்கும் (76)

ஆணிப்பொன் னம்பலத் தாண்டவர்க் காயெழில்
காணியாய்க் கற்றளி ஆலயம்செய்
அறமோங்கிடு திறமாதவர்
நிறைவான்மொழி குருநாதர்க்கு
காணிக்கைப் பொன்குவி யல்செலுத்தக் - கட்டும்
காணியாட்சிச்சாலைப் பொன்னரங்கம் (77)

வண்டிகள் கொண்டு மலையடி சேர்ந்துமே
கொண்டுவந் தார்கற்கள் கோதறவே
வடிவாலய மயன்சிற்பியே
படிமீமிசை வரல்போன்எங்கள்
அண்டர் தலைவர் திருக்க ரத்தால் - எழில்
மண்டு திருக்கோவில் தாமெடுத்தார் (78)

கல்கர டாமெங்கள் உள்ளம் திருத்திக்
கழனி கனிச்சோலை செய்தது போல்
மலைமேடுகள் சமமாகிட
கலைநாயகர் சிலைமாளிகை
வல்பிணி தீர்க்கும் மந்த்ராலயமும் - சார்ந்து
பல்கனிச் சோலையும் தாமியற்றும் (79)

அல்பகலாக அடர்ந்துழைத்து நிறை
சொல்மணி நாதர்சீர் ஆலயம் செய்(து)|r}}
அருட்சீடர்கள் வரவேஅழை
திருவார்மடல் விடவேவர
தொல்வினைக் கூட்டம் துகள்படச்செய் - ஜீவ
சிம்மா சனமேறும் எம்பெருமான் (80)

சீரோங்கப் பேரின்ப ஜென்மசா பல்யம்கொள்
பாரோர்கள் வாருமென்றெட்டிக் கூவ
பூராங்கொடி பாரோங்கிட
பேராளர்மெய் கூரோங்கிட
ஓங்கி உயர்கம்பத் தேற்றினரே - அன்பின்
பாங்கர் தலைமெய்யில் மாற்றினரே (81)
இந்தப்படியெங்கள் இன்னுயிர் நாயகர்
சிந்தை கனிந்துமே ஞானச் செங்கோல்
திருவாட்சி செய் துறுகாலையில்
வருமேகொடு படைசேகரம்
வெந்துயர்ப் போர்க்கலக் கொட்டிலுக்கே - இடம்
தந்திடுவீரென்று நாடினரே (82)

சாமிதிருவுளம் தாமயங்கும் - எங்கள்
சற்சனர் கூட்டமு மேகலங்கும்
பலகாலமும் முயன்றேஒரு
நிலைஆலயம் செயும்காலையில்
சீமை அரசினன் வந்தனனே - கொடும்
தீமை செயப்பேதை முந்தினனே (83)

என்புரிவோம் சென்று எங்கிருப்போம் கொடும்
வன்னெஞ்சரசினன் மாறுற்றகால்
இதுஊழியின் விதியாமென
மதிவானவர் பதியோர்ந்தனர்
மன்னவனுக் கெதிர் ஏதுஎன்றே - அண்ணல்
பொன்னரங் கம்தர ஒப்பினரே (84)

ஆலயம் மாற அரசு மாறுமென்(று)|r}}
அன்றுலிண்டல் கல்லில் தாம் பொறித்த
ஒருவாசகம் நிறைவேறுதல்
திருவாசகர் உறைகூறவும்
சீலர் அனந்தாதி யர்தெளிந்தார் - திருக்
கோல மகேசர் அருள்பொழிந்தார் (85)

சீக்கிய ராணுவச் சிம்மங்கள் வந்தெம்மை
ஆக்கிய அண்ணல் பதம் வணங்கி
இறையோர்கர குறிநோக்கியே
மறையாதியர் இவர்தாமென
ஹம்மாரே குருநானக் எனமுழங்கும் - தெய்வம்
செம்மாந்து சீர்ஆசி தாம்வழங்கும் (86)

