கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/10

விக்கிமூலம் இலிருந்து

10. மறுபடியும் பிரிட்டிஷ் அரசு பணிந்தது!

சரோஜினி தேவி கி.பி. 1922-ம் ஆண்டு தென் இந்திய சுற்றுப்பயணப் பிரசாரத்தில் ஈடுபட்டார். கேரள மாநிலத்தில் உள்ள கள்ளிக்கோட்டை என்ற ஊரிலே பேசினார்!

அப்போது கேரளாவிலே வாழும் 'மாப்பிள்ளை' என்ற ஒரு வகுப்பாரை, ராணுவ வீரர்கள் முன்பு பஞ்சாப் மாநிலத்திலே பெண்களையும்-ஆண்களையும் காட்டு மிராண்டித்தனமாக துன்புறுத்தியதைப் போல, கேரளத்திலும் மிகக் கீழ்த்தரமாகக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் அவர் அன்று பேசிய மேடையிலே கூறிக் கூறி வன்மையாகவும், ஆணித்தரமாகவும், ஆவேசம் பொங்கப் பொங்கக் கண்டித்தார்.

பாஞ்சாலத்திலே ராணுவம் நடந்து கொண்ட கொடுமைகளைப் போல-கேரளத்திலும் நடந்து கொன்டது நியாயந்தானா? என்று கேட்டார்.

பெண்களை நிர்வாணப்படுத்துவதும், அவர்களைக் கற்பழிப்பதும், கதறக் கதற அவர்களை உதைப்பதும்தான் பிரிட்டிஷ் ராணுவத்தின் வீரச்செயல்களா?

மனித குலத்தைத் திடுக்கிடச் செய்யும் இத்தகைய அநீதிகள் ராணுவ வீரர்களின் வீரத்துக்கும்-தீரத்துக்கும் இழிவாகாதா? கோழைத்தனமான இந்த மிருகச் செயல்களைச் செய்யவா மக்கள் வரிப் பணங்களைக் கொடுக்கிறார்கள்?

மேற்குறிப்பிட்ட கடுமையான கேள்விகளை கேட்டுப் பிரிட்டிஷ் ஆட்சியின் அவலங்களைக் கண்டித்தார்! அதனால் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டதைப் பிரிட்டிஷார் நடத்தும் சென்னை அரசு பார்த்துக் கிலி கொண்டது.

நெருப்பு உமிழும் சொற்களால் கவியரசி அன்று கேட்ட கேள்விகள், கவிகுயிலுக்கு ஒரு புகழைத் தேடித் தந்தது மட்டுமன்று அங்கு வாழும் மாப்பிள்ளை வகுப்பாருக்கும் ஒரு ஆறுதலை அளித்தது.

சென்னை அரசாங்கம் ஆத்திரமுற்றது; காரணம், கேரளப்பகுதி மக்கள் இடையே உருவான பரபரப்புச் சூழ் நிலைதான் பிரிட்டிஷ் இந்திய மந்திரி மாண்டேகு முன்பு பஞ்சாப் படுகொலைப் பிரச்னையிலே கவியரசியை எச்சரித்தது போல, சென்னை வெள்ளையர் அரசாங்கமும் அவரை எச்சரித்தது!

"அந்த எச்சரிக்கை அறிக்கையில், மலையாள ராணுவ ஆட்சி குறித்து நீங்கள் கூறியது எல்லாம் உண்மை அன்று: உங்களுடைய கடுமையான குற்றச் சாட்டுக்களை உடனே வாபஸ் வாங்க வேண்டும். இல்லையென்றால், உங்கள் மீது வழக்குத் தொடரப்படும்" என்று சென்னை அரசாங்கம் கவியரசிக்கு நோட்டிஸ் அனுப்பியது.

இந்த சென்னை அரசு அறிக்கையைய் பெற்றுக் கொண்ட சரோஜினி தேவி, "இராணுவம் பற்றி நான் கூறியக் குற்றச்சாட்டுகள் பொய் என்றால், அரசாங்கம் என்மீது நடவடிக்கை எடுக்கட்டும். எதற்கும் நான் தயார்; அவ்வாறில்லை என்றால், அரசாங்கம் எனக்கு அனுப்பிய வழக்கு நோட்டீசைத் திரும்பப் பெற்று என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று மறுகடிதம் எழுதினார்.

