திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/043.திருச்சதகம்

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



43. சதகம்[தொகு]

இலக்கணம்:-

சதம் என்ற சொல் நூறு என்று பொருள் படும். நூறு செய்யுள்களால் பாடப்பெறும் நூலாதலின் சதகம் எனப் பெறலாகிறது.

விழையும் ஒரு பொருள் மேலொரு நூறு
தழைய உரைத்தல் சதகம் என்ப
- இலக்கண விளக்கம் 847
அகப்பொருளொன்றன்மே லாதல்
புறப் பொருளொன்றன்மே லாதல்
கற்பித் தொருநூறு செய்யுள்
உரைப்பது சதகமா மென்ப
- முத்துவீரியம் 1117
சதகம் என்பது சதச் செய்யுளாலே
அகப்பொருள் புறப்பொருள்
இரண்டில் ஒன்று அறைதலே
- பிரபந்த தீபம் 81
விரவகப் பொருளொன் றன்மேலாத லாலுடன்
மேற்புறப் பொரு ளொன்றன்
மேலாதல் கற்பித்து நூறுசெயுளா கவே
விள்வதே சதகமென்ப
- பிரபந்த தீபிகை 26

தர்ம, அர்த்த, காம, மோட்சம் என்னும் புருடார்த்தங்களை அறம், பொருள், இன்பம், வீடு எனக் கூறுவர். இந்நான்கு பொருள்களின் மேலும் பொருள், இடம், காலம், தொழில் என்பவற்றை மனத்துட் கொண்டு பாடப்பெறுவது இப்பனுவல். எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் மெய் அறத்தையும், மெய்ப் பொருளையும், பேரின்பத்தையும், நித்திய வீடு பேற்றையும் அருள்பாலிக்க அவதாரம் செய்த முழுமுதற் பொருள். அவர்கள் அருளும் அவ்வான் கொடையாகிய மெய்வழியில் சார்தற்குரிய நெறியைப் பற்றிப் பாடுவதே இப்பனுவலின் நோக்கமாகுமென்க.

திருச்சதகம்

காப்பு

பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரியச்சந்த விருத்தம்

வேத நாயகர் மெய்வ ழித்திருச்
சாலை ஆண்டவர் வான்புகழ்
விண்ணில் மண்ணிலும் விளங்கி யோங்கவே
மென்சொன் மாலைபு னையவே
காத லாகினேன் கஞ்ச மென்மலர்த்
தாளில் கண்மலர் சாற்றினேன்
கர்த்தர் சொல்பொருள் தந்து செந்தமிழ்க்
கவிகள் பாடவே வரமருள்
மாதவா!தவ வாய்மை மிக்கொளிர்
மன்னு கோளரி வாளரே!
மகதியேஇந்த அகதியேஎன்னை
மகவென் றேற்றதோர் சுகபரா!
நீத மோங்கிடு நற்றவா! புவி
யுற்றவா!தவக் கொற்றவா!
நின்பதாம்புயம் சூடினேன்சிரம்
நல்லருள்புரிந் தாள்கவே

நூல்

(பதினான்கு கழிநெடிலடி ஆசியச் சந்த விருத்தம்)

ஆதி நாயகர் அன்று ஓர்இருட்
கோலமாக இருந்தவர்
யாவுமேபடைத் தார்கள் காத்தருள்
பாலித்துற்றிடு வேளையில்
பாதகக்கலி மாய்கை செய்திடப்
பாரோர் தீங்குகள் எய்திட
பண்பு யர்ந்திடு ஞான மாலியர்
பார்தி ருத்திடப் போமென
பூத லத்திடை போந்து மெய்ந்நெறி
போதகம் செயும் காலையில்
பொய்ம்மலிந்திடு புல்ல ரால்இடர்
பட்டனர் மேனி விட்டனர்
ஆதலால்முழு முதல்வர் ஆரெழில்
மேனிகொண்டவ தாரமே
ஆண்டவரெனும் நாமமேறினர்
அம்பு விபெறு பாக்யமே
(1)
அருவ மாயிருந் தாண்ட செம்மலோன்
உருவ மாய்வரு கோலமே
அன்னை தந்தையி லாதவர் இனி(து)
அன்னை தந்தை கொள் சீலமே
திருவு யர்ந்திடு சீர்ஜ மாலுசேன்
பெரிய தாய்திரு கருவிலே
சென்ற மர்ந்துமுந் நூறு நாள்தவம்
செய்து பொன்னெழில் உருவிலே
பெருகு நல்வளம் பொங்கித் தங்கெழில்
பைந்த மிழ்த்திரு நாட்டிலே
பொழில் வளர்திகழ் மார்க்க நன்னகர்
பெருந்த வத்தினர் மனையிலே
அருந்த வமுனி வோர்கள் தேவர்கள்
ஆர்ந்து நின்றெதிர் நோக்கவே
ஐய! தாங்கள் அவத ரித்தனிர்
ஆரு யிரெலாம் காக்கவே
(2)

ஆழி வாழிறை கயிலை மேவியர்
அருள்க னிந்தெமை ஆளவே!
அற்பு தஉஷைக் காலம் விண்ணிலே
அமிர்த வர்ஷிப்பு நேரமே
கோழி கூவிடும் குயில்கள் பாடிடும்
கிளிகள் கொஞ்சிடும் வேளையில்
கோதில் தேவர்கள் முனிவர் கர்த்தர்கள்
வாழிசோபனம் பாடவே!
ஊழி பேர்த்தெறி கோளரிதிரு
வாள்கைக் கொண்டமெய்ச் சாமியே!
உதய மாயினர் இதயமேவினர்
ஒண்சுடர் உயிர் ஓவியம்
வாழி சோபனம்! வாழிசோபனம்!
வாழி! மெய்வழி தெய்வமே!
வையகத்தினில் மாந்தர் யாவரும்
மெய்ம்மணம்கொண்டு உய்வமே!
(3)

இறையை வேண்டியே அருள்க ஆண்மக(வு)
என்று உள்ளம் உருகவே
இருபெ ரும்முது குரவர் நல்விழை
வேற்றனர் இறை எம்பிரான்
இறைவ ரேஅவர் கருவில் மேவியே
உதயம் செய்தமெய்த் தம்பிரான்
இனிது பெற்றவர் உற்றம் சுற்றமும்
எண்டிசைஉள மாந்தர்கள்
இறைகு ழவியை இன்ப மோங்குற
இனிது வாழ்த்தி மகிழ்ந்தனர்
இது நிகழ்ந்தது மார்கழித் திங்கள்
இருபத் தொன்பதாம் திகதியில்
நிறைஉ ஷையெனும் கால வேளையில்
நற்றவப்பிரான் உதயமே
நீணிலத்துயிர் யாவும் பேர்மகிழ்
வெய்துமே பளிங் கிதயமே
(4)

விதிகள் தம்மையே விதிக்கும் வானவர்
மெய்யர் மாதவர் ஊழியின்
விதியைத் தாம்வகுத் தந்த வீதியில்
வெற்றி நன்நடை போடுமே
கதியுயிர்க்கெலாம் கனிவொ டீந்திடு
கால மூலமெய்த் தேவரே!
காசினிக்குளே மாசிலாத்திரு
மேனி கொண்டவ தாரமே!
மதிநி திகொளு வான வள்ளலார்
மன்பதைவதி மாந்தரை
மறலி கைப்படா மெய்ம்மத்தினர்
ஆக்க வேண்டி யோர் நேரமே
புதிய வர்மிகப் பழமை யானவர்
பதி பசுக்கெலாம் நாயகர்
பொன்ன ரங்கமாம் என்னரங்கினில்
போந்த ருள்புரி தாயகர்
(5)

கிரக நாயகர் ஒன்ப தின்மரும்
கிளத்தும் தம்தம் வணக்கமே!
காசினி தனில் அவத ரித்துநும்
கட்டளைகட் கிணக்கமே!
உரம தாகவே உலக மாந்தருள்
தங்களின் அடியார்களாம்
உத்தம அனந் தாதினன் மனர்க்
குதவியாக இருப்பமே
சிரம் பணிந்திங்கண் செப்பியன்னவர்
செய்பணிக் கினி தேகினர்
தீதிலாதவர் செகத்தி னோர்க்கருள்
செய்யு மாதவத் தங்கமே
பரமரே உங்கள் பாத மென்மலர்
பற்றி உய்வது மெய்வழி
பல்கலைகட்கு அதிபதி தங்கள்
பதம்சரண் செய்தல் உய்வழி
(6)

தங்க விக்ரகமே தாலேலோ உயிர்
தங்குமாளிகையே! தாலேலோ
தரும தேவரே! தாலேலோ கற்ப
கத்த ருகனி தாலேலோ
எங்களாருயிர் இன்பமே இணை
ஈடில் மாதவர் தாலேலோ
இனிய நற்சுவைக் கட்டி வெல்லமே!
இன்ப வெள்ளமே! தாலேலோ
துங்கமார் நவரத்ன நற்சிலை
தூமணி மதி தாலேலோ
திருவுயர் அறிவாளர் தோத்தரி
தெய்வ மாமணி தாலேலோ
எங்க ளின்னுயிர்க் குற்ற நற்றுணை
இன்ப வாரிதி தாலேலோ
இணையில் பூம்பதம் ஏற்றியெம் சிரம்
இனித ணிந்தோமே தாலேலோ
(7)

நாளோர் மேனியெனும் பொழுதோர் வண்ணமும்
நற்குழவிவளர் பருவமாம்
நாழி யோர்மேனி கடிகையோர் வண்ணம்
நற்றவர் வளர் கோலமே
ஆள்கை செய்யும்எங்கள் அருமை வானரசு
அன்று சீரிளமைப் பருவமே
அன்பின் ஊற்றில் வளர் அறத்தின் செல்வரிவர்
அருண்மெய் மாதவரெம் அஞ்சுகம்
ஆளுடைப் பருவம் ஏழதான பொழு(து)
அனைத்துக் கல்விகலை யானவர்
அன்றனுப்பினரே கல்வி கற்கவென
அறிவின் நாயகரை அன்புடன்
தாள்கள் பூம்பதங்கள் தரைமகள் மகிழ
தங்கத் தேரெனவே ஊர்ந்தனர்
சர்வநற்கலையின் நாயகர் இனிது
சார்ந்தனர் திண்ணைப் பள்ளியே
(8)

வான வர்வய தொன்ப தாகுநாள்
மறிபசுக்களை மேய்ப்பராய்
வேணுகான மிசைத் தியற்றவே
மிக்கு பட்டி பெருகவே
கானகந்தனில் மேய்ப்பியற்று நாள்
கற்றனர் பல நூல்களை
குறிப்ப தாகவே மஃறி பத்தெனும்
மாலை யைமனனம் செய்தனர்
ஞான நூல்களை நன்கு கற்றுமெய்
நாட்ட மிக்கவ ராயினர்
நற்றி றன்விளை வாடல் பல்திறன்
நாயகர் என மேயினார்
ஆன கம்புசு ழற்றல் நீளவே
தாண்டல் பார்விளை யாட்டதும்
ஐயர் கற்றனர் சென்ற திக்கெலாம்
வெற்றி கைவரப் பெற்றனர்
(9)

நம்பி ரானின்ஊர் நாடெ லாமிவர்
நற்றிறன் கண்டு போற்றுமே
நயவு ரைகளும் தயவுடைச் செயல்
நற்பெயர்தனை ஈட்டுமே
“தம்பி” என்றன்பு பாச மோடவர்
தானழைத்து மகிழ்வுறும்
தாயும் தந்தையும் பெருமிதம் உற
தம் நடக்கையால் சீருறும்
வெம்பி வந்தவர் வேத னைதவிர்
மெல்லணைப் பினர் மாமணி
விவகரிப்பவர் தவறுணர்ந்திட
வழங்கும் தீர்ப்புகள் மதிமகன்
எம்பி ரானடல் ஏறு போல்பவர்
எட்டுத் திக்கும் புகழ்ந்திட
இணையில் நீதியர் எளியர் யாவர்க்கும்
துணைவ ராகத்தி திகழ்ந்தனர்
(10)

