வேங்கடம் முதல் குமரி வரை 4/007-032

விக்கிமூலம் இலிருந்து
7. காளையார் கோயில் காளீசர்

ஒரு குடும்பத்தில் மூன்று சகோதரர்கள், நல்ல பரம்பரைச் செல்வந்தர்கள். மூவரிலும் மூத்தவர் நல்ல உழைப்பாளி, விவசாய விருத்தியிலும், வியாபாரப் பெருக்கத்திலுமே கண். அதனால் குடும்பத்துக்குச் சொத்து சேர்ப்பதெல்லாம் அவர்தான். நடு உள்ளவரோ கொஞ்சம் குஷிப் பேர்வழி. நல்ல செலவாளி, மைனர் போலத் திரிவார், செலவு செய்யத் தயங்க மாட்டார். கோலாகலமாகச் செலவு செய்து கொண்டு உல்லாசமாகக் காலங்கழிப்பார், கடைக்குட்டி மிக்க அடக்கம், பொருள் சேர்க்கவோ, செவழிக்கவோ அவர் முற்படுவதில்லை. எப்போதும் படிப்பதும் பஜனைக்குச் செல்வதுமாகவே காலங்கழிக்கிறார். இப்படி ஒரு குடும்பம், இத்தகைய சகோதரர்களை நாம் வாழ்நாளில் பல இடங்களில் கண்டிருக்கிறோம் அல்லவா?

இதே விதமாக நாம் வணங்கும் கடவுளரும் வாழ்கிறார்கள் என்று அறிகிற போதுதான் நமது ஆர்வம் அதிகமாகிறது. அதில் முழுமுதற் கடவுளாகிய சிவ பெருமானது வாழ்க்கையிலேயே இப்படி நடக்கிறது. முத்தொழில் புரியும் முதல்வனே நாம் கண்ட மூன்று சகோதரர்கள் போல் மூன்று நிலையிலும் நின்று அருள் புரிகிறான் என்றால் கேட்கவா வேணும்! ஒரு சிறு ஊர். அங்கு ஒரு பெரிய கோயில், கோயிலிலே மூன்று சந்நிதி. கோயிலில் முதல்வராக இருப்பவர் காளீசர், அவருக்கு வலப்புறம் சோமேசர். இடப்புறம் சுந்தரேசர். இந்த மூவரையும் பற்றி ஊர் மக்கள் சொல்வது என்னவென்றால், 'காளீசர் தேட, சோமேசர் அழிக்க, சுந்தரேசர் சுகிக்க என்றல்லவா அமைந்திருக்கிறது என்பதுதான். இதற்கு விளக்கம் இதுதான். இந்தக் கோயில் சொத்து முழுதும் ஆம், நாற்பது கிராமங்களில் உள்ள நிலமும் இரண்டு லக்ஷம் பெறுமான நகைகள் மஞ்சங்கள் எல்லாமும் தேடிச் சேர்த்து வைத்திருப்பவர் காளீசர்தான். நிலங்களின் பட்டா எல்லாம் அவர் பேரிலேதான்; சொத்துச் சுதந்திரம் எல்லாமே அவருக்குத்தான். ஆனால் அவருக்கு என்று பெரிய பிரம்மோத்சவமோ அல்லது மற்றச் செலவுகளோ அதிகம் கிடையாது. அவருக்கு நடக்கும் உத்சவம் எல்லாம் தைப்பூசத்தில் புஷ்ப ஸ்நானம் தான்.