காந்தியடிகளுக்கும், மகாகவி ரவீந்திரதாத் தாகூருக்கும் அப்போது நெருங்கிய நண்பராக இருந்தவரும், தீனபந்து என்று மக்களால் போற்றப்பட்டும் புகழ்பெற்றவருமான ஆண்ட்ரூஸ் என்ற கிறித்துவப் பாதிரியார், கவியரசி சரோஜினி தேவி சாட்டியக் குற்றச்சாட்டுக்கள் உண்மையானவைகளே" என்று ஓர் அறிக்கையினை விடுத்துக் கவிக்குயில் பேச்சை உறுதிப்படுத்தினார்.

பாதிரியாரின் இந்த மறுப்பு அறிக்கை, எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றியது போல சென்னை அரசாங்கத்துக்கு எதிரிடையாக காட்சி தந்தது!

அதே நேரத்தில் கேரளா பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த காங்கிரஸ் மகாசபையின் தொண்டர் படைத்தலைவரான என் பீ. ஹார்டிகர் என்பவரும் சரோஜினி குற்றச்சாட்டுக்கள் உண்மையானவைதான் என்று கூறி ஓர் அறிக்கையை விட்டு ஆதரித்தார். இந்த அறிக்கையும் எரியும் சென்னை அரசு நெருப்புக்குரிய காற்றாகப் மாறிப் பரவியது:

இந்த அறிக்கை வெளியானதற்குப் பிறகு, கேரள காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் விடுத்த அறிக்கை ஒன்றில்:

“சரோஜினி தேவி பேசியதில் தவறு ஏதும் இல்லை; அவர் கூறியன எல்லாம் உண்மைதான்; கேரள ராணுவ ஆட்சியின் போது, மாப்பிள்ளை வகுப்பார் வாழ்ந்த இடங்களில் ராணுவ வீரர்கள் காட்டுமிராண்டித்தன பயங்கரங்களோடு அக்கிரமங்களைச் செய்தார்கள். அந்த விவரங்களை தேவியாருக்கு நான்தான் தந்தேன். அக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க நான் எப்போதும் தயார்" என்றார்.

இந்த அறிக்கை சென்னை அரசாங்கத்தின் எரியும் நெருப்புக்கு நெய்வார்த்து விசிறிவிட்டப் பேய்க்காற்றாக வீச ஆரம்பித்தது.

பிரிட்டிஷ் மந்திரி மாண்டேகு பட்ட அவமானம் போல சென்னை அரசாங்கமும் அவமானம் அடைய விரும்பவில்லையோ என்னவோ ஊமையாகி விட்டது.

ஒருநாட்டில் அந்நியர் ஆட்சி செய்ய பெரும் துணையாக இருப்பவை ராணுவமும்-போலீசும் தானே! அதனால் அந்த இரு சக்திகளை எந்த ஓர் அயலரசும் காட்டிக் கொடுத்திடத் துணியாது அல்லவா? அதனால், சென்னை அரசு ஊமையானது!

சென்னை ஆங்கிலேயர் ஆட்சி, சரோஜினி தேவியின் கொந்தளிப்பான குற்றச்சாட்டுக்களை எதிர் கொள்ள அஞ்சி, அவர் மீது தொடுத்த வழக்கு நோட்டீசையும் வாபஸ் வாங்காமல் பயந்து வெலவெலத்து பணிந்து விட்டது. இதனால் சரோஜினி தேவியிடம் ஆங்கிலேயர் அரசு இரண்டாவது தடவையாகவும் பணிந்துவிட்டது என்ற உண்மையைக் கேரளப் பகுதி மக்களும்-மாப்பிள்னை வகுப்பாரும் கண்டு புது மகிழ்ச்சிப் பெற்றார்கள்.