பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எது திருத்தலம்?

81


பொய்ம்மை உலாவும் பதி, திருத்தலமாகாது. பொய்ம்மை செய்யாதவர் வாழும் பதியே திருத்தலமாகும்.

பொய்ம்மையை விஞ்சிய கொடுமை, சலம் செய்தல். கொலையினும் கொடுமை சலம் செய்தல். சலம் என்றால் என்ன? நல்லது போலக் காட்டித் தீமை செய்தல். அன்புடன் பழகுதல் போல நடித்துப் பகை வளர்த்தல். இதுவே வஞ்சகம். உள்ளம் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுதல். விரைந்து செய்வார் போலக் காட்டி - ஆனாலும், ஏதும் செய்யாதிருத்தல் சலம். வார்த்தைகளில் அக்கறை! ஆனால் வாழ்க்கையில் இல்லை! இத்தகையதோர் மனித உருவில் உலாவினாலும் இவர்கள் மனிதர்களல்லர். இத்தகையோர் வாழும் ஊர், வளர்தல் முயற்கொம்பே! ஊரே வளரமுடியாத பொழுது, திருத்தலம் ஆதல் ஏது?

மனிதரல்லார், வள்ளுவர் வார்த்தையில் மக்கட் பதடி எனப்படுவர். யாக்கைக்கே இரைதேடி அலைபவர்; எப்படியாவது பிழைக்கவேண்டுமென்று எண்ணுபவர்; இவர்களுக்கு அறிவில் ஆர்வமில்லை; ஆள்வினையில் தேட்ட மில்லை. துய்த்தலில் பெரு வேட்கை. எதையும் பேசுவர். எதையும் செய்வர். இவர்களுக்கு நினைத்ததே விதி. இவர்களை வள்ளுவர் கயவர் என்பார். கொல்லாமையை எடுத்தோதிய திருவள்ளுவர் கயவரைக் கொன்றால்தான் பயன் என்றால் கொல்லலாம் என்றார். இத்தகைய இழிஞரை - கயவரை நீதர் என்று குறிப்பிடுகிறார் திருஞானசம்பந்தர். நீதித் தன்மையிலாதவர் நீதராகலாம். இவர்கள் வாழும் ஊரும் சுடுகாடாகலாமே தவிர ஊர் கூட ஆகாது. திருத்தலமாவதை எண்ணிக்கூடப் பார்க்க வேண்டாம்.

இதுவரையில் திருத்தலமாவதற்கு எதிரிடையாகவுள்ள குணக்கேடுகள் பற்றித் திருஞான சம்பந்தர் விவரித்தார். அதுபோலவே ஓர் ஊரைத் திருத்தலமாக்குவதற்குரிய பண்பு என்ன என்பதையும் விளக்குகிறர்.

மேட்டிலிருந்து பள்ளம் நோக்கித் தண்ணீர் வீழ்தல் இயற்கை. கீழ் நோக்குதல் உலக இயற்கை. மேல்நோக்கி

கு.இ.VII.6.