இருத மக்கையர் ஒருவர் தம்பியாய்
இயன்ற னர்உடன் பிறப்புகள்
ஈடி லாதவர்க்கு ஊர்உல கெலாம்
இணையும் சுற்றமும் நட்புமாய்
பெருகுமன்புடன் பணிவு மின்சொலும்
பெரியோர் கண்டுவி யக்குமே
பேதமில் குணம் நீதமார்செயல்
பெற்றுயர்ந்தனர் கொற்றவர்
திருமிகுந்திங்ஙன் திகழு நாளினில்
தொழுகை சீருறச் செய்வர்காண்
தேர்ந்த ஆலிம்கள் கண்டு மிக்கு
வியந் திடும்படி வணங்குமே
பெருகு நற்பெயர் புகழும் ஓங்கின
வயதுமே பதி னாறென
புவிபுரந்திடும் வேளாண்மையிலும்
பெரிதும் தாளாண்மை ஆற்றினர்
(11)

தோளாண்மைமிகு தோன்றல் எம்மிறை
செய்யும் சீர்தொழி லானது
தரணியோர்பசி தவிர்த்திடு உணவு
தான் வழங்குயர் மாட்சியார்
வேளாண்மைசெயும் ஆற்ற லர்மிகு
வெற்றி கைக்கொளும் கொற்றவர்
மெய்ம்மனத்தவர் உய்வழிதரு
வேத வேதியர் அந்தநாள்
தாளாண்மைமிகு தான்ய மேவிளை
தாட்டீகர் தமை இறையென
தானறிகிலார் தொழுகை தன்னையே
சரிகை நற்றிறத் தெளிவதாய்
ஆளாண் மைமிகு ஆற்ற லர்க்கிணை
ஆரும் கூறகி லாதவர்
அண்ணல் நெஞ்சமே தன்னையே உணர்
அறநெ றிதனை நண்ணுமே
(12)

தான்தான் அவ்விறை என்று ணர்கிலார்
தவமுனிவரைத் தேடியே
தலங்கள் காடுகள் மலைகெபிகளில்
சென்று அங்கங்கு அலைந்தனர்
வானவர் சபை தன்னிலன்று
வரைந்த வண்ணமே மாமுனி
வான்தனிகையர் விண்ணிருந்திந்த
வியனுகினிற் போதரும்
ஆனகர் எங்கள் அற்புதற்கென
ஆறு நூறெனும் ஆண்டுகள்
அத்தவமுனி காத்திருந்தனர்
அமுதத் தீந்தமிழ் நாடிதில்
தேனகம்இணை திவ்ய மங்கள
சீர்முகூர்த்த நன்னேரமே
தரணியில் வரும் நாள்தனைத் திரு
தனைநினைந் தெதிர் நோக்குமே
(13)

பொன்னின் மின்னொளிர் மேனியர் தமைப்
பூரணர் என அறியுநாள்
போதரும்வரை வேதநாதரும்
பெரியோர்சார்ந்திட விழைந்தனர்
தன்னைத் தானுணர் ஜீவசாட்சியர்
சார்ந்த பன்னிரு போலியர்
தவசி மாரென விளம்பி ஏய்க்கவும்
சிந்தை நொந்திவண் மாழ்கினர்
இன்ன வாரிது என்று ணர்கிலார்
இராஜ யோகமே நன்றென
ஈடுபட்டனர் பாடுமூலமாம்
வாதையால் இடர்ப் பட்டனர்
மன்னு வான்புகழ் மாமணியிங்ஙன்
வாரியில் துரும் பானநாள்
மணவினை யெனும் மங்கலத்திரு
வாய்த்து நல்லறம் செய்தனர்
(14)

மங்கயைர்தில கத்தினோடிவர்
மகிழ்ந்து வாழ்ந்துயர் மனையறம்
வரைந்த காலையில் மழலைச் செல்வமும்
வாய்த்து இன்பம் பெருக்குமே
செங்க மலத்திருத் தாள்மலரினர்
சகத்தில் செல்வமும் சேர்க்கவே
திருவுளம்கொண்டு வாணிபம் செயச்
சிந்து பூந்துறை நாடகத்
திங்களுர் காசுக் காரம்பாளையம்
சென்று தங்கினர்பிற்றை நாள்
சொல்வாணிபமே செய்யுமுன்னரே
நெல்வாணிபமே செய்தனர்
வெங்க டப்பநா யக்கர் மண்டியில்
நெல்லைக் கொள்முதல் செய்துமே
மேன்மை யாகவே விற்று லாபமும்
ஓங்கவே செல்வம் ஈட்டினர்
(15)

இங்ஙன் செல்வப் பெருக்கு டன்உறை
இனிய நாளினில் எங்கட்காய்
ஏரார் தனிகைநன் மணியர் வள்ளலார்
அங்கு போந்தனர் தங்கமாய்
திங்கள் மாமுகச் செல்வர் தம்மையே
தடுத்து ஆட்கொள்ளும் சிந்தையர்
சந்தித் தின்பமார் சாகரத்திடைச்
சேர்த்து ஆழ்த்தியாட் கொண்டனர்
பங்குனிப் பவுரணைநன் நாளினில்
பார்செழிக்குமெய் உதய நாள்
பானுசந்திரன் இணைந்து இன்பம்
பகிர்ந்த நாளிது மாந்தரீர்
எங்கள் தங்கமாம் இனிய கற்பகர்
ஈந்து முப்பொருள் தத்தமாய்
ஏற்ற செல்வமெங் கள்உயிருய
ஈய வேதுற வேற்றனர்
(16)

மாசிலாமணி மாது நன்மனை
மங்கை யர்தில கத்தையும்
மாணிக்கத் தவச்செல்வி பால்மண
மாறாப் பச்சிளம் குழவியும்
தேசுடன் உழைத்தரிது ஈட்டிய
செல்வப் பொற்குவை தன்னையும்
சுற்றம் உற்றமும் நட்பும் சீருயர்
தந்தை தாயைத் துறந்தனர்
தேசிகர்துற வேற்று வான்தனி
கைமணி வள்ளல் தம்மையே
தொடர்ந்து ஏகினர் உலகில் ஞானமார்
செங்கோலாட்சியை ஏற்கவே
பூசுரர் புகழ் பொன்ன ரங்கமாம்
பூலோககயி லாயத்தை
போற்றரியமெய் குண்டம்தன்னையே
புவியில் ஸ்தாபிக்க மேயினர்
(17)

கபட நாடகச் சூத்ர தாரியாம்
கண்ணியர் தவப் பாட்டையர்
கன்று தாய்ப்பசு தொடரு மாறுபோல்
கனிந்து போதரு மகவினை
நிபுண மாமணி நித்யர் செல்வரை
நங்கள் வான்குரு கொண்டலை
நீண்ட நாள் பழக் கமும்நட்புடை
நல்லூர் கள்வழி கூட்டியே
தம்மகவினை அழைத்து ஏகவும்
தமர்கள் சுற்றமும் புலம்பினர்
தனித்து ணர்வை ராக்யச் செல்வரைச்
சோதனை செய்து நோக்கினர்
ஜெபமதிமணிச் செல்வர் தேர்வினில்
ஜெயக்கொ டிதனை நாட்டினர்
சீருயர் ஞானத் தந்தைசிந்தையில்
சிறப்புடை யிடம் பெற்றனர்
(18)
பழகி வாழ்ந்தவூர் தாண்டியே பழ
காத ஊர்வழிச் சென்றனர்
பல்வளஞ் செறி கோயம்புத்துஊர்
பண்ணக ரினுட் சென்றனர்
முழுமுதல்வர்தம் குருபிரான்முனர்
மிக்கெளிமையைக் கொள்ளவே
மென்கரத்தணி ஐந்து மோதிரம்
பொன்அரைஞாணில் கோர்த்தனர்
அழகு நாயகர் அன்றணிந் திருந்
தணிகள் யாவையும் உருக்கியே
ஐந்து நூறுதுண் டாக்கிக் கொண்டனர்
அன்று வாதவூர் அடிகள்போன்ம்
எழில் குருபிரான் கைங்கர்யம் செய
இஃதுஓர் துணை என்றுமே
இனிய சிந்தையில் எண்ணும் எம்பிரான்
ஈடி லாமகிழ் வெய்தினர்
(19)

ஊர்ந கர்கடந் தேகும் சீருயர்
உத்தமர் இருபேருமே
ஓங்கி வான்தொடு தரு செறிந்திடு
இருள்பொ திவனத் தேகுமே
சீரி லங்குகு மாரர் என்றுமே
சென்று கண்டறி யாக்கொடும்
சீறுவெம்புலி மிருகம் பல்லுறை
சிந்தை அஞ்சிடு கானகம்
பேர்கதிர்கிர ணக்கதிர் புகா
பெரிய கானகத் தேகுநாள்
பாட்டன் வான்தனி கையர் மகவினைப்
பேணி வானமு தூட்டுமே
கார்முகில்அமர் உயர்மலைகளும்
கனிவளந் திகழ் சோலையும்
காடர் வேடர்கள் சேரி கள்கடந்
தேகும் குருபரர் குமரரும்
(20)

கன்று போல்தொடர் காளை எம்பிரான்
குரு தனிகையோ டேகுநாள்
கனிவுடன்அவர் மகவை நோக்கியே
கடந்த நாள்செயல் செப்பென
“அன்று ஓர்தினம் அத்தன் நண்பரின்
அரிய தோட்டத்திற் கேகுங்கால்
அன்னவர் வேங்கை வேட்டை நாய்வளர்
அன்ப ரென்று அறிகிலேன்
சென்ற காலையில் சீறு வேங்கைபோல்
சினமொடந்தநாய் பாய்ந்தது
சிந்தையஞ்சியோர் உத்தியா லதன்
செவ்வாய் தன்னைக் கிழித்தனன்
அன்றுமாளுமுன் அஃதென் மார்பெலாம்
ஆழமாய் கிழித்திட்டது
அந்த ஏமனின் வாயிலின் வரை
சென்று மீண்டனன் ஐயனே!”
(21)

மற்று மோர்முறை வெள்ளியங்கிரி
மலையில் மாமுனி உளரென
வஞ்சகன் உரை வண்ணமேகினேன்
வன்கொடி யரைக் கண்டனேன்
எற்றி வந்தோர் வழியி லோடினேன்
என்னை அன்னோன் தொடர்ந்தனன்
என்வழியது மாறி வெள்ளமார்
வாரியொன்றெதிர்ப் பட்டது
அற்றைநாள் கிணறு தாண்டுமாறுபோல்
அதனைத் தாண்டியே மீண்டனன்
அன்னோன் தப்பினாய் என்று சென்றனன்
அஃதுஓர்பேர் அபாயமே!
வெற்றி யன்றது வேதம் தாங்களே
வந்து காத்தனிர் அந்த நாள்
வேதநாயகர் சொன்மொழிகேட்டு
வேதியர் மனம் மாழ்கினார்
(22)

“கிணறு தாண்டுமோர் பழக்க மந்தநாள்
கல்லிடறியே வீழுங்கால்
காட்சி கண்டவர் கைகொடுத்தனர்
காத்து மீட்டனர் அன்புடன்”
குணமணியிது கூறக் கேட்டனர்
கொற்ற வர்தனி கைப்பிரான்
குரும ணியவர் அரூபமாய்நின்று
காத்த தைஇளங் குமரரும்
உணர லாயினர் உத்தமப்பிரான்
உடனிருந்தரென்று எண்ணியே
உள்ளம் மிக்கக் கசிந்தஎம்பிரான்
உவந்து தாளில் வணங்கினர்
கணமு மேபிரி யாதுஅந்தநாள்
காத்த மாட்சி வியந்தனர்
கன்றும் தாய்ப்பசு போலச் சென்றனர்
குமர ரும்குரு பரருமே
(23)

