பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சைவத்தின் இரு விழிகள்

தமிழ் நாட்டிலேயே, தொண்டை நாடு மிகவும் சிறப்புடையது. “தொண்டை நாடு சான்றோருடையது” என்பது ஆன்றோர் வாக்கு. சேக்கிழார் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்தில் தொண்டை நாட்டின் சிறப்பினை விரிவாக விளக்கிப் பாடியுள்ளார்.

சைவ ஞானாசிரியர்கள் நால்வரில் இருவர் - அப்பரடிகளும், சுந்தரரும் அவதரித்த புண்ணிய நாடு தொண்டை நாடு. தொண்டை மண்டலத்தில் திருமுனைப்பாடி நாட்டில் சிவம் பெருக்கும் திருவாமூரில் அப்பரடிகள் தோன்றினார். அப்பரடிகளை நாட்டுக்கு அளித்த குலமரபு, சைவ வேளாண் மரபாகும்.

சைவ வேளாளர் மரபில் குறுக்கையர் குடியில் அப்பர் அவதாரம் செய்தார். திருவாமூரில் புகழனார் - மாதினியார் தம்பதிகளுக்கு இரண்டு தவ விளக்குகள் தோன்றின. ஒன்று மூத்தது - திலகவதியார் என்ற பெண். இரண்டாவது மருணீக்கியார் என்ற ஆண் மகவு. தங்களுடைய மனையறத்தின் நன்கலமாகிய மக்களை முறையே வளர்த்தனர் பெற்றோர்!

திலகவதியார்

திலகவதியாரை மணந்துகொள்ள கலிப்பகையார் விரும்பினார். இருபாலும் ஒத்துப்போய் திருமணம் செய்விக்கும் உடன்பாடு ஏற்பட்டது. இடையில் தமிழரசர்களுக்கும் வடபுலத்தரசர்களுக்கும் ஏற்பட்ட போரில் படைத் தலைமை ஏற்றுப் போரிட, கலிப்பகையார் சென்றுவிட்டார்.

இந்நிலையில், திலகவதியாரின் தந்தை புகழனார் இறந்து போனார். கற்புக்கடம் பூண்ட மாதினியாரும் உடன் இறந்தார். திலகவதியாரும் மருணீக்கியாரும் பெற்றோரை இழந்த நிலையில் ஆற்றொணாத் துயரத்திற்கு ஆளானார்கள்.