கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/கட்டழகு வந்தக் காரணம்

விக்கிமூலம் இலிருந்து
10. கட்டழகு வந்தக் காரணம்

பந்தயங்களில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் கடுமையான சூழ்நிலையையும், கட்டுப்பாடு நிறைந்த விதிகளையும் முன் கண்டோம். அதே சமயத்தில், போட்டியாளர்களிலே உள்ள வீரர்களை வாலிபர்கள், மனிதர்கள் என்று இரு பிரிவாகப் பிரிக்க அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டார்கள்.

காரணம், அவர்களுடைய உடல் வளர்ச்சியே. ஆகவே வயது வித்தியாசத்தில் அவர்களால் பிரிக்க முடியாததால், அவர்களது உடல் வளர்ச்சியை உன்னிப்பாக உணர்ந்து, ஆராய்ந்த பிறகுதான் பகுக்க முடிந்தது. இவ்வாறு உடல்திற நிலையில் கிரேக்கர்கள் வலிமையோடும். வனப்போடும் வாழ்ந்ததற்கு என்ன காரணம் என்று அறிந்தோமானால், நாம் உண்மையிலேயே வியப்பில் மூழ்கி விடுவோம். கிரேக்கர்களின் வாழ்க்கைமுறை அப்படி வரை முறையோடு இருந்தது.

குறையுடலோடு பிறந்தாலும், நோயோடு தோன்றினாலும், அக்குழந்தைகள் சமூகத்திற்கும், இனத்திற்கும் இழுக்கு என்று வாளால் கொன்று புதைத்தத் தன்னிகரில்லா தமிழினம் போன்று, கிரேக்கர்களும், ஓர் உயர்ந்த முறையைக் கையாண்டார்கள்.

குழந்தை பிறந்த ஒருசில நாட்கள் கழித்து, பெற்றோர்கள் அந்நகரத்தை ஆளும் பெரியவர்களிடம் கொண்டு சென்று தங்கள் குழந்தையைக் காட்டுவார்கள். ஆய்வுக்காக வந்து அக்குழந்தையை ஆவலோடும் ஆராய்ச்சிக்கண் கொண்டும் பார்த்து, அக்குழந்தை வலிமையான தேகத்தோடு இருந்தால், பெற்றோர்கள் கையில் கொடுத்து அனுப்புவார்கள். நோய் கொண்டோ அல்லது குறையுடல் கொண்டு பிறந்திருந்தாலோ, அக்குழந்தையை மலைச்சரிவுக்குத் தூக்கிச் சென்று, அங்கே போட்டுவிட்டு வந்து விடுவார்கள். அங்கே அனாதையாக அக்குழந்தை கத்திக்கத்தி மெல்லச் சாகும் குழந்தைக்கு அது கொடுமையான சாவாக இருந்தாலும், கொடுமையான ஆண்மையில்லாத தன்மையுள்ள இளைஞர்களை அந்நாட்டினர் கனவிலும் விரும்பவில்லை என்பதாலேயே கடுமையாக நடந்து கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு, வாழ்வதற்கு உரிமை பெற்ற பெற்றோருடன் வந்த ஒரு குழந்தை, ஏழு வயது வரைதான். தன் வீட்டிலே வாழும். அதற்குப் பிறகு, அப் பாலகன் கடுமையும் சோதனையும் நிறைந்த இராணுவ வாழ்க்கை போன்ற அமைப்புக்கு அனுப்பப்படுகிறான். அங்கே, உடல் வலிமை திறமை, ஆண்மை, செழுமை பெறத்தக்க உடலியற் பயிற்சிகளை அவன் அனுதினம் செய்கிறான்.

ஏழு வயது பாலகனாகப் போனவன், முப்பது வயது வாலிபனாக வெளியே வருகிறான் என்று ஸ்பார்ட்டா நாட்டின் சரித்திரம் கூறுகிறது.

அவர்கள் அனைவரும் சோம்பேறி வாழ்க்கையை வெறுத்தவர்கள். அழகில்லா, ஆண்மையில்லா உடலோடு வாழ்வது பாவம், கேவலம் என்று ஒவ்வொரு இளைஞனும் எண்ணினான். பெற்றோர்களும் அவ்வாறே கருதினார்கள். அதனால்தான், அழகான உடல் கொண்ட போட்டியாளர்களை, வயதைக் கொண்டு பிரிக்க இயலாமல், உடலின் ஆற்றலைக் கொண்டு போட்டிக்காகப் பிரித்தார்கள்.