அன்றில் பேடென அண்ணல் செல்வரும்
ஆரண்யம்தனில் செல்லுநாள்
ஆங்கோர் ஏரிக் கரைவழி தனில்
அதிர வேங்கைவந் துற்றதே
குன்று வான்தனி கையர் அந்தவெங்
கொடும்புலி நோக்கிச் சென்றனர்
குமரர் அஞ்சியே குருபிரான்திருத்
தோள்கரம் கொண்டு தொட்டனர்
கன்றின் கைதட்டி விட்டு வள்ளலும்
கடிது முன்செல்ல லாயினார்
கான வேங்கைவந் தண்ணல் தாளினில்
கால் தலை வைத்துச் சென்றதே
நன்று காட்சிகண் டெம்பிரானுளம்
நடுக்க மும்வியப் பும்உறும்
நாதர் வான்தனி கையர் மாட்சிகாண்
நம்பி யுள்சிலிர்ப் புற்றதே
(24)

மேலும்பாட்டையர் வெம்பு லிகள்வாழ்
வனப்பகுதியுட் சென்றனர்
மங்தை மந்தையாய்ப் புலிகள் அங்கிங்கும்
வந்து செல்வதைக் கண்டனர்
கோலு மோர்புலி குறிவைத் தேஅங்கோர்
காட்டு மாட்டின்மேற் பாய்ந்ததே
கர்ஜனை செய வேங்கைக் கூட்டமே
கடித்து உண்ணவும் செய்தன
ஏல வல்லவர் அந்தக் கூட்டத்துள்
ஏக எம்மான் நடுங்கினர்
இனிய பாட்டையர் தம்கரம் கொண்டு
எம்பிரான் மேனி தொட்டனர்
கோல வேங்கைகள் மாம்ஸ வாடைக்கே
கூடிவந்து இடர் செயும்
குமர நம்முடல் வாடை யற்றது
கலங்கேல் என்றுரை செப்பினர்
(25)

அகில மேவலம் வருகு காலையில்
ஐயர் வான்தனி கைவள்ளல்
அணுக்கணமுமே படுத்துறங்கிலார்
அயர்வில் பண்பினர் அண்ணலே
மகவும் மாதவத் தந்தை யோடெழில்
மலைகுற் றாலத்தில் தங்குநாள்
வள்ளல் பாட்டையர் தவத்திலாழவே
மனுமக னங்கோர் பாழியில்
சுகம தாகவே நீந்தினார் கரை
யேறவே யியலாமலே
தவித்தனர் அது கண்டு வள்ளலும்
தந்துகை கரையேற்றினார்
அகநெகிழ்ந்திவர் கண்ணீர் வாரவே
அஞ்சி நின்றிடு வேளையில்
ஐயர் கன்னத்தில் தட்டித்தேற்றியே
ஆதரித்தனர் செல்வரை.
(26)

பின்னு மோர்வழி செல்லு காலையில்
பிட்டு வாங்கினர் நம்பிரான்
பெரியர் வள்ளலும் நீரிலாவழி
போகலாயினர் என்செயும்
மன்னு மாதவர் ஈரெண் நாட்கள்நீர்
வாய்ப்பிலா நெறி யேகிடும்
மகவு தாதையின் எண்ணம் ஓர்கிலார்
மற்று பின்தொடர்ந் தேகிடும்
“என்ன நின்மடி ஏற்ற” தென்னுமே
ஏந்தல் கேட்க 'பிட்'டென்றனர்
இருவ ரும்ஒரு குளக்கரை சென்று
அதனை நீர்நனைத் துண்டனர்
தென்னன் வெம்பசி சோதனை தனில்
தேறி னர்மனம் ஆறினர்
தனிகை யுள்ளம்தன் மகவி னற்பொறை
தன்னைக் கண்டு மகிழ்ந்ததே!
(27)

அத்தன் ஓர்வயல் வெளியிலேகுநாள்
அத்தி யின்மர வேரின்நீர்
ஆகம்வெம்மை தணிக்கு மஃதினைச்
சேகரித்திடச் சொற்றனர்
சித்தன் தம்பிரான் செப்பு வண்ணமே
சேக ரம்செய லாயினர்
செல்வ ரங்குள பண்ணை யில்பணி
செய்ய லாயினர் அங்கணோர்
மெத்த பேரெழில் மங்கை அங்குறு
மகளு மாயினர் வேளிர்க்கே
மிக்க ழகுடன் உழைப்புக ண்டிவர்
மருக ராக்கிக்கொள் வேட்கையர்
சித்த மேகலங் கந்தச் சேயிழை
செல்வர் தம்மை அணுகிட
சேக ரர்உடன் விலகியே விரைந்
தண்ணல் பால்வந்து சேர்ந்தனர்
(28)

முத்துப் பாண்டியர் தாதை சோதனை
மோகம் வெம்பசி பயமெனும்
மூன்றில் வென்றனர் ஆன்ற வள்ளலும்
மிக்கு நெஞ்சம் நிறைந்தனர்
எத்திறத்தினும் சோர்வுறார் மக
வென்று வைராக்யம் கண்டனர்
இளவ லுக்கிவர் மீண்டும் சோதனை
இனிய தனிகையர் வைத்தனர்
அத்தன் தன்னையே ஆங்கோர் பண்ணையில்
ஆடு மேய்ப்பினுக் காக்கினர்
ஆபர் ணம்மென அண்ணல் அப்பணி
அகமகிழ்வுடன் செய்தனர்
இத்தொழில்தனை இனிது ஓராண்டு
எம்பிரான் செய லாயினர்
எங்கள் பாட்டையர் மகவை மீட்டினி
தேகும்அப்பரங் குன்றிற்கே
(29)

திருப்ப ரங்கிரி மேற்கு நற்றிசை
தீஞ்சுவைச்சுனை இலங்கிடு
திருத்தவம் வளர் குகையிலண்ணலைச்
சேர்த்து பேரன்பு பொங்கவே
பெருந்து றைத்தனி கைப்பி ரானருள்
பெற்ற செல்வரை நோக்கியே
பெறலரும் பெரும் பேறு பெற்றிடப்
புரிக நற்றவம் என்றுமே
அருந்த வர்திரு ஆணை யிட்டனர்
அரிய வான்தவ உத்திகள்
அறிவு றுத்தியே அமர வைத்தனர்
அருண்ம ணியதை ஏற்றனர்
பெருந்தவக்குரு கொண்டல் தாம்குறிப்
பிட்ட வாறவர் மெய்த்தவம்
புரிய லாயினர் பெரிய வான்மணி
புவியும் வானுமே போற்றவே
(30)

ஆன்ம லோகமாம் அதனில் பாய்ந்துமே
அகமும் பிரமத்தில் ஊன்றினர்
ஐம்பு லன்கள் ஒடுக்கி ஓர்மையார்
ஆர்த்தவத்தினில் ஆழ்ந்தனர்
ஊன்உ ருகிட உள்ஒளிர்ந்திட
உடற்றும் பாசுப தத்தவம்
உத்த மர்தவ சித்தி யோங்கவே
உன்ன தம்மிகு சன்னதம்
வானோர் போற்றிட பன்னிரு வகை
வள்ளல் பொற்கரத் தேற்றனர்
வையம் வானினில் யாரும் பெற்றிடா
வான்ப ரிசதும் வாய்த்ததே
ஆனகர் இந்த அகிலம் உய்யவே
அரிய சன்னதா லங்கிர்தர்
அண்டர் நாயகர் தொண்டர் தாயகர்
அண்ணல் வெற்றிமே டேறினார்
(31)

தவத்தி லாழ்ந்திருந் தெழுகும் வேளையில்
தண் பனிஒரு காலமாம்
தகிக்கும் வெய்யிலும் மழையுமோர் காலம்
தங்க மேரெதும் கருதிலார்
பவனாம் எம்பிரான் பசித விர்த்திட
பசுமை யார்நாக தாளியின்
பட்டை சீவியே உண்டு மாதவம்
பண்ணும் சன்னதம் ஓங்கவே
புவியில் யாருமெக்கால மெங்குமே
பெற்றி டாநிலை யெய்தினர்
பொற்பதியர சான கோனவர்
போதம் செய்தவ நாதராம்
புவனத் தில்யுகத் தீர்ப்பு செய்யவும்
புதுயுகம் படைத் தாளவும்
பொன்மணி எங்கள் கண்மணி என்றும்
புரிய லாயினர் நற்றவம்
(32)

இன்ன னம்தவம் இயற்று காலையில்
எந்தை மந்திரச் சிந்தையர்
யாதோ தம்மை அசைத்தல் தானுணர்ந்(து)|r}}
ஏந்தல் கண்கள்ம லர்ந்தனர்
மன்னு வானவர் தனிகை வள்ளலார்
வந்தெ ழுந்தருள் கண்டனர்
மகவெ ழுந்துவ ணங்க முற்பட
வள்ளல் கையமர்த் திடும்
என்னைக் கொன்றிட எண்ணினீர் கொலோ
யாவர் நீவிரென் றோர்கிலிர்
இறைவன்நீர் தவத் துறைவன்நீர் எனை
ரட்சிக்கும் கர்த்தர் நீரலோ
நின்னைமுன்னறி விக்க வந்தனன்
நீர்முழுமுதல் நம்பனே
நேசரே தவ வாசரே அந்த
ஈசரே உமைத் தொழுகும்நான்.
(33)

“வைய கம்மிது உய்ய வந்தனிர்
மன்னு கோளரி வாளரே
வன்கலியுகம் மாற்றி யேபுது
வான்யுகம் படை யுன்னவே
பொய்ய கம்மது பொடிந்து மெய்யகம்
பொலிந்தி டஅருள் செய்குவீர்
புனித ரேஇறை மனித கோலமே
புனைந்து வந்தவர் நீரலோ
ஐய! நீரெனைப் பிரிந்து செல்லுமின்
அகில மெங்கணும் மெய்வழி
அதுது லங்கிட இறைவன் ஒன்றுதான்
குலமும் ஒன்றென நாட்டுமின்
தெய்வ மாயினீர் கண்மணி யுங்கள்
திருவு ரைத்தல்எ ளிது கொல்
செல்வமே! தவக் கல்வமே! இதைச்
சிந்தை யேலுமின் தங்கமே!”
(34)

இன்ன வாறவர் ஆணையிட்டிட
எம்பி ரானுளம் கலங்கியே
ஏது மேயறி யாத எந்தனை
இங்ஙன் செய்திட லாகுமோ
என்னசெய்குவேன் எங்கு செல்லுவேன்
எனைப்பி ரிந்திடேல் ஐயனே!
என்னு யிர்தரி யாது தங்களை
யான்பி ரிந்திடில் மெய்யனே!
இன்னு மேசில காலம் என்னுடன்
இருந்து உத்திகள் செப்புமின்
என்னை யாள்குரு கொண்ட லே!என
இருபதம் பணிந்த லமரும்
மன்னு மாமணி வள்ளல் மாதவ
மகவே! யானுனைப் பிரிந்திடேன்
மனிதர் காணுறா வடிவில் வந்துறும்
மயங்கி டேலெனத் தேற்றினர்
(35)

செல்லு மின்எனச் செப்பு வாசகம்
கொல்ல லானது எந்தையை
சீறுவேங்கைகள் திரியும் கானிலே
செல்லல் போலும் உணர்வுறும்
வல்ல பாட்டையர் வாய்மொழிக் குமோர்
மாறு சொல்வதும் உண்டுகொல்
மதிம ணிமனு மகவெழுந்துமே
வணங்கி யேவிடை பெற்றனர்
செல்லு மேயுடல் உயிர்பி ரிந்தபோல்
சிந்தை மந்திரத் தந்தையை
தவகு கையினில் விட்டு ஏகினர்
தெய்வ நாயகர் அந்தநாள்
எல்லையில் துயர் இதயமேவிட
என்செ யப்புகும் விண்மணி
என்ச கோதரர் மூவ ருக்குமில்
எந்த னுக்கிது வந்ததே!
(36)