சீரும் சிறப்பொடு ஆறுபரிபூட்டுத்
தேரில் உலாவரச் செய்தனரே
இவர்வானவர் தவமேரென
அவர்ஓர்ந்தனர் சிவமாமணி
பேரும் புகழொடு வாழ்கெனவே - ஆசி
கூறும் குலமக்கள் தாம்மகிழும் (87)

நீடும் குடைகொடிச் சின்னம் உடமைகள்
தேடிய யாவும் திரட்டிக்கொண்டு
பெறுவாய்பொறுப் பெனச்சாவியும்
தருவாரெம துயிர்நாயகர்
கூடிப் பாலசிங்கங்கள் குமுறும் - வேறூர்
நாடிப் பயணந்தனைத் தொடரும் (88)

சந்தக் குழிப்பு - 3

செந்தமிழ்ச்சீர் தொண்டமானின் சீமையினை நாடிவந்து
எந்தைபிரான் ஊறல்மலைச் சாரலடைந்தார் - அங்கு
விந்தையெழில் பாப்பாநாச்சி வயலினைச் சேர்ந்தார் (89)

காசாம்பு ஏரிக்கரைக் கானகத்தைத் தேனகமாய்
தேசோங்கச் சாலையெனும் ஊருமாக்கினார் - ஞான
ராசாங்கம் தாமியற்றும் நாடுமாக்கினார் (90)

கப்பலைக் கவிழ்த்ததுபோல் ஒப்பிலதோர் பொன்னரங்கம்
செப்பரிய சீருடனே தெய்வம் அமைத்தார் - எங்கள்
அப்பனெனும் துப்புடையார் அன்புள் நிலைத்தார் (91)

கோபுரமும் வீதிகளும் கொடிமரமும் வாழ்பதியும்
பூபதியென் சாமிதுரை பொன்கயிலையாய் - எங்கள்
பூலோக மெய்குண்டம் பொற்பதியுமாய் (92)

ஐயர்திரு மாளிகையும் ஆன்றதவ மாளிகையும்
மெய்யனந்தர் வாழ்விடுதி மிக்கிலங்குமால் - அங்குத்
துய்யர்வதிந் தேஇறையைத் தோத்தரிக்குமால் (93)

தென்னோலைச் சீர்விடுதி சீடர்பலரும் வதிய
மன்னவர் என்றும் இறவா வாழ்வும் கொடுத்தார் - அதில்
வந்துறைவோர் தீவினையும் தாழ்வும் கெடுத்தார் (94)

ஆல்அரசு வேம்புபுளி அத்திவிளா வில்வமொடு
வேல்பனையும் தென்னையும் விருட்சமிலங்கும் - எங்கள்
மெய்யர்உத்தி யோவனத்தில் மெய்ம்மை துலங்கும் (95)

ஆடும் மயில் கூட்டங்களும் அழகு சிட்டுக்குருவிகளும்
பாடும் வானம் பாடிகளும் குலவித் திகழும் - அங்குக்
கூடும் கிள்ளைக் கூட்டங்களும் கொஞ்சி மகிழும் (96)

ஜீவசிம்மா சனக்கொலுவும் தெய்வமயில் ஆசனமும்
தேவர்புகழ் ஆலயத்தில் திகழப்பார்க்கலாம் - அதைத்
தெரிசித்தாலே உயிர் உடலம் தெளிந்து ஆர்க்கலாம் (97)

ஏழுகுழல் எக்காளம் ஏந்திசையின் துந்துபிகள்
வாழுமணி யோசையங்கே இன்பம் நிறைக்கும் - வந்து
வணங்கியபேர் பிறவிப் பிணித் துன்பம் விலக்கும் (98)

'துடும் துடும்', என்றிசைத்துத் தோத்தரிக்க வாருமெனும்
எடும் நகராமுரசு என்றும் ஒலிக்கும் - நாங்கள்
இன்ப வடிவார் பதத்தை ஏற்றித்துதிக்கும் (99)

அல்லு பகல் ஓயாது ஆண்டவரைப் போற்றி செய்து
நல்வணக்கம் செய்வதங்கு நாளும் ஓங்குமால் - அங்கு
பல்சமயம் சாதி ஒன்றாய்ப் பரிமளிக்குமால் (100)