ஆனால் சோமேசருக்குத்தான் ஆடம்பரமான உத்சவம், வைகாசி விசாகத்திலே. அந்த பிரமோத்சவத்தில்தான் தேரோட்டம் தெப்பம் புஷ்ப பல்லக்கு எல்லாம். மொத்தச் செலவு பதினாயிரம் வரை ஆகும். ஆடம்பரமான செலவுகளுக்குக் குறைவேயில்லை. இருவரையும் அடுத்து ஒரு சின்னஞ்சிறு கோயிலிலே குடியேறியிருக்கும் சுந்தரேசரோ மிக்க அமைதியாக வாழ்கிறார். நித்தியப் படியிலும் இவர் தேவை மிகமிகக் குறைவுதான், உத்சவாதிகளிலும் இவர் கலந்து கொள்கிறதில்லை. ஆம்! இப்போது விளங்குகிறது-காளை தேட, சோமன் அழிக்க, சுந்தரர் சுகிக்க என்று மக்கள் ஏன் சொல்லுகிறார்கள் என்று.

இப்படி, காளீசுவரரும் சோமேசரும், சுந்தரேசரும் கோயில் கொண்டிருக்கும் ஊர்தான் இன்று காளையார் கோயில் என்று வழங்கப்படுகிறது. இக்காளையார் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

இந்தச் சின்னஞ்சிறிய ஊர் மதுரைக்கு நேர்கிழக்கே நாற்பது மைல் தூரத்தில் தொண்டிக்குச் செல்லும் ரஸ்தாவில் இருக்கிறது. ரயில் வழியாகச் செல்ல விரும்புபவர்கள் சிவகங்கை ஸ்டேஷனில் இறங்கிக் கிழக்கே பத்து மைல் தூரம் செல்ல வேணும். காரைக்குடி, தேவகோட்டை, சருகனி வழியாகவும் வரலாம். ஊர் சிறிய ஊர்தான் என்றாலும் கோயிலும் குளமும், கோபுரமும் வீதிகளும் பெரியவைகளாகவே இருக்கின்றன. இந்தத் தலத்தை அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரும் பாடியிருக்கிறார்கள், தேவார காலத்தில் இந்தத் தலத்தின் பெயர் கானப்பேர் என்று இருந்திருக்கிறது.

கங்காளர், கயிலாய மலையாளர்.
கானப் பேராளர், மங்கை
பங்காளர், திரிசூலப் படையாளர்
விடைப்பாளர் பயிலுங் கோயில்

என்று ஞானசம்பந்தர் கோயிலைப் பாடினால், கோயிலில் உள்ள மூர்த்தியை,

ஆனைக்காவில் அணங்கினை
ஆரூர் நிலாய அம்மானைக்
கானப் பேரூர் சட்டியைக்
கானூர் முளைத்த கரும்பினை

என்று நாவுக்கரசர் பாடி மகிழ்கிறார். இந்தக் கானப் பேரூர் கட்டியாம் கடவுளே சுந்தரர் தேவாரத்தில் கானப்பேரூர் உறை காளையாகிறார். அதனால் அந்த ஊர் காளையார் கோயில் என்று வழங்கப்படுவதற்கும் காரணம் ஆகிறார். நாவலூர் நம்பியாரூரர் தலம் தலமாகச் சென்று இறைவனைப் பாடித் துதித்து வரும் நாளில், தன் அருமை நண்பர் சேரமான் பெருமாள் நாயனாரோடு திருச்சுழியல் என்னும் தலத்துக்கு வந்து சேருகிறார். அங்கு அன்றிரவு துயிலும் போது கானப்பேர் உறை அண்ணல் அவர் கனவிலே தோன்றுகிறார். காளை உருவிலே, செங்கையினிற் பொற் செண்டும், திருமுடியில் சுழியமுடன், எங்குமில்லாத் திருவேடம் என்புருகா முன்காட்டி, யாம் இருப்பது கானப்பேர் என்றும் ஞாபகப்படுத்திவிட்டு மறைகிறார். அதனால் சுந்தரர் இந்தக் கானப்பேர் ஊருக்கே வருகிறார். வரும் வழி எல்லாம்.

காதலுறத் தொழுவது என்று கொலோ?
அடியேன்
கார் வயல்சூழ் கானப்பேர் உறை
காளையையே !

என்று ஏங்கி ஏங்கித் துதிக்கிறார். அன்று முதல் கானப்பேர் என்று வழங்கப்பட்ட தலம் காளையார் கோயில் என்று பெயர் பெறுகிறது.