பெடைபி ரிந்திடு அன்றி லோதசை
பிரிந்து வீழ்ந்திடு நகமதோ
பெற்ற வள்பிரி குழவி யோஒளி
பெற்றி ழந்திடு கண்ணதோ
படையி ழந்திடு மறவனோ பெருங்
கடல்வி ழுந்தலை துரும்பதோ
பரும ரக்கலம் தலைவ னின்றியே
திசையும் தப்பிய பான்மையோ
நடைமெ லிந்து உடல்த ளர்ந்ததே
நம்பிரானுளம் நைந்ததே
நங்கு ருபரர் தன்னை யேபிரி
நம்பி யின்துயர்க் கோலமோ
விடைகொடுத்த மெய்க் குருவின் கட்டளை
மேவி யுற்றது நெஞ்சிலே
வெம்பியேயுளம் விம்மி ஏகினர்
வேதி யர்மது ராபுரி.
(37)

பார்த்த முகமெலாம் வேற்று முகங்கள்மெய்ப்
பண்ப றிந்திடா மக்களாம்
பகரு ஞானமெய்ம் மணிமொ ழிகளைப்
பரிந்து கேட்டிடா நெஞ்சினர்
கூர்த்த மதியினர் கோட்டைச் சுவர்அரு
கோரம் மகிழம ரத்தடி
கொண்டல் பெய்மழை போலும் பேசிட
கேட்போர் நன்றெனப் போயினார்
ஆர்த்த நெஞ்சொடு அந்திக் கடைஉறை
அறவோ ரென்னும்பொய்த் துறவோர்பால்
அண்ணல் பேசிட அணுவும் ஏற்றிலர்
அந்தப் பேதையர் போதையர்
வேர்த்த துள்ளமும் விமலரும்திருப்
புத்து ஊரினுக் கேகினர்
மென்ம னத்தவர் சிந்தை யேகவர்
மெய்ம்மை பேசிடும் அண்ணலார்
(38)

காலை மாலையில் மக்கள் கூடிடும்
களங்கள் தலங்களில் ப்ரசங்கமே
கர்த்த ரும்பல ஊர்கள் சென்றுமே
கதிபெ றும்வகை செப்புமே
ஏல வல்லவர் இங்ஙன் பேசுகால்
ஏற்ற னர்சில சீடர்கள்
இஃத றிந்தனர் உம்மு சல்அம்மா
என்னு மாதர் திலகமும்
வால மெய்க்குரு என்று தன்மண
வாள ரோடவர் வந்தனர்
மற்று தன்மக னோடு சீடராய்
மாதவர் தனைப் பேணினர்
சீல மிக்கவர் செவ்வியர் பலர்
சீட ராயினர் அந்தநாள்
சில்மிஷம் செயும் அரக்கர் கூட்டமும்
தீங்கு செய்யமு னைந்தனர்
(39)

ஆண்ட வர்என அழைக்க லாயினர்
அன்று வந்தமெய்ச் சீடர்கள்
அஃதறிந் தஓர் அச்சுச் சாலையன்
அரக்கன் தீமைகள் செய்தனன்
ஆண்ட வர்திரு நாமம் போற்றலை
அவனி கழ்ந்துஓர் அறிக்கையை
ஆஸ்ர மம்தனில் கொண்டு போட்டனன்
அறிந்த சீடர்கள் கொதித்தனர்
தீண்டு தீமை தவிர்க்க நீதியின்
சீர்மன் றந்தனில் வழக்கினை
தொடுத்தனர் உளம் தடுத்தனர் நீதித்
தீர்ப்பு சாதக மானதே
ஆண்ட வரெனக் கையெ ழுத்திட
அந்த நீதியின் பதிசொல
அன்று தொட்டது என்றும் நின்றது
ஆண்டவர் திரு நாமமே.
(40)

அமுதம் தோன்றிடும் அவ்வி டத்திலே
அந்த நஞ்சுமே தோன்றுமாம்
அமரர் கோன்நம தையர் தோன்றுகால்
அரக்க ரும்வர லாயினர்
குமுத வாய்மலர் மறைபொ ழிந்திடு
கோம கன்புகழ் கண்டுமே
கொடிய பாதகர் நாற்ப தின்மர்கள்
கொடுமை செய்திடப் போந்தனர்
தமதுயிர்க்குயிர்த் தாயகம் எனச்
சற்றும் ஓர்கிலார் வஞ்சகர்
தடிகள் வேல்களும் தாங்கி வந்தனர்
சாமி யாஸ்ரமம் நோக்கியே
எமது ஐயர் ஓர்தூண் பிடுங்கியே
எதிர்வரக் கண்ட நீசர்கள்
எடுத்தனர் அஞ்சி ஓடுங்காலையில்
எல்லோ ரும்காயம் பட்டனர்
(41)

காவ லானபுராத னர்நமைக்
காக்க வந்தவர் வேதியர்
காக்கவந்தோரைத் தாக்கவந்த
கபோதி யர்குழு அங்ஙனே
காவ லின்நிலை யம்சென் றாண்டவர்
காயம் செய்தனர் என்றனர்
காவ லர்அதன் உண்மை கண்டப
ராதம் தண்டனை தந்தனர்
பூவுலகினிற் பொய்மறைத்திட
மெய்ந்நிறைத்திட வந்தவர்
பொற்ப திக்கு அரசர் நெஞ்சமே
புண்படச் செயும் பாதகர்
மாவலார் நம்மின் மன்னு கோளரி
வாள ரின்தவ வாழ்விலே
வந்த துன்பம் நினைத்திடி லந்த
மலையு ருகிடும் அந்தகோ!
(42)

மையை வைத்திவர் மக்க ளைக்கவர்
கின்ற னரென்று ஓர்கதை
மட்டி மாந்தர்கள் கட்டி விட்டனர்
மக்களும் அதை நம்பினர்
வெய்ய வீணர்கள் கூடிப் பேசிமேல்
வீழ்ந்து பற்றிட எண்ணியே
வெறுந் தடியர்கள் கொடும டையர்கள்
மாத வர்பால் வந்தணுகினர்
ஐயன் இஃதை அறிந்தது லங்கோடு
அவிழ்த்து விட்டனர் அங்ஙனே
அற்பர் ஒருவர்மேல் ஒருவர் வீழ்ந்துமே
அவர்க்கு ளேபெரும் அடிதடி
துய்ய வான்மதி தேவ தேவேசர்
தீய ரால்படு துயர்களை
திரைக டலது கேட்பின் வற்றிடும்
தெய்வ நாயகர் சகித்தனர்
(43)

அண்ணல் ராஜகம் பீரத் துற்றகால்
அங்கெ திர்த்தனர் அரக்கர்கள்
அழியும் பாவியர் ஆயு தங்களோ
டாஸ்ர மம்நாடி வந்தனர்
விண்ண வர்சீடர் வீர வேங்கைகள்
வாளு டன்எதிர்த் தேறுற
வீணர் அஞ்சியே தலைதெ றித்திட
விரைந்து ஓடியே மறைந்தனர்
எண்ணி வஞ்சகன் ஈன காதகன்
எம்பிரான் ஆஸ்ரமத் துள்ளுற
எரிகொளுவினன் சாமி உத்தியால்
எட்டிக் கூரையை வெட்டியே
வண்ண மாகவே தப்பி ஏகினர்
மாதவர்காரைக் காலுக்கே
வஞ்ச கர்குடி கெட்டதே அவர்
வாழ்வெ லாம்எரி பட்டதே
(44)

இவ்வணம்தவ ராஜர் அவ்விடத்
தெண்ணி லாஇடர் பட்டனர்
இந்நி லைதனில் எங்கள் பாட்டையர்
இனிது சேர்ந்தங்கு உற்றனர்
தங்க மேருடன் இரண்டு நாட்களே
தங்கியே உரை யாடிடும்
தாதை மூலமாம் நாடு செல்வதாய்
தம்மகவிடம் செப்பினர்
துங்க மாமணி பிரிவை எண்ணியே
துடிதுடித்தனர் நெஞ்சமே
தோன்றல் இன்னுமித் தூலம் தன்னைச்
சுமக்க வேண்டுமோ சொல்லெனப்
பொங்கு மன்பினர் காரை யூரெனும்
பொட்டலின் வரை சென்றனர்
பொட்டெனத் தோற்றம் மறைந்த போதெம்மான்
புழுதி யிற்புரண் டழுதனர்
(45)

இந்த வோர்நிகழ் வின்பின் னர்ஐயர்கோன்
ஏகி னர்பி ரான்மலை
ஈடி லாததோர் ஆழ்த வத்தினில்
இனிது மூழ்கினர் மாதவர்
அந்த நாளொரு பெண்துறவியும்
அங்கு வந்தது கண்டனர்
அம்மை யும்வியந் தங்க மர்ந்திட
ஐயரும் தவம் கலைந்தனர்
அந்த மாதின்ஊர் ராஜ கம்பீரம்
அண்ண லைவர வேண்டினர்
அரங்க ரும்அதை ஏற்றங் கேகியோர்
ஆஸ்ர மும்அரி தமைத்தனர்
விந்தை மாதந்த சாமியா ரம்மா
மற்று சுற்றமும் சீடராய்
விமலர் தாளினிற் சார்ந்தனர் அங்கு
விளைந்த னஞான வித்துகள்
(46)

இங்கு இன்னவா றிருக்கு காலையில்
இனிய திருப்புத்தூர் சீடர்கள்
ஏந்தி ழைஉம்மு சல்அம் மாவுமே
ஏந்த லைக்காணா தேங்கினர்
எங்குச் சென்றனர் என்ன வாயினர்
என்று அங்கிங்கும் தேடினர்
இராஜகம்பீரத்து ற்றனரெனக் கண்(டு)
இங்கு வந்து புலம்பினர்
எங்கள் நாயகர் உங்கள் தாயகர்
என்றி வர்க்குள் விவாதமே
அங்குவந்திட வேண்டி உம்முசல்
அம்மை அழுதுமே அரற்றினர்
இங்குமங்கும் இருப்பம் என்றெம்மான்
இருவர்க் கும்உரை செப்பினர்
ஏந்தல் மீண்டும் திருப்புத் தூர்வந்து
இனிது செங்கோலும் ஓச்சினர்
(47)

தங்க மேருவைச் சார்ந்த சீடருள்
தாய்க்கு லங்களும் சேர்ந்தனர்
தம்பெண் சீடர்க்காய் நற்றுணை செய
தாமோர் பெண்மணி தேடினர்
எங்கள் உம்மு சல்அம்மைக் கோர்மகள்
இனிய சம்சுமா தென்பர்காண்
இமைய வர்க்குற்ற உமையவள் எனும்
ராஜ லட்சண ஏந்திழை
பொங்கு மன்புடைச் சீடர் உம்முசல்
அம்மையாரிடம் சென்றனர்
பெண்மகட் கொடை கேட்டனர் அம்மை
பெறுக காணிக்கை யாயெனும்
சங்கு சக்கர தாரிக்கு இங்கோர்
தாரம் வாய்த்தது காண்மினே
தாதை அன்னவர் பனிமதி நாச்சி
என்று நாமமும் சூட்டினர்
(48)