ஆதியுண்டு நீதியுண்டு அருள்பெருகு வேதமுண்டு
நீதிமிகு அனந்தருண்டு நித்தம் துதிக்க - எங்கள்
நாதர்திருப் பாதத்தில் எம் உயிரைப்பதிக்க (101)

அனந்தர்களும் அனந்தகிகள் அன்பு சிறார் சிறுமியரும்
அனுதினமும் மெய்வேதம் ஓதிமகிழும் - எங்கள்
ஆண்டவரின் வானார்ந்த மாண்பைப் புகழும் (102)

வரந்தருவார் வானவராம் தரந்தருவார் எமனை வெல்லும்
உரந்தருவார் ஓங்குபுகழ் மெய்வழி தெய்வம் - நாங்கள்
சிரந்தருவோம் திருவடிக்கீழ் சார்ந்தினிதுய்வோம் (103)

நாதாந்த ராஜர்திரு வேதாந்தம் மான்மியமும்
போதாந்த வாக்கியமாம் பொக்கிஷமுண்டு - உயிர்
பூரிக்கத் தேடிடுமோர் கூடகமுண்டு (104)

இத்தேசம் தாண்டிஉப அத்தேசம் ஏகிடச்செய்
கர்த்தாதி கர்த்தர் இறை நேசமும் உண்டு - அதன்
வித்தாதி வித்து என்னும் தேஜஸூம் உண்டு (105)

ஆண்டவர்கள் இவ்வுலகில் அவதரித்த திருநாளை
வேண்டிவ ணங்கித் துதித்து ஆடிமகிழ்வோம் - எங்கள்
ஆண்டவர்க்குப் பொங்கலிட்டுக் கூடிமகிழ்வோம் (106)

தேட்டுடையார் தெய்வம்மகிழ் மாட்டுஎழில் பொங்கலன்று
சீர்சிறக்க அமுதுபெற்றுச் சிந்தைகளிப்போம் - அமுதர்
பேர்துதித்துக் கும்மிகொட்டி விந்தைநிறைப்போம் (107)

திருத்தனிகை வள்ளலெனும் சீருயர்ந்த பாட்டையர்
அருள்மணியெம் ஐயருக்குப தேசம் அருள்நாள் - அது
பெருமைதரும் பிறவாநாட் பிறப்புத் திருநாள் (108)

ஆடுமேய்ப்புத் திருக்கோலம் பாசுபதத் தவக்கோலம்
நீடுபுகழ் பாசுபத சன்னதக்கோலம் - ஞானத்
தேடுடைய விண்மதியின் பூரணர் சீலம் (109)

இச்சையினால் நாமிழைத்த ஈனமெனும் பாசம்கெட
பிச்சையாண்டார் கோலத்திரு நாளையியற்றும் - நமது
அச்சமெலாம் தீரஅருள் தன்னை மிழற்றும் (110)

சீர்திகழும் தேவபிரான் பேர்புகழ்ந்து வாழ்த்திநிற்க
கார்த்திகைக் கங்கைவதனர் காட்சிதருவார் - வாழ்வின்
பூர்த்திநிலைக் கேகத்திருப் பாதம் அருள்வார் (111)

ஜீவன்முத்தி யோடுஇந்தத் தேகமுத்தியும் பெறவே
தேவரைப்பார வணக்கம் செய்து மகிழ்வோம் - அருள்
நாவரைப் பணிந்தனந்த ராகத் திகழ்வோம் (112)

சந்தக் குழிப்பு 4

ஜீவசிம் மாசன மேறிய காட்சியும்
தேவமெய்ஞ் ஞானச் செங்கோலதன் ஆட்சியும்
மேவரு நாவலரின் அருள்மாட்சியும் - சொல்லாலுரைக்க
யாவர் வலாரது செப்புதற் கொப்பாமோ! (113)

பற்பல சாதிகள் உற்பவமும் இறை
விற்பனர் காண்டலும் ஒப்பிடு சம்மதம்
அற்புதக் காட்சிகள் ஓங்கிடு மிக்கானம் - சொல்லாலுரைக்க
மெய்ப்பய னாரிடம் நற்புவி இத்தானம் (114)