கைலாயத்தில் ஒரு நாள் பார்வதியும் பரமசிவனும் தனித்திருந்தார்கள். அப்போது ஒரு சந்தேகம் எழுகிறது. பார்வதியின்

காளையார் கோயில்-கோபுரம்
உள்ளத்தில்; 'எல்லாமே வல்லவராகிய உமக்குச் சகள ரூபம் எதற்கு?' என்று கேட்டு வைக்கிறாள் அன்னை பார்வதி. அத்தனும் சிருஷ்டி திதி, சங்காரம். திரோபவம், அனுக்கிரகம் என்னும் ஐந்தொழிற்காகவே இவ்வுருக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிவிட்டு அத்துடன் நிறுத்தாது. எனது கண் திறக்கும்போது உலகம் தோன்றும். விழித்திருக்கும் போது வாழும், மூடுங்காலத்து அழியும் என்று அருள் திறத்தை மேலும் விளக்குகிறார். இதைக் கேட்ட அம்மை-பெண்மைக்கே உரிய சந்தேகத்தோடு, இதைப் பரீட்சித்துப் பார்த்துவிடத் துணிகிறாள்.

இறைவன் பின்புறமாக வந்து அவரது கண்கள் இரண்டையும் ஏதோ விளையாட்டாகத் தன் கைகளால் பொத்துகிறாள். அவ்வளவுதான்; மூவுலகமுமே இருளில் புதைந்து விடுகின்றது. உயிர்கள் எல்லாம் வாடி வதங்கி விடுகின்றன. அண்ணலும் அம்மையைக் கடிந்து, அவள் தன் கைகளை விவக்குகிறார். இப்படி ஒரு உத்பாதத்தை ஏற்படுத்தியதற்காகப் பார்வதியைக் கரிய உருவமுடைய காளியாகக் கடவாய் என்று சபித்து விடுகிறார். அம்மை, அறியாது செய்த பிழையை மன்னிக்க வேண்டும் என இறைவன் காலடியில் விழுந்து கதற, 'சரி சண்டாகரனை வென்ற பின், காளியுருவம் நீங்கித் திரும்பவும் என்னை வந்து சேர்வாய்' என அனுக்கிரகிக்கிறார்.

அம்மையும் அரனது ஆணைப்படியே காளியாகிறாள், கானப்பேரூரை அடுத்த மருதவனத்தில் துர்க்கை வடிவிலே கோயில் கொள்கிறாள். இந்தச் சமயத்தில் பெரு வரங்கள் பல பெற்ற சண்டாசுரன் தேவர்களை வருத்த, தேவர்கள் அம்மையிடம் முறையிட, அம்மையும் சண்டாசுரனோடு போர் புரிந்து அவனை முடிக்கிறாள். தேவர்களும் பூமழை பொழிந்து தேவியை வாழ்த்துகிறார்கள். தேவியின் சாபமும் நீங்குகிறது. சாபவிமோசனம் பெற்ற இந்தக் காளியம்மையே அழகெலாம் திரண்ட சுவர்ணவல்லியாகி, கானப் பேரூரில் கோயில் கொண்டிருந்த காளீசரை மணந்து அவரது இடப்பாகத்தில் வீற்றிருக்கிறாள். காளையார் கோயிலைச் சுற்றியுள்ள சின்னஞ்சிறிய ஊர்கள் எல்லாம் இந்தப் புராண வரலாற்றை இன்றைக்கும் பாறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

