பக்கம்:சோழர் வரலாறு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

177



எல்லாம் இவன் காலத்தனவே என்று சில சான்றுகள் கொண்டு ஆராய்ச்சியாளர் துணிகின்றனர். சோழர் நாணயங்களில் இவன் காலத்ததுவே பழைமையானதாகும். இவன் காலத்ததான பொற்காசு ஒன்று கிடைத்தது. அதன் இருபுறங்களும் ஒருபடித்தாகவே இருக்கின்றன, நடுவில் ஒரு புலி உட்கார்ந்து கொண்டு வலப்புறமுள்ள மீனை நோக்குகிறது. நாணயத்தைச் சுற்றிலும் உத்தம சோழன் பெயர் கிரந்த எழுத்துகளிற் குறிக்கப்பட்டுள்ளது. அப்பொற்காசு 40 முதல் 60 குன்றிமணி நிறையுள்ளது என்று நாணய ஆராய்ச்சியாளரான எலியட் கூறியுள்ளார்.[1]

அரசியல் : உத்தம சோழன் செப்பேட்டுத் தொகுதியால் அக்கால அரசியல் முறையை நன்கு உணரலாம். இதன் விளக்கம் ‘அரசியல்’ என்னும் பகுதியிற் கூறப்படும். இவன் காலத்தில் அம்பலவன் பழுவூர் நக்கன் என்னும் உயர்தர அலுவலாளன் சோழர் அரசியலில் வேலை பார்த்து வந்தான். அவன் குவலாளம் (கோலார்) என்ற ஊரினன்; கொள்ளிடக்கரையில் அப்பராற் பாடப்பெற்ற விசைய மங்கலம் பழங்கோவிலைக் கற்கொண்டு புதுப்பித்தவன். உத்தம சோழன் அவனுக்கு ‘விக்கிரம சோழ மாராயர்’ என்னும் பட்டத்தை அளித்துப் பெருமைப் படுத்தினான். இதனால் உத்தம சோழன் ‘விக்கிரம சோழன்’ என்னும் பெயரையும் பெற்றிருந்தான் என்பது வெளியாகிறது. அவ்வலுவலாளன் இராசராசன் காலத்தில் ‘மும்முடிச் சோழமாராயர்’ எனவும் ‘இராசராசப் பல்லவராயன்’ எனவும் அழைக்கப்பட்டான்.

உத்தம சோழன் குடும்பம் : உத்தமசோழற்கு மனைவியர் பலர் இருந்தனர். அருள் - பட்டன் தான தொங்கி, மழபாடி தென்னவன் மாதேவியார், வானவன் மாதேவியார், விழுப்பரையன் மகளார், பழுவேட்ட ரையன் மகளார் குறிப்பிடத் தக்கவர். இவ்வைவரும்


  1. Vide his ‘coins of Southern India’ p. 132, No. 151.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/179&oldid=491298" இலிருந்து மீள்விக்கப்பட்டது