மங்கை மங்கள மணவி னைக்கென
மாது உம்முசல் முந்துநாள்
மற்றுஅன்னவர் உறவுசுற்றமும்
மாறு கொண்டுஎ திர்த்தனர்
எங்கள் தங்கத்தை காணிக் கையென
ஈந்து விட்டேன்அ தனையே
எதிர்ப்ப வர்என்ன ஏது செய்யினும்
இஃது நில்லாது என்றனர்
மங்கலப்பட்டு மறுத்து வெண்துகில்
மாதர சிக்கணி வித்தனர்
மக்கள் கூட்டமும் மனம றுகினர்
விருந்து ஏற்றிலர் ஏகினர்
பொங்கு மாதவர் மணமு டிந்ததும்
போயி னர்பர்மா நாட்டிற்கே
போனவர் மீண்டு வந்திலா ரென்று
புலம்பியா வரும் வருந்தினர்
இங்கு மாப்பிள்ளை பெண்ணை விட்டுமே
(49)
ஏகி னாரெனத் தூற்றினர்
இருள் கவிந்தபோல் கவலை யுற்றிவண்
யாவரும் மன மறுகினர்
சிங்க மொத்தவர் செம்ம லோனிங்கு
திரும்பி வந்தசின் னாட் சென்று
சேயி ழைக்கென ஹஜ்ஜு யாத்திரைச்
சீருடை கொண்டு வந்தனர்
தங்கமேருவும் எங்கள் நாச்சியும்
ஹஜ்ஜு யாத்திரை சென்றனர்
தங்கள் மங்கையை விற்கச்சென்றுளார்
என்று ஊர்அலர் தூற்றினர்
பொங்கு மாதவர் தங்க நாச்சியைப்
பொன்போல் போற்றிக் கொண்டேகுநாள்
புண்ணிய மக்காப் பொற்ப திக்கவர்
போய்த் தொழுகையும் செய்தனர்
(50)

அங்கு வந்த திருப்புத் தூரினர்
அம்பல காரர் தம்மையே
அம்மை கண்டுதன் அத்தா அம்மைக்கு
அரிய செய்திகள் செப்பினர்
இங்கு வந்தவர் செய்தி சொன்னதும்
யாவ ரும்மிக மகிழ்ந்தனர்
ஏசி னோர்களும் பேசினோர்கரும்
ஈன வாய்தனை மூடினர்
மங்கை பங்கரும் தங்க நாச்சியும்
மதினா சென்றுமே தொழுதனர்
மதிமணிகுரு மணிமாலை தனை
மாநபி கட்கு சூட்டினர்
திங்கள் மாமுகச் செல்வர் அம்மையும்
திரும்புங் கால்பம் பாயிலே
சீர்சி றப்புகள் செய்யப் பெற்றுமே
சேர்ந்த னர்தமிழ் நாடகம்
(51)

இன்ன னம்சில காலம் இங்கிருந்(து)
ஏந்திழை பனிமதி மணிக்(கு)
இடர்தவிர்த்திடுவில் வித்தை தனை
எம்பி ரானும்கற் பித்தனர்
அன்னை வில்லினை ஆளும் தன்மையில்
அளவி லாத்திறம் பெற்றனர்
அண்ணல் அன்னையை அழைத்து நைமிச
ஆரண் யம்செல லாயினர்
பொன்னர் முன்செல வில்லைத் தோள்தரித்(து)
அன்னை பின்செல லாயினர்
பிரானு ரைத்தந்த கூர்மமாம் குகை
போய டைந்தனர் இருவரும்
இன்னல் செய்புலி அங்கு வாழ்ந்திட
எம்பி ரானொரு உத்தியால்
ஏகச்செய்து அக்குகை தனிலிருந்(து)
எம்பிரான் தவம் ஆற்றினர்
(52)

அங்கு மாதவம் ஆற்று காலையில்
ஆரு யிர்க்குயிர் ஆனவர்
அடர்ந்தங் கேவிளை வாழை யின்கனி
அதுப றித்திடச் செல்லுகால்
தங்கு ஈரம் சதுப்பு சேர்குழி
தானிழுக்கவும் மூழ்கவே
தாயி ழுக்கவும் பூமி மாதவள்
தன்க ணவரென் றேசொல
அங்கி ருவரும் சகக ளத்திகள்
அமர்புரிந்தபோல் ஆனது
அண்ணல் காந்தக்கோல் ஊன்றி மேலெழ
அன்னை பனிமதி வென்றனர்
பொங்கு பூரணர் குருமுறாதியும்
முரீதுச் சுருக்கம்ஞா னக்குறள்
பொற்க ரத்தினா லியற்றியே கொடு
போந் தனர்உயிர்ப் பரிசென
(53)

பாயும் வெம்புலி பண்ணவர்தமைப்
பார்த்தும் பாய்ந்திலா தேகுமாம்
பசித விர்த்திடக் கான கக்கனி
பங்கு கொண்டன பார்மினே
தாயும் வில்லுடன் காவல் காக்கவும்
தந்தை யார்தவம் செய்தனர்
தஞ்சமென்றவர் நெஞ்சகம் வளர்
சாமி நேமிசார் கானகம்
தாயார் அன்ன விருப்பமே சொல
தந்தை மூங்கில்நெல் அரிசியால்
தனலெழுப்பியே உணவு செய்தனர்
சாதுர்யம் என்ன சொல்லுகேன்
ஆய்க லைக்கு அதிபர் தாயுடன்
ஆர்ம கிழ்மரம் பூத்தகால்
ஆண்டு ஒன்றது ஆனதே என்று
அறிந்து நாடு திரும்பினர்
(54)

இன்ன வாறெலாம் இயலு காலையின்
எம்பிரான் மைசூர் ஏகவே
எத்த னித்தனர் ரயலி லேறினர்
இனிய சீடர்கள் ஓடிவந்(து)
அன்னை யே!எம தப்பனே! செல்லேல்
ஆரு யிர்தனின் நற்றுணை
அடியேம் உங்களைப் பேணு வோமினி
அணுவு மேஅக லோமினி
வின்னம் செய்ய வரும ரக்கரை
வீர வேங்கைகள் வெல்லுவோம்
விண்ண வாஇசைப் பண்ண காஎமை
விட்டு ஏகச் சகித்திலோம்
தென்ன வர்பே ராசை வாரியர்
சீடர்க் காகவே மீண்டனர்
செந்த மிழ்மது ராபு ரிதனில்
செய்வம் கற்றளி என்றனர்
(55)

வேதம் யாவுமே போற்றி ஏற்றிடும்
வேதியர் தவ நீதியர்
விண்ண வர்க்குக்கல் லால யம்செய
மக்கட் கோலை விடுத்தனர்
சேத மில்தவச் செல்வர் போந்தனர்
திருமுன் காணிக்கை குவிந்தன
சீர்ப ரன்மேடு தன்னி லேஇது
செய்ய முந்துமெங் கோமகன்
ஆதி நாதருக் காலயப் பணி
ஆற்ற அன்பர்கள் கூடினர்
அன்பொ டும்இறை பண்பொ டும்நிஜ
தென்பொ டும்பணி யாற்றினர்
மூது ரையருள் மங்கை பங்கரின்
வெற்றி யார்பொன் னரங்கமே
வேகமாக வளர்ந்ததே எங்கள்
வெற்றி வேலர்மேற் பார்வையில்
(56)

மண்ம ரமெதும் சேர்ந்தி டாவளர்
மாத வர்திரு ஆலயம்
மக்கள் கூடியே மகிழ்ந்து வான்வரம்
வழங்க வாங்கியே உய்ந்தனர்
விண்ண வர்அறு பத்து நான்கடி
விளங்கு மோர்கம் பத்தே கொடி
மின்னி யேறிட விண்த டாவிட
வெற்றி கூறுசா லைக்கொடி
கண்ண கன்புவி யெங்கு மெய்வழி
கண்டு உய்ந்திட வருகென
கழறி யஃதும்கை யசையும் போலுமே
காமிலின் கொடி ஏறிற்றே!
எண்ணி லாப்பணி யாளர் கூடியே
இயலும் பொன்னரங் காலயம்
ஈடி லாதவர் நாடி வந்தருட்
கோடி ஈய்ந்திடு ஆலயம்
(57)

ஆல யம்திரு மாளி கைமிகு
அன்பர் வாழ்திரு மனைகளும்
அணிகு லுங்கினிய கனிகு லுங்கிவளர்
அழகு பொங்கருமை சோலையும்
கோலமாயிலகு தேவதேவர் அர
சோச்சும் கோதிலெழில் ஆலயம்
கொற்றவர் பதத்தில் நற்றவர் பணிய
கொலுவி ருக்கும்தவ ஆலயம்
சீல மோங்கஇறை செல்வம் பொங்கஅருள்
சீர னந்தர்பணி ஆலயம்
சித்தர் முத்தர்ரிஷி தேவர் மாமுனிவர்
சேர வந்திலகு ஆலயம்
ஆல முண்டஅரன் கோலம் கொண்டுவந்து
அறம்பு ரிந்து திகழ் ஆலயம்
அண்டர் தொண்டர்அனை வர்க்கு மிப்புவியில்
அடைக்கலம் தருகுமாலயம்
(58)

தென்னனெம்பிரான் பொன்னரங்கினில்
செங்கோ லோச்சிடு நாளினில்
சேனைவீரர்கள் போர்ப் பயிற்சிக்காய்
திரண்டுவந்திங் கிறங்கினர்
அன்னவர்க்குறு தலைவன் வந்திங்கு
ஆலயம்தனைப் பார்த்தனன்
ஆலயம்மிது போர்ப்படைக்கலம்
அடக்கிவைத்திட தகுதியாம்
சின்ன நெஞ்சினன் அரசினர்க்கிது
தெரியவைத்தனன் மிரட்டினால்
செல்வரிங்குளோர் அஞ்சிடும் மெனச்
சிந்தை யில்சிறு திட்டமே
என்ன பண்ணியும் யாரும் அஞ்சிலார்
இங்கு யாரும் நெருங்கிலர்
ஈனன் அன்னவன் மாற்றம் பெற்றனன்
இனிய னொருவனும் வந்தனன்
(59)

அடுத்து வந்தவன் சீக்கி யன்இறை
அறமு ணர்ந்தவன் ஆகலான்
ஆண்ட வர்திருச் சன்னி திவந்து
அமைதி யாக வணங்கினன்
எடுத்துரை எம்மான் இயம்பு காலையில்
எம்பி ரான்கர அசைவுகண்(டு)
“ஹம்மா ரேகுரு நானக்” என்றவன்
கூவி மீண்டும் பணிந்தனன்
எடுத்து வந்தனன் மெல்லிய சல்லா
இறைவர் முன்சமர்ப் பித்தனன்
எங்க ளையரைச் சாரட் வண்டியில்
ஏற்றி ஊர்வலம் செய்தனன்
அடுத்து வைசிராய்க் கன்புடன் இது
ஆலயம் மென்ற றிவித்தனன்
அவனும் ஒப்பியே பணிந்து வேண்டியே
கிரயம் தந்ததைப் பெற்றனன்
(60)

அரசி னைஎதிர்த்தாள வோஅது
ஆகு மோஎன அண்ணலும்
அன்று ஞானியர் இறுதி நாளினை
ஆழ்ந்து எண்ணினர் பின்னரே
அரசு வேண்டிய வாறு ஆலயம்
அன்ன வர்க்கு அளித்தனர்
அரசு தந்ததொ கைதனை எமது
ஆதி நாதரும் எற்றனர்
பரசுகம் தரும் பரமனார் எங்கு
போய மர்வதென் றெண்ணினர்
பண்டை ஊழி விதியி தவர்தமைப்
பாங்குடன் அழைத் தேகுமே
பரன் தமிழ்வளர் புதுமைக் கோட்டையின்
ஊற லின்மலை மேற்றிசைப்
பாப்ப நாச்சிக் குளத்தின் காட்டினில்
பொன்ன ரங்கம் ஸ்தாபித்தனர்
(61)

அங்கு ஊற்றுகள் பெருகு ஓடைகள்
அருகுசார் பொழில் மலர்ந்துள
அரிய நீர்நிலை அடர்ந்த கானகம்
அரவு ஆமைகள் விலங்குகள்
புங்கு பூளையும் புரச சோகுகள்
புளியும் அத்தி காசாம்புடன்
படர்கொ டிதரு குடைவே லாமரம்
பனைவி ராலியும் ஆவிரை
தங்கு பாறைகள் குன்று மாவனம்
சரிவு பூந்தரு பொலிவுற
தரைத ருகொடி நீர்ம லர்களும்
தங்கள் ஆர்மணம் வீசியே
எங்க ளைப்படை இறைவ ரேந்தலே!
இனிது வருகவே! வருகவே!
என்றுமுள்ளநீர் உலகமுய்யவே
இங்கு வருகென வேண்டுமே!
(62)