தேவர்கள் தேவியைக் கண்டு குறையிரந்து நின்ற இடமே கண்டதேவி; தேவி தங்கியிருக்க தேவர்கள் நிருமாணித்துக் கொடுத்த கோட்டையே தேவிகோட்டை, அம்மை சண்டாசுரனை வெற்றிக்கண்ட இடமே வெற்றியூர்; சண்டாசுரனது தேரில் உள்ள கொடி இற்று வீழ்ந்த இடமே மாளக் கண்டான்; வெற்றி பெற்ற தேவியைப் பூமழை பொழிந்து தேவர்கள் வாழ்த்திய இடமே பூங்கொடி என்று இன்றும் வழங்கப்பெறுகின்றன. இப்படிக் காளியுருவில் இருந்த பார்வதியாம் பரமேட்டியை மணந்த ஈசுவரனே காளீசுவரனாகிறார். அந்தச் சுவர்ண வல்லியையும் தன் இடப்பாகத்தில் ஏற்றருளிய பின் சுவர்ண காளீசுவரனாகவே மாறுகிறார். இன்றும் காளையார் கோயில் மூலமூர்த்தி சுவர்ண காளீசுவரன் என்று தானே அழைக்கப்படுகிறான்,

காளீசுவரன் கானப்பேர் ஊரில் கோயில் கொண்டிருக்கும்போது இந்தப் பாண்டிய நாட்டை ஆண்டவன் வீரசேனன். இவனுக்குப் பழவினை வசத்தால் குழந்தை இல்லை. அதனால் இவனும் இவன் மனைவி சோபனாங்கியும் சுவர்ணத்தால் ஒரு பிள்ளையைச் செய்து வைத்து, அதைப் பார்த்துப் பார்த்துத் திருப்தி அடைகிறார்கள். சுவர்ண காளீசுவரனை வணங்க வந்த இந்தத் தம்பதிகள், கோயிலை அடுத்த உருத்திர தீர்த்தத்தில் முங்கி முழுகி எழுகிறார்கள் சுவர்ணப் பதுமையோடு, இறை அருளால் அந்தச் சுவர்ண புத்திரன் உயிர் பெறுகிறான். உடனே இறை அருளை நினைந்து, அங்குக் கோயில் கொண்டிருந்த காளீசர் சுவர்ணவல்லி, சோமேசர் சௌந்திரவல்லி யாவருக்கும் கோயில்கள் எடுப்பித்து, நித்திய நைமித்திக காரியங்களுக்கும் உற்சவாதிகளுக்கும் ஏராளமான நிபந்தங்களை ஏற்படுத்துகிறான்.

இந்த இரண்டு பெருமான்களை வணங்கி வாழ்த்துவதோடு அவன் திருப்தி அடையவில்லை. தன்னுடைய வழிபடு தெய்வமாகிய சோமசுந்தரரையும் மீனாக்ஷியையும் தரிசித்து வணங்காமல் தினமும் அவன் உணவு உண்பதில்லை. காளீசர் கோயில் கட்டும் திருப்பணியில் ஈடுபட்டிருக்கும் போதும் தினமும் மதுரை வந்து சோமசுந்தரரைத் தரிசித்து விட்டுக் கானப்பேரூருக்குத் திரும்பி வருகிறான். ஒருநாள் அடை மழை பெய்தது. கானப்பேரூரிலிருந்து மதுரை வந்து திரும்ப முடியவில்லை. அதனால் உணவே அருந்தாமல் அமர்ந்திருக்கிறான். அந்தச் சமயத்தில் சோமசுந்தரனே அந்தப் பாண்டிய மன்னன் வீரசேனன் கனவில் தோன்றி, 'இனி நீ இங்கு வரவேண்டியதில்லை. நாமே அங்கு வந்து, காளிசுவரனுக்கும் சுவர்ணவல்லிக்கும் இடையிலே வீற்றிருப்போம்' என்று சொல்லி மறைகிறான். விடிந்து எழுந்து பார்த்தால் குறிப்பிட்ட இடத்தில் ரிஷபத்தின் அடிச்சுவடுகள் தோன்றுகின்றன. அந்த இடத்திலே அவசரம் அவசரமாக மீனாக்ஷி சுந்தரேசருக்குக் கோயில் எழுகிறது. அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் அரன் இங்கு சுந்தரனாக எழுந்தருளுகிறார்.

