பாரதிதாசன் தாலாட்டுகள்/தாய் தாலாட்டு

விக்கிமூலம் இலிருந்து


தாய் தாலாட்டு


ஆராரோ ஆரரிரோ ஆராரோ
ஆராரோ ஆரரிரோ ஆராரோ

சீரோடு பூத்திருந்து செந்தா
மரைமீது
நேரோடி மொய்த்துலவு நீலமணி
வண்டுதனைச்

செவ்விதழால் தான்மூடும் சேதிபோல
உன்விழியை
அவ் இமையால் மூடியே அன்புடையாய்
நீயுறங்கு

கன்னங் கறேலென்று காடுபட்ட
மேகத்தில்
மின்னி வெளிப்பட்ட விண்மீன்போல்
உன்றன்விழி

சின்ன இமையைத் திறந்ததேன்
நீயுறங்கு;
கன்னலின் சாறே! கனிச்சாறே
நீயுறங்கு!

குத்துண்ட கண்ணாடி கொண்டபல
விரல்கள் போல்
துத்திக்காய் போலச் சுடர்முகத்தை நீ
சுருக்கி

ஏனழுதாய் என்றன் இசைப்பாட்டே
கண்ணுறங்கு!
வான்நழுவி வந்த வளர்பிறையே
கண்ணுறங்கு!

கன்னம்பூரித்துக் கனியுதடு
மின்உதிர்த்துச்
சின்னவிழி பூத்துச் சிரித்ததென்ன
செல்வமே?

அன்னைமுகம் வெண்ணிலவே ஆனாலும்
உன்விழியைச்
சின்னதொரு செவ்வல்லி ஆக்காமல்
நீயுறங்கு!

நெற்றிக்கு மேலேயுன் நீலவிழியைச்
செலுத்திக்
கற்றார்போல் என்ன கருதுகின்றாய்?
நீ கேட்டால்

ஆனை அடிபோல் அதிரசத்தைச்
சுட்டடுக்கித்
தேனில் துவைத்தெடுத்து தின்என்று
தாரேனா?

கொட்டித்தும்பைப்பூக் குவித்ததுபோல்
உன்னெதிரில்
பிட்டுநறு நெய்யில் பிசைந்துவைக்க
மாட்டேனா?

குப்பை மணக்கக் குடித்தெருவெல்
லாம் மணக்க
அப்பம் நிலாப்போல் அடுக்கிவைக்க
மாட்டேனா?

மீன்வலைசேந் தும்கயிற்றை வேய்ந்த
வளையம்போல்
தேன் குழல்தான் நான் பிழிந்து தின்னத்
தாரேனா?

விழுந்துபடும் செங்கதிரை வேல் துளைத்
ததைப் போல்
உழுந்துவடை நெய்யொழுக உண்ணென்று
தாரேனா?

தாழையின் முள்போன்ற தகுசீ
ரகச்சம்பா
ஆழ உரலில் இடித்த
அவலைக்

கொதிக்கும் நெய் தன்னில்தான் கொட்டிப்
பொரித்துப்
பதக்குக் கொருபதக்காய்ப் பாகும்
பருப்புமிட்டே,

ஏலத்தைத் தூவி எதிர்வைக்க
மாட்டேனா?
ஞாலத்து ஒளியே நவிலுவதை
இன்னுங்கேள்:

செம்பொன்னை மேற்பூசித் தேனைச்
சுளையாக்கிக்
கொம்பில் பழுத்தநறுங் கொய்யாப்
பழமும்,

செதில் அறுத்தால் கொப்பரையில் தேன்
நிறைந்ததைப் போல்
எதிர்தோன்றும் மாம்பழமும், இன்பப்
பலாப்பழமும்,

வேண்டுமென்றால் உன்னெதிரில் மேன்மேற்
குவிந்து விடும்!
பாண்டியனார் நன்மரபின் பச்சைத்
தமிழே!

நெருங்க உறவுக்கு நீட்டாண்மைக்
காரர்
அறஞ்சிறந்த பல்போடி ஆன
தமிழருண்டே!

எட்டும் உறவோர்கள் எண்ணறு
திராவிடர்கள்
‘வெட்டிவா' வென்றுரைத்தால் கட்டிவரும்
வீரர் அவர்!

என்ன குறைச்சல் எதனால்
மனத்தாங்கல்?
முன்னைத் தமிழர் முடிபுனைந்து
ஞாலத்தை

ஓர்குடைக் கீழ்ஆண்ட உவகை
உனக்குண்டு!
சேரனார் சோழனார் சேர்த்தபுகழ்
உன்புகழே!

