பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முரண்பாடா?

61




சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ,

என்று பாடிப் பரவுகின்றார்.

இங்ஙனம் பெண்ணோடு கூடிவாழும் பெருந்தலைவன் காமனை எரித்தான். காமன் உயிர்களுக்கு விருப்பத்தை விளைவிக்கும் தொழிலையுடையவன். சிறப்பாகப் பெண்ணியற் காதலைத் தோற்றுவிப்பவன். ஒருகால் உமையை எம்பெருமான் பிரிந்திருந்த பொழுது அந்தப் பிரிவை மாற்றி அவர்களைக் கூடச் செய்வதற்காகச் சிவபெருமானிடம் தன்னுடைய தொழிலாகிய காமத்தைத் தோற்றுவிக்க முயற்சி செய்தான். ஆனால் சிவபெருமான் காமத்தின் வழிப்படாது, காமனை விழித்து நோக்கி எரித்தான். இங்ஙனம், காமனை எரித்தவன் உமையொடும் கலந்து வாழ்கிறான் என்று திருமுறைகள் பேசும். இதனைத் திருஞானசம்பந்தர்,

காம னெரிப்பிழம் பாக நோக்கிக்
காம்பன தோளியொ டுங்கலந்து
பூமரு நான்முகன் போல்வரேத்தப்
புகலி நிலாவிய புண்ணியனே
ஈமவ னத்தெரி யாட்டுகந்த
வெம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
வீமரு தண்பொழில் சூழ்மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே!

என்று பாடுகின்றார்.

காமனை எரித்தவன் உமையுடன் கலந்து வாழ்தல் முரணில்லையா? என்று கேட்கத் தோன்றும், முரணில்லை. ஒன்றைத் துய்த்தலோ அல்லது மகிழ்தலோ காமத்தின் வழிப்பட்டதாக இருக்குமானால் அது தீது. அத்தகைய துய்ப்புணர்வு எரியிடைப்பட்ட எண்ணெய்போல மேலும் மேலும் காமத்தை வளர்க்கும். அத்தகைய துய்ப்புணர்வு