காளீசர், சோமேசர், சுந்தரேசர் மூவரும் கோயில் கொண்டிருக்கும் இந்தக் கோயிலுக்கு மேல்புறத்திலே ஒரு பெரிய தெப்பக்குளம். இக்குளம் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் போல் அவ்வளவு பெரியது. அன்று என்றாலும் அமைப்பு எல்லாம் அதே போலத்தான். களத்தின் நடுவில் இருக்கும் நீராழி மண்டபமே ஒரு பெரிய கோபுரமுடைய சிறிய கோயிலாகவும், அதைச் சுற்றி நான்கு மூலைகளிலும் கோபுரங்களோடு அமைந்த மண்டபங்களாகவும் இருக்கின்றது. இந்தக் குளத்தைத்தான் ஆனைமடு என்கிறார்கள். ஆம்! ஆனை இறங்கினாலும் அதை முழுகடிக்கும் ஆழமுடையது என்று தெரிகிறது. என்றாலும் இந்தக் குளம் எப்படி ஏற்பட்டது. அதற்கு ஆனைமடு என்று ஏன் பேர் வந்தது? என்பதற்கு ஒரு ரஸமான கதை.

தேவேந்திரனது ஐராவதம் என்னும் வெள்ளை யானை கைலாசம் போய்த்திரும்ப வருகிறது. விளையாட்டாக, அங்கிருந்த ரிஷபத்தின் வாலைப் பிடித்து இழுத்திருக்கிறது. ரிஷபமான நந்திக்கோ ஒரே கோபம், உடனே, 'நீ காட்டானைடாகப் பூமியில் பிறந்து ஆயிரம் வருடங்கள் வருந்தக் கடவாய்' என்று சாபமிட்டுவிடுகிறது. நந்தியிட்ட சாபத்துக்கு விமோசனத்தை நாயகனே நல்குகிறார். அதனால் காட்டானையாகப் பிறந்து வளர்ந்த ஐராவதம், இத்தலத்துக்கு வந்து தன் கொம்புகளாலேயே குத்திக் குத்தி இந்தத் தடாகத்தை உண்டாக்கி. இந்தத் தடாகத்திலுள்ள தண்ணீரையே தன் துதிக்கையால் முகந்து கொண்டு வந்து காளீசர், சோமேசருக்கு எல்லாம் அபிஷேகம் செய்யச் சாபவிமோசனம் ஆயிற்றாம். அன்று முதல் இந்தத் தடாகம் ஆனைமடு என்றே வழங்கப்பபடுகிறது.

இந்தக் காளையார் கோயில் என்னும் கானப்பேர் மிகவும் பழைமையான ஊர் என்று தெரிகிறது. இந்த ஊரைச் சுற்றி ஒரு கோட்டை இருந்திருக்கிறது. அந்தப் பழைய சங்க காலத்திலேயே, அப்போது பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் தான் உக்கிரப் பெருவழுதி. இவனே திருக்குறள் அரங்கேறும் போது அரியாசனத்திலிருந்த பெருமகன். இவன் அப்போது இந்தக் கானப்பேரூரில் இருந்த வேங்கை மார்பன் என்னும் சிற்றரசனை வென்று அவன் கோட்டையைக் கைப்பற்றியதால், 'கானப் பேரெயில் எறிந்த உக்கிரப்பெருவழுதி' என்ற விருதைப் பெற்றிருக்கிறான். சோழ மன்னர்களும் பாண்டிய மன்னர்களும் இக்கோயிலைக் கட்டவும் பராமரிக்கவும் வேண்டியவைகளைச் செய்திருக்கிறார்கள். கி.பி.பதினான்காம் நூற்றாண்டில் முகம்மதியர் தென்நாட்டின் மீது படையெடுத்தபோது, ஸ்ரீரங்கத்து ரங்கநாதரையும் சேதப்படுத்தி விடுவாரோ என்று அஞ்சி, அங்குள்ள கர்ப்பக்கிருகத்தைச் சுவர் எழுப்பி மறைத்து விட்டு, பிள்ளை லோகாச்சாரியார் என்பவர், ரங்கநாதரையும், ரங்கநாயகியையும் இந்தக் கானப்பேரூருக்கே கொண்டு வந்து ஒரு சிறு கோயிலை அமைத்து அங்கு வைத்துக் காப்பாற்றியிருக்கிறார். இது பழைய கதை.

