பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



திருஞானசம்பந்தர் செய்தொழில் பேணுதல் பற்றி, தொழில்முறை பற்றிப் பேசுகிறார். செய்கிற தொழிலை முறையாகச் செய்யவேண்டும்; திறமையாகச் செய்ய வேண்டும்; பயன்தரத்தக்க வகையில் செய்யவேண்டும். அது மட்டும் போதாது. நிலையான பயன் தரத்தக்க வகையில் அத்தொழிலைப் பேணுதலும் வேண்டும். செய்தொழிலைப் பேணி வளர்க்காது போனால் திறன் குன்றும்; வளம் குறையும்; வாழ்க்கை கெடும். அப்பொழுது நரகம் நாடி நம்மைச் சூழும். செய்தொழிலைப் பேணி வளர்த்தால் அறிவு வளரும்; ஆற்றல் பெருகும்; வளம் கொழிக்கும்; இறைவன் எங்கே? எங்கே? என்று கடமையைச் செய்பவனைத் தேடி வந்து தோழமை கொள்வான்; துணை நிற்பான். இறைவன் செல்வனாக வீற்றிருப்பான்; இன்பம் தருவான். யாருக்கு? பூவும் நீரும் இட்டவர்க்கு மட்டுமா? இல்லை, செய்தொழில் பேணியோர்க்குமாம்.

பைம்மா நாகம் பன்மலர் கொன்றை
பன்றிவெண்கொம் பொன்று பூண்டு
செம்மாந் தையம் பெய்கென்று சொல்விச்
செய்தொழில் பேணியோர் செல்வர்
அம்மா னோக்கி வந்தளிர் மேனி
யரிவையோர் பாக மலர்ந்த
பெம்மா னல்கிய தொல்புக ழாளர்
பேணு பெருந்து றையாரே.

திருஞானசம்பந்தர் காட்டும் நெறியே பழைய நெறி. அதுவே புதிய நெறியும்கூட கடமையைச் செய்! கடமையைக் கடவுள் வழிபாடெனச்செய்! ஒன்றிய உணர்வுடன் தொழிற்படு! ஆற்றலை ஆள்வினையில் காட்டு! செய்தொழிலைச் செப்பமுறச் செய்ய அறிவையும் ஆற்றலையும் நல்கி வழிகாட்டும்படி கடவுளைப் பிரார்த்தனை செய். இதுவே திருமுறை நெறி.