ஓவியக் கரைகண்டார் உண்மைநெறி
தாம்வகுத்தார்
காவிய சிற்பத்தில் கவிதையினில்
கைகாரர்

உன்னினத்தார் என்றால் உனக்கின்னும்
வேண்டுவதென்?
பொன்னில் துலங்குகின்ற புத்தொளியே
கண்ணுறங்கு!

கற்சுவரை மோதுகின்ற கட்டித்
தயிரா, நற்
பொற்குடத்தில் வெண்ணெய் தரும்
புத்துருக்கு நெய்யா, நல்

ஆனைப் பசுக்கள் அழகான
வெண்ணிலவைப்
போல்நிறைத்த பாலைப் புளியங்கொட்டை
தான் மிதக்கும்

இன்பநறும் பாலா, என்ன இல்லை ?
கண்ணுறங்காய்.
அன்பில் விளைந்த என் ஆருயிரே
கண்ணுறங்கு!

காவிரியின் பாதாளக் காலின்
சிலம்பொலியும்,
பூவிரியப் பாடும் புதிய
திருப்பாட்டும்,

கேட்ட உழவர் கிடுகிடென
நல்விழாக்
கூட்டி மகிழ்ச்சி குதிகொள்ளத்
தோளில்

அலுப்பை அகற்றி அழகுவான்
வில்போல்
கலப்பை எடுத்து கன எருதை
முன்னடத்திப்

பஞ்சம் தலைகாட்டப் பாமரப்
படைமன்னர்,
நெஞ்சம் அயராமல் நிலத்தை
உழுதிடுவார்,

கோத்துநெல் முற்றித் தலைசாய்ந்த
கோலத்தை
மாற்றியடித்து மறுகோலம் செய்த
நெல்லைத்
தூற்றிக் குவித்துத் துறைதோறும்
பொன்மலைகள்

கோலம் புரியும் குளிர்நாடும்
உன்னதுவே!
ஞாலம்புகழும் நகைமுகத்தோய்
கண்ணுறங்கு!

செம்புழுக்கல் பாலோடு பொங்கச்
செழுந்தமிழர்
கொம்புத்தேன் செய்து குளிர்முகக்
கனிச்சுளையோடு

அள்ளூற அள்ளி முழங்கையார்
நெய்யொழுக
உள்ளநாள் உண்ணும் உயர்நாடும்
உன்னதுவே!

கோட்டுப்பூ நல்ல கொடிப்பூ
நிலநீர்ப்பூ
நாட்டத்து வண்டெல்லாம் நல்லஇசை
பாய்ச்சக்
கொத்தும் மரங்கொத்தி தாளங்
குறித்துவரத்

தத்துபுனல் தாவிக் கரையில்
முழாமுழக்க

மின்னும் பசுமை விரிதழைப்பூம்
பந்தலிலே
பன்னும் படம்விரித்துப் பச்சைமயி
லாடுவதும்,

பிள்ளைக் கருங்குயில் ஓர் பின்பாட்டுப்
பாடுவதும்
கொள்ளை மகிழ்ச்சித் தமிழ்நாடு
கொண்டாய் நீ!

குப்பையெலாம் மாணிக்கக் கோவை,
கொடுந்தூம்பில்
கப்பும் கழுவடையில் கண்மணியும்
பொன்னியும்!

ஆடும் குளிர்புனலோ அத்தனையும்
பன்னீராம்!
சூடா மணிவரிசை தூண்டாச்
சரவிளக்காம்!

எப்போதும் தட்டார் இழைக்கும்
மணியிழையில்
கொப்படம் ஒன்றே கோடிபெறும் கொண்டைப்பூ
என்பெறுமோ?

ஐந்தாறு வெண்ணிலவும் ஆறேழு
செங்கதிரும்
வந்தாலும் நாணும் வயிரத்
திருகாணி,

ஒன்றுக்கே வையத்தை ஒப்படைக்க
வேண்டுமெனில்,
உன்மார்பின் தொங்கலுக்கு மூன்றுலகு
போதுமா?

மின்காய்த்த வண்ணம் மிகுமணிக
ளோடுபசும்
பொன்காய்த்த பூங்கொடியா ரோடுதம்
காதலர்கள்.

எண்ண மொன்றாகியே இல்லறத்
தேர்தன்னைக்
கண்ணுங் கருத்தும் கவருமோர்
அன்புநகர்.

ஆரும்நிகர் யார்க்கும் அனைத்தும்
சரியங்கென்று
ஓரும்நகர், நோக்கி ஓடுந்தமிழ்
நாடு

நின்நாடு! செல்வம் நிறைநாடு
கண்ணுறங்கு
பொன்னான தொட்டிலில்
இப்போது!

இசையமுது-1