பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஒடுக்கி உலகைக் காப்பாற்ற முடியாமல் தங்களையும் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் அழுது அரற்றினர். எந்தை ஈசனிடம் முறையிட்டனர். அவன் தனக்குவமையில்லாத் தலைவனன்றோ; நஞ்சை யுண்டு உலகத்தைக் காத்தனன்.

இன்றும் பலர் தலைமையை விரும்புகின்றனர். ஆனால் அதற்குரிய தகுதியை முயன்று அடைய மறுக்கின்றனர். அது மட்டுமா? தலைமைக்குரிய தகுதிகளுடையாரை ஏற்றுக் கொள்ளவும் மறுக்கின்றனர். இழித்தும் பேசுகின்றனர். இதனால் எல்லாமா தலைமை வந்துவிடும்? தலைமைக்குரிய தகுதியுடையாரை உலகம் ஏற்றுக்கொள்ளாததால் அவர்கள் தலைவர் அல்லர் என்று ஆகிவிட மாட்டார்கள். தலைமை, தலைமைதான்!

தலைமைக்குரிய இயல்பு - தகுதி போகம் துய்த்தலன்று. புகழில் மயங்கித் திரிதலன்று. ஆன்ற ஆள்வினையே தலைமைக்குரிய தகுதியை நிலைநாட்டும். கொலையே தொழிலெனக் கொண்டு, கோட்டை கொத்தளங்கள் கட்டி, வாழ்ந்த திரிபுர அரக்கர்கள் நிலை என்ன ஆயிற்று? அளவற்ற செல்வத்தாலும், வலிமையினாலும் அரக்கர்கள் கை ஓங்கி நின்றது. அமரர்களும்கூட அவர்களுக்கு ஏவல் செய்யத் தலைப்பட்டனர். ஆயினும் அறத்தின் சார்பின்மையால் அந்தத் தலைமை தற்காலிகமாயிற்று. அதுதானே நியதி! எந்தை ஈசன் மேருமலையை வில்லாகக்கொண்டு, முப்புரமழித்து மூவுலகையும் காத்தனன். ஆயினும் தலைமைக் கிறுக்குப் பிடித்த இந்த அமரர்கள் சிவபெருமானை நாள்தோறும் - வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் “இவரா தலைவர்! இல்லை, இல்லை! இவர் தலைவரல்லர்” என்றெல்லாம் பேசுகின்றனர். இவர்கள் எதைப் பேசினாலென்ன? அவன் தனக்குவமையில்லாத் தலைவனேயாம்.

ஆதலால் தலைமைப் பண்புகளைப்பெற முயற்சி செய்ய வேண்டும். அதற்குத் தனக்குவமையில்லாத் தலைவன்