இந்தக் கோயில் திருப்பணியிலே சமீபகாலத்திலே முழுதும் ஈடுபட்டவர்கள் சிவகங்கையிலிருந்து அரசாண்ட பெரிய மருது, சின்ன மருது என்ற பாளையப்பட்டுக்காரர்களே. மூன்று சந்நிதிகளிலும் மண்டபங்களெல்லாம் கட்டி, சோமநாதரது கோபுரத்தையும் பெரிதாகக் கட்டிய பெருமை பெரிய மருதுவையே சாரும். இந்தக் கோபுரத் திருப்பணிக்குச் செங்கல் இந்தக் கோயிலிலிருந்து தென்மேற்கு பன்னிரண்டு மைல் தொலைவில் உள்ள மானாமதுரையிலிருந்தே வந்ததாம். ஆங்கிலேயர் இங்கு வந்து காலூன்றி நிற்க நினைத்தபோது அவர்களை எதிர்த்துப் போரிட்டவர்களில் முதன்மையானவர் இந்த மருது சகோதரர்கள். போரில் பிறரது வஞ்சனையால் மருது சகோதரர்கள் தோற்கிறார்கள். தோற்றவர்களில் பெரிய மருது ஆங்கிலேயர் கையில் அகப்படாது தலை மறைவாய் இருக்கிறார். அவர் இருக்கும் இடத்தையே ஆங்கிலேயர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆங்கில தளகர்த்தனான கர்னல் ஆக்னியூவுக்கு, செய்வது என்னதென்று தெரியவில்லை. அப்போது அறிகிறான், இவர் இந்தக் கோபுரம் கட்டிய அருமையை, உடனே தோன்றுகிறது ஒரு யுக்தி. 'சரி இன்றைக்குப் பத்தாவது நாள் இந்தப் பெரிய மருது வந்து அடிபணியாவிட்டால் இவர் கட்டிய இந்தக் கோபுரம் தரைமட்டமாக்கப்படும்' என்று ஊர் ஊராகத் தெருத் தெருவாகத் தண்டோராப் போடச் சொல்கிறான்.

பெரிய மருதுவின் காதில் விழுகிறது தண்டோராச் சத்தம். தாம் கட்டிய கோபுரம் தரைமட்டம் ஆக்கப் படுவதைவிடத் தம் தலையையே கொடுப்பது சரி என்று எண்ணுகிறார். குறித்த நாளிலே வந்து தளகர்த்தனிடம் சரண் அடைகிறார். தளகர்த்தனும் இவரது கலை உணர்வை, பக்தியை எல்லாம் மதிக்கிறான். என்றாலும் மேலதிகரிகளின் உத்தரவுப்படியே இவரைத் தூக்கிலிட ஏற்பாடு செய்கிறான். அந்தச் சமயத்தில் அவர் வேண்டிக் கொண்டபடியே காளீசர் சந்நிதிக்கு நேரேயுள்ள பொட்டலில் அவருக்குச் சமாதி எழுப்பவும் ஒத்துக் கொள்கிறான். இப்படி என்றும் சமாதியிலிருந்து சோமேசரையும் காளீசுவரரையும் வணங்கிக் கொண்டிருப்பவரது சிலா உருவமே பெரிய மருதுவின் திருவுரு. காளீசர் சந்நிதி வாயிலில் இன்றும் நின்று கொண்டிருக்கிறது. சமீபகாலத்தில் கோயிலின் திருப்பணிகள் முடிந்து, கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டுக் குடமுழுக்கு விழாவும் சிறப்பாக நடந்திருக்கிறது.