மெய்வ ழித்தவ நாயகர் இங்ஙண்
மேவ லானது மங்ஙணே
விண்பொ ழிந்தது மண்கு ளிர்ந்தது
மக்க ளுள்ளம் மலர்ந்தது
ஐயன் வந்ததி னாலி தானதென்
றார்ப்பரித் தருகூர் உளோர்
ஆடல் பாடல்கள் மேளதாளங்க
ளோடு வந்து வணங்கினர்
தெய்வம் வந்ததும் மயில்க ளாடின
குயில்கள் கூவின கிளிகளும்
கொஞ்சி விஞ்சின புட்குலங் களும்
கூடி யாடுமான் மரைகளும்
வையம் வானகம் உய்யும் என்றுமே
வானோர் கானமும் பாடினர்
வேத கால மலர்ந்த திங்கணே
வெற்றி வாழ்வினில் என்றுமே
(63)

இறுதி நாளினின் தீர்ப்பு நாயகர்
எங்க ளையரோ டிங்கனே
இனிது போந்தவர் ஏர னந்தர்கள்
யாவரும் இனி தொன்றியே
உறுதி யாய்த்திருப் பணிக ளாற்றியே
உவந்நு கல்முள்ள கற்றியே
ஓங்கு மெய்வளர் சாலை செய்தனர்
உலகி தன்ஒரே புகலிடம்
அறுதி யாய்மறை அறையும் தீர்ப்பது
அந்த ஏமனின் கைப்படா
அந்த நாட்டினின் வித்த தாவது
அரன்த யவினா லாவது
மறுவில் மாதவர் மகதி ஐயரின்
மாட்சி ஓங்கிடும் ஆட்சியே
வரந்தரு திருமாத வர்திகழ்
வானோர் பொன்னரங் கம்மிதே
(64)

இறைவ னுக்கென வகுத்த திவ்விடம்
எவரின் பாதம்ப டாதது
இனம்ம தம்குலம் யாவும் ஒன்றியே
இணையும் சமரசத் தலமிது
மறைகள் ஆகமம் வேத கீதங்கள்
முடிபு னையிடம் இங்குதான்
மணிமொ ழியரின் கனிமொ ழிபொழி
மன்றி லங்குதல் இப்பதி
நிறைவ டைந்துயிர் நித்ய வாழ்வடை
நிகரி லாநகர் காண்மினே
நீதி நாயகர் வேத தாயகர்
நற்ற வம்புரி தேனகம்
துறையி தேகரை யேறி மன்னுயிர்
துயர றுபொழில் இதுஅறி
துரிய மேறிடு அரிய வான்மனு
தெய்வ ஆலயம் அறிமினோ!
(65)

சீலர் ஆண்டவர் ஆல யம்குடில்
தென்னை ஓலையால் வேய்ந்தது
சீரு றும்சுவர் மண்ணிலானது
சீரனாந்தர் வாழ் பொன்குடில்
ஏலவல்லவர் உயிர்ப்பயிர் செயும்
இன்பமார் நிலம் இங்குதான்
இறைமெய் ஞ்ஞானமும் மறைதுலங்கலும்
ஈடி லாதபூ கயிலையாம்
கோல மாகவே மதங்கள் கூடியே
குலவு மெய்குண்டம் இஃ.துதான்
குருவ ரோதயர் அருள்ம காநிதி
கொண்ட லின்பதி காண்மினோ!
ஆலமுண்டவர் காலனைவென்று
அழிவிலா நிலை தலமிதே!
அன்பதே சிவம் என்றுணர்ந்திடு
அரனின் மெய்த்தவ ஆலயம்
(66)

உலக முய்ந்திட அவதரித்தவர்
உத்தமர் புரு ஷோத்தமர்
ஒன்று தானிறை ஒன்ற தேகுலம்
என்று நன்றுநி றுவிடும்
உலகம் யாவையும் படைத்துக் காத்திடு
ஒருதனிமுதல் உருவுடன்
உய்வ ழிதருமெய்வ ழிதனை
உண்டுபண்ணிய மெய்த்தவர்
அலகி லாவலி மைசிறந்தவர்
அந்தகன் தனை வென்றவர்
ஆண்ட வர்தமை அண்டி வந்தவர்க்(கு)
அழிவிலா வரம் தருகுவர்
குலகுரு குபேரர் கொண்டலர்
கோடி கோடி கடந்தவர்
கோதறுங்குடி மெய்வழிதரு
கொண்டல் மெய்வழி ஆண்டவர்
(67)

புலையெனும் அழி புண்ணை உண்டிடு
பேதையர் தமை மாற்றியே
பேய்மை கொள்உயிர் கொலை வெறித்தன
கொடுமை தீக்குணம் விரட்டியே
நலமெனச் சொலி களவு பொய்மையும்
நீசச் சூது ஒழித்துமே
நன்மனுதனை மிருக மாக்கிடும்
கட்குடிதனை நசித்திடும்
குலமகள்நலம் அழியச் செய்திடும்
பிறன்மனைதனை நோக்கலே
கொடிய வெம்புகை மடிய ஓட்டிடும்
குண நலம் தனை எற்றலும்
உலகில் எங்குமே என்றும் தீதிலை
ஊரிதே ஒப்பில் ஊரென
உத்தமர் சாலை ஆண்டவர் புகழ்
ஓங்க ஓங்கெனப் போற்றுமே!
(68)

அன்பின் அழகருள் அறிவில் தெளிவருள்
அற்புதம் செயும் கற்பகர்
அரிய சற்குணர் ஆரனந்தரின்
ஆன்ற குலகுரு திலகமே
என்பும் பிறர்க்களி ஈகைச் சிறப்பினர்
எம்மான் சாலைமெய் யாண்டவர்
ஈடிலாப் புகழ் நாடெ லாமினி
இயம்ப லொன்று தான் திருப்பணி
மன்பதைக் குளே மறுபிறப்பருளி
மாற்றும் தேவரெம் ஆண்டவர்
மறலிகைபடியா மகதிகை படியும்
மாட்சி தந்தருள் தெய்வமே
துன்பம் முற்றழி இன்பம் மிக்கொளிர்
இதய மேயுறை எம்பிரான்
துரிய மேவியே அரிது வாழ்வருள்
தேவதேவன் மெய் ஆலயம்.
(69)

தீர்க்க தரிசனம் செப்புமே எந்தன்
சிந்தை மந்திரத் தந்தையின்
தோற்றம் வாழிடம் சேரிடம் செலல்
சீர் சிறப்புகள் யாவையும்
கார்க்கும் தீயினைக் கைக்கொண்டாரவர்
கருணை பொங்கிடு விழியினர்
கமழும் செண்பக வாச மேனியர்
கற்பூ ரம்கமழ் வாயினர்
ஆர்க்கும் வெண்கலம் உருக்கி வார்த்தபோன்
அழகு பொன்னெழில் தாளினர்
அரிய வெண்பனிச் சிகையினர் நெஞ்சை
அள்ளும் தேன்பொழி மொழியினர்
கார்க்கும் தம்முனர் கைகளேந்தியே
கனிவொடே பணி ஜீவர்கட்(கு)
கதி கொடுத்திடும் விதிமடித்திடும்
கற்பகர் எழில் பொற்பதம்
(70)

வாரும் வாருங்கள் மாந்தரே எந்தை
மாதவர்திருச் சன்னிதி
வந்து சார்ந்து வணங்கிப் போற்றியே
மெய்ம்மணம்பெற்று உய்மினே
காரும் எந்தை கழல்மலர்களில்
கண்டுபோற்றி வழுத்துமின்
காசினிக்கெலாம் ஓர்கதிஜெய
கண்டிதர்தவ பண்டிதர்
பாருமெங்கள் பரமரை இவர்
பண்டை வேதியர் நீதியர்
பான்மறை புகழ் வான்மதியராம்
பற்றுவிட்ட வர்க்குற்றவர்
சீருயர்ந் திறவாவர ந்தரும்
ஜென்ம சாபல்யர் எங்களின்
தென்னவர் உயிர் மன்னவர் இசைப்
பண்ணவர் ஞானக் கண்ணகர்
(71)

வஞ்ச கம்இலாநெஞ்ச கர்க்கிது
வளம் செறிந்திடு பூம்பொழில்
வள்ளல் வான்வரம் கொள்ளவாருமின்
வைய கத்துறு மாந்தரே!
வஞ்ச ஏமனைக் கெஞ்ச வைத்திடும்
அஞ்சிடே லெனக் காத்திடும்
வானவர் சுவைத்தேனவர் தேவ
கோனவர் சாலைக் கானகர்
பஞ்சுப்போலப் பறந்திடும் வினை
பார்க்கு மோர்திரு நோக்கினால்
பங்கயத்திரு தாளர் மங்கையின்
பங்கினர் தவக் கங்கணர்
துஞ்சிடாது துறக்க மேறியே
சொர்ணமாளிகை சேர்ந்திடும்
தூயவர் தவத் தாயவர் மலர்
வாயர் நெஞ்சக மேறினர்!
(72)

கோடி கண்ட குரீஸ்வரர் தேவ
கோமான் மெய்வழி ஆண்டவர்
கொண்டல் வாய்மையர் என்றும் தூய்மையர்
கோதிலா தவமாதவர்
நாடி வந்து கையேந்துவோர்க் கிவர்
நான்கு காரண ராஜரே!
நம்பி வந்தவர் நமனிடர் தவிர்
நற்றவர்தவக் கொற்றவர்
பாடி யையரைப் போற்றுமின் பணிந்
தேற்றுமின் துயர் மாற்றுமின்
பக்த கோடியனந்தர் நன்மனப்
பாலர்கள் உயர்சீலர்கள்
பாடெலாம் பட்டுத்துன்ப மேற்றிவர்
பலனெலாம் நமக்கீபவர்
பன்மணித்திரள் சொற் கனிச் சுவை
பரமனார் சாலை ஆண்டவர்!
(73)

அனைத்துலகிற்கும் அருள்வரந்தரும்
அருட்பதிப்பொன் னரங்கமே!
அஸ்மா ஆலத் தரசர் எஸ்கிலாஸ்
அரிது இஃதை உணர்த்தினார்
தனைத்தந்தே எனைத் தான்கொளும்பெரும்
தாயே ஆதியும் அந்தமே
சமூகத் தாயவள் காலச்சக்கரம்
தன்திறன் கொண்டியக்குமே
அனைத்து மந்திரம் வேதம் யாவையும்
அற்புதப் பிரத்தி யட்சமாய்
அறிவிக்கும் நன்கு தெளிவதாகவே
ஆதிப் பெரியதாயன்னவள்
தனைத்தெரிந்தவர் வாழ்பதி ஹரி
மாஸ்பியன் ஹோஸ்டஸ் என்பதாம்
சாலைப் பொன்னரங் கம்மிதென்றுமே
சாற்றும் தீர்க்கத் தரிசனம்
(74)

காலச் சக்கரம் சுற்ற லில்கடைச்
சனியின் காலமி தென்பதாம்
கலியை மாற்றிடு கவலை தீர்த்திடு
தேவ சூரியர் தோன்றுமே
ஏல வல்லவர் தரிசனம் மகிழ்
வெய்து வித்திடும் என்றுமே
எங்கும் தர்மம் சன்மார்க்கம் சற்குணம்
இயலும் புண்ணியம் சுசிலமும்
கோல மேனியர் குருகுமாரரே!
கோடிசூர்யப் ரகாசரே!
குவலயம்மது புதுப் பிக்கப்பெறும்
கண்ணியம் சிறப்போங்குமே!
சீலமோங்குலூசினாவே! தங்கள்
தரிசினை பெருமாட்சியே!
தேவதேவரே சர்வசாட்சியும்
தீர்ப்ப திபரும் நீவிரே!
(75)