தம்மத மேபெரி தென்ற வழக்கொழித்
தெம்மதமும் இறை சம்மத மென்றுரை
செம்மலென் நாயகர் தம்மெழில் தாள்போற்றி - எம்மாருயிர்க்கு
மெய்ம்மத மேதரு மன்னாதி போற்றி (115)

கற்றவ ரும்திற னுற்றவரும் கவி
கொற்றவ ரும்வலி பெற்றவரும் எங்கள்
சொற்றவ றாத்தனி கைசுதர் நற்றாளை - பற்றாகப்பற்றி
வெற்றி யெனும் மேடேறியிங் குற்றாரே (116)

செண்பக கந்தமி லங்கிடு மேனியர்
பண்புயர் அன்பக மேநிறை நாயகர்
ஒண்புக ழேபரவன்ப ரனந்தர்களான் - மெய்வாழ்வுணர்ந்து
விண்புகு மாகலை கண்டு தெளிந்தனராம் (117)

மக்களைத் தேவரெ னக்கனி வித்திட
திக்குக ளெட்டு மெழுந்தருள் செய்திடு
சொக்கரெ மக்குயி ருக்குயிரானவரே - மெய்க்கோகுலரை
சொர்க்கபதிப் பதத்துய்ந்திடு நற்றவரே (118)

வையக மாந்தரை வானக மேற்றிட
மெய்யுப தேசமும் மேனிலை வைப்புகள்
உய்யவ ரந்தரு ஓர்திரு மெய்த்தெய்வம் - கர்த்தாதிகர்த்தர்
கையகத் தாகிக் கனிந்து வணங்கிடுவோம் (119)

மூன்று வகைக்கொடு தாப மொழிந்தது
ஆன்ற மகிழ்வுடன் ஜீவப் பயணம்
தோன்றலர் அன்பர்கள் கொள்ளும் நற்பரிசே! - ஆதிசக்தி
ஈன்று புரந்தருள் இன்பநல முரசே! (120)

எங்கு மிலாதது என்றுமி லாதது
இங்குள தானது இன்று நன்றாயது
சங்கம மானது சாதிமதம் ஒன்றாய் - செய்தார்களெந்தை
எங்களு யிர்க்குயி ரானமெய் வழித்தெய்வம் (121)

அன்று மிருந்தது இன்றுமி ருப்பது
என்று மிருப்பது நன்றெடுத் தோதுவர்
இன்றி மறைந்து இருந்தமெய்ஞ் ஞானவழி - மெய்த்தெய்வம் வந்து
குன்றினி லேற்றி விளக்கு மருட்ஜோதி (122)

பொய்யுல கக்கொடு வீணர்கள் போலியர்
மெய்யர்கள் போல்புனை வேடமும் பூண்டவர்
வையக மாந்தரைக் கேட்டினி லோட்டினரே - அத்தீமை மாற
மெய்வழி தெய்வம் மேட்டினி லேற்றினரே (123)

வேதமெ லாமொரு சொல்லில் விளக்கிய
வேதியர் ஆதியர் நீதிமெய் நாயகர்
தீதகல் செந்நெறி காட்டிய ஆண்டவரே - தேவாதி தேவர்
பாதமு ளரிகள் பற்றியினி துய்வோம் (124)

சந்தக் குழிப்பு 1

தானானே தானானே தானானே நம்ம
சாலைமெய் யாண்டவர் தாள்பணிவோம்
வானார்ந்த மாதவர் பொன்னரங்கர் நாமம்
வாயார வாழ்த்திக்கும் மியடிப்போம் (125)

ஆயிரம் சூரியர் நாணும் அருள்முக
அண்ணலைப் போற்றிக்கும் மியடிப்போம்
தாயினும் மிக்கார் தயாளர் பிறைநுதல்
தன்னழ கெண்ணிக்கும் மியடிப்போம் (126)

