பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

திருக்குறள் தமிழகத்தின் செல்வம்! அதுவும் தமிழனின் சொந்தச் சொத்து! அது உலகின் ஒப்பற்ற செல்வங்களில் ஒன்றாக இன்றும் திகழ்ந்து வருகிறது!

முத்துக் குளிக்கும் மக்கள் தங்கள் மூச்சு வலிமைக்கு ஏற்ற அளவு கடலில் மூழ்கி, செல்வங்களை அள்ளி வருவது போல, குறளில் மூழ்கும் மக்களும், தங்கள் அறிவு வலிமைக்கு ஏற்ற அளவு செல்வங்களை அள்ளி மகிழலாம்.

உலகில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப் பெற்ற நூல்களில் திருக்குறள் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கிறது. முதல் இரண்டும் பைபிளும், குரானும் ஆகும். அவை "சமய நூல்கள்" என்று ஒதுக்கப்பட்டு விடுமானால், உலக இலக்கியங்களிலேயே திருக்குறள் ஒன்றிற்கே முதல் இடம் கிடைத்திருக்கிறது என்று பெருமையடையலாம்.

திருக்குறள் ஒரு வாழ்வு நூல்; அதுவும் வாழ்ந்து காட்டிய ஓர் பேரறிஞனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கபெற்ற ஒரு பெருநூல். வாழ்வு அனைத்தும் வாழ்வாகாது. வாழ்வில் உயிர் பெறுவதே வாழ்வு. குறள் அத்தகைய வாழ்விற்கு வழிகாட்டும் ஒரு வழிகாட்டி!

மனிதன் மனிதனாகப் பிறந்தும், பறவையைப் போல ஆகாயத்தில் பறக்கவும், மீனைப் போலத் தண்ணீரில் நீந்தவும் கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால், மனிதன் மனிதனாகப் பிறந்தும், மனிதனைப்போவத் தரையில் எவ்வாறு நடப்பது என்பதைக் கற்றுக்கொள்ளவில்லை. அதைக் கற்றுக்கொடுப்பது திருக்குறள்.