ஆதியேஒரு நீதி மேனிகொண்
டகில முய்யவே வந்தது
அத்தன் சொன்னது வேசுயம் என(து)
அறமொழி அதன் சாட்சியாம்
மேதினி வந்தஆதி நாயகர்
மார்க்க நாதர்நன்னாமமே
மானுடத்திரு மேனி கொண்டது
மக்கள் தம்மையுய் விக்குமே
வேதம் யாவுமே மெய்துலங்கிட
வழங்கும் வேதவே தாந்தமே
வணக்கம் செய்முறை காட்டினார் செயும்
வாழ்நெறிகளும் நாட்டினார்
நீதிமானின் நெறிமுறை நிறை
நித்ய வாழ்வினுக் காதரம்
நீணிலமீது யார்க்கும் எங்கணும்
என்றும்இச் செயல் இல்லையே
(76)

ஜீவ மந்திரம் தேவ தேவனின்
திருச்செயல் உரை பெட்டகம்
தெய்வமாதி வினாயகர் எனும்
தனிமுதல்வராம் கூறுமின்
பூவுலகினில் மதங்கள் யாவையும்
பொருத்தி ஒன்றெனக் காட்டுமே
பொலியும் சத்திய தேவபிரம்மமாம்
பொற்குலமென நாட்டுமே
தேவனாலய நடை முறைகளும்
சீர்எக் காளம்ம ணியதும்
துந்துபி நகராஇசைத் தசை
செய்யும் சீர்உ ரைகளும்
நாவ லன்தவ மூலமந்திரம்
நன்னம் பிக்கை வைப்பதும்
நல்லருச்சனை பாத பூஜையும்
நன்கமைந்த மந்த்ரங்களே
(77)

தனிகை வள்ளல்மூன் றாம்திருமகன்
சன்மார்க்கர் வடலூர் வள்ளல்
சமய பேதமும் சாதிபேதமும்
தாண்டிட அருள் வித்திடும்
இனிது ஆண்டவர் திருவருகையை
எழிலுரை எடுத்தே சொலும்
எந்தையின் தவ ஆட்சிமாட்சியும்
எல்லையும் வரைந் தோதிடும்
தனித்தலைமையர் பெரும் பதியரின்
சமரசநன் மார்க்கமே
சாலை ஆண்டவர் தவச் செயல்களும்
தீர்க்கமாய் எடுத்தோதிடும்
இனிக்கதி யிவரின்றி வேறிலை
எவ்வுலகினுக் கென்றுமே
ஈடிலாச் சாலைதெய்வ மென்றவர்
இனிமைபொங்கிடச் செப்புமே!
(78)

கரண மோய்ந்தழி காலன் கைப்படும்
மரணம் இல்பெரும் வாழ்வுறும்
கடவுளுண்மையைக் கண்டு நற்கதிக்
காட்படும் திருநாளுறும்
அரனரியயன் அனைவரோ ருருவம்
அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
அவர் தயவினுக் காட்படும் ஜீவர்
அழிவுஇன்றியே மீண்டவர்
பரசுகம்தரும் பரமரே எமைப்
பாதுகாக்கென வேண்டுவம்
பக்தருள்ளமாம் கோயிலில் திகழ்
பரம்பொருள் எமது ஆண்டவர்
அருள் நயந்தநன் மார்க்க ராஜரிஷி
ஆட்சி அகிலத்தி லோங்கவே
ஆண்டவர் தயைக் காட்படும் ஜீவர்க்(கு)
அனைத்து சித்திகளும் தேங்கவே
(79)

சுத்தமோங்கு சன் மார்க்கமே இனி
சகத்திலென்றும் விளங்குமே
சர்வ சமரசம் தங்குமே சம
நீதி யெங்குமே பொங்குமே
சித்தி யோங்குதவச் சாலையில் வருகு
தேவரே நிகரிலா தவர்
சித்தர் முத்தர் அடியார் கடவுளர்
கர்த்தர் மூர்த்திக ளிவரலர்
அத்தனை பெரியோர்கள் நோக்கிடும்
ஆண்டவர் எம தையரே
அவர்கள் தயவினை வேண்டுவோம் பவம்
தாண் டுவோம்இனி மாண்டிடோம்
முத்தியை அருள் வித்து நாயகம்
மோன ஞான சபாபதி
மூதுரைஅருட் ஜோதி நாயகர்
மென் மலர்ப் பதமேகதி
(80)

ஆண்ட வர்தயவுக் காணசீடர்குலம்
அதிகதெ ளிவுதனி லிருப்பர்காண்
அன்பெ லாமிறைவர் அருட்ப தத்தினிலே
அர்ப்ப ணித்தவர்கள் அனந்தர்கள்
ஈண்டு நல்லஇறை நம்பிக்கை யுடையோர்
இனிய தீர்க்கமுரை தரிசியர்
என்னுநாமமதை ஏற்கும் தன்மையர்கள்
இவர்கலிப்பவத்தை வெறுப்பவர்
மாண்ட பேர்களெலாம் மீண்டெழுந்திடுவர்
மாதவத்தவரின் அருளினால்
மன்ப தைக்குளினி சாவி லாதநெறி
வழங்கும் அஃது உயிர் மெய்வழி
ஆண்ட வர்கள்திரு நாமம் செப்புபவர்
அமரராகுவது திண்ணமே
அரைக்கணமும் பிரியா தவர்புகழை
அன்பொ டோதுவது நன்றதே
(81)

தேவ பூமியினில் ஜீவ தீர்த்த மதைத்
தினமும் பருகுமருட் சீடர்கள்
சிந்தை யின்பமொடு தந்தை பாதமதில்
சேர்வர் அனந்தரெனும் செல்வர்கள்
பாவமில்லையினி பக்தி யென்னும் கனி
பரிமளிக் கும்புது உலகினில்
பேரெ ழில்உடைய சீர்நி றைந்தபரி
சுத்தஆவி தெய்வம் படைப்பரே
சாவுமில்லையினி துன்பமில்லையினி
தெய்வம்போற்று வதொன் றேபணி
சத்தியரிவர்கள் நித்ய வாழ்வுடையர்
தங்க மேனியர்கள் ஆவரே!
பூவுலகந்தனைப் பரிசுத்தாவி தெய்வம்
புதுமையாக்கிடுவர் அறிமின்கள்
பொற்பதியதுவும் நற்கதியருளும்
பொன்னரங்க ரெனும் தெய்வமே!
(82)

அவதரித்த இறை அதிஜொலிப்பவர்கள்
அறஞ்செய் ஆண்மையுடை கல்கியாம்
அனைத்தையும் அழித்து அதனைதர்மயுக
மாகமாற்று செயல் செய்குவார்
தவறிழைத்தவர்கள் தண்டனை பெறவே
தமது தீர்ப்பு வழங்கையரே!
தன்னைச் சூழ்ந்தவர்கள் பிரமத்தை அறியும்
தவத்தவர்கள் என்ற றிமினே!
புவனமிஃதிலுள பிழைகள் யாவையுமே
போயொடுக்கிவிடும் மெய்ம்மையே!
பூத்து சுவர்க்கபதி வாழ்வு வந்திடுமே
பொற்பதியரச ரருளினால்
தவனம் தீர்த்தருளும் சாலை ஆண்டவரே
சர்வ சத்தியுடை முழுமுதல்
தரணி தன்னிலினி சத்யமே நிறையும்
நித்யமேபொலியும் காண் மினோ!
(83)

தேவகான அரசான வேதகலை
வாணி யாழிலிசைத்துப் பாடினும்
தரையில் வானகத்தில் கவிவலார் புகழின்
உச்சி யேறித்திகழ்ந் தோங்கினும்
மூவுலகினிலும் மூன்று காலங்களில்
மெத்தகற்று உரைபொழியினும்
முடிபுனைந்தவர்கள் அடிபணிந்திலக
மிக்கு ஆட்சிபல மேயினும்
ஆவிபற்றியிழு அற்புதத்தழகு
அரிய ஆற்றல் மிகு பாங்கினில்
அண்ட ரண்டபகி ரண்ட மெங்கணுமே
அற்புதர் எனவே மிளிறினும்
தேவ தேவரெங்கள் தெய்வ மெய்வழியர்
திருவி னுக்கு இணையாகுமோ?
திருமெய்ந்நூல்கள் பொதி ஞான பாக்கியங்கட்
கெங்குமே இணையில்லையே!
(84)

வீர போகவ சந்த ராயரென
வீர பிரம்மம்விளித் தேற்றிடும்
மிக்க இன்பமகிழ் வெற்றியோகமருள்
மெய்வழியருளும் தெய்வமே!
சீரனந்தர்பணி திவ்யவான் புகழின்
சிகரமேறி விளங் காதியே
சார்ந்து நின்றவர்கள் ஜென்மமுய்ந்து மிக
சிறந்து ஓங்கியுயர்வார்களே!
கோர முற்றுவரும் எமனைவென்று எமை
கோபுரத்தில் மிக ஏற்றுமே!
கொற்றவர் உயர்ந்த நற்றவர் உமது
குடியென்றே உரிமை தந்தருள்
பாரு யர்ந்த பரமேசர் ஆன்றபர
போகம் தந்தருளும் பாக்யமே
பணி கிறோமுமது பொற்பதாதம்புயமே
பற்றலாலெதுவும் பற்றிலை.
(85)

ஆதிமூல குரு அகிலமீது வரு
அற்புதவருகை பாருமே!
அனந்தர் கானகத்தில் ஆண்டவர் தமையே
அருமையாய் வணக்கம் செய்வர்காண்
வேத வேதியரித் தேவ பூமியினில்
விளங்கியோங்கி யிவண் வருகுநாள்
வித்தகக் குமரர் சித்திபெற் றருளும்
வித்து நாயத்தை வணங்குமே
வேதமோதியவர் தினம் விதவிதமாய்
வெற்றிகைக் கனியை ஏற்பர் காண்
மெய்வழிச் சபையில் தன்னைத் தான் தெரியும்
மேன்மை யானவரே உறைவர்காண்!
நாத நாதர்திரு நற்பதம் அருளும்
நற்கதிவிளைநல் லாலயம்
நம்பி வந்தவர்கள் தெம்பு கொண்டினிது
நாதர் நற்றயவுக்காகுமே
(86)

உலகம் யாவையுமே விழுங்கி நிற்கிறதோர்
உத்தியோங்குவன கானகம்
உத்த மர்தவமெய் சித்தியே துலங்கும்
உயர்ந்த மெய்நகரம் இஃதுதான்!
நலமெல்லாம் திரளும் நாதர் தேவகுரு
நத்திவந்த மனு மக்களை
நன்றுமாற் றிமறு பிறப்பிலாக்கியவர்
நல்ல மரர்என ஆக்குமே!
உலகெலாம் கடந்து அன்பினோடு துற
வதனின் ரகசியம் உரைப்பர் காண்!
ஒருதனித்தலைவர் மத்ய பார்வையுடன்
ஒளிர் சிம்மாசனத்தில் வீற்றுளார்!
குலகுருபரர் கோடி சூரியப்
பிரகாசம் தனையே விஞ்சுவார்
குற்றமற்றிறப்பு பிறப்பினின்றுயிர்கள்
கொள்ளும் வீடுபெற லாகுமே!
(87)