இன்னருள் பொங்க எழில்திகழும் விழி
ஏந்தலை வாழ்த்திக்கும் மியடிப்போம்
தென்னா டுடைய சிவபரஞ் செஞ்சுடர்
தாள்பணிந்தே கும்மி கொட்டுங்கம்மா (127)

அம்மம்மா வாருங்கள் ஆண்டவரைப் போற்றி
ஆடிப்பா டிக்கும்மி கொட்டுங்கம்மா
செம்மாது ளைபோல்தி ருப்பல் அழகரைச்
சேவித்துக் கும்மியும் கொட்டுங்கம்மா (128)

வேதம ணிசிந்தும் கற்பூர வாசமே
வீசும் திருவாய்நற் றேன்மொழியார்
பாதமு ளரிகள் பற்றிப் பணிந்துமே
பாடிக் கும்மிய டிப்பம்மம்மா (129)

வெண்கலம் வார்த்து விளக்கிய பட்டொளி
வீசுமலர்ப் பதம் போற்றி செய்து
பண்களி லங்கிடப் பொன்னரங்கப் புகழ்
பாடிக் கும்மியும் கொட்டுங்கம்மா (130)

பெம்மான் பெருந்துறை மெய்வழி மேவிய
பேரான பேரர்நம் சாலையையர்
நம்மாருயிர்க்குயிர் நாயகர் பாதத்தை
நாவாரப் பாடிக்கும் மியடிப்போம் (131)

ஆனான பாட்டர் தனிகைச்செல் லத்தங்கம்
ஆண்டவர் தாள்போற்றிக் கும்மியடி
தேனான நான்மறை தந்துநமைக் காத்த
தெய்வத்தைப் போற்றிக் கும்மியடிப்போம் (132)

சாகாவரந் தந்த சாமி பதத்தினைச்
சிந்தை கனிந்து பணிந்திடுவோம்
வேகாமற் காத்து வினைதவிர் வேதியர்
வான்புகழ் பாடிக்கும் மியடிப்போம் (133)

ஊணுறக் கம்விட்டுப் பேணும் கச்சைகட்டி
ஓங்கித்த வம்செய் பலனனைத்தும்
வேணும்ந மக்கென மிக்கருள் பாலித்த
வேந்தரைப் பாடிக்கும் மியடிப்போம் (134)

வேதம் படியுங்கள் பாதம் பணியுங்கள்
வெற்றிகைக் கொண்டு மகிழுங்கம்மா
நாதர் திருவேதம் நாவில் தடம்விழ
நன்றாகப் பாடிக்கும் மியடிப்போம் (135)

மான்மியம் ஓதிட வாய்மணக்கும் நம்ம
வள்ளலை எண்ணும் நெஞ்சம் மணக்கும்
தேன்கனி வாக்கியச் சீருரை கேள்செவி
சீர்மணக்கும் கும்மி கொட்டுங்கம்மா (136)

தேடுமெய்க் கூடகம் நாடுநெஞ்ச மின்பம்
கூடுமதைப் பாடிக் கும்மியடி
ஈடிலா வான்புகழ் ஏந்தலைப் போற்றியே
இன்பக் களிபொங்கக் கும்மியடி (137)
ஆடும் மயில்போல் அனந்தர் குலத்தீரே
ஆண்டவரைப் போற்றி ஆடிடுவோம்
பாடும் குயில்கிளி போல் பரந்தாமரின்
பண்ணார் புகழ்பாடிக் கும்மியடி (138)

வாருங்கள் வாருங்கள் வள்ளலைப் பாடுங்கள்
வஞ்சஎமன் செய்யும் வாதனைபோம்
சீருங்களுக்கருள் மெய்வழி தெய்வத்தைத்
தெண்டனிட்டுக் கும்மி கொட்டுங்கம்மா (139)

எல்லோரும் வாருங்கள் பல்லாண்டு பாடுங்கள்
இன்ப வடிவரைப் போற்றிடு வோம்
வல்லாளர் பாட்டர் தனிகைவள்ளல் தந்த
மாதேவரைப் போற்றி ஆடிடுவோம் (140)

விண்பாங்கரசர் தென்பாங்கு இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!