வெற்றி
இறைவன் ஏத்தலுக்குரியவன், போற்றிப் புகழ்தற்குரியவன். ஏன்? இறைவன் என்ற காரணத்திற்காகவா? அவன் பலவற்றைத் தந்தருளுபவன் என்பதினாலா? அழித்திடுவான் என்ற அச்சத்தினாலா? அச்சம் பயம் ஆகியவற்றில் தொடங்கும் வழிபாடு, வழிபாடல்லவே.
பின் ஏன்? இறைவனுடைய வெற்றியைத்தான் பாடிப் பரவுகின்றோம். அவன் பெற்ற வெற்றிக்காகவே அவன் வாழ்த்தப் பெறுகிறான். வெற்றியா? யாரை வெற்றி கொண்டான்? வெற்றி கொள்ளப்பட்டவன் பகைவனா? வெற்றி என்றால் பகைவன் ஒருவன் வேண்டுமே! இறைவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன்! குணம் குறி இல்லாதவன்! அப்படியானால் அவனுக்கு ஏது பகைவன்?
இறைவனுக்குப் பகைவனில்லை. பகைவனில்லை - என்றால் புராணங்களில் வருவன பொய்யா? முப்புரம் எரித்த வரலாறு! அறுமுகச் செவ்வேள் சூரபதுமனுடன் போர் புரிந்தது! இவையெல்லாம் என்ன? சூரபதுமன் இறைவனுக்குப் பகைவன் தானே! அரக்கர் இறைவனுக்குப் பகைவர்தானே!