நூறெனும் பனியின் காலமேமுடிந்து
காலச்சக்ரம் புதிதாகுமே
நுகரும்காம சுக வாசிகாவியணி
வோர்கள் கூவியிது கூறுமே
பேறுடைஇறுதித் தீர்ப்பர் போந்துகுளக்
காட்டு பூமியினில் வந்துமே
பிரளயம் நடத்தும் எண்ணமோங்குமிந்த
பூமிமாறும் கடல்சுவறுமே
நீறதாகிவிடும் இமய மேருகிரி
நித்ய பிரம்மவித்து உதயமே
நின்மலர் தமைப் பேணும் சத்யநெறி
நடமின் முதுகுரவர் பேணுமின்!
மாறிலாதகனி வன்பு நேச மொடும்
மாண்புளோ ரோடுறவாடுமின்
மன்றிலங்கு மிறை தயவை நாடிடுமின்
வாழு மெய்ந்நெறியில் ஓங்குமின்
(88)

தோற்றுவித்த பொழு தன்று உள்ளநிலை
தூயராய் மனுக்கள் வாழவே
சிந்தை சொல் செயலில் நிந்தையில் வகையில்
திகழ வேணுமெனக் கருதியே
ஏற்றுமானுடமாம் தேகம் நன்கினிது
இந்தவையகம் துலங்கவே
எங்கள் மாமணியர் திங்கள் பொன்வதனர்
இனிது வந்து அவதாரமே
மாற்றி இந்தமனு மறுபிறப்பு உறு
வானவர் எனவும் மாறவே
வந்த நோக்கமிது விந்தை யானதிது
மக்கள் மீட்சியினை அடையவே
கூற்றுவன்வருகு கொடிய நேரமதில்
கொடும் அவத்தையிலா நிலைதர
கொண்டல் வாய்மையினர் குருபரர்பரிசு
கொள்ளவாரு முலகீர்களே!
(89)

வேதகாலமிவண் வந்ததே மறைகள்
மெய்ம்மை யாவுமொளிர் சீலமே!
விந்தையாய் மறைகள் தந்தவாய்மையினர்
மேனிகொண்டதிருக் கோலமே!
நீதமென்று நிறுவி வைத்ததனை
நீச வெங்கலியழித்ததே!
நித்யர் வந்தினிது சத்ய மெய்வழியால்
நிஜமெய் ஞானம் கொழித்ததே!
ஏதுமற்றவனை யாது முற்றவனாய்
இயற்றல் என்பதொரு விந்தையே!
எங்களுக்கு அருள் பொங்குமின்னருளால்
ஈயுமாண்பர்தவத் தந்தையே!
பாதமென்மலர்கள் பற்றலால் வினைகள்
அற்றலால் விளையும் பரசுகம்
பரமர் மெய்வழியர் பொன்னரங்கர் தயை
பரிமளிக்குமுயர் அருளகம்
(90)

தாய்மை வந்தமுது தந்து எம்முயிரை
தளிர்க்க வைத்ததொரு மாட்சியே!
தண்டமிழ்ப் புவியில் தெய்வம் வந்தருளி
தந்த விந்தையருட் காட்சியே!
தூய்மையானதொரு குலமியற்றியவர்
சீரனந்தரெனும் தோற்றமே
சுத்தமான பரிசுத்த ராக்கி வளர்
துரிய வானிலைக்(கு) ஏற்றுமே
வாய்மை யால்மறலி தீண்டிடாத ஒரு
மெய்ம்மதந்தனையே தோற்றுமே
மதங்கள் யாவுமிவண் ஒருங்கிணைந்தினிது
மகிழ்வு பொங்குநிலை ஏற்றுமே
ஆய்மதிபதியர் ஆண்டவர்கள் இந்த
அகிலமுற்றினிது உய்யவே
அறமுரைத்திடும்மென் அருள் கொடுத்துஎம(து)
ஆருயிர்ப்பயிர்கள் செய்யுமே
(91)

வாதம் செய்திரும்பை மாற்றித் தங்கமென
வேதிப் போர்கள்ரச வாதியாம்
மற்றிதற்கு முனைந்துள்ளமும் உடலும்
வெந்துமாண்டவர் பல் கோடியே
நீதியான குரு நாதர் எங்கள்குல
நித்ய சூரியரெம் ஐயனே!
நேரில் பார்த்தமனு நீசம் புன்மையொழித்
தேஒளிர்ந்து விடும் தங்கமாய்
நாதநாதர்திரு வேதவேதியரே!
நற்குண மிலங்கு தெய்வமே!
நரரைமனுவெனவும் மனுவை அமரரெனவும்
நன்குமாற்று பெருவேதியர்
நாதரான ரச வேதியர் எமது
நற்ற லைமைப் பதி இங்ஙனே
நன்று தொட்டுரச வாதமே புரிந்து
நம்மைச் சொர்ணமென ஆக்கினார்
(92)

காணோம் ஆனையெனப் பானையில் துழவு
கலியர் போலுமிந்த உலகினோர்
கடவுள் என்றவுடன் வெளியில் தேடுநிலை
காசினிக்குள் நிலைத்ததே
மாணுமெய்ந்நிலையை மாந்தர் தம்முயிருள்
மலரவைத்தகுரு கொண்டலர்
மெய்வழி தரவும் உய்வழி பெறவும்
செய்வழியுறவும் செய்தனர்
ஆணும் பெண்ணுமிலா அண்டர் கோனிறைவர்
அம்புவிக்குள் குரு ஆண் என
அழகிலங்க எழில்நிலை துலங்க ஒளிர்
அற்புதர் எமது கற்பகர்
பூணுவோமவர்கள் பொற்பதங்கள் சிரம்
புன்மையாவும் ஒடுங்கவே
பொன்னரங்கரடி போற்றுவோரைகண்ட
பொய்க்கலியனும் நடுங்குமே
(93)

ஆதி நாதர் தங்கள் சந்ததிக் கெனவே
அற்புதம் மிகுந்த ஊரையும்
அவரொழுக்கம் நிலை அறவணக்கமுறை
அரிய நன்னியமம் யாவையும்
நீதி நன்னெறிகள் வேத மாமறைகள்
நற்பதங்கள் திருவாக்கியம்
நாடு மின்பமிகு தேடு கூடகமும்
நவிலு தீர்க்க தரிசனம்
நாதமந்திரங்கள் நல்விழாக்களோடு
நாட்டினார்கள் கொடியேற்றமும்
நீதியே இனிது ஆளும் என்றென்றும்
நித்ய முத்திநிலை என்றுமே
நாத நாதாந்தர் நல்லனந்தர் குலம்
நானில முழுதும் பெருகவே
நாமம் போற்று முயிர் நற்கதியடையும்
நல்வரந்தருமெம் சாமியே
(94)

மதங்கள் உன்னதம் குலங்கள் மாட்சிகள்
இனங்கள் ஏற்றமெண்ணாமலே
மற்றுதாமுயர் வென்று மின்னவர்
தாழ்வெனச் சொலி வெறிகொடு
இதமிலாமலே சமர்கள் கொலைகளும்
எண்ணிலாதன பூசல்கள்
இந்த வேளையில் வந்துமெயந்நிலை
தந்த தந்தையர் ஆண்டவர்
மதம்குலம் இனம் மொழிவழி துறை
மன்னுயிர்நித்யம் அடையவே
வகுத்து வைத்தனர் மாட்சி யோங்கிய
மாத வர்த போதனர்
இதுதெளிவுற ஒருங்கிணைந்திட
இயம்பு மெய்வழி தெய்வமே
இன்ப நாயகர் இனிய தாயகர்
இணைபதம் தொழுதுய்வமே
(95)

எண்ணில் மந்திரம் வேதம் ஆகமம்
இந்த பூமியில் உள்ளன
யாததன்பயன் என்னதன் விளை
வென்று யாவரும் கண்டிலர்
மண்ண கத்தவர் தன்னை யேவியந்
தாடும் நாடகர் ஆயினர்
மன்னுகோளரி வாளர் ஆண்டவர்
வந்த விந்தையார் மெய்வழி
திண்ணமாகவே சர்வமந்திரம்
தெளிவதாகி மதங்களின்
சீர்சிறப்புகள் மாட்சியாவையும்
செப்பி னார்அறி வொப்பிட
பண்ணகர் தவப் பாண்டியர் சாலைப்
பொன்னரங்கர் இங்கண்போந்துமே
பாரி னில்ஒன்று தேவன் ஓர்குலம்
என்று மேநிலை நாட்டினர்
(96)

இன்றிங்கன் சொல ஏற்கும் நல்லவர்
எங்கும் மெய்வழி ஓங்குமே
ஏத மில்உயர் போதம் பொங்கியே
இயலும் பேரின்பம் தங்குமே!
நன்று வேதங்கள் ஓது மேஉயர்
நாத கீதங்கள் பாடுமே
நாதர்மெய்வழி தெய்வ வான்புகழ்
நவிலு வோரிவண் கூடுமே
அன்றுமின்றுமே என்று முள்ளவர்
ஆண்டவர் எனத் தெளியுமே
ஆதி நாயகர் வேத தாயகர்
ஆட்சி என்றுமே பொலியுமே
மன்றுளோங்கிடு வானோர் ஜீவசிம்
மாசனர் எங்கள் தேவரே!
வணங்கிப் போற்றவோர் இணங்கி ஏற்றுவோர்
வானோர் நித்தியர் ஆவரே!
(97)

புவன முற்றுமே படைத்த ஆதியர்
பொலிவு கெட்டுஅது தாழ்வுற
பொய்யும் சூதுகொலை வையமெங்குமலி
புன்மை ஓங்கிவரு காலையில்
தவமெய் யாற்றல் மிகு தெய்வம் வந்தருள
தரணி மாந்தரினம் உய்யுமே
சமரசங்கள்பொலி நெறியை மெய்வழியைத்
தந்துவிந்தை புரி சாலையில்
எவரு மெங்குமிது காலும் கண்டறியா
ஏற்றமுற்ற செயல் காணுமே
ஈனன் வன்மறலி துன்பமுற்றழியும்
இன்பமார் பயணம் நிகழுமே
சிவனு மாலயனும் திரண்ட சீருருவர்
சிந்தயைக் கவரு கள்வர்காண்
தெண்டனிட்டவர்தம் தாள்வணங்குபவர்
சொர்க்க மேகிடுவர் திண்ணமே
(98)

தீர்க்க மாயிறைவர் வருகை ஞானவிழி
நோக்கினாலினிது கண்டவர்
செப்பி வைத்த நவ ரத்ன மாமுரைகள்
சிந்தை தன்னிலுர மூட்டுமே
ஆர்க்கும் ஞானநெறி அகிலமெங்குமினி
அறம்நிறைந்துசெய லாற்றுமே
அன்பதே வளரும் துன்பமே அழியும்
அஞ்சல் அஞ்சலெனும் ஐயனே
பார்க்குள் வந்தபர மேசனே கழல்கள்
பற்றுவோர்க் குயிரின் நேசனே
பண்டை வேதியரெம் தனிகைவள்ளல் சுதர்
பிரம்ம ஞானப்ர காசமே
கார்க்கும் பொற்கரங்கள் கருணையார் தரங்கள்
கமழும் செண்பக நன்மேனியைக்
கண்டபின்புமனம் கொண்டிடா துயர்
கலைகள் யாவினுக்கும் வாணியே!
(99)

ஆழிசூழ்புவிக் கான மெய்வழி
அண்ணல் தந்ததே உய்வழி
அரன் வணக்கமே செய்வழி இது
அல்ல தெல்லாமே நைவழி
ஊழி நாயகர் சாலை ஆண்டவர்
உற்ற நற்றவர் கொற்றவர்
உவந்து போற்றுவோர் மீண்டவர்தம
துயிர்க்கு உய்கதி வேண்டுவோர்
பூழிய ரெனும் பாண்டியர் வானில்
புவியுயிரெலாம் ஆண்டவர்
பொன்னரங்க ரெம் மன்னவர் பதம்
போற்றுவோர் ஞானக் கண்ணகர்
வாழி வாழி!யெம் தெய்வமே! இந்த
வையம் வானில் மெய்தங்குமே
ஊழுழி காலம் ஓங்க மெய்வழி!
ஓங்க! பேரின்பம் எங்குமே!
(100)

திருச்சதகம் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!